இந்த நாவலில் கதை சொல்லும் பாங்கே ஒரு சினிமா கதை சொல்வது போல தொடங்குகிறது. காசி-இசக்கி இவர்கள் மகன் கரியன், கரியன் மூலமாக கொம்பையா மற்றும் காத்தான்… இவர்கள் கதை 1951-ல் நடப்பது “தந்தை வழி” என்ற ஒரு இழையாகவும் அதில் கரியன் மூலமாக விவரணைகளும்; 1977-ல் நடப்பதாக “மகன்வழி” என்ற ஒரு இழையில் கரியனின் மகன் சூரன் மூலமாகவும் கதை நகர்கிறது.
1951-1977 இரண்டு இழைகளும் இணைந்ததே ஒரு அத்தியாயம். ஒரு அத்தியாயத்தில் சொல்லும் இரண்டு கதைகளுக்கும் சற்றேறக்குறைய ஒரே விதமான உணர்ச்சி நிலை. தந்தை கரியனின் வாழ்க்கையில் ஒரு திருப்பம், கஷ்டம், பிரிவு என வரும்வேளையில் கிட்டத்தட்ட அதே பாதையில் பயணிக்கிற சூரனுக்கும் அதே மாதிரியான உணர்வு நிலைகள்.. அதற்கேற்றார்போல குறிப்பாக “பயணத்தில் உன் தகப்பனின் பழைய காலடியை கண்டால் அதிலிருந்து விலகி நட, முடிந்தால் சுவடுகள் இல்லாதல் நடக்கப் பழகு, நீருக்குள் நடப்பது போல” என பராரிக் குறிப்புகள் அசிரீரி போல ஒலிக்கிறது.
இரு இழைகளையும் பாவாகவும் ஊடாகவும் இணைத்து வண்ணமயமான துணியாக்குகிறார் ஆசிரியர். இதில் கவனிக்கத்தக்க விஷயம் கரியனின் கதைக்கு செவலை காளையும் சூரனின் கதைக்கு பன்றியும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. காளையும் பன்றியும் தான் அவர்கள் வாழ்வில் வழிகாட்டியுள்ளதாலோ அல்லது அவைகள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியதாலோ என்னவோ..! ஆனால் இந்த புத்தகம் முழுதும் மனிதனை தவிர மற்ற விலங்குகளை பற்றிய விவரணைகளுக்கும் விபரங்களுக்கும் குறைவே இல்லை..
தந்தைவழி இழையில் தாய் மற்றும் விலங்குகள் மேலுள்ள அன்பை பற்றியும் மகன்வழியில் உயிர்காக்க ஓடும் போராட்டமும் முன்னிலையில் நிற்க; தந்தைவழி கதையை மகன்வழியிலும் கலந்து ஆசிரியர் அங்கங்கு ஒரு பஞ்சாமிர்தம் கலந்து செல்கிறார். ஆனால் அது எப்படி பறிமாறப்பட்டது என்பதை படித்தால் மட்டமே உணரமுடியும். கிட்டத்தட்ட சிதாராமம் படத் திரைக்கதை போல இந்த நாவலும் காலக்கட்டங்களோடு பின்னிபிணைந்து அந்த படத்தின் க்ளைமாக்ஸ் போலவே திருப்பத்துடன் முடிகிறது.
தொடக்கத்தில் கரியன் தான் கதாநாயகன் போல தோன்றினாலும், கரியன் மூலமாக கதையில் வருகிற கொம்பையாவே முதன்மையான பாத்திரமாகிறார். கொம்பையா கதை 1933-ல்.. ஆக மூன்றாவதாக ஒரு காலக்கட்ட கதைகள்… ஒவ்வொரு காலக்கட்டத்துக்கு ஏற்ற மாதிரி சினிமா போல எழுத்தில் கலர் மாற்றி வித்தியாசப்படுத்தி விடமுடிவதில்லை. ஆனால் ஆசிரியர் மக்களின் வாழ்க்கையிலும் நடக்கும் சம்பவங்கள் மூலமும் அவர்கள் பயன்படுத்தும் பொருள்கள்(அரிக்கேன்/டார்ச்லைட்) மூலமும் கூட வாசகனுக்கு உணர்த்துகிறார்.இதற்கு மேல் ஒவ்வொரு அத்தியாய தொடக்கத்திலும் வருடம் குறிப்பிடப்பட்டிருந்தாலும் ஒரு கட்டத்தில் நாம் எந்த காலக்கட்டத்தில் இருக்கிறோம் என்பதை ஆசிரியர் மறக்கடிக்க செய்துவிடுகிறார். பயணிப்பவனுக்கு காலம் எதற்கு அந்த நொடி தரும் சாகசங்களும் உணர்வுகளும் தானே முக்கியம். நீங்களே பயணியாவதையும் உணர செய்கிறார்.
