காலந்தோறும் பெண் - ராஜம் கிருஷ்ணன்
இந்த புத்தகம் சுய அனுபவங்களைக் கொண்டு அதன் மூலம் ஆராய்ச்சி மேற்கொண்டு பெண்ணடிமைத்தனத்தின் வேர்களை இந்திய சமூகத்தின் வரலாற்றின் அடிப்படையில் எழுத்தப்பட்ட 26 கட்டுரைகளின் தொகுப்பு...
மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் பெண்ணடிமைத்தனத்தின் வேர்கள் வித்யாசமான வடிவம் கொண்டது... அதே போல தாய்வழிச் சமூக நடைமுறைகளை பின்பற்றும் ஒருசில இனக்குழுக்கள் இன்றும் இந்தியாவில் உள்ளனர் என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார்...
நான்கு வேதங்களில் பழையதான ரிக்வேத காலத்திலிருந்து பெண்களின் சமூக அந்தஸ்து எவ்வாறெல்லாம் மாற்றம் கண்டு இழிநிலையை அடைந்தது என்பதை அத்தியாயத்திற்கு அத்தியாயம் நிறைய தரவுகளுடன் விளக்கியிருக்கிறார்...
ஒருவகையில் இவர் எழுதியிருப்பது சுயசாதி விமர்சம் சார்ந்ததாக இருக்கிறது... கட்டுக்கோப்பான பிராமண குடும்பத்தில் பிறந்தவரான ராஜம் கிருஷ்ணன் அவர்கள்... அவருடைய வாழ்க்கையில் ஆன்றாடம் சந்தித்த கேள்விப்பட்ட பெண்ணிய அடக்குமுறைகளை வைத்து அதற்கான வேர்களைத் தேடி உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் என்றே கூற வேண்டும்!
இன்றைக்கு பின்பற்றப்படும் பல்வேறு திருமணச் சடங்குகள் ரிக் வேத காலம் தொட்டு எப்படி எல்லாம் இருந்து உருமாறியிருக்கின்றது என்பதையும் அவைகளை வைத்து பெண்ணினத்தை எவ்வாறெல்லாம் அடக்குமுறைக்குள்ளாக்கியது சமூகம் என்பதை தெளிவாக விளக்கியுள்ளார்...
உதராணமாக திருக்குறளில் வரும்
தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்
என்ற குரலில் ‘தற்கொண்டான் பேணி' என்ற தொடரே, ஒருவனுக்கு உடமைப்பொருளாவது நியாயப்படுத்தப்படுகிறது. ‘மூத்த பொய்ம்மை' என்ற சொற்றொடரே மனசில் மின்னுகிறது. ஓர் ஆணைச் சார்ந்து அவனில் தன்னைக் கரைக்க, உடல் பொருள் ஆவி அனைத்தையும் இழக்க வேண்டும் என்ற ஒரு பக்க நியாயம் நெறியாக இந்தப் பெயர் பெற்ற உலகப் பொதுமறை நூலில் வலியுறுத்தப்படுகிறது என குறிப்பிடுகிறார்...
திருமணத்திற்கு முந்தியதான பெண்ணின் வாழ்வு ஒருவிதமான அடக்குமுறைகளில் கழிகிறதென்றால் அதன் பிறகான வாழ்வு கணவனின் வீட்டில் கழிகிறது... தாய்வழிச் சமூக வழக்கங்கள் இப்போதும் கூட வடநாட்டில் கோன்ட், ஸந்தால், குண்டா போன்ற தொல்குடி இனத்தாரிடம் இன்னும் நிலவுகின்றன. இதன்படி திருமணத்திற்கு பிறகு மணமகன் மணமகளின் வீட்டில் வசிப்பார் என்பது தெரியவருகிறது..
தென் இந்தியாவில், நாயர் சமூகத்தைச் சார்ந்த மக்களிடையே, தாய்வழிச் சம்பிரதாயம் நிலவி வந்திருப்பதை குறிப்பிடுகிறார். திருமணம் புரிந்துகொண்டு தனது வாழ்விடத்தை நிர்ணயிப்பது பெண்ணைச் சார்ந்ததாக இருந்து வந்திருக்கிறது. ஒரு வகையில் விலங்குகளின் வாழ்க்கை முறையினின்றும் மனிதர் பின்பற்றிய முறையாக இது கருதப்பட்ட போதிலும், நாகரிக வளர்ச்சியை எய்தியிராத தொல்குடிச் சமுதாயத்தினரிடையே பெரும்பாலும் பெண்ணின் சமுதாய மதிப்பும், சுதந்திரமும், ஆணுக்குச் சமமான உரிமைகளும், போற்றற்குரியவனவாகவே இருக்கின்றன. மிக நாகரிகமான நவீனமான பெண்ணுரிமைச் சமுதாயத்திலும்கூட இந்த மதிப்பும் உரிமைகளும் இந்நாள் பாதிக்கப்பட்டிராமல் இல்லை.
