ஓர் இடைவெளிக்கு பிறகு தன் தாய் பிறந்த வீட்டு ஆட்களுடன் அவரை மகள் சேர்க்கும் கதை.
ஆஹா ஒஹோ என்று பெண்ணின் குணத்தைப் புகழ்ந்து விட்டு அதைவிட முக்கியம் அவளின் அழகு என்று சொல்லி அதை மட்டுமே முதன்மைப்படுத்தும் கதாசிரியர் இக்கதையிலும் அதைவிட்டுவிடவில்லை. தன் எழுத்தின் வழியே விவரமானவள் என்று சொல்லி சென்றாலும் கதாபாத்திரம் அரைவேக்காட்டுத்தனமாகக் கதையில் பேசுவது இயல்பாகவே இவர்களின் கதையில் நடந்தேறும் நிகழ்வு. அதுவும் மாறாமல் வருகிறது.
கிராமத்து பள்ளிக்கு ஆசிரியராக வந்த கார்த்திகா தன் அழகாலும் செய்கையாலும் அவ்வூரையே கட்டிப்போடுகிறாள். ஊரின் ஜமீன் வம்சத்து வாரிசையும் தன் பின்னே அலையவிடுகிறாள்.
அமெரிக்காவில் தான் தன் வாழ்க்கை என்ற முடிவில் இருந்த அரவிந்தனை இந்தக் கிராமமே உன் அடையாளம் என்ற புரிதலை உண்டாக்கிய கார்த்திகாவிடம் வீழ்ந்துபோனவன் அவளிடம் இருந்து மறுப்பு கிளம்பும் போது ஒதுக்கி வைத்த பழைய நிகழ்வுகள் பெரியவர்களால் தூசு தட்டப்படுகிறது.
வேற்று ஜாதி பையனை தங்கை திருமணம் செய்தால் என்ற கோபத்தில் அவள் வீட்டை கொளுத்திய அரவிந்தனின் தந்தை இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு முகத்தில் அந்தத் தழலை வாங்கி அடையாளத்தைத் தொலைத்து போய் இருப்பவளை கார்த்திகாவின் தாயாகப் பார்க்கும் போது தன் தவறின் ஆழம் புரிகிறது.
குடும்பத்தினருக்குள் மன்னிப்புப் படலம் நடந்தேறிய பிறகு அரவிந்தனின் காதலுக்குச் சரியான பதில் வந்துசேர்கிறது.
கௌரவகொலையின் பாதிப்புகள். விவசாயிகளின் மகன்கள் தன்னிறைவு அடைய உண்டாக்கிய பாதைகள் என்ற வகையில் தொட்டுச் செல்லும் கருத்துகள் ஏற்புடையவையே.