ச ந்தர்ப்பங்கள் சம்பிரதாயங்களை மாற்றுகின்றன. ராஜ புத்ர மங்கையான பத்மினி மட்டும் விங்குர்லாவில் வளராமல் சொந்தப் பிரதேசமான ராஜபுதனத்தில் வளர்ந்திருந்தால், அவள் பரபுருஷர்களை ஏறெடுத்தும் பார்க்க முடியாது. பர்தாவுக்குப் பின்னாலேயே பதினேழு பருவங்களையும் தாண்டியிருப்பாள். கோஷா ஸ்திரீயாக முகமூடி யிட்டு உலகத்திலிருந்து ஒதுங்கித் தனித்து வாழவேண்டிய அவசியத்தில் சிக்கியிருப்பாள். ஆனால், குலசம்பிரதாயத்தைத் தகப்பனுக்குக் கிடைத்த உத்தியோக சந்தர்ப்பம் வேரறுத்து விட்டது. கோஷா இல்லாத சுதந்திரமான சுதந்திரப் பறவையாயிருந்தாள் பத்மினி. தவிர ஒரே பெண் ணானதால் தகப்பன் கொடுத்த செல்லமும் அந்தச் சுதந்திரத்தைச் சற்று அளவுக்கு மீறியே விஸ்தரித்திருந்தது. ஆகவே பத்மினி, வந்த வாலிபனை வரவேற்றதிலோ, தனக்குப் பக்கத்திலுள்ள ஸ்தானத்தில் உட்கார அனுமதித்த திலோ வியப்பு ஏதுமில்லை. யாருக்கும் வியப்பில்லாத அந்தச் சம்பவம் சுயநலத்தின் காரணமாக பீம்ஸிங்குக்கு மட்டும் வேம்பாக இருந்தது. அப்படி மனத்துக்குப் பிடித்தமில்லாத சூழ்நிலையில் அவர் தத்தளித்த சமயத்தில்தான் கப்பல் தலைவன் வாலிபன் பெயரை உச்சரித்து அவருக்கு இணையற்ற திகிலையும் பத்மினிக்கு எல்லையற்ற மகிழ்ச் சியையும் அளித்தான். தங்களுடன் பிரயாணம் செய்ய வந்தவன் ரகுதேவ் பஸல்கார் என்று கேள்விப்பட்டதும், பீம்ஸிங் பயமடைந்ததில் ஆச்சரியம் சிறிதும் இல்லை. அவருக்குப் பயமேற்பட்டதன் காரணங்களைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், பதினெட்டாவது நூற்றாண்டின் ஆரம்பத்தில் பாரத நாட்டின் மேற்குக் கரையோரம் இருந்த நிலையை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். போர்ச்சுகீஸியரும், டச்சுக்காரரும், ஆங்கிலேயரும் வர முற்பட்டதால் பதினேழாவது நூற்றாண்டின் இடையிலேயே முக்கியத்துவம் பெற்றுவிட்ட அரபிக்கடல் பிராந்தியம் பதினெட்டாவது நூற்றாண்டின் ஆரம்பத்தில் மிகப் பிரபல மடைந்துவிட்டது. இந்த முக்கியத்துவத்தை முதன்முதலாக உணர்ந்த சத்ரபதி சிவாஜி தனது ராஜ்ய எல்லையில் பல துறைமுகங்களை அமைத்துக் கடற் படையொன்றையும் சிருஷ்டித்து அரேபியா, பாரசீகம் முதலிய நாடுகளுடன் வியாபாரம் நடத்தினார். அந்த வியாபாரத்தில் தம்மைத் தடுக்க முயன்ற மொகலாய கப்பல்களைச் சூறையாடவும் தொடங்கினார். நிலத்தில் மட்டுமின்றி ஜலத்திலும் சக்தி பெற்று வரும் சிவாஜியை அடக்க மொகலாய சக்கரவர்த்தியான அவுரங்கசீப் தாமும் ஒரு கடற்படையை நிறுவி அவற்றை நடத்தி சிவாஜியைச் சமாளிக்க ஜன்ஜீராத் தீவிலுள்ள ஸித்திகளை ஏவினார். ஸித்தி என்ற பதம் ஸையத் என்ற பதத்திலிருந்து மருவி வந்தது. ஸையத் என்ற பதத்திற்குப் பிரபு என்று அர்த்தம். மகாராஷ்டிரர்கள் ஸையத் என்ற வார்த்தையைச் சரியாக உச்சரிக்காமல் ஸித்தி