இதில் நான் கவனிக்கும் விஷயம் தந்தைவழி கதையை நீண்டதாகவும், மகன்வழி கதையை சற்று சிறியதாகவும் அமைத்து பழையதிலிருந்து கற்கும்படி செய்துள்ளார். பழையவர்கள் ஆழமானவர்களாகவும் புது உலகத்தினர் உணர்வுகளால் மட்டுமே உந்தப்பட்டவர்களாக காட்டுகிறார்.
இந்த நாவலில் மற்ற நாவல்களில் உள்ளதை போல் ஒரு குறிப்பிட்ட மனிதனின்/குடும்பத்தின் கதையாக இல்லாமல், ஒரு பராரி (சொந்த ஊர் இல்லாத பிழைப்புக்காக ஊர்ஊராக சுற்றுபவன்), அவன் சந்திக்கும் நபர்கள் அந்த நபர்களின் கதை என்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் அந்த கதைகளினுடே அந்தந்த காலக்கட்டத்தின் நிலை, சமூக சூழல் இவற்றை கதாப்பாத்திரங்களின் மூலம் எளிமையாக ஒரு மனிதன் பக்கத்தில் அமர்ந்து கதை சொல்வதை போலவே சொல்கிறார். இதில் எந்த இடத்திலும் ஆசிரியர் தன் கருத்தை அடிக்கோடிடாமல் படிக்கும் வாசகன் அவனாக கருத்தாழத்தை புரிந்துகொள்ள இடம் விட்டுவிட்டு செல்கிறார்.
தூரத்தில் தண்டவாளங்கள் இணைவது போல தெரிந்தாலும் அவை நிஜமாகவே இணையுமா என நாம் சந்தேகம் கொள்வது போல் சில இடங்களில் குறிப்பாக தந்தைவழி பாத்திரங்களான மயிலாத்தா, மாமர இடம் மகன்வழியில் வரும் சூரனின் காதலி மூலம் மறு அறிமுகமாகிறது. ஆனால் அதிசயமாக இரண்டு கதைகளும் இணையத்தான் போகின்றதை அக்கையா, நஞ்சம்மா என மகன்வழி பாத்திரங்கள் தந்தைவழியில் கொம்பையா குறிப்பிடும்போதே உறுதியாகிவிடுகிறது அல்லது அப்படி நினைப்போம்.
சில இடங்களில் மனிதர்களின் உணர்வுகளை அடர்த்தியான வார்த்தைகளாலும் உதாரணமாக: “நீ போயிட்டு வா அண்ணே. மாடு என்ன, சாகும்போது கன்னுக்குட்டிக்கு புல்லு புடிங்கி போட்டுட்டா சாகுது? நீ போயிட்டுவா. என் ஞாபகமா உனக்கு குடுக்க ஒண்ணுமேயில்லண்ணே. தெனம் தெனம் தூங்குறப்போ என்ன நினச்சிக்கோ, ரெண்டு பேரும் ஒண்ணா இந்த வானத்துக்கு கீழதான் படுத்திருக்கோம்னு. செரியா?” அல்லது வார்த்தை பரிமாற்றங்களே இல்லாது “ம்” என்ற ஒற்றை பதிலிலாகட்டும் அல்லது பார்வையிலே கடத்தப்படுகிறது. நாட்டின் தென்கோடியில் கடைசி ஊரின் கடைசி வீட்டின் கடைசியாக பிறந்த சூரன் ஒரு தனி மனிதானாக பிறகு நாட்டின் முதல் ஊரின் முதல்வீட்டின் பெண்ணை சந்திப்பதும் அந்த இடத்திற்கே அவன் அப்பா கரியன் சென்றதாக சொன்னதும் ஆசிரியர் ஏதோ சொல்லாமல் விட்டு வாசகனாக இப்படியிருக்குமோ என அசை போட வைக்கிறார்.. பராரி - இதில் கதை ஏதும் இல்லை. ஊர்விட்டு ஊர் சுற்றுபவர்களின் தோளில் அமர்ந்து அவர்களோடே பயணிப்பதும் அவ்வப்போது கால இடைவெளிகளையும் தாண்டி பார்ப்பதுமான அனுபவம். கண்டிப்பாக அனுபவிக்கலாம்…!
