ஆர். ஷண்முகசுந்தரம் எழுதியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களில் பல ‘குறுநாவல்’ என்னும் வரையறைக்குள் அடங்குபவை. அவற்றுள் ‘அறுவடை’க்கு முக்கியமான இடம் உண்டு. பத்தாண்டுக்கும் மேல் எழுதாமல் இருந்துவிட்டுக் க.நா.சுவின் இடையறாத வற்புறுத்தலால் திரும்பவும் எழுத வந்த ஷண்முகசுந்தரம் ‘அறுவடை’யை எழுதினார். புதிதாக எழுதத் தொடங்கும் எழுத்தாளருக்குரிய உத்வேகமும் புதுமை செய்யும் உணர்வெழுச்சியும் ஒருங்கே அமையப்பெற்ற நாவலாக இது உருவாயிற்று. வட்டார மொழியும் வாழ்வியலும் இணைந்திருப்பதோடு மாந்தர்களின் மனப் போராட்டங்களை அவர் கையாண்டிருக்கும் விதமே இன்றைக்கும் இந்நாவலைப் புதுமையுடன் விளங்கச் செய்கிறது. அவரது எழுத்துக்களில் துலங்கும் ‘பெண் நோக்கு’ இந்நாவலில் வெளிப்படையாகத் தெரிகிறது. அதிகம் பேசப்பட்டிருக்க வேண்டிய இந்நாவல் குடத்துக்குள்ளிருந்து இப்போது வெளியுலகுக்கு வருகிறது. இனியேனும் இதன் வெளிச்சம் பரவ வேண்டும்.
ஆர். சண்முகசுந்தரம் (ஆர். ஷண்முகசுந்தரம்) (1917-1977) தமிழின் நவீன எழுத்தாளர்களில் ஒருவர். தமிழ்நாட்டின் கொங்கு வட்டார மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இவர் எழுதிய நாவல்கள் தமிழிலக்கியத்தில் யதார்த்தவாத அழகியல் மரபை உருவாக்கிய முன்னோடி படைப்புகளாக கருதப்படுகின்றன.
ஆர். சண்முகசுந்தரம் பழைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கீரனூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர். தற்போது இந்த கிராமம் திருப்பூர் மாவட்டத்தின் பகுதியாக உள்ளது. இவரது தம்பி ஆர். திருஞானசம்பந்தமும் ஒரு எழுத்தாளர், பத்திரிகையாளர், மற்றும் பதிப்பாளராகவும் இருந்தவர்.
திருஞானசம்பந்தம்- ஆர்.சண்முகசுந்தரம் இருவரும் ஆர்.கே.சண்முகம் செட்டியாரை ஆசிரியராகக் கொண்டு வசந்தம் என்னும் சிற்றிதழை தொடங்கினார்கள். சில ஆண்டுக்காலம் வெளிவந்த வசந்தம் பின்னர் நிறுத்தப்பட்டது. வசந்தம் இதழின் கௌரவ ஆசிரியராக பொருளாதார நிபுணர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் இருந்தார்.
ஆர். சண்முகசுந்தரத்தின் முதல் சிறுகதையான "பாறையருகே" பி.எஸ்.ராமையா ஆசிரியராக இருந்த மணிக்கொடி இதழில் 1937-ல் வெளியானது. "நந்தா விளக்கு" என்ற சிறுகதையும் மணிக்கொடி இதழில் வெளிவந்தது.
நாவல்கள்
ஆர். சண்முகசுந்தரம் 1939-ல் நாகம்மாள் என்னும் முதல் நாவலை எழுதினார். அந்நாவல் 1942-ல் தான் புதுமலர் வெளியீடாக வெளிவந்தது. ஆர்.சண்முகசுந்தரம் 18 நாவல்கள் எழுதியுள்ளார். 'சட்டி சுட்டது’ இவரது சிறந்த நாவல்களில் ஒன்று. இதே ஆண்டில் வெளிவந்த அழியாக்கோலம் நாவலும் இலக்கிய கவனம் பெற்றது.
