கவிஞர் கந்தர்வன் அடிப்படையிலே ஒரு கதைஞர். கவிதையிலும் “நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை, ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை” என்று கதையைத்தான் சொன்னார். எதைசொல்லுவது என்பதில் தெளிவும் எப்படிச்சொல்லுவது என்பதில் கூடுதல் நுட்பமும் அழகும் கொண்டவை அவரது கதைகள். எள்ளலும் துள்ளலுமாய் நகரும் ஒரு மொழியில் அவர் கதை சொல்கிறார். பிற படைப்பாளிகள் தொட அஞ்சிய தொழிற்சங்க வாழ்வையும் துலக்கமாக எழுதியவர் அவர். புறவயமாகவே பேசிச்செல்வது போலத் தோற்றம் கொண்டாலும் மனிதர்களின் அக உலகைக் கச்சிதமாகப் பிடித்து நமக்குக் கையளிப்பவை அவரது சிறுகதைகள். சீவன், மங்கலநாதர், காடுவரை.., பூவுக்குக் கீழே, தராசு, மைதானத்து மரங்கள் என அவரது முத்திரைக்கதைகளாகப் பல கதைகள் இருக்கின்றன. மக்கள் எழுத்தாளர் சங்கத்தில் துவங்கி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவராகத் தன் இலக்கியச் செயல்பாடுகளுக்கு வடிவம் கொடுத்தவர். வாசகரின் தோள் மீது கை போட்டுத் தோழமை மிக்க ‘ஒரு குரலில்’ கதை சொல்வது அவரது தனித்த பாணி. எல்லாவிதமான சிந்தனைப்பள்ளிகளைச் சேர்ந்தவர்களும் ஏற்கும் அசலான படைப்பாளி கந்தர்வன். - ச. தமிழ்ச்செல்வன்
கந்தர்வன் (பெப்ரவரி 3, 1944 - ஏப்ரல் 22, 2004) தமிழக எழுத்தாளரும், கவிஞரும், தொழிற்சங்கவாதியும் ஆவார்.
கந்தர்வனின் இயற்பெயர் நாகலிங்கம். இராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் என்னும் ஊரைச் சார்ந்தவர். கணேசன், கனகம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர். 29 வயதில் அரசுப்பணிக்கு வந்த கந்தர்வன் தொழிற்சங்கவாதியாகத் தீவிரமாக இயங்கியவர். அவசரநிலை காலத்தில் 19 மாதங்கள் வேலையிழந்து பின்னர் மீண்டும் பணியேற்றவர்.
70-களின் தொடக்கத்தில் உருவான மக்கள் எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். பின்னர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவராகித் தம் இறுதிக்காலம் வரை பங்களிப்புச் செய்தவர். எழுத்தாளர் ஜெயகாந்தனால் "இலக்கியச் சிந்தனை' விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட இவரது "மைதானத்து மரங்கள்' கதை, 12-ஆம் வகுப்பு தமிழ்த் துணைப்பாட நூலில் பாடமாக இடம்பெற்றது. பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற இவருடைய படைப்புகள் குறித்துப் பலரும் ஆய்வு நிகழ்த்தி வருகின்றனர். ஆண்டுதோறும் இவரது நினைவாகச் சிறுகதைப் போட்டி ஒன்று நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது.