S. Ramakrishnan's Blog

April 25, 2026

அவர்களின் இரவு

The Night of the Hunter 1955-ஆம் ஆண்டு சார்லஸ் லாட்டன் இயக்கிய ஹாலிவுட் திரைப்படம்.  இது ஒரு நடிகரால் இயக்கப்பட்ட திரைப்படம். திகிலூட்டும் விசித்திரக் கதை கொண்டது.

வங்கிக் கொள்ளை ஒன்றில் ஈடுபட்டு பிடிபட்ட பென் ஹாப்பர் சிறைக்குப் போகும் முன்பாக கொள்ளையடித்த பணத்தை ரகசியமாக ஒளித்து விட்டுப் போகிறான். அந்தப் பணம் எங்கேயிருக்கிறது என  தனது மகன் ஜான் மற்றும் மகள் பேர்ல் ஆகியோரிடம் தெரிவிக்கிறான்.  இந்த உண்மை அவனது மனைவி வில்லாவிற்குக் கூட தெரியாது.

வங்கியைக் கொள்ளையடித்து, இருவரைக் கொன்ற குற்றத்திற்காக ஹாப்பருக்கு தூக்குதண்டனை விதிக்கப்படுகிறது.

சிறையில் பென் ஹாப்பர் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு, மதகுரு என்று கூறிக்கொள்ளும் ஹாரி போவல் இந்த உண்மையைத் தெரிந்து கொள்கிறான். பணம் ஹாப்பர் வீட்டில் எங்கோ ஒளித்து வைக்கபட்டிருக்க கூடும் என நினைக்கிறான்.

மதகுரு போவல் தனது ஒரு கையில் ‘HATE’ என்றும் இன்னொரு கையில், ‘LOVE’ என்ற எழுத்துக்களையும் பச்சை குத்தியிருக்கிறான். இரண்டு இணைந்தவன் தான் அந்த மதகுரு. எந்தக் கை அவனை வழிநடத்துகிறது என்பதை வைத்து அவனது செயல் தீர்மானிக்கபடுகிறது.

சிறையிலிருந்து போவல் விடுதலையாகி  வெளியே வந்து ஹாப்பர் குடும்பத்தைத் தேடிப் போகிறான். அவனது மனைவிக்கு உதவி செய்வது போல நடித்து அவளைத் திருமணம் செய்து கொள்கிறான். பணம் எங்கேயிருக்கிறது என்பதை அறிந்துள்ள ஜான் மற்றும் பெர்லிடம் நெருங்கிப் பழகுகிறான். ஆசை காட்டுகிறான்.

போவல் மோசடி பேர்வழி எனத் தெரிந்து கொண்ட ஜான் மற்றும் பெர்ல் அவனிடமிருந்து தப்பியோடுகிறார்கள். இவர்களை வெறி கொண்டு துரத்துகிறான் போவல்  அவர்கள் எப்படி  காப்பாற்ற படுகிறார்கள் என்பதே படத்தின் மையக்கதை

கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்து தீமையின் அடையாளம். அதைத் திருட வருகிறவன் மதகுரு. அவன் தீமையின் உச்சபட்ச வடிவம். சிறார்கள் அந்தப் பணத்தைக் காப்பாற்ற முயலுகிறார்கள். நன்மைக்கும் தீமைக்கும் இடையில் நடக்கும் கதைகளை பார்த்திருக்கிறோம். இது தீமைக்கும் தீமைக்கும் இடையில் ஏற்படும் மோதல்.

உலகின் பார்வையில் மோசமான கொலைகாரனாகத் தோன்றும் ஹாப்பர் குழந்தைகளின் பார்வையில் அன்பான தந்தை. பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவே அவன் திருடிய பணத்தை ஒளித்து வைக்கிறான். அதே நேரம் உலகின் பார்வையில் வழிகாட்டியாகத் தெரியும் மதகுரு போவல் பேராசை கொண்டவன், எந்தக் குற்றத்தையும் துணிந்து செய்பவன். இவர்களுக்குள் நடுவே களங்கமின்மையின் அடையாளமான சிறார்கள். அவர்களுக்கு மீட்சி அளிக்கும் தேவதை போன்ற பெண்.

படத்தில் தந்தையின் பணத்தைப் பாதுகாக்கும் பிள்ளைகள் அதைத் தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதியின் அடையாளமாக கருதுகிறார்கள். அதிலும் மகன் தந்தையின் மீதுள்ள அன்பின் பொருட்டே பணத்தைக் காப்பாற்ற முயலுகிறான்.

படத்தின் சிறப்பு மதகுருவாக நடித்து போவல் மேற்கொள்ளும் தந்திரமான முயற்சிகள்.அது சிறைச்சாலையிலே துவங்கிவிடுகிறது. கணவனை இழந்த பின்பு மறுமணம் செய்து கொள்ளக் கூடாது என வைராக்கியமாக உள்ள ஹாப்பரின் மனைவி வில்லாவிடம் ஆறுதல் வார்த்தைகள் பேசி கொஞ்சம் கொஞ்சமாக அவளைச் சம்மதிக்க வைத்து திருமணம் செய்து கொள்கிறான். அந்த திருமண நாடகம் சிறப்பாக படத்தில் விவரிக்கபடுகிறது

ஹார்ப்பரின் ஊருக்கு வந்தவுடனே போவல் அங்குள்ள  மக்களைக் கவர்ந்து விடுகிறான். தனது ஆன்மாவை மீட்கவே அந்த திருமணம் நடைபெற்றது என வில்லாவும் நினைக்கிறாள். .  பணம் எங்கே மறைக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துமாறு சிறுமி பேர்லை போவல் மிரட்டுவதை அவள் ஒட்டுக்கேட்ட பிறகே அவன் மீதான நம்பிக்கையை இழக்கிறாள். தப்பியோட முயன்று தோற்றுப் போகிறாள்.

இரண்டு சிறார்களையும் எளிதாக ஏமாற்றி ஒளித்துவைக்கட்ட பணத்தைக் கண்டுபிடித்துவிடலாம் என நினைத்து போவல் அவர்களிடம் நாடகம் ஆடுகிறான். ஆனால் உண்மை வெளிப்பட்டுவிடுகிறது.

குறிப்பாக நிலவறையில் உள்ள பொம்மையை எடுக்கும் காட்சி.  சுவரில் மதகுருவின் நிழல் தோன்றும் அந்தக் காட்சி மறக்க முடியாதது. ஸ்டான்லி கோர்டெஸின் ஒளிப்பதிவு அபாரமானது. ஒளியும் நிழலும் இணைந்து உருவாக்கும் அற்புதங்களைக் காண முடிகிறது.

போவலிடம் தப்பியோடும் இருவரும் சிறு படகில் செல்லும் காட்சியும், அவர்கள் அடைக்கலமாகும் வீடும் அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளும் நேர்த்தியாக விவரிக்கபடுகின்றன

வங்கிக் கொள்ளை சார்ந்த படங்களில் இப்படம் மாறுபட்டது.  மதகுருவாக நடித்து ஏமாற்றும் போவல் கதாபாத்திரம் தனித்துவமாக உருவாக்கபட்டுள்ளது. மதகுருவாக ராபர்ட் மிட்சம் மிகச்சிறப்பாக நடித்துள்ளார்.

சார்லஸ் லாட்டன் இந்த ஒரேபடத்தை மட்டுமே இயக்கியுள்ளார். படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் படுதோல்வி அடைந்ததால் அவர் தொடர்ந்து படம் இயக்கவில்லை.

இன்று ஹாலிவுட்டின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக The Night of the Hunter கொண்டாடப்படுகிறது. ராபர்ட் மிட்சம் தனது திரைவாழ்வில் இப்படம் நிகரற்றது என்று சொல்கிறார். 

மௌனப்படங்களில் வெளிப்படுவது போல பல காட்சிகள் உரையாடலின் துணையின்றி அழுத்தமாக வெளிப்படுத்தபடுகின்றன. பணம் எங்கேயுள்ளது என்ற முடிச்சு பாதியிலே அவிழ்க்கபட்டுவிடுகிறது. அதன் பின்புள்ள திரைக்கதையின் பலம் சிறப்பானது. அதுவே இப்படத்தை ஹாலிவுட்டின் உயரிய திரைப்படமாக மாற்றுகிறது.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 25, 2026 01:12

April 24, 2026

ஹாம்லெட்

ரஷ்ய இயக்குநர் Grigori Kozintsev இயக்கிய ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் நிகரற்ற திரைப்படம்.

இப்படம் புதுப்பிக்கப்பட்ட வடிவில் யூடியூப்பில் சப் டைட்டிலுடன் காணக் கிடைக்கிறது.

மிகச்சிறந்த ஒளிப்பதிவு. அரங்க அமைப்பு. தேர்ந்த நடிப்பு, இயக்கம் என இதுவரை வெளியான ஹாம்லெட் திரைப்படங்களில் இதுவே மிகச் சிறந்தது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 24, 2026 07:00

April 19, 2026

யாமம் / தெலுங்கில்

எனது யாமம் நாவல் தெலுங்கில் வெளியாகிறது. ஜில்லேல பாலாஜி மொழியாக்கம் செய்துள்ளார். பாலா புக்ஸ் இதனை வெளியிடுகிறார்கள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2026 22:04

நடைத்துணை

புதிய சிறுகதை. ஏப்ரல் 19. 2026

அந்த மின்னஞ்சல் ஸ்பாமில் சென்று சேர்ந்திருந்தது.

தற்செயலாகவே நான் அதைப் படிக்க நேர்ந்தது

••

அன்பிற்குரிய பேராசிரியர் விமல் கற்கடம் அவர்களுக்கு,

மேதகு மன்னர் ஜோசப் பெர்னார்ட் இமானுவேல் XXV ன் விசேச அழைப்பின் பெயரில் இந்த மின்னஞ்சலை எழுதுகிறோம்.

பெருமைக்குரிய எங்கள் மன்னர் மாசுபடாத இயற்கையில் நிதானமாக காலைநடை மேற்கொள்வதை விரும்புகிறவர். இந்த நடைப்பயணத்தில் தினமும் ஒரு புதியவருடன் நடக்க விரும்புகிறார். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து தினம் ஒருவர் நடைத்துணையாகத் தேர்வு செய்யப்படுகிறார்கள். அப்படி நீங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறீர்கள் என்ற மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறோம்.

