வெய்யில் (இயற்பெயர்: வெயில்முத்து) தமிழ் நவீனக் கவிஞர். தமிழ் சிற்றிதழ்களிலும் வெகுசன இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருபவர். ‘கொம்பு’ எனும் சிற்றிதழின் ஆசிரியராகவும் பதிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். 1984 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தார். பெற்றோர்: பெருமாள் - தமிழ்செல்வி. மனைவி: பிரியா, மகள்: மாயா. தற்போது ‘ஆனந்த விகடன்’ குழும இதழில் பணிபுரிந்து வருகிறார். கவிதை குறித்தும் கவிதையின் அழகியல் குறித்தும் பல்வேறு தளங்களில் தொடர்ந்து பேசியும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்தும் வருகிறார். கவிதை குறித்து தமிழ் இலக்கிய மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை வகுப்பதில் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளின் பாடத்திட்டக் குழுவின் ஆலோசகராகவும் இருக்கிறார்.
பொதுவாக இந்த தொகுப்பில் அதிகமும் எதிர் மனநிலையிலும், மறுப்பு மனநிலையிலும் எழுதிய கவிதைகளே நிறைய உள்ளன. நடப்பை மீறுவதான கவிதைகள் மூலம் கவிதைக்கான புதிய எல்லைகளை வரைகிறார் கவிஞர். ‘ஆம்!’ கவிதை இயல்பான தொனியினாலானதாக தோன்றினாலும் அதில் பயன்படுத்தியுள்ள ‘தின்னுங்கள்’ என்னும் வார்த்தையில் உள்ளது கவிதையின் நிறம். தின்னுங்கள் என்பது திருநெல்வேலி வட்டாரத்தில் மிகுந்த வாஞ்சையோடோ அல்லது பெரும் வெறுப்போடோ கூறும் வார்த்தை.
ஆம்! நீங்கள் எதை வேண்டுமாயினும் தின்னுங்கள் என் பன்றிகளுக்கு ரோஜாக்களையே தருவேன்.