ஆசிரியர் - நரன் சால்ட் பதிப்பகம் நாவல் 430 பக்கங்கள்
கேசம் என்ற சிறுகதை மூலம் தான் நரன் எனக்கு அறிமுகம் ஆனார். பராரி நாவல் வாசித்த பின் அவரின் எழுத்து மேல் உள்ள ஈர்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. பராரி என்ற தலைப்பு இந்த நாவலுக்கு மிக கச்சிதமான தலைப்பு. இந்த கதையில் வரும் மூன்று முக்கியமான கதைமாந்தர்கள் பராரிகளாகவே வாழ்கின்றனர். ஒரு தருணத்தில் கூட அவர்கள் அந்த வாழ்க்கை முறையை விட்டு விலகி நிற்கவே இல்லை. எத்தனை எத்தனை சந்தர்ப்பமும், சுகமும், துக்கமும் வந்து போனாலும் அவர்கள் பராரிகளாகவே வாழ்ந்துள்ளனர். ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் பராரிகளின் வாழ்க்கை முறை வார்த்தைகளாக இரண்டு வரிகளில் திருக்குறள் போல் பதிவிட்டிருப்பது சிறப்பு. இந்த கதை இரண்டு காலகட்டத்தில்(1950/1975) பயணிக்கிறது. ஆம், இந்த நாவல் முழுக்க பயணங்கள் தான் ஏனெனில் இது பராரிகளை பற்றிய நாவல்.ஒரு பக்கம் தந்தையின் பயணம், மறுபக்கம் மகனின் பயணம் ஆனால் இரண்டுக்கும் நடுவே 30 ஆண்டுகால இடைவெளி. ஒரு பக்கம் கரியன் தான் சிறுவயதில் தொலைத்த தன் காளை செவலையை தேடி திருடி செல்லும் காட்சியில் தொடங்குகிறது, மறுபக்கம் சூரவேல் என்ற சூரன் தன் அண்ணனை காதலித்த பெண்ணோடு ஊரைவிட்டு அனுப்பி தலைமறைவு ஆவதோடு இக்கதை தொடங்குகிறது. கரியன் ஒரு மாட்டுசந்தை சென்றடைந்து கொம்பையா என்ற பெயர் போன மாட்டு தராகரிடம் தஞ்சம் புகுகிறான். அ���னுடைய பயணம் மதுரையில் கோம்பையாவுடன் தொடங்கி இறுதியில் ஓங்கோல் என்ற கிராமத்தில் முடிகிறது. சூரன் செங்கல் சூலையில் வேலை பார்த்த அனுபவத்தோடு ஒரு சூலையில் சென்றும் தஞ்சம் புகுகிறான். அங்கு வேம்பு என்ற பெண்ணோடு காதல் கொண்டு,பின் அவள் திருமணம் ஆனவள் என்று தெரிந்து, இருளி விடும் வினோத செயலில் ஈடுபட்டு அதனால அவர்கள் இருவரின் வாழ்க்கையும் தடம் புரண்டு, சில பேரின் சூழ்ச்சியால் தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள ஒரு சூலையில் கொத்தடிமையாக சிக்கிக்கொள்கிறான். பிறகு அங்கிருந்து தப்பித்து தன்னுடன் இருந்த 100க்கும் மேற்பட்டவரை விடுவித்து வடஇந்தியா நோக்கி பயணிக்கிறான். ஏனெனில் அவனின் குறிக்கோள் இந்தியாவின் முதல் ஊரில் உள்ள முதல் வீட்டை பார்க்க வேண்டும். இதற்கு காரணம் சூரனை யார் எந்த ஊர் என்று கேட்டாலும் அதற்கு அவன் தரும் பதில் இந்தியாவின் கடைசி ஊரில் கடைசி வீடு. இறுதியில் கரியன் ஜெய்சல்மரில் ஆறு ராஜ குதிரைகளுடன் சந்தையில் பிச்சைக்காரன் போல் நிற்கும் மகாராஜின் ஊமை மகளை ஏன் கரம் பிடித்தான்? சூரன் இந்தியாவின் முதல் ஊரான மாணா வில் உள்ள ஒரு வீட்டின் கதவை ஏன் தட்டுகிறான்?