தாங்கள் எங்கள் மன்னருடன் நடப்பதற்கான சிறப்புப் பயிற்சிகள் தரப்படும். எங்கள் அழைப்பை நீங்கள் ஏற்றுக் கொண்டால் உங்களுக்கான விமானக் கட்டணம். தங்குமிடம். இதர வசதிகளை நாங்கள் செய்து தருகிறோம். நீங்கள் மன்னருடன் ஏப்ரல் 28 அன்று நடப்பதற்காகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறீர்கள். ஆகவே பத்து நாட்கள் முன்னதாக வருகை தர வேண்டியிருக்கும்.

மன்னருடன் நடைத்துணையாகச் செல்வதற்கான சிறப்பு ஊதியமாக ஆறாயிரம் டாலர் வழங்கப்படும். இந்தக் கடிதம் மிகவும் அந்தரங்கமானது. ஆகவே இதனைப் பொதுவில் பகிரக் கூடாது. இந்த அழைப்பு குறித்து ஊடகங்களிலோ, தனிப்பட்ட வகையிலோ பகிரக் கூடாது. உங்கள் சம்மத்தை தெரிவித்தால் நாங்கள் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தருவோம். என மின்னஞ்சல் தெரிவித்தது. மெலிண்டா பெர்க் என்பவரின் பெயரில் மின்னஞ்சல் அனுப்பபட்டிருந்தது.

வழக்கமான மோசடி மின்னஞ்சல்களில் ஒன்றாகவே இதனைக் கருதினேன். சோழர்காலச் சிற்பங்கள் மற்றும் கலைப்பொருட்கள் குறித்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்து வருபவன் என்ற முறையில் அமெரிக்கப் பல்கலைகழக ஆய்வாளர்கள். இதழாளர்கள் பலருடன் எனக்கு நல்ல தொடர்பு இருந்தது. அத்தோடு புகழ்பெற்ற சில மியூசியங்களின் ஆலோசகராகவும் நான் பணியாற்றுவதால் சர்வதேச அளவில் அடிக்கடி நிகழ்ச்சிகளுக்குச் செல்வதுண்டு. இந்த மின்னஞ்சலினை யாரோ ஏமாற்றுவதற்காக எழுதியிருக்கிறார்கள் எனப் படித்த உடனே தெரிந்தது. ஆகவே அந்த மின்னஞ்சலை குப்பையில் போட்டு நீக்கினேன்.

ஆனால் மறுநாள் அந்த மின்னஞ்சலில் இருந்த மெலிண்டா அலைபேசியில் அழைத்து அதே விபரங்களைச் சொன்னார்.

“உங்கள் மன்னர் எங்கே வசிக்கிறார்….நடைத்துணை என்றால் என்ன. “ என்று கேட்டேன். “உங்கள் சம்மதம் பெற்றபிறகே நாங்கள் விபரங்களைப் பகிர்ந்து கொள்ள முடியும். எங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை வர வேண்டும் என்றால் உடனடியாக ஆயிரம் டாலர் உங்கள் வங்கி கணக்கில் நாங்கள் செலுத்த தயாராக இருக்கிறோம்“ என்றார். மெலிண்டா

“என்னை எப்படித் தேர்வு செய்தீர்கள். உங்களைப் பற்றிய பிற விபரங்களை நான் அறிந்து கொள்ள வேண்டும்“ என்றேன்.

“உங்கள் சம்மதம் பெற்ற பின்பே தகவலை பகிர்ந்து கொள்ள முடியும்“ எனக் கறாராகத் தெரிவித்தார்.

இரண்டு நாள் அவகாசத்தில் பதில் அளிப்பதாக அலைபேசியைத் துண்டித்தேன்

அந்த மின்னஞ்சலில் இருந்த தகவல்கள் உண்மை தானா என நண்பர்கள் மூலமும், இணைய வழியாகவும் ஆராய்ச்சி செய்தேன். அத்தோடு இது போன்ற மோசடி ஏதேனும் நடந்திருக்கிறதா என்பதைப் பற்றியும் இணையத்தில் தேடி ஆராய்ந்தேன். உதவிகரமான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. ஆயினும் தயக்கத்துடன் எனது சம்மத்தைத் தெரிவித்து ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைத்தேன்.

சில மணி நேரத்தில் நன்றிக் கடிதம் வந்தது.

அத்தோடு எனது வங்கி கணக்கு விபரம் கேட்டு எழுதியிருந்தார்கள். பாதுகாப்புக் காரணங்கள் கருதி எனது வங்கிக் கணக்கை தராமல் ஊரிலிருக்கும் சிற்றப்பாவின் வங்கிக் கணக்கினை அனுப்பி வைத்தேன். அதில் குறைவான பணமே இருந்தது. சிற்றப்பா அந்தக் கணக்கை எப்போதாவது தான் இயக்குகிறார். அன்று மாலை சிற்றப்பாவிடமிருந்து போன் வந்தது அவரது கணக்கிற்கு ஒரு லட்ச ரூபாய் பணம் வந்திருக்கிறது என்று.

அது அவர்கள் அனுப்பிய பணம் என்று உறுதியாகத் தெரிந்தது. அதன்பிறகு அவர்களுக்கு நன்றி தெரிவித்து நான் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்துக் கடிதம் எழுதினேன். அதன்பிறகு நடந்தவை நாள் வாரியாக டைரியில் குறித்து வைத்துக் கொண்டேன். வரலாற்றின் இடைவெளிகளை, புதிர்களை இத்தனை ஆண்டுகளாக ஆராய்ந்து கொண்டிருந்த எனக்குச் சட்டெனச் சமகால வாழ்வின் அவிழ்க்கபடாத புதிர்கள். உண்மைகள் மீது நாட்டமும் வியப்பும் வரத் துவங்கியதற்கு இந்தப் பயணமே காரணம்

••

ஏப்ரல் 11

மன்னர் ஜோசப் பெர்னார்ட் இமானுவேல் பற்றிச் சுருக்கமான குறிப்பு வந்திருந்தது அவரது புகைப்படம் அதில் இடம்பெறவில்லை. மன்னர் எங்கே வசிக்கிறார் என்ற விபரமும் குறிப்பிடப்படவில்லை. அவரது வயது 54. தத்துவம் பயின்றவர். இசை ரசிகர். இலக்கியத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். பதிமூன்று மொழிகள் தெரியும். குதிரையேற்றம் தெரியும். சீனக்காத்தாடிகள் செய்யக்கூடியவர். ஓவியர், என்றிருந்தது. எதற்காக இப்படித் தினமும் ஒரு நடைத்துணையைத் தேர்வு செய்கிறார் என்பதைப் பற்றி எந்தக் குறிப்புமில்லை.

இணையத்தில் தேடியவரை அப்படி ஒரு மன்னர் எந்த நாட்டிலும் இல்லை. ஒருவேளை புதுவகை மோசடி வலையாக இருக்குமோ என்று உள்ளூற அச்சமாகவே இருக்கிறது.

ஏப்ரல் 12

மன்னர்களின் காலம் தான் முடிந்துவிட்டது. இன்றும் மன்னர்கள் வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை ரகசியமானது. அதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். எங்கள் மன்னரும் அப்படி தான் வாழ்கிறார். மன்னர் எப்போது பொன்மஞ்சள் வண்ண உடைகள் மட்டுமே அணியக் கூடியவர் என்பதால் அவருடன் நடப்பவரும் பொன்மஞ்சள் உடையை அணிந்து கொள்ள வேண்டும். ஆகவே உங்களின் உடை அளவு மற்றும் சிறப்புக் காலணிகள் தயார் செய்வதற்கான விபரங்களை உடனே அனுப்பி வையுங்கள். என மெலிண்டாவிடமிருந்து மெயில் வந்திருந்தது. அத்தோடு பயிற்சி நாட்களில் அணிய வேண்டிய உடைகள். விருப்ப உணவுப்பட்டியல் கேட்டிருந்தார்கள். கடந்த ஒரு மாதகாலத்தில் எந்தெந்த நாளில் எத்தனை மணிக்கு தூங்கி எழுந்தீர்கள் என்ற விபரமும் கேட்டிருந்தார்கள். அது எதற்காக எனப் புரியவில்லை. இதற்குப் பதில் அனுப்பியதோடு மன்னருடன் நடக்கும் போது ஏதேனும் பேச வேண்டுமா. எது போன்ற விஷயங்களைப் பேச வேண்டும் என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்பினேன். மெலிண்டாவிடமிருந்து பதில் வந்தது. மன்னர் மட்டுமே பேசுவார். நீங்கள் அவர் கேட்பவற்றிற்குப் பதில் சொன்னால் போதும் நீங்களா எதையும் அவருடன் பேசக் கூடாது. குறிப்பாக நடக்கும் போது காதில் இயர் போன் மாட்டிக் கொண்டு இசை கேட்பது மன்னருக்குப் பிடிக்காது. அவர் பேசுவதை ஆழ்ந்து நீங்கள் கேட்க வேண்டும். மற்றவை பயிற்சியின் போது விளக்கபடும் . என்றிருந்தது

