கொரனா காலகட்டம் புத்தகம் வாங்குவதற்கான எண்ணத்தைக் குறைத்திருந்தும் ஏனோ தெரியவில்லை மாயப் பெருநதி என்னை ஈர்த்து விட்டதும் வாங்கிய உடனே வாசித்ததும் புதிர்.
ஹரன் பிரசன்னாவின் முதல் நெடுங்கதை. அவரின் சில பேஸ்புக் பதிவுகளை வாசித்திருக்கிறேன். புத்தகம் கிண்டிலில் வாசிப்பதால் பக்க எண்ணிக்கை தெரியவில்லை. எழுத்தாளரிடமே கேட்டேன். 326 பக்கம் என்றார், உண்மையாக நம்ப முடியவில்லை. இந்த ஆண்டில் மிக வேகமாக வாசிக்கப்பட்ட புத்தகம் இதுவாகத்தானிருக்கும். மிக வேகமான வாசிப்பு நடையைக் கொடுத்த எழுத்தாளருக்கு வாழ்த்துகள். ஏனிந்த நாவல் கடைசியில் இவ்வளவு வேகமாக முடிக்கப்பட்டது பெரிய நாவலாக ஆகியிருக்க வேண்டியது என்பது என் எண்ணம்.
நாவலில் இரு காலத்தில் நிகழ்கிறது ஒன்று சமகாலம் மற்றொன்று பழைய காலம். ஒரு பெரிய புத்தகக்கடையில் விற்பனையாளனாக இருக்கும் நாயகன் தனது சுயமுயற்சியால் எழுதிய நாவலை அந்த வருட சென்னைப் புத்தக கண்காட்சியில் விற்பதற்காக படும் பாட்டில் புத்தக விற்று விடுகின்றனவா என்பதே கதைக் கரு.
பிரமாண்ட புத்தக காட்சிக்குள் ஒரு வாசகனாக மட்டுமே சென்று வந்திருக்கிறேன். அதன் தோற்றம் இத்துனை பிரமாண்டம் பெற அதற்குள் நடக்கும் ஓயாத வேலைகள், குறைகள், தில்லுமுல்லுகள், அரசியல்கள் என அத்துனையையும் நம் கண்முன் நிறுத்தி விடுகிறார். இதை வாசிக்கும் நேரம் ஒரு புத்தகக் கண்காட்சிக்குள் நுழைந்த அனுபவத்தை நம்மால் உணரமுடிகிறது.
கதையின் இன்னொரு கதை கனவின் கதையாக விரிகிறது. இதன் களம் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் தாமிரபரணி கரையோரம் வேதபாடசாலையில் நிகழ்கிறது. வேத கற்க வரும் இரு மாணவர்களைப் பற்றியது. அவர்கள் வேதம் கற்று லோகம் பாராட்டும் வேத வித்வான்களாக மாறுகிறார்களா என்பதே கதையின் கரு.
லஷ்மி போல மனைவி வரம். எல்லா விதத்திலும் எல்லா நிலைகளிலும். கணவனின் (ராகவன், ராகவனின் புனைவு ஆனந்தன்) எல்லா ஆசைகளையும் நிறைவேற்றும் ஜீவனாக கடைசி வரை. இதை வாசிக்கும்போது என் கண் முன் எழுத்தாளனே நாயகனாக வந்து போவது தோற்றப் பிழை.
கதைகளை வாசிக்கும்போது வாசகனுக்கான முடிவு எப்போதுமிருக்கும் அந்த முடிவு கிடைக்கும் பட்சத்தில் அந்த நாவலை வாசித்து முடியும் போது சுவாரஸ்யக்குறைவு தோன்றுவது இயற்கை. முடிவு கணிப்பிற்கப்பாற்பட்டதாகவே இருப்பதன் சுவை படித்து முடிக்கும் பொது தாமிரபரணி நம்மையும் நீராட அழைத்துக் கொண்டிருக்கும்.
கிழக்கு பதிப்பகம் எங்கே இருக்கு என்ற கேள்வி முடிவடையாமல் போயிருக்கிறது. எழுத்தாளர்களின் கிசு கிசுக்கள் இனியும் கொஞ்சம் முயற்சி எடுத்திருக்கலாம், பாகத்திற்கு பாகம் தொடர்பற்ற கண்ணித் தொடர்களாக விரியும் மாயப் பெருங்களம் முடியும் தருணம் நம்மைச் சுற்றியிருக்கும் சங்கிலியாக வடிவம் பெற்றிருக்கும்.