புதிய கதைகள் அருகிவரும் காலம் இது. சொல்லப்பட்ட கதைகளைத் தவிர்த்துப் புதிய கதைகள், புதிய களங்கள், புதிய கூறுமுறைகள் என நூதனப் பாய்ச்சலை நிகழ்த்துகிறது பெருந்தேவியின் புனைவுப் பிரவாகம். பின்நவீன வாழ்வைப் பின்நவீனத்துவ அழகியலுடன் அணுகுவதன் விளைவைப் பெருந்தேவியின் குறுங்கதைகளில் காண முடிகிறது. ஆழ்மனப் பிரக்ஞையின் பிம்பங்களும் மனவெளியின் இருள்மூலைகளும் நனவிலிப் படிமங்களும் யதார்த்தத்தின் புறவுருவில் வெளிப்படுகின்றன. சமகால வாழ்வையும் மனிதர்களையும் கற்பனைக்கும் எட்டாத மாற்றங்களையும் புனைவின் குதூகலத்துடன் துடிப்பான மொழியில் கதைகளாக்கித் தருகிறார் பெருந்தேவி. ஒன்றரை வரிகளுக்குள் குறளை எழுதியது பெரிய சாதனை அல்ல. அந்த வரிகளுக்குள் கடலுக்கொப்பான உள்ளடக்கத்தைப் பொதிந்து தந்ததே வள்ளுவரின் சாதனை. அத்தகைய குறுகத் தரித்த கதைகளை இந்தத் தொகுப்பில் காணலாம். வாசிப்பின்பத்திற்குப் புதிய பரிமாணத்தைச் சேர்க்கும் பின்நவீனத்துவக் கதைகள் இவை.
கவிஞர். அமெரிக்காவில் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சமயம், பெண்ணியம், பண்பாட்டியல் ஆகிய துறைகள் சார்ந்து ஆய்வு செய்துவருகிறார். Journal of Asian Studies, Anthropological Quarterly போன்ற இதழ்களிலும் கல்வித்துறை சார்ந்த ஆங்கிலக் கட்டுரைத் தொகுப்பு நூல்களிலும் இவரது ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. காலச்சுவடு, காலக்குறி ஆகிய தமிழ் இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார். வாழ்க்கைக்கு அர்த்தம் தருவது வாசிப்பும் எழுத்தும் என்று நம்பும் பெருந்தேவி, சிறுகதை, மொழிபெயர்ப்பு, நாடகம் ஆகியவற்றிலும் ஈடுபாடுகொண்டவர்.