ஏப்ரல் 13

மிலிண்டா இன்று விரிவான மின்னஞ்சலை அனுப்பியிருந்தார். அதில் மன்னருடன் நடப்பது என்பது அபூர்வமான சந்தர்ப்பம். ஆகவே நீங்கள் அந்த நடையை முழுமையாக அனுபவிக்க வேண்டும். மன்னருக்கும் உங்களுக்குமான இடைவெளி ஒரே சீராக இருக்க வேண்டும். நீங்கள் அவருக்கு இடது பக்கமாகவே எப்போதும் நடக்க வேண்டும். அவர் எடுத்து வைக்கும் அதே காலடி வேகம் தான் உங்களுக்கும் இருக்க வேண்டும். மன்னர் இயற்கையை நேசிக்கக் கூடியவர். ஆகவே அவர் பறவையின் குரல்கேட்டோ, மரக்கிளையின் அழகில் மயங்கியோ நின்றுவிடுவார். அது போன்ற நேரங்களில் நீங்கள் அவரை விட்டு விலகி ஒன்றரை அடி பின்னால் நிற்க வேண்டும். மன்னர் ரசிக்கும் விஷயத்தைப் பற்றி நீங்களாக எதையும் பேசக் கூடது. மன்னரின் மௌனம் முக்கியமானது. விளக்கமுடியாதது. ஆகவே அவராக எதையாவது சொல்லும்வரை காத்திருக்க வேண்டும். நீங்களும் மன்னரும் நடப்பதை டிரோன் கேமிரா மூலம் நாங்கள் கண்காணித்துக் கொண்டிருப்போம். அந்தப் பாதையில் உங்களைத் தவிர வேறு எவரும் நடமாடமாட்டார்கள். ஆகவே இரண்டு மேகங்களைப் போல நீங்கள் செல்ல வேண்டும். எதிர்பாராத விதமாக மழை பெய்ய நேர்ந்தாலோ, காற்றின் வேகம் அதிகமானாலோ மன்னரின் நடைப்பயணம் ரத்து செய்யப்பட்டுவிடும். இன்னொரு நாள் உங்களுக்கு ஒதுக்க இயலாது என்பதால் நீங்கள் உடனே வீடு திரும்ப நேரிடும். மன்னருடன் நடக்காவிட்டாலும் உங்களுக்கான சிறப்பூதியம் நிச்சயமாக வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறோம்

ஏப்ரல் 14

மிலிண்டாவின் மின்னஞ்சல் குறிப்பில் சில உணவுப்பெயர்களுடன் சில மாத்திரைகளும் இருந்தன. அவற்றை எப்படி எப்போது உட்கொள்ள வேண்டும் என்ற குறிப்பும் இருந்தது. அந்த உணவுப்பொருட்கள் டின்னில் அடைக்கபட்டவை. அவற்றையும் மாத்திரைகளையும் அவர்களே அனுப்பி வைப்பதாகத் தெரிவித்தார்கள். இவை எதற்காக உட்கொள்ளப்பட வேண்டும் என்ற குறிப்பில்லை

ஏப்ரல் 15

மன்னர் சில வேளைகளில் உங்களை மகிழ்ச்சிப்படுத்த வேடிக்கையான நிகழ்ச்சிகளைச் சொல்லுவார். அதைக் கேட்டு நீங்கள் சிறியதாகச் சிரிக்க வேண்டும். அப்போது உங்கள் பற்கள் வெளியே தெரியக்கூடாது. அந்த நகைச்சுவைக்காக நீங்கள் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். நீங்கள் காரணமில்லாமல் சிரிப்பது கூடவே கூடாது. அது அவமானமாகக் கருதப்படும்

ஏப்ரல் 16

உங்கள் பயணத்திற்கான விமான டிக்கெட், விமானநிலையத்திலிருந்து உங்களை அழைத்து வருபவர் விபரங்கள் இத்துடன் இணைக்கபட்டுள்ளன. இந்தப் பயணக் காலம் முழுவதும் நீங்கள் அலைபேசியை உபயோகிக்கக் கூடாது.

. விமான டிக்கெட்டில் நான் சுவிஸ் ஆல்ப்ஸ் மலைத்தொடரை நோக்கி நான் பயணம் செய்ய வேண்டும் என்பதும் நான் செல்ல வேண்டிய இடம் மான்லிச்சென் என்றும் தெரிய வந்தது. உடனே அங்கே ஏதேனும் மன்னர் வசிக்கிறாரா, கோட்டைகள் இருக்கிறதா என இணைய வழியாகத் தேடினேன். எதையும் கண்டறிய முடியவில்லை. எனது நூலகத்திலிருந்த புத்தகங்கள் மூலம் மான்லிச்சென் பற்றிய தகவல்களைப் படிக்கத் துவங்கினேன்.

ஏப்ரல் 17

இரவு விமானப்பயணம். பெர்ன் விமான நிலையம் வரை இரண்டு விமானங்கள் மாறிச் செல்ல வேண்டியிருந்தது. பெர்னில் கரோல் நெஸ்பிட் என்பவர் காரோடு வந்திருந்தார். போலந்து நாட்டைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும். அவரது தோற்றம் அப்படி இருந்தது. அவர் எங்கே அழைத்துச் செல்கிறார் என்று சொல்லவில்லை. ஆனால் எங்கள் காரை ஒரு பாதுகாப்பு வாகனம் பின்தொடர்வதைக் கண்டேன். நிச்சயம் அதுவும் மன்னரின் ஏற்பாடாகவே இருக்கக் கூடும் என்று தோன்றியது.

பயண வழியில் இருந்த இயற்கை காட்சிகளை ரசித்தபடியே இருந்தேன். ஒவ்வொரு நாளும் ஒரு புதிய மனிதர் இது போல அழைத்து வரப்படுகிறார். உபசரிக்கபடுகிறார். ராஜவாழ்க்கை என்பது இது தான் போலும். பூங்காவில் நடைபயிற்சி செல்லும் போது உடன் நடப்பவர்களைக் கண்டு கொண்டதேயில்லை. இன்று தன்னோடு நடப்பதற்காக ஒருவர் விமான டிக்கெட் கொடுத்து அழைக்கிறார். பணம் தருகிறார். வாழ்க்கை விநோதமானது

ஏப்ரல் 18

மூன்று பெரிய மாளிகைகள் கொண்ட பெரிய வளாகமது. இடதுபுறமிருந்த மாளிகை ஒன்றில் தங்க வைக்கபட்டேன். அந்த மாளிகையில் நூற்றுக்கணக்கான அறைகள் இருந்தன. என்னைப் போலவே மன்னரின் அழைப்பில் வந்திருந்தவர்கள் வேறு வேறு அறைகளில் தங்கியிருந்தார்கள். யாரும் யாருடனும் பேசிக் கொள்ள அனுமதியில்லை. நீண்ட பயணத்தின் காரணமாக அறைக்கு வந்தவுடன் உறங்கிவிட்டேன். இரவு ஏழு மணிக்கு கிறிஸ்டோபர் கார்ரே என்ற மருத்துவர் அறைக்கு வருகை தந்து உடல்நிலையைப் பரிசோதனை செய்தார். அறைக்குள்ளாக நடந்து காட்டச் சொன்னார். நடக்கும் போது கைகள் எவ்வளவு முன்னால் போகின்றன என்ற அளவை குறித்துக் கொண்டார். அங்கே தங்கியிருக்கும் நாட்களில் தினமும் இரவு ஒரு மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும் என ஐந்து மாத்திரைகளைத் தந்து போனார். அன்றிரவு அறையில் தனித்திருந்த போது மிக அபத்தமான செயலில் நான் ஈடுபடுவதாகத் தோன்றியது. முன்பின் தெரியாத ஒருவருடன் அவர் பணம் கொடுக்கிறார் என்பதற்காக எதற்காக நடக்க வேண்டும். அதுவும் இத்தனை கட்டுபாடுகளுடன். மன்னர் எதற்காக என்னோடு நடக்க விரும்புகிறார். எங்கேயிருந்து எங்கே நடக்கப் போகிறோம். உண்மையில் இது ஒரு நாடகமா. அரச வாழ்க்கையில் இது போன்ற விசித்திரங்களைக் கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் அவை உண்மையாகக் கண்முன்னே நடக்கும் என எண்ணியதேயில்லை. இந்தக் குழப்பங்களுக்கு இடையே. ஊரிலிருந்து புறப்பட்டு வந்து தங்கியபிறகு இவ்வளவு யோசனைகள் தேவையற்றது என்று மனதிலிருந்து இன்னொரு குரலும் ஒலித்தது

ஏப்ரல் 19

காலை ஐரீன் பால்மர் என்ற இளம்பெண் வந்திருந்தாள். செம்பட்டை முடி. ஆரஞ்சு வண்ண உடை அணிந்திருந்தாள்.

அறையின் ஜன்னலை திறந்துவிட்டு வெளியே தெரியும் பனிமலை எப்படியிருக்கிறது என்று கேட்டாள். மிகவும் அழகாக இருக்கிறது என்றேன். நீங்கள் இன்று நாள் முழுவதும் அந்த மலையைப் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும். இருண்டு அந்த மலை உங்கள் கண்ணிலிருந்து மறைந்தாலும் நீங்கள் இருக்கையை விட்டு எழுந்து கொள்ளக் கூடாது. உங்கள் உணவு மற்றும் இயற்கை உபாதைகளுக்காக ஐந்து நிமிஷ நேரங்கள் எடுத்துக் கொள்ளலாம். மற்றபடி இன்றைய உங்கள் பயிற்சி இந்தப் பனிமலையை வேடிக்கை பார்ப்பது. என்றாள்

இது எதற்காக என ஐரீன் பால்மரைக் கேட்டேன். எதையும் நீங்கள் கேள்வி கேட்க கூடாது என்பது தான் உங்களுக்கான முதல்விதி. எதற்கும் பதில் சொல்லக் கூடாது என்பது தான் எங்களுக்கான கட்டளை என்று சிரித்தாள்.

பனிமலையை வேடிக்கை பார்ப்பதில் என்ன இருக்கிறது எனப்புரியவில்லை. ஆனாலும் ஜன்னல் வழியாகப் பனிமலையைப் பார்க்க துவங்கினேன். ஆச்சரியம் இசைகேட்பது போலக் கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பனிமலையின் மீது சூரிய வெளிச்சம் படர்வதையும் மலையைக் கடந்து செல்லும் பறவைகளையும் ஆர்வத்துடன் காணத் துவங்கினேன். மலை அசைகிறது. இயங்குகிறது. உருகுகிறது. அது மௌனத்தின் பிரம்மாண்ட வடிவம். பனியின் ஒற்றைக்கண் என ஏதேதோ மனதில் தோன்றியது.

நேரம் செல்லச் செல்ல வசீகரமான அழகுடன் இருந்த பனிமலை மெல்ல வேதனை தருவதாக மாறியது எதற்காகவே மனதில் ஆழமான வேதனை கசிந்தது. பெருமூச்சிட்டபடி மலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். காத்திருப்பு தான் அந்த மலையாக உருக் கொண்டிருக்கிறதோ. இடையில் எழுந்து சாப்பிட்டேன். இரண்டு முறை மூத்திரம் பெய்து திரும்பினேன்.

