லியோ டால்ஸ்டாய் மாபெருங் கலைஞர் என்றும், இலக்கிய மேதை என்றும் உலகமே கொண்டாடுகின்றது. நம் நாட்டு அறிவாளரிடையே அவருடைய நூல்கள் அதிகப் புகழ் பெற்றிருக்கின்றன. டால்ஸ்டாய்க்கும் மகாத்மா காந்திக்கும் ஏற்பட்டிருந்த நெருங்கிய தொடர்பாலும், தீமையைப் பலாத்காரத்தால் எதிர்க்கக் கூடாது என்று அவர் போதித்த கொள்கையைக் காந்தியடிகள் பின்பற்றித் தென்னாபிரிக்காவிலும் இந்தியாவிலும் பெரிய இயக்கங்களை நடத்தி வந்ததாலும், அவருடைய நூல்களில் இந்திய மக்கள் அதிகக் கவனம் செலுத்துகின்றனர். முக்கியமாகத் தென்னாட்டில் ஆங்கிலத்திலுள்ள டால்ஸ்டாயின் நூல்களைப் படிப்பவர்கள் பலர் இருக்கின்றனர். இப்போது அந் நூல்களில் சில தமிழிலும் வெளிவந்திருக்கின்றன.