தமிழ்த் திரையுலகின் முந்தைய தலைமுறைகளின் மூத்த முன்னோடிகளுடன் இணைந்து பணியாற்றியவர் ஐயா கலைஞானம் அவர்கள். அந்தக்கால திரைப் பிரபலங்களுடனான தமது அனுபவங்களையும் அந்தப் பிரபலங்களின் வாழ்வில் நிகழ்ந்த சில சுவாரஸ்யங்களையும் திரு.கலைஞானம் நேர்மையுடனும், நேர்த்தியுடனும் எடுத்துச் சொல்வதே இந்நூல். தொழில்நுட்ப வளர்ச்சிகள் இல்லாதிருந்த அக்காலத்தில் கலைஞர்கள் தங்கள் ஈடுபாடு மற்றும் கடின உழைப்பினால் எப்படி சினிமாவில் பிரமிக்கத்தக்க சாதனைகளைப் படைத்தார்கள், எவ்வளவு மேன்மை யான மனிதர்கள் அன்றைய திரையுலகின் அகவாழ்வைப் பிரகாசமாக வைத்திருந்தார்கள். விசுவாசம் என்ற சொல்லுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த வெற்றியாளர்கள், வெற்றி மகுடங்களால் தலைக்கனத்தி
நீங்கள் சினிமாத் துறையில் பணிபுரிபவரா? அல்லது சினிமாத் துறையில் பணிபுரிய வேண்டும் என்ற விருப்பம் கொண்டவரா? அல்லது சினிமாவைப் பொழுபோக்கிற்காக மட்டுமே பார்ப்பதைத் தாண்டி சினிமாவின் மீது பெரு விருப்பம் கொண்டவரா? அல்லது சினிமா தொடர்பான கிசுகிசுக்கள், திரைக்குப் பின்னால் நிகழும் சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொள்ளும் ஆர்வம் கொண்டவரா? அப்போது நிச்சயம் கலைஞானம் அவர்களின் "சினிமா சீக்ரெட்" புத்தகங்களின் 5 பாகங்களையும் வாசித்துப் பாருங்கள்.
பாலச்சந்திரன் என்கிற கலைஞானம் என்ற தனிமனிதரின் மூலம் கிட்டத்தட்ட 60 வருட சினிமா தொடர்பான தகவல்களையும் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்வில் நிகழ்ந்த ஆச்சர்யமான மற்றும் துயரமான சம்பவங்களையும், ஒவ்வொரு திரைப்படத்திற்கும் பின்னால் நிகழ்ந்த சுவாரசியமான தகவல்களையும் மனிதர் கொட்டியிருக்கிறார். எம்.கே.தியாகராஜ பாகவதர் காலம் தொடங்கி, விஜய் அஜித் காலம் வரை சினிமாவோடு தொடர்பில் இருந்திருக்கிறார் என்பது நிச்சயம் சாதாரண விஷயமில்லை என்றே நினைக்கிறேன்.
கே.பி.சுந்தராம்பாள் வீட்டில் குடியிருக்கும் போது அவருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்திருக்கிறார். காலை உணவு சாப்பிடும் பழக்கமில்லாத கே.பி.சுந்தராம்பாளுக்கு சரியாக 12 மணிக்கு உணவு பரிமாறப்பட வேண்டும். அனைத்தும் செய்து கொடுத்த கலைஞானம் அவரது இறப்பின் போது அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் சொற்படி இறுதி சடங்குகளையும் அவரின் சொத்துக்களை சொந்தபந்தங்களுக்குப் பிரித்துக் கொடுக்கும் வேலையையும் செய்திருக்கிறார். முருக பக்தரான தயாரிப்பாளர் சின்னப்பதேவர் பிரமச்சர்யம் கடைபிடிப்பதற்காக (திருமணமான அவர் ஏன் பிரமச்சர்யம் கடைப்பிடிக்கத் தொடங்கினார் என்பது சுவாரசியமான தகவல்), மருதமலை முருகனுக்கு உடுத்தியிருந்த கோவணத்துணியை ஏலத்தில் எடுத்து வந்து அதனை தண்ணீரில் நனைத்து அந்த தண்ணீரை குடித்து பிரமச்சர்யம் கடைபிடித்து வந்தார். ஜெய் சங்கர் கதாநாயகனாகவும், ஸ்ரீதேவி அவருடைய தங்கையாகவும் வைத்து அவர் முதன்முதலாக தயாரிக்க இருந்த "பைரவி" திரைப்படத்தில் எப்படி ரஜினி கதாநாயகனாகவும், புது முகம் கீதா தங்கையாகவும் நடித்தனர். அவருடைய கதையில் முத்துராமன், ஜெயலலிதா நடித்து 1976-ல் வெளியான "கணவன் மனைவி" என்ற திரைப்படம் எப்படி மீண்டும் ரஜினி, விஜயசாந்தி நடிக்க 1992-ல் "மன்னன்" என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. சின்னப்பதேவர் - எம்.ஜி.ஆர் இருவருக்குமிடையேயான நெருக்கம், பல கலைஞர்களை வாழ வைத்த சின்னப்பதேவர் அவர்களின் குடும்பம் நொடித்துப் போய் நின்றது, திருவிளையாடல் மற்றும் தில்லானா மோகனாம்பாள் போன்ற திரைப்படங்களை எடுத்த ஏ.பி.நாகராஜனின் குரு பக்தி, எம்.ஜி.ஆர் மேல் உயிரையே வைத்திருந்த அவருடைய உதவியாளருக்கு ரஜினி செய்த உதவி, ரஜினியை ஹீரோவாக்க தேவர் தெரிவித்த எதிர்ப்பு, சிவாஜியின் மிருதங்க சக்ரவர்த்தி திரைப்படத்தை மெய்மறந்து பார்த்த எம்.ஜி.ஆர், புல்லாக குடித்துவிட்டு பாக்யராஜ் செய்த செயல் என ஆர்வத்தைத் தூண்டி மேலும் மேலும் தொடர்ந்து புத்தகத்தை படிக்க செய்திடும் தகவல்கள் புத்தகங்கள் முழுக்க நிறைந்து கிடக்கின்றன.
சினிமாத்துறையில் நிறைந்து கிடக்கும் நேர்மையற்ற மனிதர்கள் மீதான தன் ஏமாற்றங்களையும் அவர் பதிவு செய்திட தவறவில்லை. ஒரே துறையில் இருந்திடும் போது ஏமாற்றங்களை வெளிப்படையாக பொதுவெளியில் பேசிட முடியாது என்றாலும் லேசுபாஸாக விஷயத்தை சபையில் வைத்திருக்கிறார். எல்லோருக்கும் உதவிடும் குணமும், தனக்கொரு உதவி வேண்டுமென்றால் மற்றவர்களிடம் கேட்பதற்கு தயங்குபவராகவும் இருந்திருக்கிறார். நிச்சயம் குடும்பத்திலும் நெருங்கிய நண்பர்கள் வட்டத்திலும் பிழைக்க தெரியாத மனிதர் என்ற பெயரினை பெற்றிருப்பர் என நினைக்கிறேன்.
விறுவிறுப்பான நாவலுக்கு இணையான புத்தக வரிசை. நிச்சயம் வாசித்துப் பாருங்கள்.