சிறுவர் இலக்கியம்
ஆர்.சண்முகசுந்தரம் எழுதிய "ரோஜா ராணி" எனும் சிறுவர் நூல் 1968-ஆம் ஆண்டு வெளிவந்தது. ஒன்பது சிறுகதைகளை கொண்ட தொகுப்பு நூல் அது. ஆர். சண்முகசுந்தரம் ஆலோலம் என்ற புனைபெயரில் அரசியல் கட்டுரைகள் 'சுதேசமித்திர’னிலும், 'நவசக்தி’யிலும் எழுதினார்.
மொழியாக்கப் படைப்புகள்
ஆர். சண்முகசுந்தரம் சரத்சந்திரர் எழுதிய 'அசலா’ என்ற நாவலை வங்கத்தில் இருந்து மொழியாக்கம் செய்தார். ஆனால் அது நூல் வடிவில் வெளிவருவதற்கு முன்பே அடுத்து ஆர். சண்முகசுந்தரம் மொழிபெயர்த்த "சந்திரநாத்" என்ற நாவல் ஆனந்த விகடனில் அதன் ஆசிரியர் கல்கியால் வெளியிடப்பட்டது. சக்தி வை. கோவிந்தன் தன் சக்தி பதிப்பகம் வழியாக வெளியிட்ட ஆர். சண்முகசுந்தரம் மொழியாக்கம் செய்த அசலா பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலிருந்து சரத்சந்திரர், பங்கிம் சந்திரர், ரமேஷ் சந்திரதத், தாராசங்கர் பானர்ஜி, தாகூரின் சிறுகதைகள் ஆகியவற்றை ஆர். சண்முகசுந்தரம் மொழியாக்கம் செய்திருக்கிறார். ஆர். சண்முகசுந்தரம் சரத் சந்திரர், பங்கிம் சந்திரர், விபூதிபூஷன் பந்தோபாத்யாய, தாராசங்கர் பானர்ஜி முதலிய வங்க ஆசிரியர்களின் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ஆர்.சண்முகசுந்தரம் மொழியாக்கம் செய்த விபூதி பூஷண் பந்தோபாத்யாயவின் ’பதேர் பாஞ்சாலி’ தமிழ் நவீன இலக்கியத்தில் பெரும் செல்வாக்கைச் செலுத்திய நாவல்.
சின்னப்ப முதலியார் உழைப்பில் உருவான சொத்துக்கள் ஏராளம், பொண்டாட்டி இறந்த பிறகு சின்னப்ப முதலிக்கு சின்னவூடுகளும் ஏராளமானது. கருப்பண முதலியார் இவரின் கூட்டாளி, இன்னொரு கண்ணாலம் பண்ணிக்குங்க மாமா உங்களுக்கு என்ன ஒரு அம்பது வயசு ஆகுமா? அட போங்க மாப்பள எனக்கு எழுபது வயசாச்சு, நீங்க சும்மா இருங்க மாமா பாத்தா அம்பது, அம்பத்தைந்துதான் இருக்கிறமாதிரி இருக்கு என ஆசையை தூண்ட, கடசியா சின்னப்ப முதலிக்கு பெண் தேட ஆரம்பிக்கிறார் கருப்பண முதலி. சின்னப் முதலிக்கோ கண்ணாலம் பண்ணுற வயசுல பேரன் இருக்கிறான். சீட்டாட்டம் இதில் அதிக நாட்டம் நாச்சிமுத்துக்கு. சீக்கிராமா பணக்காரனாவ வேணும் அடுத்தவன் அசந்த நேரம் அவன ஏமாத்தி சீட்டாட்டத்தில ஜெவிச்சுபுடனும் மவ தேவானைய பணக்கார இடத்துல கட்டி குடுக்கனும் இதுதான் நாச்சிமுத்து சீட்டாத்துல ஏமாத்தி சம்பாதிக்க காரணம். வாழ்க்க விளயாட்டு சின்னப்ப முதலிக்கும், தேவானைக்கும் கண்ணாலங்கிற இறுதி எல்ல கோட்ட நெறுங்க கடசியில என்ன ஆச்சுங்கிறதுதான் அறுவடை நாவல். -கலைச்செல்வன் செல்வராஜ்.
