குறுகிய காலத்தில் 800க்கும் மேற்பட்ட படிகள் விற்ற இந்நூல் தம்பி இன்பனின் முதல் படைப்பு. பொ.செ.(பொன்னியின் செல்வன்) வாசகர்களைக் கவர்வது கடினம் என்றுணர்ந்தே நூலைத் தொடங்குகிறார் தம்பி. 27 படலம் (அத்தியாயம்) கொண்ட இந்நூலை ஒருநாளைக்கொரு படலம் என்று 27 நாளில் முடிக்கலாம் என்ற கணக்குடன் தொடங்கினேன். ஆனால் முடித்ததோ 4 நாளில். நூலைப் படிக்கும்போதே ஆ���ிரியருடன் கலந்துரையாடும் வாய்ப்பைத் தந்ததிந்நூல். படிக்கப்படிக்க அவ்வப்போது தம்பியுடன் உரையாடி வந்தேன்
வரலாற்றுத் திரைப்படம் பார்த்த உணர்வைக் கொடுக்கிறது இந்நூல் எழுதப்பட்ட பாங்கு. கதைமாந்தர்களின் அறிமுகத்தில் தொடங்குகிறது இந்தத் திரைக்கதை உத்தி. தொடக்கமே ஒரு போர்க்களத்தில். தொடங்கும்போது புதிய கதை மாந்தர்களுடன் தொடங்கிப் பொ.செ வாசகர்களுக்குத் தம் வாழ்வோடு ஒன்றிவிட்ட கதை மாந்தர்களைக் காட்டிப் படிப்போரைக் தன்னுடன் ஒன்றச் செய்கிறது இந்நூல்
கதையின் முன்கள ஆட்டக்காரர்களான உத்தமசீலி, வீரபாண்டியன், ஆதித்தகரிகாலர், வந்தியத்தேவர் போன்றோரின் அனல் பறக்கும் அறிமுகத்தின்பின், சோழகுல விளக்கான குந்தவை, எதற்கெடுத்தாலும் மயங்கிவிழும் வானதியுடன் அரசர்க்கரசர் அருள்மொழித்தேவருடைய நகைச்சுவையான அறிமுகம் படிப்போரைச் சற்று அமைதிப்படுத்த, ஆழ்வார்க்கடியானின் அறிவுக்கூர்மையும், வழக்கம்போல் வலியச் சென்று வம்பில் சிக்கும் வந்தியரின் என்றும் மாறா வாடிக்கை விளையாட்டுக்களும் படிப்போரை இழுத்துச் செல்கின்றன
வீரபாண்டியனை வெல்ல எண்ணும் கரிகாலரின் கடுஞ்சினத்தால் மறைந்த மாவீரர் உத்தம சீலியாகவே அவர் தோன்றும் காட்சி உணர்ச்சிப் பிழம்பின் உச்சம். அழிக்கும் சினம் கொண்ட கரிகாலருக்குக் கருப்புக் குதிரை, காக்கும் குணம் கொண்ட அருள்மொழித்தேவருக்கு வெள்ளைக் குதிரை என்ற ஆசிரியரின் குறியீடு உணரத்தக்கது
கோயிலை விட்டுச்செல்ல மனமின்றிக் கரிகாலர் மனம் தேவியின் திருவடிகளேலேயே தங்க அவருடல் மட்டும் வெளிச்செல்லும் ஒரு காட்சி, இதைப் படித்ததும் கரிகாலருக்கும் எனக்குமான இந்த ஒற்றுமையை எண்ணி அறிவற்ற மனம் ஆடிக்களித்தது. வேள்வி செய்து பகையை அழிக்க எண்ணும் நம்பிக்கையைப் பற்றிய ஆசிரியரின் விளக்கம் அருமை. கடல் அலையில் ஆடும் கப்பலைத் தொட்டிலில் ஆடும் குழந்தைக்கு ஒப்பிடும் உவமை அழகு
இன்னும் பல எதிர்பார்த்த, எதிர்பாராத திருப்பங்களுடன் அடுத்த பாகத்திற்கு ஒரு முன்னீடுடன் முதல் பாகம் நிறைவடைகிறது
இறுதியாக நூலில் இருந்து ஒரு வரி,
"வந்திருப்பது பொந்துகளில் ஒளிந்து கொள்ளும் எலி அல்ல. யானைகளைக் கூட கொன்று அதன் மேல் ஏறி நின்று உறுமும் புலி"