இஸ்ரோவின் கதை -ஹரிஹரசுதன் தங்கவேலு - கட்டுரை தொகுப்பு - பதிப்பகம் -கிழக்கு - பக்கங்கள் -164-முதல் பதிப்பு -2021
இஸ்ரோவின் கதை வியப்பூட்டும் விண்வெளி பாய்ச்சல் கண்ட இந்திய அணுசக்தி மற்றும் விண்வெளி துறையின் கதை .
புத்தகம் பற்றி : மொத்தம் 14 கட்டுரைகள் மற்றும் 164 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம் இந்திய அணுசக்தி மற்றும் விண்வெளி துறை ஆகியவற்றின் ஆரம்ப கால சவால்கள் , வளர்ச்சி , துரோகம் ,அவமானம் ,நம்பிக்கை ,மீண்டெழுதல் ஏன ஒரு படம் பார்க்கும் அனுபவத்தை தந்து இருக்கிறார் ஆசிரியர். முதல் சில கட்டுரைகளில் இஸ்ரோ பற்றி சொல்லாமல் மனித வரலாறு , அணு வரலாறு , முதலாம் இரண்டாம் உலக போர் , பிறகு பனி போர் காலம் , அதில் அணுகுண்டு சோதனை இதன் பிறகு விண்வெளி போட்டி என ஐந்தாவது அத்தியாயத்தில் இருந்துதான் தான் இந்திய அணுசக்தி மற்றும் விண்வெளி துறைக்கான கட்டுரை தொடங்குகிறது , என்னதான் கட்டுரை இஸ்ரோ என்பதை மையப்படுத்தி இருந்தாலும் இஸ்ரோ மற்றும் இந்திய அணுசக்தி என்பது ரெண்டும் சேர்ந்து பிறந்த ஒரு இரட்டை குழந்தை போல் தான் இங்கு இயங்கி கொண்டு இருக்கிறது அதன் காரணம் என்ன என்பதை இந்த புத்தகம் படிக்கும் பொது நாம் தெரிந்து கொள்ளலாம் . சுதந்திரம் அடைந்த சில ஆண்டுகளில் நேரு அவர்களின் ஊக்கமும் மேலும் பாபா அவர்களின் கடின முயற்சி காரணமாக இந்தியாவில் அணுசக்தி மையம் அமைந்தும் பிறகு விண்வெளி போட்டியில் நாம் சந்தித்த நெருக்கடிகள் என்ன என்ன , அந்த நெருக்கடிகளை சமாளித்து எப்படி நாம் இன்று அணு சக்தி மற்றும் விண்வெளி துறையில் ஒரு முன்னணி நாடக இருக்கிறோம் என்பது புரியும் . இதில் நமது பிரதமர்களின் பங்கு என்ன ஹோமி பாபா , விக்ரம் சாராபாய் , சதிஷ் தவான் , அப்துல் காலம் , நம்பி நாராயணனன் ஆகியவர்களின் பங்கு என்ன அவர்களின் உழைப்பு என்பது தெரிய வரும். அது போலவே பல சர்ச்சையான விஷயங்கள் லால் பகதூர் சாஸ்திரி , ஹோமி பாபா ஆகியவர்களின் மரணம் 1990 களில் கிரையோஜெனிக் தொழிநுட்பம் தர மறுத்த அமெரிக்கா , நம்பி நாராயணன் அவர்கள் அனுபவித்த சித்ரவதைகள் எல்லாவற்றையும் சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.இவை எல்லாம் கடந்து எல்லா ஏளனங்கள் மற்றும் அவமானங்களை கடந்து விண்வெளி துறை மற்றும் அணுசக்தி துறையில் தனித்துவமாக இன்று இருக்கிறோம் என்பது தான் உண்மை .
என்னுடைய பார்வை : இந்த புத்தகத்தின் மிக பெரிய பலம் என்பது எழுத்து நடைதான் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் தீவிர ரசிகர் எனவே இந்த கட்டுரை படிக்கும் பொது சுஜாதா அவரின் நியாபகம் வருகிறது. அது போல புத்தகத்தின் முன் பக்கத்தில் ஒரு வாசகம் வரும் "something incredible is waiting " என்று படித்து முடித்த பிறகு எனக்கு அப்படி பட்ட ஒரு அனுபவம் தான் வருகிறது.
புத்தகம்: இஸ்ரோவின் கதை ஆசிரியர்: ஹரிஹரசுதன் தங்கவேலு
தலைப்பு: துறைசார் நூல்கள்
இஸ்ரோவின் கதை என்பது நம் நாட்டின் விண்வெளி பயணக் கதை மட்டும் அல்ல.
கழிவறை வசதி கூட இல்லாத நாட்டுக்கு விண்வெளி கனவு தேவையா என்பது போன்ற விமர்சனங்களைத் தாண்டி, தன்னைத் தவிர முன்னால் எவனும் வந்துவிடக்கூடாது அதுவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு வளரும் நாடு வந்துவிடக்கூடாது என்று இருமாந்திருக்கும் உலக வல்லரசு நாடுகளின் சூழச்சிகளைத் தாண்டி
“நாம ஜெயிச்சிட்டோம் மாறா”
என்று விண்வெளியில் கால் பதித்த நம் இந்தியாவின் போராட்டத்தின் கதை ! வெற்றியின் கதை!!
அபுனைவை அதுவும் பலப்பல தகவல்கள், தரவுகள் கொண்டு எழுதப்பட்ட ஒரு புத்தகத்தை த்ரில்லர் கதை போன்று விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ள ஆசிரியரின் எழுத்து நடை உண்மையில் பாராட்ட வேண்டிய ஒன்று. அவரின் நகைச்சுவை உணர்வும் அதில் பெறும் பங்கு வகிக்கிறது.
இருநூறு ஆண்டுகளாக சுரண்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு நாடு மீண்டும் தலைநிமிர்ந்து நிற்கும் முன் எத்தனை பிரச்சினைகள் எத்தனை தோல்விகள் எல்லாவற்றையும் கடந்து சாதனைகள் புரிந்து கொண்டிருக்கின்றது என்று வாசிக்க வாசிக்க உணர்வுப் பூர்வமாக உணர முடிகிறது.
மனித மூளையின் அபரிவிதமான திறன் தன்னை சுற்றயுள்ள எல்லாவற்றையும் ஆராய்ந்து கண்டு கொண்டு தன் எல்லைகளை விரித்து வானத்தையும் வசப்படுத்த துணிவது தான்.
அணு என்ற மிகப்பெரிய ஆற்றலை தன் வசப்படுத்த மனிதன் துடிக்கிறான். அதன் விளைவை மனசாட்சியின்றி அடுத்தவன் மீது சோதிக்க துணிந்ததன் விளைவாக சர்வ நாசம் விளைவிக்கிறான்.
நான் தான் உலகின் முதல்வன் என்று இதயம் என்ற ஒன்று இல்லாமல் பிற நாடுகளை அழிப்பதில் பெருமை கொள்கிறான். இதற்குள் இரண்டு உலகப் போர்களும் அதனால் மனித இனம் அடைந்த அனைத்து அவலங்களும் அடங்கும்.
தன் சக்தியை பயன்படுத்தி பிறரை அழிப்பதில் நீ பெரியவனா நான் பெரியவனா எனப் போராடி பூமியைத் தாண்டி வானத்தில் கோலேச்சும் வல்லரசுகளின் முயற்சியே விண்வெளி நோக்கிய பயணத்தின் வித்து.
ஆனால் அழிவு சக்தியாக இல்லாமல் ஆக்க சக்தியாக இதை உருவாக்க முடியும் என்று உலகுக்கு காட்ட போராடும் இந்தியா என்ற ஒரு சின்னஞ்சிறு தேசத்தின் பெரிய கனவுக்கு துணையாக நின்ற அத்தனை பேரையும் அறிந்து கொள்ள முடிகிறது.
ஒவ்வொரு சாதனையும் எத்தனை வேதனையை எத்தனை துரோகத்தை தாண்டி நிகழ்கிறது என்று புரிந்து கொள்ளும் போது உலக நாடுகள் பலவற்றின் மேல் கொண்டிருந்த மரியாதை குறைகிறது.
புத்தகத்தில் கொடுத்திருக்கும் பல தகவல்கள், வரலாறுகள் ஏற்கனவே தெரிந்த வாசித்தவைககளாக இருந்தாலும் இஸ்ரோவின் உருவாக்கத்தில் அதைத் தொடர்புபடுத்தி வாசிக்கும் போது மனம் இன்னும் நெகிழ்கிறது.
