மனிதர்களை கவனமாக அணுகுகிறேன், உரையாடுகிறேன். ஒரு கதை சொல்லியாய் அவர்களின் வாதைகளை உள்வாங்கிக் கொள்ள விழைகிற போதெல்லாம் மனித மனங்களுக்கு வயது வேறுபாடுகளின்றி உடல் எப்போதும் சிக்கலானதொன்றாகவே இருந்து வருகிறது. இச்சையை இனப்பெருக்கத்திற்கான ஒரு தேவை என்கிற அளவில் மட்டுமே வாழ்வில் கடைபிடித்து வரும் நம் சமூகத்தில் அது உருவாக்கும் அகச்சிக்கல்களை கொந்தளிப்புகளைக் குறித்து உரையாடக்கூடிய ஒருவரை பொது சமூகமும் அவர்களை குளிர்விப்பதற்காக மட்டுமே இலக்கியம் படைப்பவர்களும் தீண்டத்தகாதவனாகவே பார்ப்பார்கள். ஜி.நாகராஜனை அவர் காலத்தின் சாதனை என்று அடையாளப்படுத்துகிறவர்கள்கூட தன் காலத்தின் பிசிறுகளை எழுதுகிறவர்களைப் பொருட்படுத்துவதில்லை. ஒரு எழுத்தாளன் தன் காலத்தில் கொண்டாடப்படாமல் போகலாம், ஆனால் வாசிக்கப்படாமல் போகக்கூடாது. இந்தக் கதைகள் வெளியானபோது எதிர்கொண்ட விமர்சனங்களும் கேள்விகளும் அனேகம். ரகசியத்தின் அரூப நிழல்கள் கதை சமீபத்திய வருடங்களில் அதிக சர்ச்சைகளை உருவாக்கின கதைகளில் ஒன்று. அந்தக் கதை எழுதியதற்காகவே சிலர் என்னுடனான நட்பை முறித்துக் கொண்டார்கள். அதே சமயம் எதிர்ப்பை மீறி பெருமளவில் அந்தக் கதை வாசிக்கப்பட்டதும் எனக்கு முக்கியமானது. போலவே, கம்பமத யானை சிறுகதையும் இப்படியாக அவளின் சில காதலர்கள் கதையும். ஒரு வகையில் இந்த மூன்று கதைகளுமே பெண்களின் இச்சைகளைக் குறித்தே பேசுகின்றன. இந்தக் கதைகளின் ஆண்கள் இந்தக் கதையில் உலவும் கதாப்பாத்திரங்கள் மட்டுந்தான். இந்தக் கதையின் உலகம், ஆதாரம் எல்லாமே பெண்கள் மட்டுமே. அதனாலேயே இந்தக் கதைகள் காமத்தை மையப்படுத்தி நான் எழுதிய மற்ற கதைகளில் இருந்து முற்றிலும் வேறுபடுகின்றன. ஒரு சிறு இடைவெளிக்குப்பின் இன்னும் சொல்லப் போனால் நூலாக வடிவம் பெறுவதற்கு முன்பாகவே இந்தக் கதைகளை கிண்டிலில் வெளியிடுவதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி.
"எத்தனையளவு உள்ளே போகிறேனோ அத்தனை பசுமை மலைகள்" - ஜென் கவிதை.
மூன்று சிறுகதைகளை உள்ளடக்கிய ஒரு சிறுகதை தொகுப்பிது. நூலாசிரியர் முன்னுரையில் குறிப்பிட்டது போன்று, வாசகர்கள் மத்தியில் அதிக சர்ச்சைகளை இக்கதை உருவாக்கியிருக்குமென்பது சரியே. காமம், இச்சை இவற்றை மையப்படுத்தி வெளிவரும் புத்தகங்கள் பல நேரங்களில் ஆபாசக் கதைகளாகக் கொண்டு, அங்கீகரிக்கப்படாமலேயே ஒதுக்கப்படுகிறது. ஒருவேளை இப்புத்தகம் இன்றிலிருந்து 20-30 வருடங்களுக்கு முன்னர் பிரசுரிக்கப்பட்டிருந்தால், வாசிக்கப்படாமலேயே போயிருக்க வாய்ப்புண்டு.
இணையத்தின் வழியாய் பாலுணர்வு சார்ந்த ருசிகளை நுகரப் பழகியிருக்கும் சமூகத்தில் காமம், கவர்ச்சி, ஆபாசம், உடல் சார்ந்த இச்சைகள் வெறும் பேச்சுப் பொருளாகக் கொண்டு ஒதுக்கப்பட வாய்ப்பில்லை. பெண்களின் உடல் சார்ந்த இச்சைகள், fantasy, காமம், கவர்ச்சி, ஆண்-பெண் உறவில் நிலவும் ஒருசில ரகசிய நிகழ்வுகளை மையப்படுத்தி இருப்பதால் எதிர்ப்பும், ஈர்ப்பும் ஒருசேர கலந்து, அதுவே பெருமளவில் வாசிக்கப்பட காரணியாக அமைந்திருக்கலாம்.
- கம்பமத யானை - ரகசியத்தின் அரூப நிழல்கள் - இப்படியாக அவளின் சில காதலர்கள்
காமத்தை மட்டுமே மையப்படுத்திச் செல்வதால் பொழுதுபோக்கு நோக்கில் ஒருமுறை வாசிக்கலாம்.
இருளைச் சார்ந்த இரகசியங்களைப் பற்றிய தேடலும், வியப்பும் மனிதருள் எளிதில் அடங்குவதில்லை...