நான்கு அடிகள் கொண்ட பாவால் அமைந்தது என்பதால் இப்பெயர் பெற்றது இந்நூல். “செல்வம், இளமை, யாக்கை இவற்றின் நிலையாமையை எடுத்துக் கூறிச் சுகபோக வாழ்வில் திளைக்காதீர்; நல்லதோர் வீணை அதனை நலம்பெற வாழப் பயன்படுத்துங்கள்” என்று அறிவிக்கிறது. “ஈதல் இசைபட வாழ்தல்” இதுவே வாழ்க்கையின் குறிக்கோள் என்று கண்டவர் தமிழர்கள். தான் உண்டு தம் மனைவி மக்கள் உண்டு என்ற சிறிய வட்டத்துள் வாழாதீர்; மானுடத்தை நேசியுங்கள் என்று கூறுகிறது இந்நூல். அருள் உள்ளம் பெறுவதற்குத் துறவு மனநிலை அடிப்படை என்று வற்புறுத்துகிறது. பந்த பாசங்களினின்று விடுபட்டுப் பற்றற்ற நிலை அமைந்தால்தான் மனம் மாசு நீங்கி வாழமுடியும் என்பதையும் அறிவுறுத்துகிறது.
டாக்டர் ரா. சீனிவாசன் பச்சையப்பன் கல்லூரியில் 1940 முதல் 45 வரை மாணவர்; 1945 முதல் 1981 வரை தமிழ்த்துறைப் பேராசிரியர், தலைவர். மொழியியல், தமிழ் இலக்கணம், கட்டுரை நூல்கள், நாவல்கள், நாடகம், புதுக்கவிதை எனப் பல துறைகளிலும் அவர் நூல்கள் வெளிவந்துள்ளன; ‘சங்க இலக்கியத்தில் உவமைகள்’ என்னும் ஆய்வு நூல் மூன்று பதிப்புகளைக் கண்டது; மொழியியல் பத்துப் பதிப்புகளைக் கண்டது; அவர் எழுதிய உரைநடை நூல்களுள் ‘அணியும் மணியும்’ இன்னும் பாராட்டப்படுகிறது. அக்கட்டுரை நூலும், ‘சொல்லின் செல்வன்’ என்னும் நாடக நூலும், ‘வழுக்கு நிலம்’, ‘நனவோட்டங்கள்’ என்னும் நாவல்களும் பல்கலைக் கழகப்பாடநூல்களாக அவ்வப்பொழுது வைக்கப்பட்டு வருகின்றன; எழுத்து, அவர் தொடர் பணியாய் இருந்துவருகிறது. 1991 முதல் கம்பராமாயணம், மகாபாரதம், சீவக சிந்தாமணி முதலிய காவியங்கள் உரைநடையாக்கம் பெற்றன.