காலங்கள்தோறும் பெண்ணின் நிலை எப்படி ஆணுக்குக் கீழானதாக ஆக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதை இந்திய வரலாற்றின் மதநூல்கள் தொடங்கி மேற்கத்திய ஆய்வுகள், அம்பேத்கரின் எழுத்துக்கள் மற்றும் சமகாலப் பெண்கள் பிரச்சினைகளிலிருந்து அணுகும் ஒரு சமூக ஆய்வு நூல் இது. வேதங்கள், திருமணச் சடங்குகள், மந்திரங்கள், மத குருமார்கள் எப்படிப் பெண்ணை அடிமைத்தனம் எனும் ‘பாசிக்குட்டையில்’ பிணித்துவைத்திருக்கின்றனர் என்பதை ஆதாரங்களுடனும் அறச்சீற்றத்துடனும் முன்வைக்கும் கட்டுரைகளின் தொகுப்பு. கற்பு குடும்பம் பத்தினிமை என அமைக்கப்பட்ட மரபுகளைக் கட்டுடைக்கும் பெண்ணிய ஆராய்ச்சி ஆயுதம்!
ராஜம் கிருஷ்ணன் (பிறப்பு: 5/11/1925) மூத்த தமிழக எழுத்தாளர். சென்ற தலைமுறை எழுத்தாளரான ராஜம் கிருஷ்ணன், தன் கதை, கட்டுரைகளால் அன்றைய வாசகர் மத்தியில் பெரும் புகழ் பெற்றவர். பெண் விடுதலைக்காகக் குரல் கொடுத்த போராளி.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள முசிறியில் பிறந்தவர். பள்ளிக்கு சென்று முறையான கல்வி பயிலாதவர். 15 வயதில் கிருஷ்ணன் என்பவருக்கு மணம் செய்விக்கப்பட்டார். மின் பொறியாளரான கணவரின் உதவியால் பல புத்தகங்களைப் படித்து, பின் தானே கதைகளை எழுத ஆரம்பித்தார்.
ஒரு நாவலுக்கான பொருளை முன்பே திட்டமிட்டு, சம்பந்தப்பட்ட இடங்களில் பிரயாணம் செய்து, மக்களின் வாழ்வைக் கண்டறிய அங்கேயே தங்கி உய்த்துணர்ந்த பின்னரே நாவலை எழுதுவார். இதுவே இவரது தனிச் சிறப்பாகும்.
1970 ஆம் ஆண்டு தூத்துக்குடி சென்று அங்குள்ள மீனவர்களின் நிலையை நேரடியாகக் கண்டு 'கரிப்பு மண்கள்' என்ற நாவலை எழுதினார்.
பீகார் கொள்ளைக்கூட்டத் தலைவன் 'டாகுமான்சி'யை சந்தித்தவர், அதன் விளைவாக 'முள்ளும் மலர்ந்தது' என்ற நாவலை எழுதினார். திருமதி ராஜம் கிருஷ்ணன் 'முள்ளும் மலர்ந்தது' நாவலை எழுதச் சம்பல் பள்ளத்தாக்குகளுக்கு நேரில் செல்லத் தீர்மானித்ததும், அவரது கணவர் தமது உத்தியோகத்தையே ராஜினாமா செய்துவிட்டு உடன் புறப்பட்டார். எத்தனை பேர்களால் இப்படிப்பட்ட தியாகங்களை, இலக்கிய ஆர்வத்தை முன்னிட்டுச் செய்ய முடியும்? அப்படி அங்கு அவர் தங்கியிருந்த போது மாபெரும் கொள்ளையன் மான்சிங்கின் மகன் தாசில்தார் சிங் என்பவனுடன் பேச சுமார் அரைமணி நேரம் பொறுமையாக அவனெதிரே இவர் அமர, அந்த மீசைக்கார கொள்ளையனோ, ஒரு தினசரியால் தன் முகத்தை மறைத்துக் கொண்டு, அப்படியே இழுத்தடித்துக் கொண்டிருந்தானாம்! ராஜம் அம்மாவின் பொறுமையைக் கண்டு, பின்னர் மனம் திறந்த அவன், நான்கு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தானாம்! இவன் சுமார் 400 கொலைகள் செய்தவன் என்பது குறிப்பிடத் தக்கது!