ராகுல சாங்கிருத்யாயன், அம்பேத்கர் என அவர்கள் கூறிய கருத்துக்களை அடிப்படையாக கொண்டு அனேக இடங்களில் இந்திய சமூகத்தின் மனநிலையை விளக்கியிருக்கிறார்...
மனுதர்மத்தின் அடிப்படையில் பார்த்தால் சாதியப்படி நிலைகளில் பெண்களின் இடம் நான்காவது அடுக்கான சூத்திரர் என்னுமிடத்தில் தான் வைக்கப்பட்டுள்ளது... அது எந்த வருணத்தை சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் அவளை மனோரீதியாக ஒடுக்கி வைப்பதற்கு அவளை தீண்டத்தகாதவளாகவே இருப்பதற்கான ஏற்பாடாகவே இதை குருபீடங்கள் ஏற்படுத்தியிருப்பதாக குறிப்பிடுகிறார்!
அப்படியென்றால் வர்ண பேதங்களை முதலில் எதிர்க்க வேண்டிய பெண்களே அதற்குள் முழுதாக சிக்கிக் கொண்டு அவதியுறும் நிலை தான் நம் நாட்டில் நிலவுகின்றது என்பது கண்கூடு...
பெண்ணுக்கு அறிவு வேண்டாம்; அவள் உடம்புதான் முக்கியம். அவள் மக்களைப் பெறுவதற்கே படைக்கப் படுகிறாள். அந்த அளவில் அவள் முக்கியத் துவத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற அவசியங்கள், நான்கு வருணச் சமுதாயங்கள் தோன்றிய காலத்தில் ஏற்பட்டு விட்டன. உபநயனம் மறுக்கப்பட்டதும், அது தெரியாமல் இருக்க, அவளுள் மணவாழ்வின் மங்கலங்களும் சடங்குகளும் புதிய நெறிகளும் ஏற்றப்படுகின்றன. அறிவும், அழகும் இணைய, சுதந்திரமாக உலவி, வாழ்வின் மையமான ஓட்டத்தில் இருந்து ஒதுங்காமல், ஓர் ஆடவனை விரும்பிச் சேர்ந்து, மக்களைப் பெற்று வாழும் உரிமை ரிக் வேதத்தில் வரும் பெண்களுக்கு இருந்திருக்கிறது. இதன் பிறகு வந்த அதர்வ வேதத்தில் தான் பிரச்சனைகளும் இந்த இடைச்செருகல் வேலைகளை எல்லாம் ஆரம்பித்திருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள முடிகிறது!
இந்து மத குருபீடங்கள் உருவாக்கிய இன்னொரு நம்பிக்கை ஆச்சாரம் தவறாமல் நடந்து கொண்டால் இறப்பிற்கு பிறகு சொர்க்கம் சேர்ந்து பெருவாழ்வு வாழ்வாய் எனும் எண்ணத்தை ஆழ விதைத்து விட்டது...அதற்கு அதிகமாக வீழ்ந்தவர்கள் பெண்கள் தான்...
ரிக் வேதகாலத்தில் இன்றைக்கு பின்பற்றப்படும் திருமண சடங்குகள் பலவும் கிடையாது முக்கியமாக இந்த திருமாங்கல்யம் என்னும் விசயம் வேதத்திலோ, அதன் பிறகு வந்த ஸ்ருமிதிகளிலோ ஏன் நம் பழந்தமிழ் இலக்கியங்களிலோ கூட எங்கும் இடம்பெறவில்லை... ஆனால் இதன் தாக்கம் பெண்க்களை மேலும் அடக்கி வைக்க அவர்களை உணர்வுரீதியாக துன்புறுத்த இன்றளவும் பயன்பட்டு வருகிறது...
இன்றைக்கு பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகிறார்கள்... ஆனால் இந்த நிலைக்கு வருவதற்கு எத்தனை ஆயிரம் ஆண்டுகாலம் போராட வேண்டியிருந்திருக்கிறது என்பதை நினைத்தால் ஆண் வர்க்கம் எந்தளவிற்கு பெண்களை அழுத்தத்திற்குள்ளாக்கி வைத்திருக்கிறது என்பது விளங்கும்! இந்திய சமூகத்தில் பெண்கள் பற்றிய கருத்தாக்கங்களை அறிந்து கொள்ளவும் மாயைகளை அகற்றி அறிவு ஒளி ஏற்றிட இந்த காலந்தோறும் பெண் நூல் நிச்சயம் உதவியாக இருக்கும்!