சூழலியலாளர் நக்கீரன், உத்வேகம் பெற்றுவரும் பசுமை இலக்கியத்தின் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவர். கவிஞர், குழந்தை இலக்கியவாதி, பேச்சாளர் என பல முகங்கள் கொண்டவர்.
நமது நீர்! நமது உரிமை! இதுவே இந்த புத்தகத்தின் மையம். நீர் எவ்வாறு வியாபாரத் தொழிலாக மாறியது எனத் தொடங்கி, நீர் நிலைகள், ஏரி, போன்றவை கார்ப்பரேட் கையகப்படுத்திய முறையும், அதனால் ஏற்பட்ட சூழியல் பிரச்சனைகளை விளக்கியுள்ளார், மேலும் அதை எப்படி நாம் மீட்டேடுப்பது என்பது குறித்தும் சில தீர்வுகளையும் முன் வைத்துள்ளார்.
நீர் எழுத்து - தமிழகத்தின் தண்ணீர் ஆவணம் - நக்கீரன்
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு (அதிகாரம்: வான் சிறப்பு குறள் எண்: 20)
நீர் இல்லாமல் உலகம் இயங்காது என்றால் மழை இல்லாமல் எவருக்குமே ஒழுக்கவாழ்வும் கெடும் என்பது இந்த குறளின் பொருள்.
சரி நீருக்கும் மனித ஒழுங்கிற்க்கும் என்ன சம்பந்தம்? நிச்சயம் சம்பந்தமிருக்கிறது... ஏன்னெனில் உயிர்ச் சூழலில் மனித வாழ்வை மிகவும் பாதிக்கக் கூடிய அடிப்படையான பொருள் நீர் மட்டுமே... சூழலியல் சங்கிலியில் நீர் என்னும் இந்த முக்கியமான கண்ணியில் பாதிப்பு ஏற்ப்பட்டால் அதன் தொடர் விளைவுகள் மிகவும் பயங்கரமானதாக இருக்கும்...
இந்த புத்தகம் நீரின் தேவையை அதன் அதை வைத்து நடக்கு அரசியலையும்...தமிழகத்தின் நீராண்மை வரலாற்றையும், எதிர்காலத்தில் நாம் மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் தெளிவான பார்வை கொண்டு விளக்குகிறது!
முதல் அத்தியாத்தில் தொடங்கி ஒன்பதாம் அத்தியாயம் வரையும் நூல் முழுக்கவும் எக்கச்சக்கமான தகவல்களை தந்திருக்கிறார்...முதல் அத்தியாயமான நீர் அதிகாரம் தமிழகத்தில் இப்போது நடக்கு தண்ணீர் தனியார்மயமாக்கல் பற்றிய விரிவான பார்வையை முன்வைக்கிறது... கோயம்புத்தூர் நகரத்தில் சூயஸ் என்னும் நிறுவனம் இந்த திட்டத்தில் களம் இறக்கப்பட்டுள்ளது...
அந்த சூயஸ் நிறுவனத்தின் டிராக் ரெக்கார்டு காறி துப்பும் அளவில் இருக்கிறது... போகப் போக அவர்கள் நிலத்தடி நீருக்கும் காசு வைத்து விற்க்கவும் பயப்பட மாட்டார்கள்... இந்த நீர் தனியார்மயத்தை நடத்துவதற்காக அரசுகள் தேசிய நீர் கொள்கையிலும், நீர்ச் சட்டங்களிலும் "நீர் என்பது அடிப்படை உரிமை" என்பதை மாற்றி "நீர் என்பது தேவை" என மாற்றுவதன் மூலமாக மக்களிடம் இருந்து நீரை தனியாருக்கு தாரைவார்க்க அரசுகள் கட்டாயப்படுத்தப் படுவது அதிர்ச்சியை தருகிறது...
இதுவரைக்கும் மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட முடியாத ஒரு திரவம் என்றால் நீர் தான்...நீர் நிறமற்றது, மணமற்றது, அதில் கொழுப்பு இல்லை, புரதம் இல்லை ஆனால் அதில் தான் சமைக்கிறோம், குடிக்கிறோம். குளிக்கிறோம். நாம் வாழும் புவிக்கோள் உயிர்க்கோளாக மாறக் காரணம் நீர். நீர் அறிவியலின் படி பார்த்தால் நீர் ஒரு நிரந்தரமான வடிவத்தை கொள்ளாத மூலக்கூறுகளை கொண்டதாகும் அதனாலேயே அதனை மனிதனால் செயற்கையாக தயாரிக்க முடியாது என்பதை கூறுகிறார்...
மூன்றாவது அத்தியாயத்தில் நீர்ப் பண்பாடு பற்றி பேசுகிறார்... தமிழர் பண்பாட்டில் நீரின் பங்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்... நம்முடைய பெருபான்மையான பண்டிகைகள் நீரினை அடிப்படியாக கொண்டாடப்படுபவை... ஆற்றங்கரையில் கூடி கொண்டாடப்படுவது ஆடிப் பெருக்கு இதற்கு ஒரு உதாரணம்... அரசரிடம் இருந்த நீர் உரிமை நிர்வாக வசதிக்காக கிராம சபையிடமும் ஊர் அவையிடமும் ஒப்படைக்கப்படுகிறது...
கிராம சபை என்பது பார்ப்பனக் குடிகளால் நிர்வகிக்கப்பட்டது. ஊர் அவை என்பது பெரும்பாலும் வேளாளர்களைக் கொண்டதாக இருந்தது. பார்ப்பனர்களுக்கு 'பிரம்மதேயம்' என்கிற பெயரில் விளைநிலங்களுடன் கொண்ட ஊர்கள் பரிசளிக்கப்பட்டன. அவை பெரும்பாலும் 'மங்கலம்' (எ.கா. சதுர்வேதி மங்கலம்) என்று முடியும் ஊர்களாக அறியப்பட்டன. குடிநீக்கம் என்ற பெயரில் உழுதுண்டு வாழ்ந்த மக்களின் நிலங்களைப் பிடுங்கி, உழவையே அறியாத இனம் ஒன்று செழிக்கத் தொடங்கியதை குறிப்பிடுகிறார்...இதற்கான செப்பேடு சான்றுகளையும் கொடுத்திருக்கிறார்!
அடுத்தது பருவமழையை பற்றிய அத்தியாயத்தில் பண்டைய காலத்தில் பருவமழையைப் பற்றி பழங்காலத்தில் நிலவிய பாடல்களையும், சங்கப் பாடல்களையும் கொண்டு விளக்கியிருக்கிறார்...இந்த அத்தியாயத்தில் வானியல் சம்பந்தமான நிகழ்வுகளை தமிழ்நிலத்தில் எப்படி எல்லாம் கண்டறிந்து குறிப்பாக்கியிருக்கிறார்கள் அதை நவீன விஞ்ஞானத்துடன் ஒப்பு நோக்கி எழுதியிருக்கிறார்...
நீர்நிலைகளை பற்றிய அத்தியாயத்தில் பல்வேறு வகையான நீர்நிலைகளைப் பற்றி கூறியிருக்கிறார் கேணிக்கும், கிணறுக்கும் இருக்கும் வேறுபாடு, அதில் உள்ள பல்வேறு வகைகள் என நிறைய தகவல்கள் உள்ளன...குளம், ஏரி, கண்மாய், ஏந்தல், கரணை, சமுத்திரம், ஊருணி என நீர்நிலைகளுக்குள் இருக்கும் வேறுபாடுகளை அறிய முடிகிறது...
ஆறுகளைப் பற்றிய அத்தியாயத்தில் தமிழக ஆறுகளின் நிலையையும் அதன் உண்மையான பெயர்கள் எப்படி வடமொழி மயமாக்கப்பட்டது என்பதன் பின்னனியையும் விவரிக்கிறார்... காவிரியாற்றின் உயிர்ச் சூழல் எவ்வாறு நிறுவனங்களால் மாசுபடுத்தப்படுகிறது என்பதை கூறுகிறார்... உதாரணத்திற்கு மேட்டூர் அணைக்கு வெகு அருகிலேயே அபாயம் தொடங்கி விடுகிறது. அணையின் பதினாறுக் கண் மதகு அருகே கெம்பிளாஸ்ட்டின் கழிவு, ஒரு கிலோமீட்டர் கடந்து மால்கோ சிட்கோவின் கழிவு, அதனைத் தொடர்ந்து அனல்மின் நிலையத்தின் கழிவு என வரிசையாக ஆற்றில் கொட்டப்படுகின்றன... இந்த மாதிரியான நிறைய உதாரணங்களை ஒவ்வொரு ஆறுகளுக்கும் கொடுத்திருக்கிறார்...
நீராண்மை என்பது நீர்மேலாண்மையை குறிப்பதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் சொல்... தமிழிகத்தின் நீரண்மை வரலாற்றில் எவ்வாறு இருந்திருக்கிறது மற்றும் தற்போதைய நிலைமை என்ன என்பதை ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்... சங்கிலித் தொடர் ஏரிகள், நீர்நிலைகளில் மண்ணின் முக்கியத்துவம், பழந்தமிழர் நீராண்மை, ஒரு அணை உருவாக்கப்படும் போது நிகழும் சூழலியல் சீர்கேடுகள், காவிரிப் பிரச்சனை என நிறைய விசயங்களை இந்த பகுதியில் தொகுத்திருக்கிறார்...
நதிகள் இணைப்பு என்பது இன்று மிகவும் பெரிதாக பயன்படுத்தப்படும் மந்திரச் சொல் எந்த ஆட்சி வந்தாலும் அவர்களின் வாக்குறுதிகளில் இந்த வாசகம் நிச்சயம் இருக்கும்...ஆனால் இந்த திட்டத்தால் ஏற்படும் சூழலியல் குறைபாடுகள் ஒருபுறம் இருக்க இதன் மூலம் பெருநிறுவனங்களின் கைகளில் நம்முடைய ஆறுகளை தாரைவார்த்துக் கொடுப்பதற்காக போடப்பட்ட திட்டம் என்பது இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது...
குறைகளை மட்டுமே சொன்னால் போதுமா அதற்கான தீர்வுகள் தான் என்ன என்கிற யோசனை வரும் இல்லையா... அதற்கான தீர்வுகளையும் இறுதியாக பின்னிணைப்பில் தமிழ்நாடு நீர்க் கொள்கைக்கான 20 பரிந்துரைகளை கொடுத்திருக்கிறார்... ஆக நீர் என்பது தேவை என்பதிலிருந்து நமது நீர் நமது உரிமை என்னும் கட்டத்திற்கு நகர்த்த வேண்டிய கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது என்பதை உணர வைக்கும் ஒரு முக்கிய ஆவணம் நீர் எழுத்து! நிச்சயம் அனைவரும் வாசிக்க வேண்டிய படைப்பு!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய சமயத்தில் இந்த புத்தகத்தை எடுத்துவைத்தேன். முதல் பகுதியை வாசித்தபின் ஒரு நீண்ட இடைவெளி தேவை பட்டது. நீர் சம்மந்தப்பட்ட நூல் என்று பார்த்தால் இதற்கு முன் Sunil Amrith எழுதிய “Unruly Waters: How Rains, Rivers, Coasts, and Seas Have Shaped Asia's History” என்ற நூலை வாசித்திருக்கிறேன் ஆசியாவின் வரலாற்றை நீர் எப்படி வடிவமைத்ததது என்பதில் தொடங்கி இந்தியாவில் இருக்கும் நீரியல் அமைப்பு முறையையும் வரலாற்று ரீதியாக அணுகும். டாக்டர் கே. கே. பிள்ளை எழுதிய "தமிழக வரலாறு- மக்களும் பண்பாடும்" என்கிற புத்தகம் தமிழகத்தின் நீரியல் மட்டும் நிலவியல் பற்றிய சிறு அறிமுகத்தை கொடுத்தது. அதன் பின்னர் தான் திரு. நக்கீரன் அவர்கள் எழுதிய "நீர் எழுத்தை" வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவரின் “சாதியும் சூழலும்” வாசித்து ஒரு அறிமுகம் எழுதி இருந்தேன். “காடோடி” பாதியில் நிற்க்கிறது. ஜெயமோகனின் "காடு" நாவலும் பாதியில் தான் இருக்கிறது. இயற்கை பற்றிய புனைவு எழுத்துக்கள் மேல் பெரிதாக ஆர்வம் ஏற்படவில்லை. கடைசியாக "வேள்பாரி" படித்ததாக நியாபகம். “நீர் எழுத்து” - தமிழகத்தின் நீர் நிலைகளில் தொடங்கி