16 பிப்ரவரி 1962ல் உருவான இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (INCOSPAR) 15 ஆகஸ்ட் 1969ல் இந்திய விண்வெளி ஆய்வு மையமாக (ISRO) இஸ்ரோ உருமாறி இருக்கிறது.
அதன் உருவாக்கத்தில் அதன் வளர்ச்சியில் பங்கு கொண்ட அத்தனை மனிதர்களையும்,அதன் சாதனைகள் ,அதன் தோல்விகளில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்கள், அதன் பயணத்தில் உடன் வந்த உலக நாடுகள், சூழ்ச்சியில் அதன் முயற்சிகளுக்கு முட்டிக் கட்டை போட்ட நாடுகள் என்று அனைவரையும் இந்த புத்தகம் வெளிச்சமிட்டு காட்டுகிறது.
2021 ல வெளிவந்த இந்த புத்தகம் 2019ல் சந்திராயன் 2 வின் தோல்வியின் நிமிடங்களை விரிவாக விளக்குவதில் முடிகிறது.
ஆனால் சந்திராயன் 3 வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் முதல் முறையாக வெற்றிக் கொடி நாட்டியதை கண்ட நம்மால், அதற்குப் பின்னால் இருந்து அனைத்து அரசியலையும், முயற்சிகளையும் வாசிக்கும் போது எத்தனை தடைகளை துரோகங்களை தாண்டி நம் நாடு வெற்றிகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது என்று எண்ணி கர்வம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
அவர்கள் யானை விலை குதிரை விலையில் நடத்தும் சாதனைகளை தங்கள் அறிவியல் அறிவால் தொழில்நுட்ப வல்லமையால் சுருங்கச் செலவழித்து பெரும் சாதனைகள் செய்து காட்டி உலகையே வியக்க வைத்துக்கொண்டு இருக்கிறது இஸ்ரோ.
“சாரே ஜகான் சே அச்சா”
என்று விண்வெளியில் இருந்து இந்தியா எப்படி தெரிகிறது என்று பிரதமர் இந்திரா கேட்ட கேள்விக்கு விண்வெளிக்கு முதன் முறையாக சென்ற இந்திய வீரர் ராக்கேஷ சர்மா தந���த பதில்….
“எல்லா தேசங்களை விட சிறந்தது !! ”
உலக அரங்கில் இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். இந்தியர்���ள் அனைவரும் கண்டிப்பாக வாசித்து தெரிந்து கொள்ள வேண்டும் முக்கியமான கதை, இந்த இஸ்ரோவின் கதை.
எங்கள் கனா வாக 2019 ல் அமேசான் கிண்டிலில் வெளியாகி பிறகு அச்சில் இஸ்ரோவின் கதை - எழுத்தாளர் - Hariharasuthan Thangavelu
என் வாழ்வின் சுவாரசியம் எப்படி இருக்க போகிறதோ ? என் எதிர்காலம் எதை நோக்கி பயணப்பட்டு சென்றுகொண்டு இருக்கிறதோ ? என்னுடைய அடுத்த கட்ட நகர்வு எதுவாக இருக்கும். , இதுவரை என்ன செய்தோம். இனி என்ன செய்யவிருக்கோம். போன்ற கேள்விகளை எல்லாம் எனக்குள் நானே கேட்டுக்கொள்ளும் ஒருநாளாக வாராவாரம் சனிக்கிழமை இரவு பொழுதுகள் உண்டு. இப்படி பல கேள்விகளை எனக்குள் நானே கேட்டுக்கொண்டு தூங்காமல் இருப்பேன் , சொல்லப்போனால் அந்த ஒரு இரவு மட்டும் எனக்கு சிவராத்திரி தான் . பிறகு காலை விடிந்த பிறகு , வரும் பாருங்க ஒரு தூக்கம் , பெரும்பாலும் அந்த இரவுகள் தொடங்குவதை அப்போதே முடிப்பது வழக்கம். ஆனால் இடையில் பல வேலைகளை செய்யவும் மூளை சொல்லும் . அப்படி தொடங்கிய புத்தகம் அந்த நாளே முடித்து விட்டேன் . என்னுடைய புத்தக வாசிப்பில் ஒரே நாளில் முடித்த புத்தகம் இதுதான் முதல் முறை.
