சூழலியலாளர் நக்கீரன், உத்வேகம் பெற்றுவரும் பசுமை இலக்கியத்தின் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவர். கவிஞர், குழந்தை இலக்கியவாதி, பேச்சாளர் என பல முகங்கள் கொண்டவர்.
நம்ம வாழ்க்கை நம்ம கையிலே இல்லைன்னு சொல்றேன்.. அதை ஏதோ பத்து நாட்டுலே இருக்குற ஏதோ பத்து பேரு முடிவு பண்றாங்க... நான் படிக்கணுமா, வேண்டாமா?, படிச்சா எதைப் படிக்கணும்? படிப்பை முடிச்சா எந்த வேலைக்குப் போகணும்? இதெல்லாம் ஏற்கெனவே எழுதுன சினிமா ஸ்கிரிப்ட் மாதிரி. அதுலே, நாமெல்லாம் நமக்குக் கொடுத்த வேசத்தை நடிச்சுக்கிட்டு இருக்கோம். எனக்கு டிரைவர் வேசம்னா, அவளுக்கு விடுதி வேசம். இந்த வேசம் வெட்கம்னா அதை போடச் சொன்னவங்களும் வெட்கம் கெட்டவங்கதானே?...💙💙💙
சொந்த வாழ்க்கையில் தாங்கள் பெற்ற அனுபவங்களை, சந்தித்த மனிதர்களை, கடந்து வந்த சூழ்நிலைகளை எல்லாம் வெகு சிலரால் மட்டுமே ஒரு இலக்கிய படைப்பாக மாற்ற முடியும். அந்த வகையில் நக்கீரன் அவர்கள் ஒரு தனித்துவமான இலக்கியவாதி. வெட்டுமர முகாமில் தான் பெற்ற அனுபவங்களை காடோடி எனும் சூழலியல் புதினமாகத் தந்தவர். இந்த முறை போர்னியோவின் சண்டகான் நகரில் பணியாற்றிய போது கண்ட மனிதர்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு இந்த குறுநாவலை எழுதியிருக்கிறார்.
பாலியல் தொழிலை நோக்கி தள்ளப்படும் பெண்களுக்குப் பின்னால் இருக்கும் வாழ்க்கை நெருக்கடிகளை இயல்பாக எழுதியிருக்கிறார். லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இயங்கும் பெருவணிகம் ஏற்படுத்திய பாதிப்புகளில் ஒன்றாக பாலியல் விடுதிகளின் உருவாக்கமும் உள்ளடக்கியிருக்கிறது. ஒரு பெரும் சமூகப் பிரச்சினையின் பின்னுள்ள அரசியலையும் அழுத்தமாக முன்வைத்ததன் மூலம் வாசகனை சிந்திக்க வைக்கும் நூலாகவும் இது இருக்கிறது.
'ஐட்டம்' என இயல்பாக நாம் உபயோகிக்கிற சொல்லின் பின் சுழலன்றபடி இருக்கிறது ஒர் உலகம். அவ்வுலகின் மனுஷிகள் தொழில் முடித்துவிட்டு வந்து வசிக்கும் மாடியில் இருக்க வாய்க்கபெற்ற 'நக்கீரன்', அந்த கதைகளை சுருக்கமாக சொல்லியிருக்கிற பதிவே இந்தப் புத்தகம். பதினான்கு அத்தியாயங்கள்; ஒவ்வொன்றும் ஆரம்பிக்கும் முன்பே வண்ணத்துப்பூச்சி குறித்த தகவல் பகிரப்படுகிறது. அதன் வழியாக நமக்கு, பாலியல் தொழிலின் நீண்ட அவலமான உண்மைகள் கடத்தப்படுகிறது. நாம் தான் முதல் ஆளாக புணர வேண்டும் என்பதற்காகவே முந்தியடித்து வாடிக்கையாளர்கள் விடிகாலையில் வருகிறார்கள் என ஒரு பெண் சொல்கிற இடம், நம்முடன் ஊறிப்போன உடைமை மனப்பான்மையை உலுக்கிப் பார்க்கிறது!
விலைமாதர்களின் வாழ்வை வெளிஉலகுக்குச் சற்று திறந்துகாட்ட முயற்சிக்கும் நாவல் இது. கிழக்கு மலேசியாவைக் கதைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்தப் படைப்பு. ஆசிரியரின் முந்தைய படைப்பான கடோடி-இன் தொடர்ச்சி என்று கூட சொல்லலாம்.
