அக்காளின் எலும்புகள் - வெய்யில்
எப்போதும் ஆயிரம் மின்மினிகளால் மட்டுமே சூழப்பட வேண்டிய அக்காக்கள் சமுகத்தாலும், ஆணவத்தாலும், சாதியத்தாலும் அதை விடாது தூக்கிச் சுமக்கும் உறவுகளாலும் சூழப்பட்டுப் படும் வேதனையின், இன்னல்களின், வலிகளின் கடக்க முடியா, இயலா துயர சித்திரம் தான் அக்காளின் எலும்புகள்.
பேய் பிடித்ததாய், பித்தானதாய், காக்கா தூக்கிச் சென்றதாய் காணாமல் போன அக்காக்கள் - சாதியின், ஆணவத்தின் வெறிகொண்டு நிகழ்த்தப்பட்ட வேட்டையின் பரிசாய் கழுத்தறுக்கப்பட்ட துயரத்தையும், பின் பிராயச்சித்தமாய் சுடுமண் சிற்பமாய், நிரப்பித் தைத்த பிண்டமாய், பிறந்த பிள்ளைகளின் பெயராய் உருமாறி நின்ற அவலத்தையும், உயிராக அன்பு செய்த அக்காக்கள், மெய்யாக வீட்டினுள் அலைந்து திரிந்த அக்காக்கள் - உயிரும் இல்லாமல், உடலும் இல்லாமல் ஒன்றுமில்லா சருகாகி, ஆழப் புதைக்கப்பட்ட எலும்பாகி எஞ்சி நின்ற வலியையும் பாடித் தீர்க்கிறது வெய்யிலின் கவிதை.
தன் இணையை இழந்த அக்காக்கள், தன்னை இழந்த அக்காக்கள், ஆழப் புதைக்கப்பட்ட அக்காக்கள் உயிரும், மெய்யும், உயிர்மெய்யுமாய் அலைந்து திரிகிறார்கள் வெய்யிலின் கவிதைகளுக்குள்.
சிலர் சுடுமண் சிலையாக உயிர்த்தெழுகிறார்கள், நூற்றாண்டுக் கதைகளை ரகசியமாய் முனகித் தீர்க்கிறார்கள், அலர் தூற்றும் ஊரை வேடிக்கையாய் கடக்கிறார்கள், கடல் கடந்த மச்சானின் வருகைக்காகக் கண் விழித்துக் காத்திருக்கிறார்கள், இல்லாத மச்சானின் வாசனையாய் சிகரெட் வாசனையை தனக்குள் நிரப்பி ஆசுவாசம் கொள்கிறார்கள், குருதியின் கறைகண்டு ரசித்துச் சிரிக்கிறார்கள், காதல் நாய்களின் ரத்தச் சிராய்ப்பை வருடிக் கொடுக்கிறார்கள், தம்பியின் அன்புக்குத் தன்னையே ஒப்புக் கொடுக்கிறார்கள், சன்னதம் எடுத்து ஆடுகிறார்கள், துர் கனவுகளை ஏவுகிறார்கள், துடிப்பேரிய அணங்காய் மாறி நிற்கிறார்கள், மத்தியானக் காட்டில் நீலியாய் உருவெடுத்து அலைந்து திரிகிறார்கள் - இருந்தும் அடங்குவதாய் இல்லை அக்காள்களின் ஆதாளி.
அத்தனை எளிதில் கடக்க முடியவில்லை ஒரு துயரிலிருந்து மற்றொன்றுக்கு, ஆழப்புதைத்த அக்காளின் எலும்புக் கரங்கள் இறுக்கமாய் பற்றிக் கொள்கின்றன - ஒவ்வொரு வாசிப்பிலும். அத்தனை எளிதில் விடுவதாய் இல்லை ஏதேதோ சமாதானம் சொல்லிக் கடக்கிறேன் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு.
ஒவ்வொரு கவிதையையும் வாசிக்க, வாசிக்க ஆழப் புதைத்த அக்காள்களின் எலும்புகளுக்குள் மீண்டும் ஒரு முறை உயிர் துடித்து அடங்குகிறது. ஒவ்வொரு கவிதையின் வழியாக எப்படியேனும் மீண்டெழத் துடிக்கிறாள் அக்கா.
எப்படிச் சொல்வது அவளிடம் - அவளைத் தான் நாங்கள் மீண்டே எழ முடியாத ஆழத்தில் புதைத்து விட்டு வந்தோம் என்பதை.
முழுவதும் வாசித்து முடிக்கையில் ஆழப்புதைத்த அக்காளின் எலும்புகளுக்குள் சட்டென்று இருகண்கள் முளைத்து அகல விரித்து என்னைப் பார்ப்பதைப் போன்றதொரு உணர்வு. அதன் மிரட்சியை, வெம்மையைத் தாங்க முடியாமல் செய்வதறியாது மூடி வைக்கிறேன் புத்தகத்தை - அக்காளுக்குச் சொல்லப் பதில்கள் ஏதுவுமின்றி.
நீங்களேனும் சொல்லுங்கள் அப்பா,
அப்படி அமாவாசை இரவன்று அக்காளுக்கு என்னதான் நடந்ததென்று..?
குருதி வழிந்து குற்றுயிராய் கிடக்கும் அக்காக்களும், இணை இழந்த அக்காக்களும், ஆழப்புதைக்கப்பட்ட அக்காக்களும் படையென வந்திருக்கிறார்கள் - இம்முறை என்ன சமாதானம் சொல்லித் திருப்பி அனுப்பி வைக்கட்டும், அதையும் சொல்லுங்கள்.