தமிழ் இலக்கியம் காலந்தோறும் பொருளாலும் வடிவாலும் வேறுபடுகிறது. காரணம் புலவர்கள் புதுமையை விரும்புகின்றனர். மக்களும் புதிய கருத்துகளை எதிர்பார்க்கின்றனர். சங்க இலக்கியம் தமிழ் இலக்கியத்திற்கே ஊற்று, மூலதனம் என்றும் கூறலாம். அவர்கள் தொட்ட எல்லையை யாரும் எந்தக் காலத்திலும் தொட முடியாத நிலைக்கு எட்டிவிட்டது. அதனை அடுத்து எழுந்த ஒப்புயர்வற்ற நூல் திருக்குறள். தமிழர்களின் உயர்ந்த சிந்தனைகளைப் பதிவு செய்து அறவொழுக்கத்தையும் வாழ்வியல் நெறிகளையும் கூறுகிறது; "சிந்தனைக் கதிர்" என்று இதனைக் கூறலாம். இளங்கோவின் சிலப்பதிகாரமும், கம்பனின் இராம காவியமும் அரியபடைப்புகள்; காலந்தோறும் புதிய இலக்கியங்கள் தோன்றி வளர்ந்தன.
டாக்டர் ரா. சீனிவாசன் பச்சையப்பன் கல்லூரியில் 1940 முதல் 45 வரை மாணவர்; 1945 முதல் 1981 வரை தமிழ்த்துறைப் பேராசிரியர், தலைவர். மொழியியல், தமிழ் இலக்கணம், கட்டுரை நூல்கள், நாவல்கள், நாடகம், புதுக்கவிதை எனப் பல துறைகளிலும் அவர் நூல்கள் வெளிவந்துள்ளன; ‘சங்க இலக்கியத்தில் உவமைகள்’ என்னும் ஆய்வு நூல் மூன்று பதிப்புகளைக் கண்டது; மொழியியல் பத்துப் பதிப்புகளைக் கண்டது; அவர் எழுதிய உரைநடை நூல்களுள் ‘அணியும் மணியும்’ இன்னும் பாராட்டப்படுகிறது. அக்கட்டுரை நூலும், ‘சொல்லின் செல்வன்’ என்னும் நாடக நூலும், ‘வழுக்கு நிலம்’, ‘நனவோட்டங்கள்’ என்னும் நாவல்களும் பல்கலைக் கழகப்பாடநூல்களாக அவ்வப்பொழுது வைக்கப்பட்டு வருகின்றன; எழுத்து, அவர் தொடர் பணியாய் இருந்துவருகிறது. 1991 முதல் கம்பராமாயணம், மகாபாரதம், சீவக சிந்தாமணி முதலிய காவியங்கள் உரைநடையாக்கம் பெற்றன.