இந்த 'முள்ளும் மலர்ந்தது' புத்தகத்திற்கு முன்னுரை எழுத திரு. ஜெயப்ரகாஷ் நாராயணணை சந்திக்க பலமுறை முயற்சி செய்தும், அவரைச் சுற்றி இருந்தவர் இவரை அருகிலேயே அண்ட விடவில்லை. சரி, வினோபா பாவேயிடம், சென்று வாங்கிலாம் என்றால், புத்தகத்தை (தமிழ்) முழுதும் பார்த்த அவர், தமிழிலேயே, "நான் சந்நியாசம் வாங்கிக் கொண்டவன். எனவே, என்னால் எந்த முன்னுரையும் தரலாகாது," என்றாராம்! ராஜம் அம்மாவோ, அங்கேயே சத்தியாக்ரகம் செய்து, "நீங்கள் தரும் வரை நான் இங்கேயே அமர்வேன்," என்று சொல்லி இருந்த இடத்தை விட்டு நகரவில்லையாம்! மனம் நெகிழ்ந்த பாபா (வினோபா பாவேயை அப்படித்தான் அழைத்தர்களாம்), "ஆசீர்வாதங்கள். அன்புடன், பாபா," என்று தமிழிலேயே எழுதி கையெழுத்திடாராம்! ஆனால் அந்தப் புத்தகம் எங்கோ போய்விட்டதுதான் மிகவும் வருத்தமான விஷயம்.
டாக்டர் ரெங்காச்சாரியின் சுய சரிதை எழுதுகையில், அவர் தொழில் புரிந்த எத்தனையோ ஊர்களுக்கு சென்று பயனுற்றவர்களை பேட்டி எடுத்துள்ளார். அதிகாலை நடை செல்லும் போது இவர் பிரசவம் பார்த்த ஆடு மேய்க்கும் பெண்ணையும் பார்த்து அவளைப் பேட்டி எடுத்துள்ளார். டாக்டர் ரெங்காச்சாரி வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்ப்பாராம். எனினும் ஒரு மருத்துவ கருத்தரங்கத்துக்கு செல்ல நேரிட்டபோது, உடன் சென்ற அவரது நண்பர் மட்டுமே இவர் பேசியதைப் பதிவு செய்திருந்தாராம். படுத்த படுக்கையாய் இருந்த அநத நண்பரைப் பேட்டி காண ராஜம் அம்மா, செல்கையில், டாக்டரின் பெயரைக் குறிப்பிடதுமே, 'இரு, நான் சொல்கிறேன்' என்று அந்த நிலையிலும், விரிவாக செய்திகளைப் பகிர்ந்து கொண்டாராம். (நண்பர் கஸ்தூரி ஸ்ரீநிவாசன்?) மறுநாள் பத்திரிகையை பிரித்த ராஜம் கிருஷ்ணனுக்கு தூக்கிவாரிப் போட்டதாம்! அந்த நண்பரின் மரணச் செய்தியைக் கண்டு!
திரு. கிருஷ்ணனுக்கு பக்கவாதம் வந்து நடக்க இயலாமல் ஆயிற்று. பின்னர், தன் தொண்ணூறாம் வயதில் 2002ல் அவர் இயற்கை எய்தினர். ராஜம் - கிருஷ்ணன் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. அதன் பிறகு தனது உறவுக்காரர்கள் சிலரை நம்பி தன்னிடமிருந்த பணத்தையும் சொத்துக்களையும் விட்டு வைத்தார் ராஜம் கிருஷ்ணன். ஆனால் அவர்களோ இவரை ஏமாற்றிவிட, 83 வயதில் நிர்க்கதியாய நிற்க வேண்டிய நிலை. அவரது நண்பர்களும், ஒரு சகோதரரும் உதவி செய்து அவரை பாலவாக்கம் விச்ராந்தி முதியோர் இல்லத்தில் சேர்த்தனர்.
ஆனால் யாரும் தன்னைப் பார்த்து இரக்கப்படுவதை இந்த நிலையிலும் விரும்பாத ராஜம் கிருஷ்ணன் இப்போதும் அதே உற்சாகத்துடன் எழுத்துப் பணியைத் தொடர்கிறார். இவரது கடைசி புத்தகம் ‘உயிர் விளையும் நிலங்கள்'. குடும்பக் கட்டுப்பாடு மற்றும் அதை பெண்கள் எதிர்நோக்கும் விதங்கள் குறித்து 25க்கும் மேற்பட்ட கட்டுரைகளோடு கூடிய இந்தப் புத்தகம் பெண்களுக்கு புதிய விழிப்பை உண்டாக்கும் முயற்சி.
முதுமையில் தற்போது பொருளாதார கஷ்டத்தினாலும் உடல்நலிவினாலும் கஷ்
இந்த புத்தகம் சுய அனுபவங்களைக் கொண்டு அதன் மூலம் ஆராய்ச்சி மேற்கொண்டு பெண்ணடிமைத்தனத்தின் வேர்களை இந்திய சமூகத்தின் வரலாற்றின் அடிப்படையில் எழுத்தப்பட்ட 26 கட்டுரைகளின் தொகுப்பு...
மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் பெண்ணடிமைத்தனத்தின் வேர்கள் வித்யாசமான வடிவம் கொண்டது... அதே போல தாய்வழிச் சமூக நடைமுறைகளை பின்பற்றும் ஒருசில இனக்குழுக்கள் இன்றும் இந்தியாவில் உள்ளனர் என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார்...
நான்கு வேதங்களில் பழையதான ரிக்வேத காலத்திலிருந்து பெண்களின் சமூக அந்தஸ்து எவ்வாறெல்லாம் மாற்றம் கண்டு இழிநிலையை அடைந்தது என்பதை அத்தியாயத்திற்கு அத்தியாயம் நிறைய தரவுகளுடன் விளக்கியிருக்கிறார்...
ஒருவகையில் இவர் எழுதியிருப்பது சுயசாதி விமர்சம் சார்ந்ததாக இருக்கிறது... கட்டுக்கோப்பான பிராமண குடும்பத்தில் பிறந்தவரான ராஜம் கிருஷ்ணன் அவர்கள்... அவருடைய வாழ்க்கையில் ஆன்றாடம் சந்தித்த கேள்விப்பட்ட பெண்ணிய அடக்குமுறைகளை வைத்து அதற்கான வேர்களைத் தேடி உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் என்றே கூற வேண்டும்!
இன்றைக்கு பின்பற்றப்படும் பல்வேறு திருமணச் சடங்குகள் ரிக் வேத காலம் தொட்டு எப்படி எல்லாம் இருந்து உருமாறியிருக்கின்றது என்பதையும் அவைகளை வைத்து பெண்ணினத்தை எவ்வாறெல்லாம் அடக்குமுறைக்குள்ளாக்கியது சமூகம் என்பதை தெளிவாக விளக்கியுள்ளார்...
உதராணமாக திருக்குறளில் வரும்
தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்
என்ற குரலில் ‘தற்கொண்டான் பேணி' என்ற தொடரே, ஒருவனுக்கு உடமைப்பொருளாவது நியாயப்படுத்தப்படுகிறது. ‘மூத்த பொய்ம்மை' என்ற சொற்றொடரே மனசில் மின்னுகிறது. ஓர் ஆணைச் சார்ந்து அவனில் தன்னைக் கரைக்க, உடல் பொருள் ஆவி அனைத்தையும் இழக்க வேண்டும் என்ற ஒரு பக்க நியாயம் நெறியாக இந்தப் பெயர் பெற்ற உலகப் பொதுமறை நூலில் வலியுறுத்தப்படுகிறது என குறிப்பிடுகிறார்...
திருமணத்திற்கு முந்தியதான பெண்ணின் வாழ்வு ஒருவிதமான அடக்குமுறைகளில் கழிகிறதென்றால் அதன் பிறகான வாழ்வு கணவனின் வீட்டில் கழிகிறது... தாய்வழிச் சமூக வழக்கங்கள் இப்போதும் கூட வடநாட்டில் கோன்ட், ஸந்தால், குண்டா போன்ற தொல்குடி இனத்தாரிடம் இன்னும் நிலவுகின்றன. இதன்படி திருமணத்திற்கு பிறகு மணமகன் மணமகளின் வீட்டில் வசிப்பார் என்பது தெரியவருகிறது..
தென் இந்தியாவில், நாயர் சமூகத்தைச் சார்ந்த மக்களிடையே, தாய்வழிச் சம்பிரதாயம் நிலவி வந்திருப்பதை குறிப்பிடுகிறார். திருமணம் புரிந்துகொண்டு தனது வாழ்விடத்தை நிர்ணயிப்பது பெண்ணைச் சார்ந்ததாக இருந்து வந்திருக்கிறது. ஒரு வகையில் விலங்குகளின் வாழ்க்கை முறையினின்றும் மனிதர் பின்பற்றிய முறையாக இது கருதப்பட்ட போதிலும், நாகரிக வளர்ச்சியை எய்தியிராத தொல்குடிச் சமுதாயத்தினரிடையே பெரும்பாலும் பெண்ணின் சமுதாய மதிப்பும், சுதந்திரமும், ஆணுக்குச் சமமான உரிமைகளும், போற்றற்குரியவனவாகவே இருக்கின்றன. மிக நாகரிகமான நவீனமான பெண்ணுரிமைச் சமுதாயத்திலும்கூட இந்த மதிப்பும் உரிமைகளும் இந்நாள் பாதிக்கப்பட்டிராமல் இல்லை.