என்று உச்சரித்ததால் அந்த கூட்டத்தாருக்கு ஸித்திகள் என்ற பெயரே சரித்திரத்தில் உலாவலாயிற்று. இந்த ஸித்திகள் அபிசீனிய நாட்டைச் சேர்ந்தவர்கள். பம்பாய்க்குத் தெற்கே நாற்பது மைல் தூரத்திலிருக்கும் ஜன்ஜீரா என்ற தீவைத் தங்களுள் வசமாக்கிக் கொண்டு வெகுகாலம் வரை அரபிக்கடலை ஆட்சி புரிந்து வந்தார்கள். நன்றாகக் கறுத்து உயர்ந்து பார்ப்பதற்கு மிகப் பயங்கரமாயிருந்த இந்த அபிஸீனியர்கள் மிகச்சிறந்த மாலுமிகள், கடற்போரில் இணையற்றவர்கள் என்று பெயர் வாங்கியவர்கள். கொலை, கொள்ளை, பெண்களைக் கற்பழித்தல் முதலிய பணிகளில் கைதேர்ந்தவர்கள். இப்பேர்ப்பட்ட பயங்கர, ஜாதியாரிடம் தனது கடற்படையை ஒப்புவித்தார் காருண்ய சக்கரவர்த்தி அவுரங்கசீப். இவர்கள் பலத்தை சிவாஜி மகாராஜா பெரிதும் ஒடுக்கினார். என்ன ஒடுக்கியும் இவர்களுக்குப் பம்பாயிலிருந்து பிரிட்டிஷ் காரர்கள் இடைவிடாது அளித்து வந்த ஒத்தாசையால் இவர்களை ஜன்ஜீரா தீவிலிருந்து விரட்ட சிவாஜியால் இறுதிவரை முடியவேயில்லை. ஆனால் இப்பேர்ப்பட்ட ஸித்திகளையும் ஒடுக்க ஒரு மகாராஷ்டிர வீரன் பிறந்தான். அவன் பெயர் கனோஜி ஆங்கரே. பம்பாயிலிருந்து பதினாறு மைல் தூரத்திலிருந்த காண்டேரித் தீவை தன் தளமாக அமைத்துக் கொண்டு கனோஜி ஆங்கரே பதினேழாவது நூற்றாண்டின் ஆரம்பத்திற்குள் அரபிக் கடலில் இஷ்டப்படி திரிந்த மொகலாய கப்பல்களை மட்டுமின்றி பிரிட்டீஷ், போர்ச்சுகீஸ், டச்சு கப்பல்களையும் போரிட்டு முறியடித்துப் பெரிய கொள்ளைக்காரனென்று பெயர் வாங்கியிருந்தான். சிவாஜியின் பேரனும் மகாராஷ் டிர மன்னனுமான ஷாஹுவுக்குக் கூடக் கீழ்ப்படியாமல் சுதந்திர புருஷனாகக் கடலில் திரிந்து கொண்டிருந்தான் கனோஜி ஆங்கரே. அத்தகைய ஆங்கரேயின் உபதளபதிதான் ரகுதேவ்பஸல்கார். ரகுதேவ் பஸல்காரும் தனது தலைவனுக்குக் கிடைத்த பிராபல்யத்தில் பாதிக்கு மேலாகவே பெற்றிருந்தான். அவன் கடற்போர் திறமையைப் பற்றி எதிரிகளான ஸித்திகள் கூடப் புகழ்ந்தார்கள். இத்தகைய ஒரு கொள்ளைக்காரனிடம் மாட்டிக் கொண்டு விட்டோமே என்று வெலவெலத்தார் பீம்ஸிங்.
Sandilyan or Chandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of Historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.
சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.
பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.
கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.
ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.
அழகிய அழகில் மயங்கிய ஒரு பெண்ணை கொடியவனிடமிருந்து காக்க ரகுதேவின் செயல்கள் கூறப்பட்ட விதம் அற்புதம். காதல் இல்லாத ஆண் ஏது பெண் ஏது. பிடித்த நபர் நாடகமாடுவாதக் கூறுவதை விரும்பாததை கூறிய விதமும் நன்றாக இருந்தது.