1942ல் வெளியான சி.சு.செல்லப்பாவின் 17 கிளாசிக் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.
வாழ்க்கையில் அவர் கண்ட பல்வேறு அனுபவங்களும், அவர் கண்ட புதுமைகளுமே, 'ஸரஸாவின் பொம்மை' யாக உருப்பெற்றிருக்கின்றன.
சோகத்தையும் அதன் சோபையையும் கண்டு அனுபவிக்க ரஸனை வேண்டும்; துன்பத்தின் பல்வேறு சாயைகளிலும் இருக்கும் ஒருமையைக் கண்டு கொள்ள அன்பு பரந்த கவியுள்ளம் வேண்டும். ஸ்ரீ செல்லப்பாவிடம் குருவிக் குஞ்சு முதற்கொண்டு நொண்டிக் குழந்தை வரையில் சகல ஜீவராசிகளையும் பற்றிக்கொள்ளும் பரந்த அன்பு இருக்கிறது. வாழ்க்கையிலிருந்து தப்ப முடியாதபடி, விதியின் விளையாட்டுக்களினால் ஏற்படும் துன்பங்களைக் கண்டு வேதனைப்படும் உள்ளக்கனிவு இருக்கிறது. வாழ்க்கையின் சில விபரீதங்களை எட்டி நின்று பார்க்கும் பற்றின்மை - இருக்கிறது. இக்குணங்கள் ஆசிரியனின் எழுத்தை உயர்ந்ததாகச் செய்கின்றன. பொதுவாக எல்லாக் கதைகளிலும், கதாபாத்திரங்களின் மனம் போகிற போக்கை நுட்பமாகப் பின் தொடர்ந்து சென்றிருக்கிறார். சம்பாஷணைகள் இயற்கையாகவும் பொருத்தமாகவும் இருக்கின்றன. சுற்றுணர்ச்சி நன்கு அமைந்திருக்கிறது. கதாபாத்திரங்களும் தெளிவான உருவம் பெற்றிருக்கிறார்கள்.
இக் கதைகளில், சம்பவங்கள் அதிகம் இல்லை. ஒன்றுக்கொன்று பொருந்தாத சம்பவக் குவியல்களில் பிறக்கும் கதைகள் அல்ல இவை. ஒரு சிறு ஞாபகம் எழுப்பும் சிந்தனை அலைகள், ஒரு நொடிப் பொழுதில் உதயமாகும் எண்ணம் போன்றவைகள் தாம் இவர் கதைகள் கட்டி எழுப்புவதற்கேற்பட்ட அஸ்திவாரங்கள்.
ஸரஸாவிற்குப் பொம்மை தேவை. மனிதனுக்கு இலக்கியம் தேவை. அந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு முயலும் எந்த முயற்சியையும் உலகம் வரவேற்க வேண்டும்.
சி.சு. செல்லப்பா (C.S. Chellappa) ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். "எழுத்து" என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா.
பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந.முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் வாடிவாசல், "சுதந்திர தாகம்" போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.
Cinnamanur Subramaniam Chellappa (Tamil: சி.சு. செல்லப்பா) was a Tamil writer, journalist and Indian independence movement activist.He belonged to the "Manikodi" literary movement along with Pudhumaipithan, Ku Pa Ra, Va. Ramasamy, N. Pichamurthy and A. N. Sivaraman. He also founded Ezhuthu, a literary magazine. His novel Suthanthira Thagam won the Sahitya Akademi Award for 2001