சதுர்ப்புஜன் கோயில் பகுதிக்குப் போவதற்கே தனக்கு உத்தரவு இல்லையென்பதை தபஸ்வினியின் வார்த்தைகளால் சந்தேகமறப் புறிந்துகொண்ட ஸங்கன் துக்கம் புரண்டோடிய உள்ளத்துடன் தபஸ்வினியுடன் விடைபெற்றுக்கொண்டு, சாருணீதேவியின் ஆலயத்தை விட்டு வெளியே வந்து, புரவிமீதேறிக்கொண்டு மலைச் சரிவின் பாதையில் இறங்கினான். பாதையில் இறங்கிய சமயத்திலும் ஸங்கனின் எண்ணங்கள் காயமுற்று ஆலயத்தில் கிடந்த தன் தம்பியையும் மாமனையும் வளைய வந்து கொண்டிருந்ததால் மலையடிவாரத்துக்கு வந்த பின்புகூட அவன் எண்ணங்களில் சிறிதும் மாறுதல் ஏற்படவில்லையாகையால், 'ஏன், சதுர்ப்புஜன் கோயிலுக்குப் போனால்தான் என்ன?' என்று நினைத்தான் ஸங்கன். அவன் ஒற்றைக்கண், மஞ்சளாற்றுக்குச் செல்ல வேண்டிய பாதையிலிருந்து சற்று விலகி, தூரத்தேயிருந்த தோப்பு ஒன்றைக் கவனித்தது 'அந்தத் தோப்பு கால் காதத்துக்கு மேலிருக்கும். அதையடுத்துத் தானே இருக்கிறது சதுர்ப்புஜன் கோயில்? அங்கு போய்க் கோயிலதிகாரிகளிடம் சொன்னாலே ஆளனுப்புவார்கள். நான் கிராமத்துக்குக்கூடப் போக வேண்டிய அவசியமில்லையே' என்று மீண்டும் மீண்டும் நினைத்த னங்கன், சாருணீ தேவியை ஒரு முறை மனத்தில் தியானித்து, “மன்னிக்கவேண்டும், தாயே, மரணகாயத்திலிருக்கும் இருவருக்கும் உடனடியாக உதவியனுப்பாமல் என்னால் மஞ்சள் ஆற்றுக்குச் செல்ல முடியவில்லை” என்று கூறிக்கொண்டு, புரவியைத் தோப்பின் பாதையை நோக்கித் திருப்பினான். நிர்மானுஷ்யமான பாலைவனப் பாதையில் சிறிது நேரமும் தோப்புப்பகுதியில் சிறிது நேரமும் பயணம் செய்த ஸங்கன், இருட்டு நன்றாக ஏறி மையென வையகத்தைக் கவிந்துகொண்ட சமயத்தில் சதுர்ப்புஜன் கோயிலை அடைந்தான். தோப்பின் தென்புற முகப்பிலிருந்த சதுர்ப்புஜன் கோயிலில் அப்பொழுது முதல் ஜாம பூஜை நடந்து கொண்டிருந்தது. ஊரை விட்டுத் தள்ளிய தோப்பிலிருந்த காரணத்தால் கூட்டம் ஏதுமில்லாத அந்தக் கோயிலுக்குள் சென்ற ஸங்கன், அர்ச்சகர்களில் ஒருவர் சதுர்ப்புஜனுக்குப் பூஜை செய்து கொண்டிருப்பதையும் மற்றொருவர் கோயிலின் பெரு மணியைக் கையிலெடுத்து அடிக்கத் தொடங்கி விட்டதையும் கண்டு கர்ப்பக்கிரகத்தின் முகப்பிலேயே நின்று! தலை வணங்கினான். ஏதும் பேசாமல் பின்புறத்தில் நின்று தலைவணங்கியதால் ஸங்கன் வந்திருப்பதை அறியாத அர்ச்சகர்கள் தங்கள் கடமையிலேயே கண்ணுங்கருத்துமாயிருந்தனர். ஸங்கனும் சதுர்ப்புஜனின் கடலிலும் பெரிய கண்களின் கருணை வெள்ளத்தில் அழுந்தி, அந்த அழகிய மூர்த்தியையே பார்த்துக்கொண்டு நின்றான். விஷ்ணுவின் ஆயிர நாமங்களையும் பக்தியுடன் சொல்லி அர்ச்சனை செய்துகொண்டிருந்த அர்ச்சகர் பயகிருத் பயநாசன்:” என்ற இடத்திற்கு வந்ததும் சிறிது புன்முறுவல் செய்த ஸங்கன், சதுர்ப்புஜனை மனத்தால் வணங்கி, “பிரபு. 