மதுமிதா கவிதைகள் தீராத சொற்களின் குவியலிலிருந்து எதை விடுத்து எதை எடுத்து எப்படி அடுக்கிக் கோர்ப்பது’ என்ற குழப்பம் கவிக்கு ஏற்படுகிறது. அணிந்துரை எழுதும்போது எனக்கும் இதே பிரச்சினைதான். எதை எடுப்பது, எதை விடுவது. எல்லாக் கவிதைகளையும் பற்றி பேசினால் அதுவே ஒரு புத்தகமாகிவிடும். மௌனம் வழியாக வாசகர்களின் மனதை தொடுவது மதுமிதாவின் சிறப்பு. தண்ணீர் துளிகளுக்குத் தெரியாது அவை ஆறு என்று. மௌனமாக ஓடுகின்றன. மதுமிதாவின் கவிதைகளும் அப்படித்தான். அவை வந்து எம்மைச் சூழ்கின்றன. பெரும் ஓசை எழுப்புகின்றன. எம்மை மூழ்கவைக்கின்றன. அவற்றின் சுகத்தில் நாம் மெய்மறந்து நிற்கிறோம். அவை ஒன்றையொன்று முந்தி சேதிகள் சொல்கின்றன.
மதுமிதா (இயற்பெயர்:மஞ்சுளாதேவி;பிறப்பு: செப்டம்பர் 5, 1964) தமிழில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர்.
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டாலும் தமிழில் எழுதிக் கொண்டிருப்பவர்.
எம்.ஏ ஆங்கில இலக்கியம், டிப்ளோமா இன் போர்ட் போலியோ மேனேஜ்மெண்ட் ஆகியவை கற்றவர். ஹிந்தி பிரவீன் உத்தரார்த் வரையும் சம்ஸ்கிருதத்தில் பட்டப் படிப்பும் படித்துள்ளார்.
மகாகவி பர்த்ருஹரியின் பொன்மொழிகள் இவருடைய முதல் நூல். சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.
கல்கி, அமுதசுரபி, மங்கையர் மலர், அமீரக ஆண்டு மலர், படித்துறை, யுகமாயினி, வார்த்தை மற்றும் சில சிற்றிதழ்களில் (கலை, உங்கள் பாரதி, களம், நம்பிக்கை...) கவிதை, சிறுகதை, கட்டுரை, நேர்காணல் எனப் பல படைப்புகள் வெளிவந்துள்ளன. மரத்தடி, தமிழ் உலகம், உயிரெழுத்து, சந்தவசந்தம், அன்புடன், ஈ.சுவடி, தமிழாயம், எழுத்தும் எண்ணமும் ஆகிய மடலாடற்குழுக்களிலும் சிஃபி தமிழ், திசைகள், நிலாச்சாரல், திண்ணை, தமிழோவியம், பதிவுகள், கீற்று, தட்ஸ்தமிழ், தமிழ்நெஞ்சம், முத்துக்கமலம் ஆகிய இணைய இதழ்களிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. மதுரை வானொலியில் இவரின் 11 பாடல்கள் இசையமைக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டன. பொதிகை, மக்கள் தொலைக்காட்சிகளில் கவிதை வாசித்துள்ளார். தமிழில் காற்றுவெளி, நீங்கா இன்பம் என்ற வலைப்பூக்களையும் ஆங்கிலத்தில் Truth Wins என்ற வலைப்பூவையும் நடத்தி வருகிறார்.