அது போல, இந்தப் படைப்பில் வண்ணத்துப்பூச்சி குறியீடாக பயன்படுத்தப்படுவதால் நவீன நாவல் வரிசையில் இதைச் இணைக்கலாம். நாடு, மொழி கடந்து நிற்கும் மனித மனங்களின் விகாரங்களை லேசாக தொட்டுக் காட்டும் நாவல் என்ற வகையில் வாசிக்கலாம்.
வண்ணத்துப் பூச்சிகளின் விடுதி — நக்கீரன் அவர்களின் எழுத்தாற்றல், சமூக உணர்வு, மற்றும் மனிதநேயம் மூன்றும் ஒருசேரக் கலந்துவிடும் ஒரு சக்திவாய்ந்த குறும்புதினம். இது ஒரு புத்தகம் மட்டும் அல்ல; ஒவ்வொரு பக்கத்திலும் நம் மனதை சிக்க வைக்கும் அழுத்தமான உண்மைகள் உறைந்துள்ள வாழ்க்கையின் வெளிப்பாடு.
பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் உள் உலகத்தை, அவர்கள் எதிர்நோக்கும் மனஅழுத்தங்களையும், இழிவுகளையும், அதை தாண்டி தாங்கள் என்னவென்று நம்பிக்கையோடு நிற்கும் போராட்டங்களையும், நக்கீரன் அவர்கள் மிக நேர்த்தியாகவும், ஆழமான கருணையுடனும் விவரிக்கிறார். இது எளிதில் கையாண்டு சொல்லக்கூடிய கதைக்களம் அல்ல. ஆனால் அவருடைய எழுத்து அத்தனை நுட்பமானதும், உணர்வுப்பூர்வமானதும் இருக்கிறது.
ஒவ்வொரு கதாபாத்திரமும் ஓர் உயிருள்ள நிழலாக நம் மனதில் பதிந்து விடுகிறது. அவர்கள் வாழும் துயரங்களை நம்மாலே உணர முடிகிறது. இந்நூல் ஒருவருக்குத் தெரியாத, பேசப்படாத உலகத்தை வாசகருக்குள் கொண்டு வருவதோடு, அந்த உலகத்தின் எதிர்வினைகளையும் புரிய வைக்கிறது.
இதுவே நான் வாசிக்கும் நக்கீரன் அவர்களின் முதல் முயற்சி. ஆனால் இந்நூல் எனக்குள் ஒரு எழுத்தாளனுக்கான ஆழமான மதிப்பையும், அவரது எழுத்தை தொடர்ந்து தேடும் ஆர்வத்தையும் விதைத்துவிட்டது. அவரது வார்த்தைகள் வெறும் வரிகள் அல்ல — அவை சாட்சிகள். வண்ணங்கள் மறைந்த அந்த பூச்சிகளுக்கு நாமும் ஒரு சாட்சி.
வண்ணத்துப் பூச்சிகளின் விடுதி என்பது ஒரு சிறந்த சமூகக் கண்ணோட்டமும், நேர்மையான மனிதாபிமானமும் கொண்டு எழுதப்பட்ட, தமிழில் தவிர்க்க முடியாத வாசிப்பு.
நூல் : வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி ஆசிரியர் : நக்கீரன் பதிப்பகம் : காடோடி
நான் வாசித்த நக்கீரனின் இரண்டாவது நூல் வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி ஆகும். பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் நிலை மற்றும் அது வளர்வதற்கான அரசியல் காரணங்களை தன் கதை மூலம் மிக சிறப்பாக வெளிப்படுத்திருக்கிறார் ஆசிரியர். இக்குறுநாவலை வாசித்தப் பின்பு பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களைக் குறித்த நம் தவறான கருத்துகள் மாறிவிடும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.
நாம் வாசிக்கும் எல்லா நூல்களும் நம் மனதில் தங்குவதில்லை. வெகு சி�� மட்டுமே அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். அந்த வரிசையில் என் மனதை உலுக்கிய நூல்களுள் இதுவும் ஒன்று . அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய தமிழ் நூல்களில் இதுவும் ஒன்று என்றே நான் கருதுவேன்.