ஆண்பால், பெண்பால் என்னும் இருமையை மீளுருவாக்கம் செய்கின்ற பாலியல் அதிகாரம் தனித்த ஒன்றல்ல; சாதி, சமயம், தேசம் முதலியவற்றின் சொல்லாடல்களுடனும் அவற்றின் அதிகார விசைகளுடனும் இணைந்தும் விலகியும் செயல்படுவது அது. பின்னிப் பிணைந்திருக்கும் இந்த அதிகார விசைகளையும் அவற்றுக்குச் சவால்விடும் வகையில் சமூகத்திலும் கலையிலும் துலங்கும் பொருண்மையான எதிர்ப்புகளையும் இத்தொகுப்பின் கட்டுரைகள் ஆராய்கின்றன. மாதொருபாகன் நாவல், பரியேறும் பெருமாள் திரைப்படம், தமிழகம் தாண்டிய பெண்ணெழுத்து, பெண் விரோதச் சாதியக் கொலைகள், பசு அரசியல் போன்ற சமூக, பண்பாட்டு நிகழ்வுகளும் இலக்கியமும் கலையாக்கங்களும் கட்டுரைகளின் பேசுபொருட்கள்.
கவிஞர். அமெரிக்காவில் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சமயம், பெண்ணியம், பண்பாட்டியல் ஆகிய துறைகள் சார்ந்து ஆய்வு செய்துவருகிறார். Journal of Asian Studies, Anthropological Quarterly போன்ற இதழ்களிலும் கல்வித்துறை சார்ந்த ஆங்கிலக் கட்டுரைத் தொகுப்பு நூல்களிலும் இவரது ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. காலச்சுவடு, காலக்குறி ஆகிய தமிழ் இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார். வாழ்க்கைக்கு அர்த்தம் தருவது வாசிப்பும் எழுத்தும் என்று நம்பும் பெருந்தேவி, சிறுகதை, மொழிபெயர்ப்பு, நாடகம் ஆகியவற்றிலும் ஈடுபாடுகொண்டவர்.