சங்ககால இலக்கியத்தில் இடம்பெற்ற நீர் பற்றிய பாடல்கள், நீர் நிலைகளின் கட்டுமானம், நீருக்கும் அதிகாரத்திற்கும் இருக்கும் உறவு, நீர் தனியுடைமையா பொதுவுடைமையா, எதிர்காலத்தில் நீர் சிக்கலை எப்படி தீர்ப்பது, நதிநீர் இணைப்பு சாத்தியமா? போன்ற தலைப்புகளில் போதிய ஆதாரங்களோடு பேசுகிறது. புத்தகத்தின் இறுதி பகுதியில் பயன்படுத்தப்பட்ட தரவுகளை கொடுத்திருப்பது பெரிதும் உதவும் என்றே நினைக்கிறேன். ஆய்வு நூல் என்கிற அடிப்படையில் அணுகினால் சில பிரச்சார தொனியை நீக்கிவிட்டால் நல்ல ஆய்வு நூலாக அமையும். திராவிட பண்பாடே நீரோடு தொடர்புடையது, வடக்கே இருப்பது போல் இங்கு வருடம் முழுக்க ஓடும் வற்றாத நதிகள் இல்லை. நீர் சேமிப்பின் அவசியத்தை மக்களின் வாழ்வியலோடு சேர்த்தே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. "ஊரில் மழை பெய்ததா?" "விளைச்சல் எல்லாம் எப்படி?" என்ற அன்றாடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பின்னல் தமிழக நீர் பண்பாட்டின் வரலாறு நீள்கிறது. ஆரியம் நெருப்போடு தொடர்புடைய பழக்கவழக்கங்களை கொண்டிருந்ததற்கு அதன் சூழல் முக்கிய காரணம். அதை போலவே திராவிட நாகரிகம் நீரோடு பின்னி பிணைந்தது. நீர் சம்மந்தப்பட்ட சொற்களை சங்க இலக்கியத்தில் தேடினால் தலை சுற்றும் அளவிற்கு இடம்பெற்றுள்ளது. அணைகள், குளம் ,குட்டை, ஏரி என நீர் சேமிக்கும் இடங்களும் இங்கு அதிகம். திராவிட - ஆரிய போர் இதன் அடிப்படையில் நடைபெற்ற ஒன்று என்று சொல்கிறார் நூல் ஆசிரியர். மேய்ச்சல் நிலங்களை நம்பி கால்நடைகளை வளர்த்த ஆரியர்களுக்கு அணை அமைத்து நீர் சேமித்த திராவிடர்களின் நிலவியல் அமைப்பு முரண்பட்டு நிறைந்த ஒன்றாகவே இருந்திருக்கும் என்கிறார். இந்தியாவில் தான் நீரை அணுக கூட தீண்டாமை இருந்தது. அம்பேத்கர் அதற்காக ஒரு சத்தியாகிரக போராட்டமே நடத்தினார். ஆரியத்தின் பண்புகளை தமிழ் அரசர்கள் கடைபிடித்தபோது தண்ணீர் தனியுடைமையானது . சாதிக்கு ஒரு குளம் ஏற்பட்டதெல்லாம் அதன் பிறகான ஒன்று தான். தொ. பரமசிவன் அவர்கள் கூறிய நீர் சம்மந்தப்பட்ட செய்திகள் அவ்வப்போது வந்து செல்கிறது. மேலும் பல தண்ணீர் சார்ந்த ஆய்வுகளும் ஆய்வாளர்களும் அறிமுகப்படுத்த பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இடம்பெற்றுள்ள ஆறுகள், குளம், ஏரி, அணை போன்றவற்றை இந்நூல் வரலாற்று ரீதியாக ஆழமாக ஆராய்கிறது. ஆறுகளின் கலப்பட பெயர்கள் நீக்கப்பட்டு உண்மையான பெயர் காரணங்களை அடையாளம் காட்டுகிறார். பழங்கால காவிரி ஓடிய பாதைகளை பற்றி வியப்பான செய்தி இடம்பெற்றுள்ளது. வைகை, பொருநை, பாலாறு, என்று ஆறுகள் பற்றிய செய்திகள் எல்லாம் எனக்கு புதியவை, கேள்விப்படாதவை. ஏரிகள் நிறைந்த சென்னையும், 1920 இல் இயற்றப்பட்ட “மெட்ராஸ் டவுன் பிளானிங்” சட்டமும், பனகள் பூங்கா பெயர் காரணமும், வாக்கம் - பாக்கம் என்று இடம்பெற்ற ஊர் பெயர்களும் சென்னையின் நீர் வரலாற்றை கண் முன் நிறுத்துகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் நிலங்களில் 27%(இதில் பெரும்பாலும் நதிநீர் வாய்கால்களோடு தொடர்புடைய பகுதிகள்) தான் நீர் ஊடுருவும் திறன் கொண்டவை, மீதமுள்ளவை எல்லாம் பாறை நிறைந்த நில அமைப்பை கொண்டவை. சென்னையில் சிமெண்ட் கட்டுமானங்கள் நிறைந்திருப்பதால் நீர் ஊடுருவும் திறன் 4 % நிலங்களுக்கே இருக்கிறது. மேலும் சென்னையில் பெய்யும் மழையை சேமிப்பதற்கு ஏற்ற கட்டடவியல் அமைப்பு முறையை ஏற்படுத்தி நீர் பஞ்சம் வரும்போது அதனை பயன்படுத்த முயற்சிக்க வேண்டும் என்கிற இவரது வாதம் ஏற்புடையதாக தெரிகிறது. ஆனால் இதை எல்லாம் அரசே செய்ய வேண்டும் என்பதில் எனக்கு பெரியளவில் உடன்பாடு இல்லை. அதிகாரத்தின் பிடியில் இருந்து நீர் Decentralize செய்யப்படும்போது மக்களுக்கு பெரிதும் உதவுவதாக இவர் கூறும் சமகால எடுத்துக்காட்டுகள் கவனம் பெறுகிறது. அதிகார பரவலாக்கம் என்பது வளர்ச்சியையும், நிர்வாகத்தையும் ஆற்றல்மிக்க ஒன்றாக மாற்றுமென்பது நீருக்கும் பொருந்தும். Bhakra-Nangal அணையை திறந்து வைத்த பிரதமர் நேரு ஆற்றிய உரையில் அணைகளை "Temples of Modern India” என்கிறார். முதல் ஐந்தாண்டு திட்டத்தில் விவசாயத்தோடு அணை கட்டுமானத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்பது Unruly Waters நூல் மூலம் அறியமுடிந்தது. இரண்டாம் உலக போருக்கு பின் ஆசியாவில் தான் அதிகப்படியான அணை கட்டுமானங்கள் நடந்துள்ளது. நீரின் அவசியத்தை இதன் மூலம் அறியமுடிகிறது. மேலும் காலநிலை மாற்றம் அடையும் காலகட்டத்தில் நீரின் அவசியத்தை அரசியல் சக்திகள் சரியாக உணர்ந்தே உள்ளன. நீர் சிக்கல்களுக்கான சட்டங்கள் பற்றிய அறிமுகத்தையும் இந்த புத்தகம் கொடுக்கிறது. நூலின் பின் இணைப்பாக ”தமிழ்நாட்டின் நீர் கொள்கைக்கான 20 பரிந்துரைகளை” கூறியுள்ளார். தண்ணீருக்கென தனி துறை என்பதில் தொடங்கி சூழலியல் சார்ந்த பல பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளது. சாத்தியப்படும் பரிந்துரைகளை ஏற்று கொள்வது அரசின் கொள்கைகளை சீர் செய்ய உதவும். மழை காலத்தில் நீர் பற்றிய புத்தகம் வாசிப்பது, நூல் கூறும் கருத்தோடு நல்ல பிணைப்பை(Connect) கொடுத்தது. பல எதிர்மறை கருத்துக்கள் மிகைப்படுத்தப் பட்ட ஒன்றாக தெரிந்தது. வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் வாசிக்கவும். BOOK: நீர் எழுத்து AUTHOR: நக்கீரன்
Must read book to know more about water crisis and future water problems .Everything related top to bottom of water awareness is analyzed in this book.
இப்படி ஒரு புத்தகத்தை ஒவ்வொருவரும் படிக்க வேண்டும் , நாம் நமக்கு தெரிந்தும் தெரியாமலும் , நமது நீர் நிலைகளை எவ்வாறு இழந்து வருகிறோம் என்பதை நமக்கு புரிய வைக்கும் ஒரு ஆய்வு கட்டுரை.