அசைவற்ற ஒன்றை நீண்ட நேரம் பார்க்கும் போது அது நம் அகத்தினுள் இடம்பெயர்ந்து நிரம்புகிறது என்பதை உணர்ந்தேன். மாலையானது. அதே பனிமலை வெகு தொலைவிற்குச் சென்றுவிட்டதாகத் தோன்றியது. மனதில் எதையோ இழந்தது போன்ற உணர்வு. இருள் நிரம்பியது. மலை மறைந்துவிட்டது. அறையில் விளக்குகளை எரிய விடவில்லை. நீண்ட நேரத்தின் பிறகு உடல் கனமானது போன்ற உணர்வுடன் எழுந்து அறையின் விளக்கை போட்டேன். மிகவும் அசதியாக இருந்தது. படுக்கையில் விழுந்தவுடன் உறங்கிப் போனேன்.

ஏப்ரல் 20

இன்றைக்குச் சிம்மர்மேன் என்ற வயதானவர் வந்திருந்தார். அவர் வெவ்வேறு வகையான பழங்களைக் காட்டி அதன் பெயர்கள் மற்றும் ருசியை அறிமுகம் செய்தார். இந்தப் பழங்கள் நீங்கள் நடந்து செல்லும் பாதையில் விழுந்து கிடக்கக் கூடியவை. ஒருவேளை மன்னர் இவற்றைக் கேட்டால் நீங்கள் பதில் அளிக்கவும் அதன் ருசியைப் பற்றிச் சொல்லவும் இந்தப் பயிற்சி அவசியம் என்றார்.

அன்று மதியம் வாகனம் ஒன்றில் மலையுச்சிக்கு அழைத்துப் போனார்கள். மேகக் கூட்டம் அலை அலையாகக் கடந்து போயின. நீண்டு வளைந்து செல்லும் பாதைகளில் ஆள் நடமாட்டமேயில்லை. மன்னர் போல உடை அணிந்த ஒருவர் உயரமான பாறையின் மீது நின்றிருந்தார். அவருடன் இணைந்து நடக்க வேண்டும் என்றார்கள். மன்னர் இவரைப் போலதான் இருப்பாரோ என்று நினைத்துக் கொண்டேன். ஐந்தரை மைல் தூர நடையது. வழியில் மன்னர் வேஷம் அணிந்தவர் ஒரு வார்த்தை பேசவில்லை. சில இடங்களில் நின்று மரத்திலிருந்து உதிர்ந்த பழங்களைச் சேகரித்தார். சில இடங்களில் காற்றில் ஏதோ எழுதினார். ஒரு இடத்தில் நின்று திரும்பி என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டார். அந்த நடையில் அவருக்கு இணையாக என்னால் நடக்க முடியவில்லை. ஒரு இடத்தில் வழியில் கிடந்த கல் காலில் இடறியது. இன்னொரு இடத்தில் மன்னரை இடிப்பது போல நடந்து கொண்டேன். வேறு ஒரு இடத்தில் மலையாடு ஒன்று நிற்பதை காண தலையைத் திருப்பிக் கொண்டேன்

ஏப்ரல் 21

எனது முழுநடைப்பயணமும் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அதை அறையில் இருந்த திரையில் ஒளிபரப்புச் செய்து காட்டியதோடு எந்த இடத்தில் என்ன தவறு செய்கிறேன் என்று விளக்கினார் இயன் ஜே மெக்நீல். அன்று மாலை அவருடன் மீண்டும் அதே நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டியிருந்தது. இந்த முறை மன்னர் வேஷம் அணிந்தவரில்லை. மாறாக அவர் இருப்பது போலக் கற்பனை செய்து கொண்டு நடக்க வேண்டியிருந்தது. முதல் நாள் செய்த தவறுகளை நான் சரிசெய்துவிட்டேன். ஆனால் இன்றைக்குச் சில புதிய தவறுகள் சிலவற்றை என்னை அறியாமல் செய்திருந்தேன். இயன் ஜே மெக்நீல் அதைச் சுட்டிக்காட்டி மேம்படுத்த ஆலோசனைகள் சொன்னார்

ஒருவருடன் இணைந்து நடப்பது என்பது எளிதானதில்லை. அது இரண்டு இசைக்கருவிகள் ஒன்றாக இசைக்கபடுவதைப் போன்றது என்பதை உணர்ந்து கொண்டேன்

ஏப்ரல் 22

இன்றைக்கு மீண்டும் நடைப்பயிற்சி. ஆனால் புதிய பாதையில் ,ஆல்ப்ஸ் மலைத்தொடரின் பேரழகில் நடப்பது என்பது வானில் மிதப்பது போலவேயிருந்தது. தனியே நடக்க நடக்க ஒரு எறும்பை போல உணரத் துவங்கினேன்

ஏப்ரல் 23

இன்று மருத்துவர் கிறிஸ்டோபர் கார்ரே அறைக்கு வந்திருந்தார். உடல்நிலையைப் பரிசோதனை செய்ததோடு வலது தோள்பட்டையில் உங்களுக்கு வலி இருக்கிறதா என்று கேட்டார். ஆமாம். அது பள்ளி வயதில் கால்பந்தாடும் போது ஏற்பட்ட முறிவு என்றேன். அந்த வலியை உங்கள் நடையின் போது உணருகிறீர்கள். அப்போது உங்கள் கண்களில் முகத்தில் மாற்றம் தெரிகிறது. மன்னருடன் நடக்கிறவர் தனது வலியை காட்டிக் கொள்ளக் கூடாது. என்றார். அந்த வலி திடீரென ஏற்படுகிறது என்றேன். அப்படி வலி உணரும் போது அதை வெளிக்காட்டிக் கொள்ள வேண்டாம் என்று அறிவுரை சொன்னார்

ஏப்ரல் 24.

இரவில் யாரோ எனது அறைக்கதவை தட்டும் சப்தம் கேட்டது. கதவை திறந்து வெளியே வந்த போது ஒருவர் வெளிறிய முகத்துடன் நின்றிருந்தார். ஏதோஒரு மொழியில் அவர் பேசினார். அவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை. அந்த மனிதர் வலது புறமிருந்த படிக்கட்டினை நோக்கி வேகமாக நடந்து போவதை பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன நடந்தது எனப்புரியவில்லை

ஏப்ரல் 25

அறையைக் காலி செய்து புறப்பட வேண்டும். தயாராக இருங்கள் என்று ஐரீன் தெரிவித்தாள். எங்கே போகிறோம் என்று தெரியவில்லை

ஏப்ரல் 26

இந்த இடம் எங்கேயிருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் தொலைவில் நூற்றுக்கண்ணான விளக்குள் எரியும் அரண்மனை ஒன்று கண்ணில் பட்டது. அதில் தான் மன்னர் வசிக்கிறார். அவர் எப்படியிருப்பார். எதற்காக இந்த மறைவிடத்தில் வசிக்கிறார் என்று புரியவில்லை. நிச்சயம் ஜோசப் பெர்னார்ட் இமானுவேல் XXV என்பது அவரது உண்மையான பெயராக இருக்காது. அதுவும் ஒரு புனைவு என்றே தோன்றியது

ஏப்ரல் 27

மிஷேல் ஆஷ்பி டாசன் என்பவர் அறைக்கு வந்திருந்தார். அவர் நாளைய மன்னரின் நடையை ஒருங்கிணைப்பு செய்கிறவர். தன்னைப் போல ஒவ்வொரு நாளும் ஒருவர் நடையை ஒருங்கிணைப்பு செய்கிறார் என்றார்

பாதுகாப்பு காரணங்களுக்காக மன்னர் இங்கே மறைந்து வாழுகிறார். அவரைப் பற்றிய முழுமையான விபரங்களைப் பகிர்ந்து கொள்ள முடியாததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மன்னருக்கு நிரந்தர நடைத்துணை கிடையாது. இருப்பது அபாயகரமானது

நீங்களும் அவரைச் சந்தித்த நிகழ்வை உங்கள் வாழ்விலிருந்து நீக்கிவிட வேண்டும் என்றார்.

அத்தோடு இன்று முழுவதும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உங்கள் மகிழ்ச்சிக்காக எல்லாமும் இங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. முழு மனநிறைவுடன் தூங்கி எழுந்து காலை தயாராக இருங்கள். ஐந்து முப்பது மணிக்கு உங்களை அழைத்துச் செல்ல வந்துவிடுவேன். நாம் கொஞ்சம் பயணம் செய்ய வேண்டும். அங்கே மன்னர் உங்களுடன் இணைந்து கொள்வார்.என்றார்.

எதற்காக இப்படி மன்னர் தினம் ஒரு புதியவருடன் நடக்கிறார் என்று அவரிடமும் கேட்டேன். அது மன்னரின் விருப்பம். அதைக் கேள்விகேட்க முடியாது. நிறைவேற்ற வேண்டியது எங்கள் கடமை என்றார். அன்று நாள் முழுவதும் விசேச விசேச உணவு வகைகளும் ஓயினும் ஷாம்பெயினும் இனிப்பு வகைகளும் வழங்கப்பட்டன. சிறப்பான இசையைக் கேட்க முடிந்தது. இரவு உறங்கச் சென்ற போது நானாக மன்னரின் உருவம் இப்படியிருக்கும் என்று கற்பனை செய்து கொண்டேன்.

ஏப்ரல் 28

காலை ஐந்தரை மணிக்கு மிஷேல் ஆஷ்பி அறைக்கு வந்திருந்தார். மன்னருடன் நடப்பதற்காகத் தயாரிக்கபட்ட விசேச உடைகளை அணிந்து கொள்ளச் செய்தார். விசேச காலணி, பொன் மஞ்சள் உடையுடன் என்னைக் கண்ணாடியில் பார்க்க விசித்திரமாக இருந்தது. காரில் ஏறிக் கொண்டேன். அவரே காரை ஒட்டினார். இன்னும் இருள் கலையவில்லை. மலைப்பாதை ஒன்றில் கார் பயணம் செய்தது. விடிகாலையின் ஒளி கசிய ஆரம்பித்த போது கொஞ்சம் கொஞ்சமாகக் கண்முன்னே பனிமலையும் அதன் பைன் மரங்கள் அடர்ந்த சுற்றுப்புறங்களும் தெரிய ஆரம்பித்தன. உயரமான கற்படுகை ஒன்றின் முன்னால் என்னை இறக்கிவிட்ட மிஷேல் மன்னர் அங்கேயிருக்கிறார் என்று தொலைவை காட்டினார். அங்கே ஒரு மஞ்சள் புள்ளி தென்பட்டது. அதை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்

மன்னர் பொன்மஞ்சள் உடை அணிந்திருந்தார். தலையில் கறுப்பு நிற தொப்பி. விசேச காலணி. ஐம்பத்தைந்து வயதுக்குள்ளிருக்கக் கூடும். அவரை நெருங்கிச் சென்றேன்.