(நிற்க மூளை குறித்து இந்த புத்தகத்தில் அத்தியாயம் ஒன்றில் அட்டகாசமான பத்திகள் உண்டு அதற்க்கு பிறகு தான் ராவோடு ராவாக இந்த புத்தகத்தை முழுவதும் படித்தேன்)
தொடர்க , ஆக இப்படி ஏதாவது ஒன்றை அந்த சனிக்கிழமை இரவுகள் பிடித்துக்கொண்டே இருக்கும் . அன்றைய இரவு " எங்கள் கனா " என்னை பிடித்துக்கொண்டது . அவருடைய எழுத்து குறித்து உங்களுக்கே தெரியும் . வரிக்கு வரி , பத்திக்கு பத்தி , அத்தியாததுக்கு அத்தியாயம் என பூந்து விளையாடி இருக்கிறார் . இதற்க்கு முன்பு தனி தனி கட்டுரைகளை முகநூலில் படித்து இருக்கிறேன் . அவரின் பதிவுகள் மூலம் பலருக்கு பல விதத்தில் இன்ஸ்பியர் ஆகி இருப்பார் . நானும் அவர் மூலம் inspire ஆகி சில காராயங்களை செய்து இருக்கிறேன்
ஒரு முறை சென்னை சென்ற பொழுது என் நண்பர்களோடு அவரை சந்திக்க நேர்ந்தது . பேச்சில் புதுமை ,தெளிவு ,அறிவு , அறிவியல் , தொழிநுப்டம் என முற்றிலும் கவர்ந்தார் . புத்தகத்தை தொடங்கையில் ,ஆரம்பத்தில் நான் கூட பயந்தேன் இந்த புத்தகத்தில் அணு எண், என சயின்ஸ் பாடம் எடுத்து விடுவாரோ. எனக்கு வேற அறிவியல் அது தொடர்பான கெமிஸ்ட்ரி என்றால் அலர்ஜி அதில் வர அட்டவணை எல்லாம் பத்தி வரிகளை பார்த்ததும் போர் அடித்துவிடுவாரோ என்னவோன்னு , நினைந்த்தேன். ஆனால் அது எல்லாம் எவ்வளவு சுவாரசியமாக சொல்ல முடியுமோ அவ்வளவு இயல்பாக சொல்லி இருக்கிறார். ஆங்காங்கே சில இடங்களின் என்னை அறியாமலே சிரித்து கொண்டு பார்த்து இருந்தேன்.
ஒவ்வொரு அத்தியாயத்திலும் நம்மை எதாவது ஒன்றின் மூலம் சிரிக்கவும் வைக்கிறார். Avengers End Game ல் , ஸ்காட் குவான்ட்டம் பிசிக்ஸ் குறித்து பேசிக்கொண்டு இருக்கையில் கேர்ப்பாரே ஒரு கேள்வி . Have either of you guys ever studied quantum physics? அதற்கு கூட நம்ப பிளாக் விடோ சொல்லுவாங்க only to make conversation. ன்னு அப்படி பேப்பரை முடிச்சு வெளிய வந்ததா போதும் ன்னு படிச்சவன் நான் . இந்த புக்ல அறிவியல், சமூக அறிவியல், வரலாறு , நிகழ்வுகள் ,இந்தியா,அரசியல் , போர் ,ஹிட்லர்,ஆராய்ச்சி , விண்வெளி , மற்றும் மூளை என ஒரு Refresh செய்துவிட்டார் . உண்மையில் சிறப்பான அனுபவத்தை கொடுத்து. அட்டகாசப்படுத்து இருக்கிறார் .
அறிவியல் தொழிநுட்ப வளர்ச்சி என்பது ஒரு சில வினாடிகளிளே நடக்கும் எல்லா நிகழ்வுகளையும் கையில் கொடுத்துவிடுகிறது இந்த காலம் . இந்த தொழிநுப்டம் அடைத்திருக்கும் வளர்ச்சி முற்றிலும் அபாரமானது . ஆனால் இதற்க்கு முந்தைய காலகட்டங்களில் அறிவியலின் வளர்ச்சி மற்றும் போர் , விண்வெளி அரசியல், துரோகம் ,வஞ்சம் ,சோதனை என அவர் படிந்தறிந்த தகவலை வெகு சிறப்பாக புத்தகமாக்கி கொடுத்து இருக்கிறார் . நண்பர்கள் அவசியம் வாங்கி படித்து தங்களின் கருத்துக்களை பதியுங்கள் . தவறாமல் இந்த தளத்திலும் கருத்து பதியுங்கள் . நண்பர்களுக்கு பரிசளியுங்கள் .