அருமையான கதை. ஒரு ஆழமான சமூக நாடகத்தை மிகவும் இயல்பாக சுலபமாக சுவாரசியமாக சொல்லி மனதை கவர்கிறார் எழுத்தாளர் சண்முக சுந்தரம் அவர்கள். ஆனால் கொங்கு நாட்டு வழக்காடு முறையில் ஆங்காங்கே பிறழ்வுகள் சிறுது நெருடலாக இருந்தது.
“அறுவடை” - ஆர். ஷண்முகசுந்தரம் ****** ****** ****** ****** ****** 1960களில் வெளிவந்த குறுநாவல். திருப்பூர் பக்கம் உள்ள தொண்டுபட்டி கிராமத்தில் கதை நடப்பதாகச் செல்கிறது.
சின்னப்ப முதலியார் எனும் மனைவியை இழந்த, நில புலன்கள் சம்பாதித்த பெரும் குடியானவர். வலுவான கிழவர். தனது மகன், மருமகளிடம், ஏற்பட்ட பிணக்கு காரணமாக, அவர்களையும் பேரன் சுப்ரமண்யத்தையும் விட்டு, கிராமத்திலிருந்து தனது வயற்காட்டு வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
அதே ஊரைச் சேர்ந்த கருப்பண்ண முதலியாரும், நாச்சிமுத்துவும் அவ்வப்போது சின்னப்ப முதலியாரை சந்தித்து அளவளாவி செல்கின்றனர்.
சின்னப்ப முதலியார் தனக்கு பெண்துணை தேவை எனும் ஆவலில் இருக்கிறார்..அதற்கு தூபம் போட்டு வளர்த்து கருப்பண்ண முதலியார் லாபம் பார்க்க எண்ணி வேலையை நடத்துகிறார்.
இடையில், பெரியவரின் அறுவடைக்கு காத்திருக்கும் சோளக்காட்டில் பேரன் சுப்ரமண்யம்-தேவானை(நாச்சிமுத்துவின் மகள்) காதல் சந்திப்புகள்…சீட்டாட்ட பழக்கத்தினால் நாச்சிமுத்துக்கு ஏற்படும் அபவாதம் எனச் செல்கிறது நாவல்.
கிழவருக்கு திருமணம் ஆனதா? சோளக்காட்டு அறுவடையின் போது தேவானை-சுப்ரமணியம் காதலுக்கு என்னானது?, சுபத்தில் முடிந்ததா? என்பதே மீதிக்கதையும் கதைமாந்தர்களின் முடிவும்.
கிட்டத்தட்ட இயக்குநர் சிகரம் பாலசந்தர் அவர்களின் படங்களைப் போன்ற கதையம்சமும் கதைமாந்தர்களும் கொண்ட கதை. 1960 களில் சொல்லப்படும் தட்டையான கதைச்சம்பவங்களாக இல்லாது முரண்களை கொண்டுள்ளது இக்கதை.
இக்காலத்தில் இக்கதையை வாசிக்கும்போது அடுத்தடுத்து நடக்கப்போவதை ஊகிக்கமுடிகிறது என்றாலும், 60வருடங்களுக்கு முன் கதையிலுள்ள முரண்களாலான திருப்புமுனைகள் பெரும் தாக்கத்தை வாசகர்களுக்கு கடத்தியிருக்கும்.
தங்குதடையற்ற கொங்கு பேச்சுவழக்கு எழுத்தோட்டம் (காலங்கடந்தும்)சுவாரசியமான வாசிப்புக்கு உகந்ததாக உள்ளது.
புத்தகத்திலிருந்து…
\ இந்த வீடு கட்ட ஆரம்பிக்கும்போது சின்னப்ப முதலியார் சிமிண்டால் கட்டுவதென்றுதான் திட்டம் போட்டிருந்தார். யுத்த காலத்தில் சிமிண்டிற்கு வந்த கிராக்கியும், அதோடு அப்போது வெட்டிக்கொண்டிருந்த கிணற்றிலிருந்து கிடைத்த கருங்கல்லும் அவர் முடிவை மாற்ற வைத்தன, /
\ இந்தக் காட்டைக் கிணறு வெட்டித் தோட்டம் ஆக்குவது என்று அவர் முடிவு செய்தது அதிக உணவு உற்பத்தி செய்யவேண்டுமென்ற அரசாங்கத்தின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அல்ல; தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக்கொள்ளத்தான்.