இந்திய சினிமாவின் பிதாமகன் பால்கே என்றாலும் கூட, சத்யஜித் ரே-யின் அழகியல், வங்க மக்களின் அரசியல், பொருளாதார வாழ்க்கை மற்றும் அவர்களின் இலக்கியத்தின் மூலம் இந்திய சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியதை யாராலும் எளிதில் மறுக்க முடியாது. உலகம் முழுதும் உள்ள சினிமா ஆர்வலர்கள் இந்திய சினிமாவை அலசி ஆராயும்போது, அவர்களால் சத்யஜித் ரே-யை தவிர்த்துவிட்டு இந்திய சினிமாவை ஆராய முடியாது. புகழ்பெற்ற வங்க எழுத்தாளர் விபூதி பூஷணின் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதே இவரது முதல் படம் பாதேர் பாஞ்சாலி. இந்தப் படம் உலகம் முழுவதும் பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல பரிசுகளை வென்றது. பாதேர் பாஞ்சாலி படத்தை தொடங்கியது முதலே அவருக்கு படத்தை முடிக்க முடியாமல் பெரும் பண நெருக்கடி. எல்லா இடங்களிலும் கடன் வாங்கியும் படம் முடியவில்லை. இறுதியில் மேற்கு வங்க அரசுதான் அவரது உதவிக்கு வந்தது. முதன் முறையாக ஒரு மாநில அரசு திரைப்படத் தயாரிப்பாளராக ஆனது. அந்த உதவிக்குக் காரணம் ‘பாதேர் பாஞ்சாலி' என்ற பெயர்தான். பாதேர் பாஞ்சாலி (Song of the road) என்றால் சாலையின் இசை! பாதேர் பாஞ்சாலியில் மெளனப் படங்களில் நடித்து ஓய்வுபெற்று வீட்டில் இருந்த 80 வயது பாட்டியை நடிக்க வைத்து அசத்தினார். அந்த மூதாட்டியும் நடிப்பில் சிகரம் தொட்டார். ரே தனது வாழ்க்கையில் குறைந்த அளவே படங்களை இயக்கினாலும் இன்றளவும் அவரது புகழ் உலகம் முழுதும் நிறைந்திருக்கிறது. இதற்கு சாட்சி இவரைத் தேடி ஆஸ்கர் விருது கல்கத்தாவுக்கே வந்தது. இவரது மறைவுக்குப் பின் இந்திய அரசு, சிறப்பு தபால் தலைகளை 1994-ம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிட்டது. 1998-ல் `பாரத ரத்னா' விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
சத்யஜித் ரே - இந்திய சினிமாவின் பெருமைக்குரிய இயக்குனர்களில் ஒருவர். அவர் குறித்து மிக குறைவான நூல்களே தமிழில் வாசிக்க கிடைக்கின்றன என நினைக்கிறேன். ரேயின் சினிமா குறித்து இந்நூலில் மிகக் குறைவாகவே பேசியிருக்கிறார் ஆசிரியர். ரேயின் மூதாதையர்கள் குறித்தும் பாரம்பரியமாக அபார திறமை கொண்ட அவரின் வம்சாவழி குறித்தும் எவ்வாறு ரே கொஞ்சம் கொஞ்சமாக சினிமா இயக்குனர் என்ற பாதையை தேர்ந்தெடுத்தார் என்றும் பேசுகிறது புத்தகம்.
சத்யஜித் ரே இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர். பதினாறாம் நூற்றாண்டிலிருந்த சத்யஜித் ரே யின் முன்னோரிலிருந்து ஆரம்பித்து சத்யஜித் ரே வரை அவரின் குடும்ப சங்கிலியிலிருந்து ஆரம்பிக்கிறது இப்புத்தகம். மேலும் அவர் முதல் திரைப்படமான "பாதேர் பாஞ்சாலி"யை எடுக்க மேற்கொண்ட சிரமங்களையும் அதற்குப்பின் வெளிவந்த அவரது படைப்புகள் பற்றியும் சுருக்கமாக கூறுகிறது. சத்யஜித் ரே பற்றி தெரிந்து கொள்வதற்கான ஓர் அறிமுக நூலாக இப்புத்தகம் இருக்கும்.