எத்தனை பெரிய உயர் பதவியும் மக்களாட்சியில் மக்களுக்காகப் பணியாற்றக் கொடுக்கப்படுவதுதான். மாவட்ட ஆட்சியர் பணி என்பது ராஜபாட்டையில் கம்பீரமாகப் போவதல்ல; மக்களின் குறைகளை அறிந்து அவற்றைக் களைந்து அவர்களின் முகங்களை மலரவைப்பதற்கான பணியாகும் என்று நன்கு உணர்ந்தவர் உதயச்சந்திரன் என்பதை, அவரின் பணி அனுபவங்களில் இருந்து அறிய முடிகிறது. தான் ஆட்சியராகப் பணிபுரிந்த மாவட்டங்களில் ஆற்றிய பணிகள் குறித்தும், தான் பொறுப்பேற்ற துறைகளில் எடுத்த முன்னெடுப்புப் பணிகள் பற்றியும் அதன்மூலமாக தனக்கேற்பட்ட அனுபவப் பாடங்களையும் அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார். சிறந்த ஆளுமையாக அறியப்பட்ட உதயச்சந்திரனை சிறந்த எழுத்தாளராகவும் அறியச் செய்யும் இந்த 40 கட்டுரைகள் வெறும் அனுபவத்தை மட்டும் சொல்பவை அல்ல. கலை, இலக்கியம், பண்பாடு, கலாசாரம், வரலாறு, அறிவியல் என பல்வேறு தளங்களில் பயணிக்கும் கட்டுரைகளாகும். ஏழை எளிய விவசாயிகளை வரிச் சுமையிலிருந்து மீட்ட தாமஸ் மன்ரோவின் கருணை, மதுரை மாநகரை மாற்றியமைத்த கலெக்டர் பிளாக்பர்ன், மகாத்மா காந்தியின் தமிழ் மொழிப்பற்று... என பல வரலாற்று நிகழ்வுகளை சமகால நிகழ்வுகளோடு முடிச்சுப்போட்டு நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார். அரசு ஊழியர்களைப் பற்றி பொதுமக்களிடம் இருக்கும் பொதுவான கண்ணோட்டத்தை இந்த நூல் மாற்றிவிடும். பெரும்பாலான அரசு ஊழியர்கள் எப்படி கடமையுணர்வோடு நேர்மையாகப் பணியாற்றுகிறார்கள், அவர்களின் அர்ப்பணிப்பு எப்படிப்பட்டது என்பதை இந்த நூல்வழி அறிய முடிகிறது. ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதுகிறவர்களுக்கு உந்து சக்தியாகவும், ஐ.ஏ.எஸ் பணியில் புதிதாக ஈடுபட்டிருப்போருக்கு வழிகாட்டியாகவும் இந்த நூல் விளங்கும் என்பதில் வியப்பில்லை. மாபெரும் பதவிதனில் அமர்வது மக்களுக்காகவே என்பதை இந்த நூல் உணர்த்துகிறது.
நிர்வாகத்தில் தான் பெற்ற அனுபவத்தை பற்றி பேசுவதோடு மட்டுமல்லாமல் தான் படித்த புத்தகங்கள், பார்த்த திரைப்படங்கள் போன்றவற்றையும் பரிந்துரைப்பது கூடுதல் சிறப்பு.
குடியாட்சி சேவைத் (Civil Service exam) தேர்வு இந்தியாவில் நடக்கக்கூடிய தேர்வுகளில் மிகவும் கடினமானது என எல்லோருக்கும் தெரியும் ஆனால் அந்த தேர்வைவிட ஆட்சியாளர்களின் அழுத்தத்தாலும் மக்களின் பக்கம் மக்களுக்காக எடுக்கப்படும் முடிவு தான் மிகவும் முக்கியமானது . இந்த புத்தகத்தை எழுதிய திரு. உதயசந்திரன் மாவட்ட ஆட்சியராக பல்வேறு மாவட்டங்களில் மேற்படி சொன்ன பண்புகளுடன் பணியாற்றியவர்.
தனது ஆட்சியர் பணியை வெறும் பணியாக மட்டும் செய்யாமல் ஒரு பயணமாக தொடுத்து வெளியிடப்பட்ட நூல் இது. இதில் சாமானிய மக்களை நட்சத்திரங்களாக்கி அழகு பார்க்கிறார் . இதோடு தனது முடிவுகளில் பின்னணியில் ஆகாச் சிறந்த மனிதர்களின் வரலாறு செதுக்கியது என நம்மை அக்காலத்திற்கே அழைத்து சென்று எழுதப்பட்ட விதம் தனித்துவம் . ஒரு ஆட்சியரின் முடிவுகள் நலத்திட்டங்களாக இருந்தாலும் மக்களின் உளவியல் சார்ந்து தான் எடுத்த முடிவுகளை ஊக்குவித்த சக ஊழியர்களையும் கூறுவது மறைமுகத்தன்மை அற்ற தலைமை பண்பு புத்தகம் முழுவதும் காணப்படுகின்றது .
தமிழ் மக்களின் வரலாற்று வேர் , ஒருமையுடைய பண்பாடு என தொல்லியல் ரீதியாகவும் , கீழடியில் இருந்து தரவுத்தள மேலாண்மை (பிக் டாட்டா) வரை தான் செய்யத பங்களிப்பு என நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார் . புத்தகம் முழுவதும் பலதரப்பட்ட தலைப்புகளை தான் வாசித்த புத்தகம் வழியாகவும் , உலக திரைப்படங்கள் வழியாகவும் தன் பார்வையை கோர்த்து கூறிய விதம் சுவாரசியம் . என்றோ ஒரு நாள் தலைமைப் பொறுப்பில் அமர நேர்ந்தால் இந்த புத்தகம் பேசிய தலைப்புகள் நினைவில் அமரனாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை !
மாபெரும் சபைதனில் ! நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும் !
இந்தியாவின் இளம் IAS அதிகாரிகளில் ஒருவரான உதயச்சந்திரன் IAS, அவர்களின் அனுபவங்களும் அதன் சார்ந்த வரலாறுகளும், வரலாற்றின் மூலம் கண்ட தீர்வுகளையும், நேர்மையான எளிய மனிதர்களின் மாற்றத்திற்கான முன்னெடுப்புகளையும் அழகிய நடையில் தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்த புத்தக வாசிப்பில் மக்கள் சேவையின் மகத்துவமும், அனுபவங்களை அனுபவிக்காமல் பெற்ற அனுபவ உணர்வும், IAS ஆகியிருக்கலாமோ என்ற ஏக்கம் எழுவது இயல்பே!!
மக்கள் சேவையில் ஈடுபட போகும் நமக்கு இந்த புத்தகம் அதற்கான மனத்திண்மையை வளர்க்கும் வண்ணம் அமையும் என நம்புகிறேன்.
உதயச்சந்திரன் IAS அவர்கள் வாசித்த புத்தகங்களின் புத்தகச் சுருக்கங்கள் புத்தக வாசிப்பை தூண்டுவதாக அமைந்திருப்பது இந்த புத்தகத்தில் கூடுதல் சிறப்பு.!