#371
Book 42 of 2025- அனிதாவின் காதல்கள்
Author- சுஜாதா
காதல் கதைகள் வாசிக்கும் ஆர்வம் குறைந்து பல வருடங்கள் ஆகிறது. இருப்பினும், சில எழுத்தாளர்களின் காதல் கதைகள் எப்போதுமே வாசிக்கப் பிடிக்கும். அப்படியான எழுத்தாளர்களுள் ஒருவர் தான் சுஜாதாவும். “பிரிவோம் சந்திப்போம்” புத்தகம் ஏற்படுத்திய தாக்கமும் ஒரு காரணம். தலைப்பிலே காதலை பார்த்ததும் பெரும் ஆவலுடன் தான் இதை வாசிக்கத் தொடங்கினேன்.
அனிதா கல்லூரிப் பெண். இவளை உருகி உருகி நேசிக்கும் முறை மாமன் ஒரு பக்கம், கண்டவுடன் காதல், திருமணம் வரை செல்லும் ஒரு பெரிய business man, வீட்டில் பார்த்த அமெரிக்க மாப்பிள்ளை, மூவருக்குமே இவள் மேல் காதல், இவளுக்கு யார் மீதும் பெரிய ஈர்ப்பென்பதே இல்லை.Business man எப்படியோ எல்லாரையும் கவர்ந்து அனிதாவை திருமணம் செய்து கொள்கிறான்.
விருப்பமே இல்லாமல் இவளும் திருமண வாழ்க்கை தொடர்கிறாள். இவளது படிப்பின் மீதிருக்கும் ஆர்வம், மேல்படிப்பு படிக்க வேண்டும் என்கிற பிடிவாதமெல்லாம் மறைந்து போகிறது. அவன் மேல் இவளுக்கும் காதல் வந்ததா? திருமணத்தால் இவள் வாழ்வில் ஏற்படும் திருப்பங்களே கதை.
சுஜாதா ஏன் இப்படி ஒரு பெண் கதாபாத்திரத்தை எழுதினார் என்று தெரியவில்லை. இவள் ஒரு சராசரி பெண். சுஜாதாவின் கதையில் வரும் பெண் அல்ல. முடிவெடுக்கத் தெரியாமல், எடுப்பார் கைப்பிள்ளை போல் இருக்கிறாள். இந்த கதையின் முடிவில் எனக்கு துளியும் உடன்பாடில்லை. எழுதியது சுஜாதா என்பதால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. வழக்கமான கணவன் செய்த தவறுகளை மன்னித்து ஏற்கும் பெண்ணாக இருக்கிறாள் அனிதா. மீண்டும் அதே கேள்வி, why Sujatha? Why?