“பேராசிரியர் விமல் கற்கடம்…. உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், உங்கள் சோழர்காலக் கலை ஆய்வுகளைப் படித்திருக்கிறேன். கற்கடம் என்றால் நண்டு.. நான் சொல்வது சரிதானே“ என்று மன்னர் அமெரிக்க உச்சரிப்புடன் கூடிய ஆங்கிலத்தில் கேட்டார்

“ஆமாம்“ என தலையசைத்தேன்

“நீங்கள் என்னோடு நடக்கும் 14602 வது ஆள். ஒவ்வொரு நாளும் ஒரு புது மனிதருடன் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னால் உலகை நோக்கி பயணிக்க முடியாது. ஆகவே உலகை என்னை நோக்கி வரவழைத்துக் கொள்கிறேன். ஒரு மனிதனை தெரிந்து கொள்வது ஒரு நட்சத்திரத்தைத் தெரிந்து கொள்வது போன்றதே என்று படித்திருக்கிறேன். “ என்றார் மன்னர்.

“உண்மை. உங்கள் அழைப்பிற்கு நன்றி“ என்றேன்.

நீண்டு வளைந்து செல்லும் மலைப்பாதையில் இருவரும் நடக்கத் துவங்கினோம். அவர்கள் கொடுத்த பயிற்சி போலவே நடந்து கொண்டேன். வழியில் ஒன்றிரண்டு இடங்களில் மன்னர் காற்றை அனுபவிப்பது போலக் கைகளை விரித்தபடி நின்று கொண்டார். ஒரு இடத்தில் கிழே உதிர்ந்து கிடந்த பழம் ஒன்றை கையில் எடுத்து வானிற்குப் பரிசளிப்பது போல வீசினார். தண்ணீரின் ரகசியத்தைக் கேட்பதைப் போல ஏரியின் முன்னால் நின்று கொண்டார். சில நேரம் உடன் பறந்து வரும் பறவையை லேசாக தலையை திருப்பிக் காணும் பறவையைப் போல என்னை நோக்கித் திரும்பினார். உலகின் மிக மகிழ்ச்சியான செயல் ஒன்றில் ஈடுபட்டிருப்பதைப் போல அவர் நடந்தார். ஈரக்காற்றை அனுபவித்தார்.

ஒன்றரை மணி நேர நடையில் என்னிடம் எதுவும் பேசவில்லை. நடைபயிற்சி முடியும் இடத்தில் அவருக்கான மஞ்சள் நிறக் கார் காத்திருந்தது. பாதுகாப்பு படையினர் இன்னொரு வாகனத்தில் காத்திருந்தார்கள்.

மன்னர் காரில் ஏறச் சென்ற போது ஒரு வண்ணத்துப்பூச்சி அவரை உரசிக் கொண்டு போனது. அதைப் பிடிக்க முயன்றவர் போலக் கைகளைக் காற்றில் வீசிய போது அவரது தொப்பிச் சரிந்து விழுந்தது. அதைப் பாதுகாவலர் குனிந்து எடுத்து நீட்டிய போது மன்னர் அதைப் பெறுவதற்காகக் கைகளை வேறு பக்கம் நீட்டுவதைக் கண்டேன். அப்போது தான் மன்னர் பார்வையற்றவர் என்பதை அறிந்து கொண்டேன். அதை அவர் காட்டிக் கொள்ளவேயில்லை. நான் உணரவுமில்லை. சட்டென இவ்வளவு நேரம் அவருடன் நடந்தது விசித்திரமான நிகழ்வாகியது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய கலைச்சிற்பங்களை விடவும் கண்முன்னே நடமாடும் மனிதர்கள் புதிரானவர்கள். எளிதில் விளக்க முடியாதவர்கள் என்று அப்போது தோன்றியது.

மன்னரின் கார் புறப்பட்டுச் சென்றது.

எனது வாகனம் வருவதற்காகக் காத்திருந்த போது பனிமலையில் சூரியன் பேரழகுமிக்க வெள்ளை நடனம் ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருந்தது.

•••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2026 04:11

April 17, 2026

ஆசையின் மூன்று பாதைகள்

Moscow Does not Believe in Tears சிறந்த அயல்மொழித் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது பெற்ற சோவியத் திரைப்படம். மனதைத் தொடும் சிறந்த திரைப்படம்

1979ல் வெளியான இப்படத்தை விளாடிமிர் மென்ஷோவ் இயக்கியுள்ளார். மூன்று இளம்பெண்களின் நட்பையும் வாழ்க்கை மாற்றங்களையும் பேசும் இப்படம் மாஸ்கோவிலுள்ள ஒரு தொழிலாளர் வசிப்பிடத்தில் துவங்குகிறது.

அந்தக் கால மாஸ்கோ நகர வாழ்க்கை, குடியிருப்புகள், வணிகவீதிகள். புதிய தொலைக்காட்சி சேனல், தொழிற்சாலை விரிவாக்கம் என உருமாறிக் கொண்டிருந்த சோவியத் வாழ்க்கையைப் படம் பதிவு செய்திருக்கிறது.

கத்ரீனா, லியுட்மிலா, அன்டோனினா என்ற மூன்று இளம் பெண்களும் தொழிலாளர்களாகப் பணியாற்றுகிறார்கள். கத்ரீனா ஒரு தொழிற்சாலையில் வேலை செய்தபடியே கல்லூரியில் சேர்ந்து வேதியியல் படிக்க விரும்புகிறாள். அதற்கான நுழைவுத்தேர்வில் அவளால் வெற்றியடைய முடியவில்லை.

லியுட்மிலா ஒரு பேக்கரியில் வேலைசெய்கிறாள். வசதியான ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட வேண்டும் என்று கனவு காணுகிறாள்.

கட்டுமானத் தொழிலாளியான அன்டோனினா தன்னோடு பணியாற்றும் அமைதியான இளைஞன் நிக்கோலாயுடன் நெருங்கிப் பழகுகிறாள். அவனுக்குச் சொந்த வீடு உள்ளது என்பதாலே திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறாள்.

இவர்கள் தங்கியுள்ள விடுதி நிர்வாகி இளம்பெண்களுக்கு வரும் தொலைபேசி அழைப்பை கையாளும் விதம் வேடிக்கையானது. லியுட்மிலா தன்னை வசதியானவள் போலக் காட்டிக் கொள்ள நிறையப் பொய் சொல்கிறாள். மோசமாக நடிக்கிறாள். மாஸ்கோவில் தனக்குப் பெரிய அதிர்ஷடம் கிடைக்கப்போகிறது என நம்புகிறாள்.

ஒரு நாள் கத்ரீனாவின் வசதியான மாமா வெளியூர் பயணம் செல்லவே அவரது வீட்டைக் கவனித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அவளுடன் லியுட்மிலாவும் சேர்ந்து கொள்கிறாள். அந்த வீட்டில் பணக்காரப் பெண்கள் போல இருவரும் நடிக்கிறார்கள்.

ஒரு இரவு விருந்திற்கு வசதியான, அதிகாரமிக்க ஆண்களை வரவழைக்கிறாள் லியுட்மிலா. அவர்களில் ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு சகல வசதிகளையும் அனுபவிக்க வேண்டும் என்பதே அவளது கனவு. அந்த அழைப்பை ஏற்று சிலர் வருகை தருகிறார்கள். அதில் ஒருவன் புகழ்பெற்ற ஹாக்கி விளையாட்டு வீரனான செர்ஜி. மற்றவன் தொலைக்காட்சி ஒன்றின் ஒளிப்பதிவாளரான ருடால்ஃப் . மூன்றாவது நபர் வயதானவர். அந்த இரவு விருந்தில் பெரிதும் ஏமாற்றமடைபவர் வயதானவரே.

ருடால்ஃப் உடன் நெருங்கிப் பழகும் கத்ரீனா கர்ப்பமாகிறாள். தன்னால் அவளைத் திருமணம் செய்து கொள்ள முடியாது. ஆகவே கர்ப்பத்தைக் கலைத்து விடும்படி சொல்கிறான் ருடால்ஃப். அவனது அம்மா கத்ரீனாவைத் தேடி வந்து மிரட்டுகிறாள். அவமானப்படுத்துகிறாள்.

இந்த நெருக்கடிக்கு எதிர்ப்பாகக் கத்ரீனா குழந்தையைப் பெற்று வளர்ப்பதென முடிவு செய்கிறாள். இதற்கு அவளது தோழிகள் உதவி செய்கிறார்கள்.

அன்டோனினா தனது காதலன் நிக்கோலாயினைத் திருமணம் செய்து கொள்கிறாள். விளையாட்டுவீரன் செர்ஜியை லியுட்மிலா மணந்து கொள்கிறாள். கைக்குழந்தையுடன் புதிய வாழ்க்கையைத் துவக்குகிறாள் கத்ரீனா.

காலம் மாறுகிறது. பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்பு கத்ரீனா ஒரு பெரிய தொழிற்சாலையின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறாள் . சொந்தமாகக் கார் வைத்திருக்கிறாள். தனது பதின்வயது மகளுடன் ஒரு நல்ல குடியிருப்பில் வசிக்கிறாள். சிறந்த நிர்வாகியாகச் செயல்படுகிறாள்.

