‘இசூமியின் நறுமணம்’ என்ற தலைப்பிலான ரா.செந்தில்குமாரின் சிறுகதைத் தொகுப்பு பன்னிரு சிறுகதைகள் கொண்டது. இவற்றுள் பல கதைகள் இணையத்தின் மூலம் வாசிக்க வாய்த்தவை. முன்னுரை எழுதும் பணிக்காக ஒருசேர வாசித்தேன். நான் முன்னுரை எழுதும் எந்த நூலையும் இரண்டு முறை வாசிப்பேன். எனவே இரண்டாம் முறையும் வாசித்தேன். புத்தக வடிவில் என் கையில் கிடைத்ததும் இன்னொரு முறையும் வாசிப்பதற்கான தூண்டுதல் இக்கதைகளில் உண்டு.
பன்னிரு கதைகளில் நான்கு கதைகள் நீங்கலாக மற்றெல்லாம் ஜப்பானிய சூழலில் எழுதப்பெற்றவை. அவற்றுள் நடைமுறை, அலுவலகம், குடும்பம், வாழ்க்கை, மாநகர இயக்கங்கள் மற்றும் ஜப்பானிய தேசத்தின் குணநலன்கள் நுட்பமாகப் பேசப்படுகின்றன.
வழக்கமாகப் பிறமொழிக் கதைகளை, ஆங்கிலம் வழித் தமிழ் மொழிபெயர்ப்புகளாக வாசிக்கும்போது நாம் ஒரு அந்நியத்தன்மையை உணர்வோம். விதிவிலக்குகள் இருக்கலாம். என்றாலும் அதே பாடுபொருள்கள், மூலமே தமிழாக அமையும்போது வாசிப்பின் வசீகரம் அதிகரிக்கிறது. தலையாய எடுத்துக்காட்டு மூத்த தமிழ் எழுத்தாளர், கனடாவில் வாழும் அன்னார் அ.முத்துலிங்கம் அவரை மூத்த இலங்கை எழுத்தாளர் என்று பிரித்துப் பேசுவதில் எனக்கு ஒவ்வாமையுண்டு. மேலும் சில இலக்கியவாதிகள் பெயர் குறிப்பிடலாம். நாகரத்தினம் கிருஷ்ணா, ஷோபா சக்தி, காலம் செல்வம் என்ற அருளானந்தம், டி.சே.தமிழன் என்று அறியப்படும் இளங்கோ, ஆசி.கந்தராசா, நொயல் நடேசன், வ.ஐ.செ.ஜெயபாலன், தமிழ்நதி என்று சிலர் உடனடியாக நினைவுக்கு வருகிறார்கள்.
புலம்பெயர்ந்து இருநூறு ஆண்டுகளோ, இருபதாண்டுகளோ அவர்கள் மூலமாகத் தமிழ் வாசகனுக்கு நேரடியாகத் தெரியவரும் அந்நிய மண்ணின் மரபுகள் உண்மையான அனுபவங்களாகின்றன. ஐரோப்பிய, அமெரிக்க, கனடா, வளைகுடா, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் பண்பாடுகளை நேரடியான தமிழ் எழுத்தாளர் அனுபவமாகவே நமக்கு இன்று வாசிக்க இயலும். ஆனால் சீனா, ஜப்பான், கொரியா போன்ற நிலப்பரப்புகளின் ஆக்கங்களை மொழிபெயர்ப்பு மூலமாகவே இதுவரை அறிந்த்து வந்தோம். ஆனால் அண்மைக்கால அனுபவம் வேறு. அந்த வகையில் ‘இசூமியின் நறுமணம்’ எனும் இந்தத் தொகுப்பின் எட்டு கதைகள் மூலம் ஜப்பானியப் பண்புகளைப் படைத்துக்காட்ட முயலும் ரா.செந்தில்குமாரின் முயற்சி பாராட்டுதலுக்குரியது, வரவேற்கத் தகுந்தது. ‘எல்லை ஒன்றின்மை எனும் பொருள் அதனைக் கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும்’ என்றுதான் பாரதியார் கம்பனையே முயற்சி என்கிறார். அந்த மதிப்பீட்டிலேயே ரா.செந்தில்குமாரின் இந்தக் கதைகளையும் முயற்சி என்கிறேன். ரா.செந்தில்குமார் என்பது பெயர்தான் என்றாலும் டோக்கியோ செந்தில் எனும் பெயரிலேயே நண்பர் பலரும் அறிவார் அவரை. எதிர்காலத்தில் ‘நாமமும் அனுமன் என்பேன்’ என்று கம்பன் கூறுவதைப்போல தமிழிலக்கியத்தில் பெயர்நிலைக்க அவர் முயல வேண்டும்.