'பயகிருத்: அதாவது பயத்தைத் தருபவனும் நீ பயநாசன்: பயத்தை நாசம் செய்பவனும் நீ' என்று மந்திரம் சொல்லுகிறதே. என் விஷயத்தில் உன் கிருபை எப்படி? பயத்தைக் கொடுக்கிறாயா, பயத்தை நிவாத்திக்கப் போகிறாயா? உன் ஆலயப்புறம் வந்தால் எனக்கு ஆபத்து உண்டு. பயம் உண்டு என்று தபஸ்வினி சொன்னாளே, அதை உண்மையாக்கப் போகிறாயா?” என்று கேட்டான். நிரந்தரமாகச் செதுக்கப்பட்டிருந்த போதிலும் சதுர்ப்புஜன் விக்ரகம் புதிதாகத் தன்னை நோக்கி மந்த காசம் செய்வது போல தோன்றியது ஸங்கனுக்கு. அந்த மந்தகாசத்துக்குக் காரணம் என்னவென்று தெரியாமற்போனாலும் அர்ச்சனையில் மனத்தைப் பதிய வைத்தான் ஸங்கன், அவன் மனம் பயத்தை உதறியது, ஆபத்தை நினைப்பதை அறவே தவிர்த்தது. தாயான ஜாலி வம்சத்து ராணியால் குழந்தை முதல் பக்தி மார்க்கத்தில் பழக்கப்பட்டிருந்த ஸங்கன், மௌனமாய் ஆண்டவ னெதிரே நின்று ஸஹஸ்ர நாமங்களையும் காதால் பருகிக் கொண்டிருந்தான். அர்ச்சனை முடிந்ததும் திரும்பிய அர்ச்சகர், எதிரே ஸங்கன் நின்றதைக் கண்டு பிரமித்தார். மணியடித்துக் கொண்டிருந்த அர்ச்சகர் திடீரென மணியை நிறுத்தி, இளவரசரைக் கவனிக்கவில்லை...” என்று சமாதானம் சொல்ல முயன்றார். “அரசர்க்கரசனுக்குப் பூஜை செய்து கொண்டிருந்தீர்கள். அப்போது மாநில மன்னர் குலத்தாரைக் கவனிப்பதும் தவறு. ஆண்டவன் பூஜையில் திளைப்பது தான் நியாயம். தீர்த்தம் கொடுங்கள்; துளசி கொடுங்கள்” என்று ஸங்கன் கையை நீட்டினான். தீர்த்த கிண்ணத்தை அர்ச்சகர் கையிலேந்தினார். அதிலிருந்து ஓர் உத்திரணியில் தீர்த்தத்தை மொண்டு எடுத்தார். ஆனால், அந்தத் தீர்த்தம் நீட்டிக்கிடந்த ஸங்கன் கைகளில் விழவில்லை, ஏந்திய உத்திரணி ஏந்தியபடியே நின்றது. அர்ச்சகரின் கண்கள் வாயிற்படியை வெறுத்து நோக்கின. அதில் மிதமிஞ்சிய பயம் தாண்டவமாடியது
Sandilyan or Chandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of Historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.
சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.
பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.
கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.
ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.
மஞ்சள் ஆறு மேவார் மன்னன் ராணா சங்கா வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது மேவார் மன்னன் ராணா சங்கா இளைமை காலம் மற்றும் அவன் மேவார் மன்னன் ஆகி பாபரை எதிர்த்தது. ஆகியவற்றை பினைந்து கதையாக கொடுத்து இருக்கிறார் இந்த கதை இதுவரை ஆறு முறை படித்து இருக்கிறேன் பெரும் போர் காட்சிகள் சண்டை காட்சிகள் இல்லாத கதை ஆனாலும் இந்த கதை மிகவும் பிடித்து இருக்கிறது அது தான் சாண்டில்யன் பலம். இதில் நம்மை பிரமிக்க வைப்பது சாண்டில்யன் எழுத்து நடை உதரணமாக மேவார் மன்னன் ராணா சங்கா பாபரோடு ஒரு இலட்சம் வீரர்களைக் திரட்டி போருக்கு சென்றான் என்றும் பாபர் தனது சிறிய படையை வைத்து கொண்டு தனது பிரங்கி படை மூலம் வெற்றி பெற்றார் என்றும் வரலாறு நமக்கு சொல்லி கொடுக்கிறது ஆனால் இந்த கதையில் ராணா தோல்வி அடைந்தாலும் இந்த கதையில் அவன் தோல்வி ஒரு பொருட்டே இல்லை என்று நம்மை நினைக்க வைக்கிறார் நமக்கு ஒரு நல்ல கதை கிடைத்தது இதற்கு சாண்டில்யன் அவர்களுக்கு நன்றி 🙏🤗