ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் சினிமாவின் மீது பற்றும் ரசனையும் கொண்டவர்களுக்கும் இந்தப் புத்தகம் ஒரு கொடை. படமெடுத்தவரின் உள்ளிருந்து ஒலிக்கும் இதயத்துடிப்புடன் கூடிய தொனியோடு வெளியிலிருந்து அதே கரிசனத்தோடு இணையும் தேர்ந்த விமர்சகரின் குரல்தான் அதன் காரணம். ஒரு நீண்ட நேர்காணல் எனும் களப்பணியை மையமாக கொண்டு ஒரு மென்மையான அற்புதக்கலைஞனைப் பற்றிய தனி நூல் எழுதுவதெப்படி என்பதற்கு இந்நூல் ஒரு உன்னத உதாரணம். ஆழமான அலசல் கோரும் பொறுமைக்கும் நுண்ணிய அவதானிப்பு வேண்டி நிற்கும் பரந்துபட்ட வாசிப்புடன் கூடிய குவிமைய நோக்கிற்கும் இப்புத்தகம் நற்சான்று. யமுனாவினது எழுத்தின் ஆழ்மனதிலிருந்து பார்த்தோமேயானால் பாலு அவர்களின் கோகிலா, வீடு, மற்றும் யாத்ரா போன்ற படங்கள் அவரது பட்டியல்களையும் மீறி மேலே மிதந்து வருகின்றன. அத்தகைய ஒரு விஷயமே யமுனாவை சினிமாவைப் பற்றி நேர்காணல் மற்றும் கட்டுரைகள் சார்ந்து எழுதும்போதும் கூட ஒரு ஆழ்ந்த ரசிகனின் அகவயத்திலிருந்து விரியும் உணர்வெழுச்சியுடன் கூடிய செறிவுமிக்க அவதானிப்பாளராக, தற்சார்பற்ற ஆய்வாளராக முன்னிறுத்துகின்றது.
கோவையில் பிறந்த யமுனா ராஜேந்திரன் (Yamuna Rajendran) தற்போது இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார். தமிழின் முக்கிய சினிமா விமர்சகராகவும் அரசியல் கோட்பாட்டாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் தீவிரமாக இயங்கிவரும் இவரது எழுத்துக்கள் உலகெங்கும் அரசியல் ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் ஒடுக்கப்படும் மக்களின் அரசியல் போராட்டங்களையும் கலை இலக்கியம் சார்ந்த அழகியல் பிரச்சினை களையும் தீவிரமாக விவாதிப்பவை.