ராகுல சாங்கிருத்யாயன், அம்பேத்கர் என அவர்கள் கூறிய கருத்துக்களை அடிப்படையாக கொண்டு அனேக இடங்களில் இந்திய சமூகத்தின் மனநிலையை விளக்கியிருக்கிறார்... மனுதர்மத்தின் அடிப்படையில் பார்த்தால் சாதியப்படி நிலைகளில் பெண்களின் இடம் நான்காவது அடுக்கான சூத்திரர் என்னுமிடத்தில் தான் வைக்கப்பட்டுள்ளது... அது எந்த வருணத்தை சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் அவளை மனோரீதியாக ஒடுக்கி வைப்பதற்கு அவளை தீண்டத்தகாதவளாகவே இருப்பதற்கான ஏற்பாடாகவே இதை குருபீடங்கள் ஏற்படுத்தியிருப்பதாக குறிப்பிடுகிறார்!
அப்படியென்றால் வர்ண பேதங்களை முதலில் எதிர்க்க வேண்டிய பெண்களே அதற்குள் முழுதாக சிக்கிக் கொண்டு அவதியுறும் நிலை தான் நம் நாட்டில் நிலவுகின்றது என்பது கண்கூடு...
பெண்ணுக்கு அறிவு வேண்டாம்; அவள் உடம்புதான் முக்கியம். அவள் மக்களைப் பெறுவதற்கே படைக்கப் படுகிறாள். அந்த அளவில் அவள் முக்கியத் துவத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற அவசியங்கள், நான்கு வருணச் சமுதாயங்கள் தோன்றிய காலத்தில் ஏற்பட்டு விட்டன. உபநயனம் மறுக்கப்பட்டதும், அது தெரியாமல் இருக்க, அவளுள் மணவாழ்வின் மங்கலங்களும் சடங்குகளும் புதிய நெறிகளும் ஏற்றப்படுகின்றன. அறிவும், அழகும் இணைய, சுதந்திரமாக உலவி, வாழ்வின் மையமான ஓட்டத்தில் இருந்து ஒதுங்காமல், ஓர் ஆடவனை விரும்பிச் சேர்ந்து, மக்களைப் பெற்று வாழும் உரிமை ரிக் வேதத்தில் வரும் பெண்களுக்கு இருந்திருக்கிறது. இதன் பிறகு வந்த அதர்வ வேதத்தில் தான் பிரச்சனைகளும் இந்த இடைச்செருகல் வேலைகளை எல்லாம் ஆரம்பித்திருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள முடிகிறது!
இந்து மத குருபீடங்கள் உருவாக்கிய இன்னொரு நம்பிக்கை ஆச்சாரம் தவறாமல் நடந்து கொண்டால் இறப்பிற்கு பிறகு சொர்க்கம் சேர்ந்து பெருவாழ்வு வாழ்வாய் எனும் எண்ணத்தை ஆழ விதைத்து விட்டது...அதற்கு அதிகமாக வீழ்ந்தவர்கள் பெண்கள் தான்...
ரிக் வேதகாலத்தில் இன்றைக்கு பின்பற்றப்படும் திருமண சடங்குகள் பலவும் கிடையாது முக்கியமாக இந்த திருமாங்கல்யம் என்னும் விசயம் வேதத்திலோ, அதன் பிறகு வந்த ஸ்ருமிதிகளிலோ ஏன் நம் பழந்தமிழ் இலக்கியங்களிலோ கூட எங்கும் இடம்பெறவில்லை... ஆனால் இதன் தாக்கம் பெண்க்களை மேலும் அடக்கி வைக்க அவர்களை உணர்வுரீதியாக துன்புறுத்த இன்றளவும் பயன்பட்டு வருகிறது...
இன்றைக்கு பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகிறார்கள்... ஆனால் இந்த நிலைக்கு வருவதற்கு எத்தனை ஆயிரம் ஆண்டுகாலம் போராட வேண்டியிருந்திருக்கிறது என்பதை நினைத்தால் ஆண் வர்க்கம் எந்தளவிற்கு பெண்களை அழுத்தத்திற்குள்ளாக்கி வைத்திருக்கிறது என்பது விளங்கும்! இந்திய சமூகத்தில் பெண்கள் பற்றிய கருத்தாக்கங்களை அறிந்து கொள்ளவும் மாயைகளை அகற்றி அறிவு ஒளி ஏற்றிட இந்த காலந்தோறும் பெண் நூல் நிச்சயம் உதவியாக இருக்கும்!