ஒரு பொய் என்ற கதைதான் நான் முதலில் எழுதி வெளியிட்டது. எழுபது வயதுக்கு பிறகு எழுத்தாளனாவேன் என்று நான் நினைக்கவேயில்லை. முதலில் வெளி வந்த கதை ஒரு பொய். ஆனால் முதலில் என் மனதில் உதித்த கதை வாழ்க்கை அலைதான். அந்த கதை மனதில் ஓடிக்கொண்டிருந்தது. குறிப்புகூட எழுதி வைத்துக் கொள்ளவில்லை. சாருலதா என் கனவிலா நினைவிலா என்று சொல்ல தெரியாமல், தோன்றி தன் கதையை எழுதென்றாள். துணிவு வரவில்லை. எழுத முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. அத்துடன் இதை போன்ற கற்பனையெல்லாம் வரவேற்கப்படுமா? அந்த பயமும் எழுந்து வாட்டியது. பல பிரபலமான தமிழ் எழுத்தாளர்களையும், அந்த நேரம் வெளி வந்திருந்த ஜெப்ஃறி ஆர்சரின் கிளிப்ஃடன் குரோனிகள் கதைகளும் எனக்கு ஊக்கம் அளித்தது.