செர்ஜி விளையாட்டில் தோற்று குடிகாரனாகிப் போகிறான். லியுட்மிலாவின் வாழ்க்கையில் எந்தச் சந்தோஷமும் இல்லை. லியுட்மிலா, செர்ஜியை விவாகரத்து செய்துவிடுகிறாள்

அன்டோனினா எளிய வாழ்க்கையை மேற்கொள்கிறாள். அவளது கணவன் கடினமான உழைப்பாளி. மூன்று பதின்வயது பிள்ளைகளுடன் வாழ்கிறாள் . காலம் இளம்பெண்களின் கனவுகளைக் கலைத்து வாழ்க்கை யதார்த்ததைப் புரிய வைக்கிறது. காலம் மாறினாலும் அவர்களுக்குள் நட்பு தொடர்கிறது. அது தான் படத்தின் சிறப்பான பகுதி

மூன்று பெண்களும் தங்களின் மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறார்கள். முன்னெடுத்துச் செல்கிறார்கள் என்பதைப் படம் மிகவும் அழகாக விவரிக்கிறது.

கத்ரீனாவின் மகள் அலெக்ஸாண்ட்ரா தனது அன்னையை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறாள். தோற்றுப்போய்க் குடிகாரனான செர்ஜி லியுட்மிலாவை தேடிப்போய்ப் பணம் கேட்டுத் தொந்தரவு தருகிறான். மணஉறவிலிருந்து விலகி வாழும் அவள் கோபம் கொள்கிறாள். சில்லறைகளை வீசி எறிகிறாள். இன்னொரு திருமணம் செய்து கொள்ள லியுட்மிலா ஆசைப்படுகிறாள். ஆனால் சரியான மாப்பிள்ளை கிடைப்பதில்லை.

கத்ரீனா ஒரு நாள் ரயிலில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, நடுத்தர வயது ஆணைச் சந்திக்கிறான். அவனது பெயர் கோஷா. பார்த்த நிமிஷம் அவள் திருமணம் செய்து கொள்ளாதவள் என்று கண்டுபிடித்துவிடுகிறான். அதற்கு அவன் சொல்லும் காரணம் திருமணமாகாத நடுத்தரவயது பெண்ணின் பார்வை ஒருவிதமான தேடுதலைக் கொண்டிருக்கும். அது பொதுவாகக் காவல்துறையினரிடம் இருக்கும் பார்வை போன்றது என்கிறான்.

அவனது பேச்சும் நடத்தையும் பிடித்துப் போகவே கத்ரீனா தனது வீட்டிற்கு ஒரு விருந்திற்கு அழைக்கிறாள். அடுத்த நாள் வருகை தரும் கோஷா கத்ரீனாவிற்காகச் சமைக்கிறான். அவளது மகளுடன் அன்பாகப் பேசுகிறான். விளையாடுகிறான். கோஷாவைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக மகளிடம் சொல்கிறாள் கத்ரீனா. கோஷாவின் முரட்டுதனம். முடிவுகளைத் தானே எடுப்பேன் எனும் அதிகாரம் அவளைச் சற்று அச்சப்படுத்துகிறது.

இந்நிலையில் கத்ரீனாவுடன் பழகி குழந்தையைக் கொடுத்த ஒளிப்பதிவாளரான ருடால்ஃப்யை திரும்பச் சந்திக்கிறாள். அவன் தனது மகளைக் காண வேண்டும் என விரும்புகிறான். அவனை மீண்டும் பார்க்க விரும்பவில்லை என்று கறாராக துரத்தி விடுகிறாள். ஆனால் அவன் கத்ரீனாவின் முகவரியை கண்டறிந்து மகளைக் காண வீடு தேடி வருகிறான். ஒருபுறம் புதிய காதலன். மறுபுறம் தனது மகளின் தந்தை எனத் தடுமாறும் கத்ரீனா உறுதியான முடிவை எடுக்கிறாள்.

இரண்டு வேறுபட்ட காலங்களில் நடக்கும் கதை. கதையின் நாயகன் போல இருப்பது மாஸ்கோ நகரமே. அந்த நகரின் இயல்பு அங்குள்ள ஆண்களிடம் வெளிப்படுகிறது என லியுட்மிலா சொல்கிறாள். கத்ரீனாவின் தொழிற்சாலைக்குத் தொலைக்காட்சியில் இருந்து வரும் குழுவினர் நடந்து கொள்ளும் முறை. அதே தொழிற்சாலையின் தலைமை நிர்வாகியாகக் கத்ரீனா பின்னாளில் நடந்து கொள்ளும் விதம், தனித்து வாழ்பவர்களுக்கான மணஉறவினை ஏற்படுத்தித் தரும் மையத்தில் நடக்கும் உரையாடல். நாற்பது வயது ஆண்களின் நடத்தையைக் கத்ரீனா விமர்சிக்கும் முறை என சிறப்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன

கத்ரீனாவின் மகள் அலெக்ஸாண்ட்ரா புதிய தலைமுறையின் அடையாயமாக இருக்கிறாள். நடந்து கொள்கிறாள். அவள் அம்மாவின் புதிய காதலனை வரவேற்கிறாள். அன்புடன் பழகுகிறாள். அம்மாவிற்குச் சந்தோஷம் முக்கியம் என உணருகிறாள். கோஷா சந்தோஷத்தை உருவாக்குபவன். அவனது நண்பர்கள் அவனைப் பற்றிச் சொல்லும் செய்திகளில் அவனது ஆளுமை வெளிப்படுகிறது. தனது பிறந்தநாள் விருந்திற்காக அவன் கத்ரீனாவை அழைத்துச் சென்று நடத்தும் காட்சி சிறப்பானது. அந்த நட்பின் காரணமாகக் கத்ரீனா மனம் மாறுகிறாள்.

வாழ்க்கை 40 வயதில்தான் தொடங்குகிறது. இது கேட்க சாதாரணமாகத் தோன்றலாம், ஆனால் அதுதான் உண்மை.என்று ஒரு காட்சியில் விருந்தினர் சொல்கிறார். அது கத்ரீனாவின் வாழ்வில் உண்மையாகிறது..

நிக்கோலாயின் வீட்டிற்கு இளம்பெண்கள் காரில் செல்லும் காட்சி . அங்கே பெற்றோர்கள் வரவேற்கும் விதம். அதே குடும்பம் பின்னாளில் உருமாறும் விதம் என நிஜமான நிகழ்வுகளைக் காட்சிகளாகக் கொண்டிருக்கிறது படம்

1950 களில் நடக்கும் கதையில் ருடால்ஃப் சொல்கிறான்“ தொலைக்காட்சி நம் வாழ்க்கையை மாற்றிவிடப்போகிறது. நாம் இனி திரைப்படங்களுக்குச் செல்லவே மாட்டோம், நாடகமும் இலக்கியமும் அழிந்துவிடும். நமக்குத் தொலைக்காட்சியில் மட்டுமே ஆர்வம் இருக்கும். இனி எல்லாமே தொலைகாட்சி தான்.  “

இது போல இன்னொரு காட்சியில் லியுட்மிலா சொல்கிறாள் “மாஸ்கோ என்பது அதிர்ஷ்ட லாட்டரி போன்றது, அதில் நீங்கள் ஜாக்பாட் அடிக்கலாம். மாஸ்கோ நகரம் தூதர்கள், கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் கவிஞர்களால் நிறைந்துள்ளது. அவர்கள் அத்தனை பேரும ஆண்கள். நாமோ பெண்கள். அதை மறந்துவிடாதே“

இது போல ஒரு காட்சியில் கோஷா தனது வாழ்க்கை எப்படிபட்டது என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறான்

“ரோமானியப் பேரரசர் டயோக்ளீஷியனைப் பற்றி எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர் தனது பேரரசு உச்சத்தில் இருந்தபோது, அவர் அரியணையைத் துறந்துவிட்டு, நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் குடியேறினார். தோட்டங்கள் அமைத்து எளிமையாக வாழ்ந்தார். மீண்டும் ஆட்சிக்கு வருமாறு அவரிடம் கேட்கப்பட்டபோது, அவர் சொன்னார்: “நான் பயிரிட்ட முட்டைக்கோஸ்களை நீங்கள் ஒருமுறை பார்த்தால், இப்படிக் கேட்பதை நிறுத்திவிடுவீர்கள். “

ரோமானிய வரலாற்றில் தனது ஆட்சியை விரும்பித் துறந்த டயோக்ளீஷ் போலவே தான் பார்த்துக் கொண்டிருந்த நல்ல வேலையைப் போதும் எனச் சொல்லி விலகி வந்தவன் தான் கோஷா. காலம் எந்த இருவரை ஒன்று சேர்த்து வைக்கும் என்றோ, எவரை பிரித்து வைக்கும் என்றோ கண்டறிய முடியாது.

லியுட்மிலா பணத்திற்காக. வசதியான வாழ்க்கைக்காக ஆசைப்படும் பெண், காத்யா படித்து, சுயமாக முன்னேறிய பெண். தைரியமானவள். டோன்யா குடும்பப் பற்றுள்ளவள், எளிய வாழ்க்கையை வாழுகிறாள்.இந்த மூன்று பெண்களும் மூன்று பருவ காலங்களைப் போலவே எனக்குத் தோன்றுகிறார்கள். கத்ரீனாவை விடவும் அன்டோனினா தான் மனதிற்கு நெருக்கமாக இருக்கிறாள். வாழ்வின் மூன்று பாதைகளில் இந்த மூவரும் பயணிக்கிறார்கள்.

கடும் குளிர்காலத்தில், எனக்குள் வெல்ல முடியாத ஒரு கோடைக்காலம் இருப்பதை நான் இறுதியாக உணர்ந்துகொண்டேன் என்கிறார் ஆல்பர்ட் காம்யூ, இப்படத்தில் அதையே கத்ரீனாவும் உணருகிறாள். வெளிப்படுத்துகிறாள்

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 17, 2026 02:33

April 16, 2026

பிரபஞ்சத்தில் மனிதர்கள்

எனது புத்தகங்கள் நாற்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, மொத்தம் 27 மில்லயன் பிரதிகள் விற்பனையாகியுள்ளன என்கிறார்கள். அதனால் என்ன ? அவை அனைத்தும் வேகமாக மறைந்துவிடும், ஏனெனில் புதிய புத்தகங்களின் வெள்ளம் எல்லாவற்றையும் மூழ்கடித்து, முன்பே எழுதப்பட்டவற்றை வேகமாக அடித்துச் செல்கிறது. இன்று ஒரு புத்தகக் கடையில் உள்ள ஒரு புத்தகத்திற்கு, சிறிதளவு தூசி படிவதற்குக் கூட நேரம் கிடைப்பதில்லை. நாம் இப்போது நீண்ட காலம் வாழ்கிறோம் என்பது உண்மைதான் – ஆனால் நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றின் ஆயுட்காலமும் மிகவும் குறைந்துவிட்டது. இது வருத்தமளிக்கிறது, ஆனால் இந்தச் செயல்முறையை யாராலும் தடுக்க முடியாது. நம்மைச் சுற்றியுள்ள உலகம் மிக வேகமாக அழிந்து கொண்டிருப்பதால், எதற்கும் நம்மால் உண்மையாக இருக்க முடிவதில்லை.

