பிரேசில் நாட்டவரான பாவ்லோ ஃப்ரெய்ரே (1921-1997) சென்ற நூற்றாண்டின் மிக முக்கியமான கல்வியாளராகவும் மாற்றுச் சிந்தனையாளராகவும் அறியப்பட்டவர். பிரேசில், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கான கல்விமுறை குறித்து நவீன சிந்தனைகளின் அடிப்படையில் புதிய கோட்பாடு ஒன்றை உருவாக்கியவர். கல்வி என்பது நவீன உலகிற்குத் தேவையான பயிற்சியாளர்களை உருவாக்குவதல்ல. மாறாக, அது மனிதர்களின் தனித்துவங்களை மீட்டெடுப்பது. மனிதர்கள் பிற உயிரினங்களிலிருந்து வேறுபடும் புள்ளிகளில் இரண்டு முக்கியமானவை. அவர்கள் தாம் வாழும் உலகை அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. அவற்றை அவர்கள் எதிரொளிக்கிறார்கள்; அவற்றோடு வினை புரிகிறார்கள்;. மாற்றி அமைக்கிறார்கள். மனிதர்களின் இன்னொரு தனித்துவம், அவர்கள் உரையாடுபவர்கள் என்பது. உரையாடுதல் என்பது ஏதோ 'டைம் பாசிங்' வேலை அல்ல. அது எதிரே இருப்பவர்களை மாற்றுவது; அதனூடாக நாமும் மாறுவது. ஆனால் இந்த இரண்டு பண்புகளையும் மழுங்கடிப்பதாகவே இன்றைய உலகம், சமூக அமைப்பு, கல்விமுறை எல்லாம் உள்ளன. மனிதர்களை இந்த உலகை எதிரொளித்து எதிர்வினை ஆற்றக் கூடியவர்களாகவும், அவர்களிடம் உறைந்துபோன மௌனத்தை உடைத்து அவர்களை உரையாடல் புரிபவர்களாகவும் ஆக்குவதுதான் கல்வியின் நோக்கம் என்கிறார் ஃப்ரெய்ரே. அதற்கான தனது அணுகல்முறையை உணர்வூட்டுதல் (conscientisation) என்கிறார். உரையாடும் திறனை மனிதர்கள் எப்படி இழக்கின்றனர்? உரையாடலுக்கு எதிரான நடவடிக்கைகளும் பண்பாடுகளும்தான் அவர்களைச் சூழ்ந்துள்ளன. அவை நம்மீது மௌனத்தைப் போர்த்துகின்றன. இன்றைய ஆசிரியர்-மாணவர் உறவு, கல்வி நிலையங்கள், பாடநூல்கள் எல்லாமே நம்மீது மௌனத்தைப் போர்த்துபவையாகவே உள்ளன எனக் கூறும் ஃப்ரெய்ரே, அத்தோடு நின்றுவிடுவதில்லை. இந்த மௌனத்தைத் தகர்க்கும் மாற்றுக் கல்விமுறை ஒன்றை முன்வைக்கிறார். பாவ்லோ ஃப்ரேய்ரேயின் இந்த மாற்றுக் கல்விமுறையை எளிமையாகவும் சுருக்கமாகவும் இந்த நூலில் முன்வைக்கிறார் அ.மார்க்ஸ்.
அ. மார்க்ஸ் தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளரும், இயற்பியல் பேராசிரியரும் ஆவார். மனித உரிமைப் பணிகளுக்காக களப்பணி ஆற்றி வருபவர். இலக்கியம், சமயம், அரச நிறுவனம், தேசியம் என ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் உள்ள அரசியலை தனது எழுத்துகளின் மூலம் தொடர்ந்து கவனப்படுத்தி வருபவர்.
Undoubtedly I will give 5+ stars for this book written reflecting on Paulo Freire's educational thoughts. It will shatter your current views on education, learning. Paulo Freire presents 2 models of education in front of us, the banking model of education and problem-posing education. Read for yourself to choose what is best suited for you.