பெண்ணியத்தையும், சமூகத்தில் நாம் காணும் சமத்துவமின்மையையும் மையமாகக் கொண்ட சிறுகதைகள் இவை.
50 சொற்களையே கொண்டுள்ள சின்னஞ்சிறு கதையும் சிறுகதை தான், 5000 சொற்களைக் கொண்டுள்ள குறும் புதினம் என்று கூறத்தக்க கதையும் சிறுகதைதான் என்ற சிறுகதையின் இலக்கண எல்லைகளை எதிர் கொண்டுள்ளன இத்தொகுப்பில் உள்ள கதைகள்.
பாலியல் வன்முறையும், குடும்ப வன்முறையும் இக்கால வாழ்வின் ஒருபகுதி உண்மைகள். இத்தகைய கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு தரும் இக்கதைகள் விவாதத்திற்குரியவை.
நண்பர் சுரேஷின் புதிய தொகுப்பு இது. அவர் படைப்புகளில் இது ஒரு முக்கிய மைல்கல் என்று தோன்றுகிறது. ஆரம்பத்தில் இருந்தே ஒவ்வொரு கதையும் வெகுஜன வாசகனின் கவனத்தையும், உணர்வையும் பிசிறின்றி கோர்த்து இழுத்து வைக்கிறது. ஒவ்வொரு கதையும், குறிப்பாக வாசிப்பில் சுஜாதாவின் நகரம் சிறுகதை தொகுப்பை ஞாபகப்படுத்துகிறது. அதில் முதல் கதை, பிச்சைக்காரி ஒரு சாதாரண உரையாடலின் வழியே, எப்படி சமூக ஏற்றதாழ்வு நிலைகளில் உள்ள மனிதர்களின் பார்வைகளும், கவலைகளும், எதிர்பார்ப்புகளும் மாறுபடுகின்றன என்று சுவாரசியமாகவும் அழுத்தமாகவும் பதிய வைக்கிறது. இந்தத் தொகுப்பிலேயே, அடுத்து வரும் அத்தைப்பாட்டி தான் என்னை மிகவும் கவர்ந்த சிறுகதை. மிகக்கச்சிதமாக சொல்ல வந்ததை மிக நாசுக்காக, எந்த சமரசமும் இன்றி வார்த்தெடுத்திருக்கிறார். பழமைக்கும், தற்கால புதுமைக்கும் உள்ள முரண்பாடுகளை, ஒரு பாலின உறவையும் உறுத்தாமல் சொல்லி, பெண்மை என்று கோட்டில் சமன் செய்திருக்கும் லாவகம் என்னை கவர்ந்தது.
பிறகு சற்றே ஆவி, அமானுஷ்யம் என்று சற்றே தடம் மாறிப்போனாலும் பிறகு வரும் கதைகளில் அதை ஈடு செய்திருக்கிறார். சில இடங்களில் பெண்களின் பிரச்சினைக்கு சட்டத்திற்கு வெளியே தான் தீர்வு தேடுவதாக இருந்தாலும், பின் அடுத்த கதையில், அதன் தொடர்ச்சியை சொல்லி நேர்படுத்தும் லாவகம் சிறப்பு.