ஸ்டானிஸ்லாவ் லெம்

போலந்து எழுத்தாளரான ஸ்டானிஸ்லாவ் லெம் சோவியத் யூனியனில் மிகவும் புகழ்பெற்று விளங்கினார். அவரது அறிவியல் புனைகதைகள் ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பாளர்களால் ரஷ்யனில் மொழிபெயர்க்கபட்டுள்ளன. லெம்மின் படைப்புகளின் ரஷ்ய மொழிபெயர்ப்பு ஏழு முதல் எட்டு மில்லியன் பிரதிகள் விற்பனையாகியுள்ளன என்கிறார்கள். அவரை எழுத்தாளர்கள் வரிசையில் மட்டுமின்றித் தத்துவாதிகளின் வரிசையிலும் வைத்துக் கொண்டாடியது ரஷ்யா. .

ரஷ்ய அறிவியல் புனைகதைகளுக்கு லெம் பெரும் ஆதர்சமாக இருந்தார். அதற்குக் காரணம் அவர் தனது கதைகளின் ஊடுபிரதியாக வைத்திருந்த அரசியல் விமர்சனம் மற்றும் வியப்பூட்டும் கற்பனையாகும்.

பிரபஞ்சத்தில் மனிதகுலத்தின் இருப்பும் இடமும் என்னவென்பது குறித்த லெம்மின் புனைவுகள் பிரமிப்பூட்டக்கூடியவை. .

சோவியத்தின் கடுமையான தணிக்கை காரணமாக அயல் மொழிப் படைப்புகள் ரஷ்யாவில் வெளியாவதில் சிரமமிருந்த காலத்தில் கூட லெம் எளிதாக ஏற்றுக் கொள்ளப்பட்டார். கொண்டாடப்பட்டார். லெம் சோவியத் ஒன்றியத்திற்குச் சென்று தனது வாசகர்களைச் சந்தித்து உரையாடியிருக்கிறார்.

ரஷ்ய இயக்குநர் ஆந்த்ரே தார்க்கோவெஸ்கி லெம்மின் சோலாரிஸ் நாவலை படமாக்க முன்வந்த போது அவரைச் சந்திக்க ரஷ்யாவிற்குச் சென்றார் லெம். தார்க்கோவெஸ்கி எழுதிய திரைக்கதையை வாசித்தார். அதில் விண்வெளி மற்றும் சோலாரிஸ் கிரகத்தை விடவும், பூமி மற்றும் அதன் தத்துவ விஷயங்களில் தார்க்கோவ்ஸ்கி அதிக ஆர்வம் கொண்டிருந்ததை லெம் விரும்பவில்லை. ஆகவே கருத்துமுரண்பாடு காரணமாகச் சண்டையிட்டுப் பிரிந்தார்..

திரைப்படம் வெளியான போது அப்படம் தனது நாவலை அடிப்படையாகக் கொண்டதில்லை மாறாகக் ‘குற்றமும் தண்டனையும்’ நாவலின் தழுவலில் எழுதப்பட்ட திரைக்கதையைக் கொண்டிருக்கிறது எனக் கேலி செய்தார் லெம்.

தார்க்கோவெஸ்கியின் திரைப்படம் சர்வதேச அளவில் பெரும்புகழ் பெற்றதோடு ரஷ்யாவின் மகத்தான திரைப்படங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இன்று ரஷ்யாவில் சோலாரிஸ் விளைவு என்ற புதுச் சொல் உருவாக்கபட்டிருக்கிறது. இறந்து போன உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் ஆவிகளைக் காண்பது மற்றும் அவற்றுடன் உரையாடுவது என்ற நிகழ்வைக் குறிப்பதற்கு அச்சொல் பயன்படுத்தபடுகிறது

தார்கோவெஸ்கியின் படம் ஏற்படுத்திய புகழின் காரணமாக லெம்மின் நாவல்கள் விற்பனையில் பெரிய சாதனை புரிந்தன. 1987-ஆம் ஆண்டின் ‘ சோலாரிஸ் / தி மெகல்லன் நெபுலா’ தொகுப்பு நான்கு லட்சம் பிரதிகளும், 1988-ஆம் ஆண்டின் ‘சோலாரிஸ் / தி இன்வின்சிபிள் / தி ஸ்டார் டைரீஸ்’ தொகுப்பு ஆறு லட்சம் பிரதிகளும் விற்பனையாகியுள்ளன என்கிறார்கள்.

சமீபத்தில் ஸ்டானிஸ்லாவ் லெம்மின் முழுமையான படைப்புகள், எழுநூறு பக்கங்கள் கொண்ட இருபது தொகுதிகளாக ரஷ்யமொழியில் வெளியிடப்பட்டுள்ளன . உண்மை என்னவென்றால், போலந்து மொழியை விட ரஷ்ய மொழியில்தான் லெம்மின் படைப்புகள் அதிகம் வாசிக்கபட்டுள்ளன

லெம் என்றொரு எழுத்தாளரே கிடையாது. அது லூனார் எக்ஸ்கர்ஷன் மாட்யூல் (LEM) என்பதன் முதல் எழுத்துக்களைப் பயன்படுத்தும் ஒரு கணினி என்றொரு வதந்தி பரவியிருந்தது. அது குறித்து லெம்மிடம் கேட்டபோது அதைச் சில விமர்சகர்கள் திட்டமிட்டு உருவாக்கினார்கள் என்று சிரிக்கிறார்.

தனது நேர்காணல் ஒன்றில் லெம் குறிப்பிடும் விஷயங்கள் அவரது ஆளுமையின் சான்றாக உள்ளன

நான் ஒருபோதும் நேரத்தைக் கொல்லப் படிப்பதில்லை. நேரத்தைக் கொல்வது என்பது ஒருவரின் மனைவியையோ அல்லது குழந்தையையோ கொல்வதற்குச் சமம்.எனக்கு நேரத்தை விட விலைமதிப்பற்றது வேறு எதுவும் இல்லை.

நான் என் புத்தகங்களுக்கு விளக்கம் அளிப்பதில்லை – அந்தப் பணியை வாசகரிடமே விட்டுவிடுகிறேன். மேலும், நான் ஒருபோதும் முழுப் புத்தகத்திற்குமான திட்டவரைவுடன் என் எழுதும் மேசையில் அமர்ந்ததில்லை

தொழில்நுட்பத்தின் அற்புதங்களை மக்கள் தங்கள் அருவருப்பான செயல்களுக்கு, தீமைகளுக்குப் பயன்படுத்தும் விதம் எனக்குப் பிடிக்கவில்லை. உதாரணமாக, இணையத்தில் கொட்டிக்கிடக்கும் ஆபாசப் படங்களைப் பாருங்கள். இணையம் அறிவுபரிமாற்றத்திற்கும், அறிவியல் தரவுகளை விரைவாகப் பரிமாறிக்கொள்ளவும், மனிதத் தொடர்பினை எளிதாக்கவும் உருவாக்கப்பட்டதாகக் கருதப்பட்டது. இன்றோ அது மோசமான பணிகளுக்கான ஆதாரகளமாகச் செயல்படுகிறது

இங்கே பணம் எல்லாவற்றையும் ஆளுகிறது. பொருளாதாரம் கலையின் மதிப்பீட்டை தீர்மானிக்கிறது – சில சமயங்களில் ஒரு புத்தகத்தில் “ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளன” போன்ற முத்திரைகளை நீங்கள் காணலாம். அது என்ன வகையான விளம்பரம்? ஒரு மில்லியன் மக்கள் ஒரு புத்தகத்தை வாங்கியதற்காக மட்டும் நான் அதை வாங்க ஒரு புத்தகக் கடைக்கு ஓட வேண்டுமா? எனக்கு இது போன்ற விஷயங்கள் பிடிக்கவில்லை

சோலாரிஸ் நூலின் கடைசி அத்தியாயம் ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு எழுதப்பட்டது. என் கதாபாத்திரத்தை வைத்து என்ன செய்வதென்று தெரியாததால், அந்த நாவலை நான் ஒதுக்கி வைக்க வேண்டியிருந்தது. இன்று, நாவலில் கடைசியாக ‘ஒட்டப்பட்ட’ அந்த ‘இணைப்பை’ என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், இவ்வளவு நீண்ட காலமாக என்னால் ஏன் அதை முடிக்க முடியவில்லை என்பதையும் விளக்க முடியவில்லை.

எனக்கு நினைவிருப்பது எல்லாம், முதல் பகுதி ஒரே மூச்சில், சரளமாகவும் மிகவும் வேகமாகவும் எழுதப்பட்டது என்பதும், பிற்பகுதி சிறிது காலம் கழித்து முடிக்கப்பட்டது என்பதும்தான். நான் எழுதத் தொடங்கும் போது, கதையின் முழுமையான ஒரு வரைவு என்னிடம் இருந்ததில்லை; அதை மறந்துவிடக் கூடாது என்பதற்காக, முடிந்தவரை வேகமாக எழுத முயற்சிப்பேன். நான் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தேன், இடைவெளியான நாட்களுக்குப் பின்பு கடைசியில் முடிவு தானாகவே நடந்தது.

