திரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட "The Mahabharata" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதம்...
This is a Tamil translation of Mr.Kisari Mohan Ganguly's "The Mahabharata", which was translated to english from sanskrit between 1883 and 1896.
4-ம் புத்தகம் - விராட பர்வம் | 4th Book - Virata Parva
மொழிபெயர்ப்பு: செ.அருட்செல்வப்பேரரசன் | Translated S. Arul Selva Perarasan
விராடனின் ஆட்சிப்பகுதிகளுக்குள் வரும் பாண்டவர்கள், அந்நகரத்தின் புறநகர்ப்பகுதியில் உள்ள மயானத்தில் ஒரு பெரிய சமி மரத்தைக் கண்டு, அதில் தங்கள் ஆயுதங்களை வைப்பது.(207) இங்கேதான் அவர்கள் நகருக்குள் நுழைவதும், மாறுவேடத்தில் அங்கே தங்குவதும் உரைக்கப்படுகிறது. பிறகு, காமத்தால் மதியிழந்து திரௌபதியை வேண்டும் தீய கீசகனைப் பீமன் கொல்வது; இளவரசன் துரியோதனனால் புத்திசாலி ஒற்றர்கள் நியமிக்கப்படுவது; வலிமைமிக்கப் பாண்டு மகன்களைக் கண்டுபிடிப்பதில் அவர்கள் தோற்பது;(208-210) முதலில் திரிகர்த்தர்களால் விராடனின் பசுக்கள் கவரப்படுவதும்; அதைத் தொடர்ந்த பயங்கரப் போரும்;(211) பகைவனால் விராடன் கைப்பற்றப்படுவதும்; அவனைப் பீமசேனன் மீட்பதும்;(211) பாண்டவன் (பீமன்) பசுக்களை விடுவிப்பது;(212) குருக்களால் மீண்டும் விராடனின் பசுக்கள் கைப்பற்றப்படுவது; தனியொருவனான அர்ஜுனனால் போரில் குருக்கள் அனைவரும் வீழ்த்தப்படுவதும்;(213) மன்னனின் பசுக்கள் விடுவிக்கப்படுவதும்; சுபத்திரையின் மூலமான தன் மகனும், எதிரிகளை அழிப்பவனுமான அபிமன்யுவுக்காக விராடனின் மகள் உத்தரையை அர்ஜுனன் ஏற்பதும் சொல்லப்படுகின்றன. இவையே விரிவான நான்காம் பர்வமான விராட பர்வத்தின் உள்ளடக்கங்கள் ஆகும்.(214,215) பெருமுனிவரான வியாசர் அறுபத்தி ஏழு பகுதிகளாக[6] இதைப் பிரித்து, இரண்டாயிரத்து ஐம்பது பாடல்களுக்குள் இதை அடக்கியுள்ளார்.(216,217)
[6] கங்குலியில் விராட பர்வத்தில் 72 பகுதிகளும் 2181 ஸ்லோகங்கள் இருக்கின்றன.