கொம்பையா ஏன் ஓங்கோல் சென்று ஒரு ஆண் துணை இல்லாத வீட்டின் முன் கெஞ்சி மன்றாடுகிறார்? இத்தனை கேள்விகளுக்கும் பதில் இக்கதையின் முடிவு. நரன் ஒரு பெரும் ஆராய்ச்சிக்கு பின் தான் இப்படி ஒரு நாவலை எழுதியிருக்க முடியும். முதலில் அந்த சிரத்தைக்கு நான் தலை வணங்குகிறேன். மாட்டுசந்தை, காளை மாடுகள், பண்ணை, வியாபாரிகள், 1930 களில் பயண. முறை, வழிப்பறி கொள்ளை, என ஒரு பக்கம். செங்கல் சூலை, கொத்தடிமை, இருளி என்று பன்றியை நெடுஞ்சாலையில் வரும் வண்டியில் மோத விடும் வினோத நூதன மோசடி, சுதந்திரத்திற்கு பின் சொத்துக்கள் அபகரிக்கப்பட்ட மகாராஜாக்களின் நிலை என மறுபக்கம் இக்கதையில் கையாண்டிருக்கும் களம் யாவும் புதியவை. பராரிகளின் வாழ்வியலை அப்பட்டமாக அப்படியே ஊனும் உயிருமாக நம் கண்முன் விரித்து காட்டுகிறார் நரன். இன்றும் நாம் பல இடங்களில் கூடாரம் அமைத்து வாழும் பராரிகளை வேறு வேறு பெயர்களில் காண முடியும், ஆனால் அவர்கள் யாவரும் வேறு மாநிலத்தவர்கள். நம் தமிழகத்திலும் அப்படியான பராரிகள் வாழ்ந்துள்ளனர், ஆனால் அவர்கள் மிக நேர்மையாக, வீரமாக, கொள்கைகளோடு, உணர்வுகளோடு, வாஞ்சையோடு, மிகவும் நேர்த்தியாக வாழ்ந்துள்ளனர். நம் மக்களும் அவர்களை பெரும் மரியாதையோடு போற்றியிருக்கின்றனர். " பயணி தான் செல்லும் ஒவ்வொரு ஊரிலும் தன்னை கொஞ்சம் விட்டு வருகிறான் "- பராரி ஆம், உண்மைதான் எனக்குள்ளும் அவன் தன்னை கொஞ்சம் விட்டு செல்கிறான்.
பராரி: ஏழு கடல் ஏழு மலை - நரண், சில முத்துகள்: "திசையற்றவனுக்குத்தான் எல்லாத் திசைகளும் திறந்திருக்கின்றன." "திசையைத் தீர்மானிப்பவன் பயணத்தை ரசிப்பதில்லை; திசையற்று அலைபவனே பிரபஞ்சத்தின் ரகசியத்தைக் கண்டடைகிறான்." "கால்கள் நடக்கத் தொடங்கும் முன்பே பாதை தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது." "பயணம் என்பது தொலைதூரங்களுக்குச் செல்வதல்ல, உன்னிடமிருந்தே நீ வெளியேறுவது." "இலக்கை விடப் பயணமே முக்கியம்" "எந்த இடமும் நமக்குச் சொந்தமானதல்ல; நாம் தங்கிச் செல்லும் நிழல்கள் மட்டுமே." "காலம் என்பது கடந்து போவதல்ல, நமக்குள் உறைந்து கிடப்பது." "தனிமை என்பது பிறரிடமிருந்து விலகி இருப்பதல்ல; உன்னிடமிருந்து நீ விலகிச் செல்லாமல் இருப்பது." "தனிமை என்பது வெறுமையல்ல, அது உனக்குள்ளே நீ கண்டடையும் முழுமை." "உடைமைகள் என்பவை ஒரு மனிதனைச் சிறைபிடிக்கும் கண்ணுக்குத் தெரியாத சங்கிலிகள்." "தேவை இல்லாதபோதுதான் எல்லாமே அழகாகத் தெரிகின்றன." "பாதை எப்போதும் காலடியில் இல்லை, அது உனது துணிச்சலில் இருக்கிறது." "மௌனம் என்பது பேசத் தெரியாதவர்களின் மொழி அல்ல; சொல்ல முடியாதவற்றைப் பேசுபவர்களின் மொழி." "பேசாத வார்த்தைகளே உலகத்தைத் தாங்கிப் பிடிக்கின்றன." "மரணம் ஒரு முடிவல்ல, அது ஒரு ஆடையைப் போல வாழ்வைக் களைந்துவிட்டுப் புதிய பயணத்திற்குத் தயாராவது."