காதலியின் திருமண வரவேற்புக்குப் பரிசுப்பொருள் தேர்ந்து வாங்கிப்போகும் காதலனின் மெல்லுணர்வுகளும் வஞ்சிக்கப்பட்ட தாம்பத்யத்தின் வல்லுணர்வுகளுமாக மிடைந்து காட்சிதரும் கதை ‘மலரினும் மெல்லிது’. நொடித்துப் போனதொரு குடுப்பத்துப் பெண்டிரின் கையறு நிலையை சூசகமாக உணர்த்தும் கதை ‘மடத்து வீடு’. வளர்ந்ததொரு கழுகின் உச்சியில் ஏறி இன்னொரு கழுகுக்குத் தாவும் சாகசப் பயிற்சி இருப்பவர் மட்டுமே இக்கதைகளின் உளவியல் அறிந்து அனுபவிக்க இயலும். உழுபவனுக்கே நிலம் சொந்தம் எனும் கோஷம் உரத்துக் கேட்ட காலத்தின் கதை ‘அனுபவ பாத்தியம்’. எத்தரப்பில் நின்றும் நியாயத்தை அத்தனை எளிதாக உரைத்துவிட இயலாது என்பதை வாசகனுக்கு அர்த்தப்படுத்தும் சிறுகதை. மனித வாழ்க்கையில் சூதும் வாஞ்சனையும் புதிய சங்கதிகள் அல்ல. அதன் ஒரு வடிவம் ‘அறமெனப்படுவது யாதெனக் கேட்பின்’ எனும் கதை. வஞ்சிக்கப்பட்டவரின் அவமானமும் வீழ்ச்சியும் அதன் காரணங்களும் பேசும் கதை.
மேற்சொன்ன நான்கும் சமகாலத் தமிழ்நாட்டுச் சூழலில் உரைத்தல் படும் கதைகள். மீதி எட்டும் ஜப்பானியப் பின்புலம். ரா.செந்தில்குமார் பதினெட்டு ஆண்டுகளாக ஜப்பான் நாட்டில் டோக்கியாவில் வாழ்பவர். இந்தத் தொகுப்பின் ஜப்பானியத் தளத்தில் நடக்கும் கதைகளை வாசிக்கும்போது 2018-ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஜப்பானில் வாழ்ந்த ஒன்பது நாட்களும் எனக்கு நினைவு வந்தன. முழுமதி அறக்கட்டளையின் அழைப்பில் சென்று வந்தேன். ரா.செந்தில்குமார் – காயத்ரி தம்பதியினரும் கவின், கவிதா என்ற அவர் மக்களும் – எனக்கு பேரனும் பேத்தியும் – காட்டிய அன்பு என்றும் நிலைத்திருக்கும் நெஞ்சில். அஃதே போன்று ரகுபதி ராஜசேகர் – ரம்யா தம்பதியினரும் அவர்தம் இரு பெண்மக்களும். உலகெங்கும் நமக்கு இன்று பேரன் பேத்திகள்.
ஜானி வாக்கர், புளூ லேபில், ஜாக் டேனியல்ஸ், க்ளென் லிவெட், க்ளென் ஃபிடிஷ் விஸ்கிகளுக்கு சற்றும் பின்வாங்காத ஜப்பானிய சிங்கிள் மால்ட் விஸ்கியொன்று பருகினேன் சிலநாட்கள். தொகுப்பின் கதையொன்றில் அந்த விஸ்கி குறிப்பிடப் பெறுகின்றது. யமாசாகி என்பது அதன் பெயர். எதற்குச் சொல்கிறேன் எனில் மலர்கள், உணவுகள், இசை எனப் பல குறிப்புகள் உண்டு இந்த எட்டுக்கதைகளிலும்.
