What do you think?
Rate this book


Audiobook
First published December 1, 2014
அவளிடம் அவனுக்கிருந்த பிரியத்தை அளவிட இந்த உலகத்திலேயே கருவி கிடையாது. அவனால் அதை உணர்த்த முடியும். சிறு தொடுதலில், ஒரே ஒரு முத்தத்தில், ஒற்றை வார்த்தையில் பிரியத்தின் முழுஅளவையும் காட்டிவிடுவான். அத்தனை பிரியத்தைச் சுமந்துகொண்டு அவன் எங்கே போவான்? பூவரசங் கொம்பில் ஒரு பறவையாகி உட்கார்ந்து பார்த்திருப்பான். வேலிக்கொடியில் ஒதுங்கும் ஒடக்கானின் பார்வையில் அவனிருப்பான். திமில் சிலுப்பும் மாட்டுக்கன்றின் தலையசைப்பில் தெரிவான். செம்மறியாட்டுச் செருமலில் அவன் குரல் கேட்கும். மண்ணில் படுத்திருப்பான். கத்தரியில் கை நீட்டிக் காத்திருப்பான். அவன் எங்கும் போகவில்லை. முழுமையாக இங்கேதான் இருக்கிறான்.
கிழுவைவேலியில் படர்ந்திருக்கும் கோவைக்கொடியில் எத்தனை பழம் இருக்கிறது, பிஞ்சிருக்கிறது என்று கேட்டால்கூடச் சொல்வான். ஒவ்வொன்றையும் இப்படி நேசித்தவனால் சட்டென்று எல்லாவற்றையும் எப்படி விட்டுப் போக முடியும்?