ஜப்பான் பயணத்தின் போது தகவலாகத் தெரிந்து கொண்ட விடயம் ஒன்றுண்டு. அங்கு பிரசவங்களின் போது சிசேரியன் என்பது மிகமிக அரிது என்பதது. இன்னொன்று ஆண்டுதோறும் அந்நாட்டில் நிகழும் தற்கொலைகளின் எண்ணிக்கை. ‘அன்பும் அறனும் உடைத்தாயின்’ எனும் சிறுகதையில் சிவநேசன் எனும் மலேசியத் தமிழரின் தற்கொலை அந்தத் தகவலை உறுதி செய்தது. இன்னதென அறிகிலாத காரணத்திற்காக அங்கு வழக்கமாக நடக்கும் இரயில் முன் பாய்தல்களில் இதுவுமொன்று என வாசகனால் இயல்பாகத் தாண்டிப் போக இயலாதபடி சித்தரிக்கப்பட்ட கதை.
சாவு பற்றிய இன்னொரு கதை ‘செர்ரி பிளாசம்’ ஆனால் இங்கு மரணம் தற்கொலையல்ல, கொலையல்ல, நோய். இளம் கணவர் உடலுடன் காதல் மனையாட்டி ஊர் திரும்பும் கதை. என்னை சாலவும் பாதித்த கதை. பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நெதர்லாண்டில் இருந்து பம்பாய் – திருவனந்தபுரம் மார்க்கமாக சடலமாக நாகர்கோயில் திரும்பிய என் தம்பியின் நோய்ப்பட்ட மரணத்தை நினைவூட்டியது. உடன் பயணித்து வரும...
புலம்பெயர் இலக்கியத்தில் சப்பான் வாழ்வைப் பற்றி வேறு நூல்கள் வந்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவ்வகையில், சப்பானில் பல ஆண்டுகள் வாழ்ந்து அம்மொழியையும் மக்களையும் நன்கு அறிந்துள்ளவர் என்பதால் செந்தில்குமாரின் கதைகள் சப்பானிய வாழ்வியலை நன்றாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன. மிக நூணுக்கமான உணர்வுகளையும் புலம்பெயர் வாழ்வின் தனித்தன்மையான நிகழ்வுகளையும் அயலினத்தாருடனான ஊடாட்டத்தையும் நன்கு காட்டியிருக்கிறார். சக்குரா எனும் செர்ரி மலர் ஆழமான பண்பாட்டு அடையாளங்களைக் கண்டது. அதையும் அதைக்காணுவதற்காகச் சப்பான் வரும் தமிழ்க்குடும்பத்தையும் இறுதியில் வருத்தமான ஒரு கட்டத்தில் அதன் இருப்பில் சப்பானியரின் நேர்த்தியையும் உணர்வையும் சேர்த்துக் காட்டிய சிறுகதை படித்து முடித்துப் பலநாள் கழித்தும் மனதில் நிற்கிறது.
நிகோங்கோ (எனும் சப்பானிய) மொழி உரையாடல்களில் சில சொற்களை அப்படியே பயன்படுத்தித் தமிழில் விளக்கம் கொடுத்திருப்பதால் அம்மொழியைக் கற்பவர்களுக்கும் சப்பானில் வாழும் தமிழர்களுக்கும் கூடுதல் வசதி. ஆசிரியர் எழுத்துப்பிழைகளைப் பற்றியும் இலக்கணப்பிழைகளைப் பற்றியும் கூடுதலாக அக்கறை காட்டியிருக்கலாம். 'ற்க்கு' எனப் பயன்படுத்தியிருப்பது, பலவின்பாலுக்கு ஒன்றன்பால் என்பது போலப் பல பிழைகள் இருந்தது எனது மதிப்பீட்டைக் குறைத்துவிட்டது. பல கதைகளில் முடிவை வாசகர் விரும்புமாறு புரிந்துகொள்ளும்படி விட்டிருக்கிறார். சில இடங்களில் அது எனக்கு நிறைவாக இல்லை.