அறிவியலுக்கும் இலக்கியத்திற்கும் வேறுவேறு நோக்கங்கள் உள்ளன. உலகம் எவ்வாறு இயங்குகிறது. அதன் ஆதார, அடிப்படை கட்டமைப்பு எவ்வாறு உள்ளது. உருவாக்கபடுகிறது என்று காட்ட அறிவியல் முயல்கிறது; மேலும், இந்த விஷயங்களில் அறிவியலிடம் கேட்கப்படும் எந்தக் கேள்விகளும் மாறிக்கொண்டே இருக்கும் பதில்களையே கொண்டிருக்கின்றன.

மறுபுறம், இலக்கியமோ பதிலில்லாத கேள்விகளை எழுப்புகிறது.. அது புரிந்துகொள்ளப்படாத அல்லது புரிந்துகொள்ள முடியாத சிக்கல்களைக் கவனப்படுத்துகிறது. வெறும் கதையை மட்டும் என்னால் எழுத இயலாது. மனித குலம் குறித்த எனது ஆழ்ந்த புரிதல்களை, சந்தேகங்களை, சாத்தியங்களை எழுத்தின் வழியே வெளிப்படுத்துகிறேன். ஆகவே எனது நாவல்கள் பல்வேறு ஊடுஇழைகள் கொண்டிருக்கின்றன

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 16, 2026 04:43

April 14, 2026

வேர்ச்சொல் விழாவில்

நீலம் அமைப்பின் சார்பில் நடைபெறும் வேர்ச்சொல் தலித் இலக்கியக் கூடுகை 2026 விழாவில் கலந்து கொள்கிறேன்.

ஏப்ரல் 18 காலை நடைபெறும் அதன் துவக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 14, 2026 23:35

நன்றி

எனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த நண்பர்கள். வாசகர்கள். பத்திரிக்கையாளர்கள். படைப்பாளர்கள், திரைத்துறையினர், குடும்ப உறவுகள் உள்ளிட்ட அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி.

நண்பர்கள் அகரமுதல்வன். செந்தில் ஜெகனாதன். வாசு முருகவேல். வேடியப்பன், மணிகண்டன் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்கள். அவர்களின் ஏற்பாட்டில் கேக் வெட்டிப் பிறந்த நாளைக் கொண்டாடினேன்.

தூத்துக்குடி சலூன் நூலகம் மாரியப்பன் பிறந்தநாளை முன்னிட்டு தனது நூலக மனிதர்கள் அமைப்பின் சார்பில் சிறப்பான முன்னெடுப்புகளைச் செய்திருந்தார். வாழ்த்துச் சுவரொட்டிகள். வாசகர்களுக்கு நூல் கொடை, மரம் நடுதல். பள்ளி மாணவர்களுக்கு பரிசு எனப் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. அவருடன் இணைந்து சிவகாசி. அருப்புக்கோட்டை, விருதுநகர் என வாசகர்கள் பலரும் எனது பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.அவர்களுக்கு எனது மனம் நிறைந்த அன்பும நன்றியும். இந்த நிகழ்வினை ஒருங்கிணைப்பு செய்த பொன். மாரியப்பன். ஆசிரியர் ஜெயபால். அருண்பிரசாத், ஆசிரியர் ராம் குமார். சிவகாசி மாலை ராஜன். . உள்ளிட்ட நண்பர்களுக்கு நன்றி

அழகிய மணவாளன் சிறப்பான பாடல் ஒன்றை தயாரித்து அனுப்பியிருந்தார். அவருக்கு எனது நன்றி.

சமூக ஊடகங்களிலும். தொலைபேசி வழியாகவும், குறுஞ்செய்தி வழியாகவும் தங்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்பும் ஆசியும் என்னைத் தொடர்ந்து வழி நடத்தும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 14, 2026 23:26

கவிஞனின் நாட்கள்.

கொலம்பிய இயக்குநர் சைமன் மேசா சோட்டோ இயக்கி 2025 ல் வெளியான A Poet திரைப்படம் ஆஸ்கர் ரெஸ்ட்ரெபோ என்ற கவிஞரைப் பற்றியது.

தன் தாயின் ஓய்வூதியத்தில் வாழும் ஐம்பது வயதான கவிஞரும், குடிப்பழக்கம் மற்றும் கசப்புணர்வு கொண்டவருமான ஆஸ்கர், மனைவி, மகளைப் பிரிந்து வாழுகிறார். அவரது தோற்றத்திலே அவரது தற்போதைய நிலை தெளிவாக உணர்த்தப்படுகிறது.

போதுமான வருவாயில்லை. தகுந்த வேலையில்லை. தனது பல இரவுகளை உள்ளூர் மதுக்கடையில் குடித்துக் கழிக்கிறார். அங்கே, தனக்கு விருப்பமான கவிஞரான ஜோஸ் அசுன்சியோன் சில்வாவின்(. José Asunción Silva) கவிதைகளைப் பற்றி உணர்ச்சிப்பூர்வாக உரையாடுகிறார், பாடுகிறார்.  ஜோஸ் ஏன் தனது முப்பது வயதில் தற்கொலை செய்து கொண்டார் என விவரிக்கிறார்.

மதுக்கடையில் அவருடன் உரையாடும் ஒரு இளைஞன் தனது ஆதர்சம் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் என்று குறிப்பிடும் போது மார்க்வெஸின் புகழ் உருவாக்கபட்டது. அவர் அதிகாரத்துடன் நட்பு கொண்டு புகழை அடைந்தவர். கொலம்பியாவின் உண்மையான படைப்பாளி நிகரற்ற கவிஞர். José Asunción Silva தான் என்று ஆஸ்கர் வாதிடுகிறார், அந்த இளைஞன் ரூபாய் நோட்டில் மார்க்வெஸ் படம் அச்சிடப்பட்டிருப்பதை நினைவுபடுத்துகிறான். உடனே அவர் சில்வாவின் படமும் தான் அச்சிடப்பட்டிருக்கிறதே என்கிறார்

கொலம்பியாவில் 10,000 பெசோ நோட்டில் எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் உருவமும், ஜோஸ் அசுன்சியோன் சில்வா உருவம் 5,000 பெசோ நோட்டிலும் அச்சிடப்பட்டுள்ளது ; இது போலச் சீலேவில் 5,000 பெசோ நோட்டில் கேப்ரியேலா மிஸ்ட்ரலும், 20,000 பெசோ நோட்டில் பாப்லோ நெரூடாவும் இருக்கிறார்கள். பணத்தாளில் எழுத்தாளர்களின் உருவத்தை இடம்பெறச் செய்வது லத்தீன் அமெரிக்காவின் சிறப்பான கௌவரம்..

ஆஸ்கர் தனது வீட்டில் ஜோஸின் புகைப்படத்தை மாட்டி வைத்திருக்கிறார். பல நாட்கள் மிதமிஞ்சிய போதையில் சாலையில் விழுந்து கிடக்கிறார். அம்மாவின் தயவில் அவரது வாழ்க்கை ஒடுகிறது. ஒரு காட்சியில் தான் ஒரு கவிஞன் என அம்மாவிடம் ஆஸ்கர் சொல்கிறார். இல்லை நீ ஒரு வேலையற்றவன் என அம்மா பதில் தருகிறார்.

ஆஸ்கர் ரெஸ்ட்ரெபோவிற்குக் கவிதை தான் வாழ்க்கை. ஆனால் கவிதையை வைத்துப் பிழைக்க முடியாது. வாழ்க்கைத் தேவைக்காகச் சம்பாதிக்கவும் வேண்டியுள்ளது என்பதை உணருகிறார். ஆனால் எந்த வேலையிலும் அவரால் பொருந்திப் போக முடியவில்லை.

இளமைக்காலத்தில் இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டு தேசிய அளவில் விருது பெற்ற ஆஸ்கரால் தற்போது கவிதை எழுதவும் முடிவதில்லை. ஆழ்ந்த சோக உணர்வு கொண்டவராக இருக்கிறார். கவிதை மட்டுமே அவரை மகிழ்ச்சிப்படுத்துகிறது.

உள்ளூரில் செயல்படும் கவிஞர்கள் அமைப்பு ஒன்றுடன் நெருக்கமாக இருக்கிறார். அவர்கள் நடத்தும் கவிதை விழாவிற்கான ஆலோசனைகள் சொல்கிறார்..

ஆஸ்கரின் மகள் டேனியலா கல்லூரி சென்று படிக்க விரும்புகிறாள். அதற்கான பணஉதவியைச் செய்ய முடியாத நிலையில் ஆஸ்கர் வேதனைப்படுகிறார். மகளைத் தேடிச் சென்று அவர் உரையாடும் காட்சிகள் சிறப்பானவை. அதில் மகள் தந்தையை வெறுக்கவுமில்லை. விரும்பவுமில்லை. மூன்றாம் மனிதரைப் போலவே நடத்துகிறாள்.

வேலையில்லாமல் திண்டாடும் அவருக்குக் கவிஞர்கள் சங்கம் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியர் பணி கிடைக்க உதவி செயகிறது. மாணவர்களுக்கு இலக்கியப் பாடம் கற்பிக்கிறார். அவரது வகுப்பில் படிக்கும் யுர்லாடி என்ற 15 வயது மாணவி கவிதை எழுதுவதிலும். ஓவியத்திலும் மிகுந்த திறமை கொண்டிருப்பதை அறிந்த ஆஸ்கர் அவளது குறிப்பேட்டினை வாங்கி வாசித்து வியந்து போகிறார்.

புகழ்பெற்ற கவிஞராக உருவாகக் கூடிய படைப்பாற்றல் அந்த மாணவியிடம் இருப்பதாக உணருகிறார். ஆகவே அவளைக் கவிதை விழாவில் பங்கேற்க வைக்க முயற்சி செய்கிறார். அந்த மாணவியின் குடும்பம் மிகவும் வறுமையான சூழலில் இருக்கிறது அவர்களுக்குச் சிறிய அளவில் பொருளாதார உதவி செய்து யுர்லாடி கவிதை விழாவில் கலந்து கொள்ளச் சம்மதம் பெறுகிறார்.

கவிதை வாசிப்பு நிகழ்ச்சிக்காக யுர்லாடிக்கு புதிய ஆடை வாங்கித் தருகிறார். கவிதையை எப்படி வாசிக்க வேண்டும் எனப் பயிற்சி அளிக்கிறார். அடிக்கடி அவளுடன் ஒன்றாகச் சுற்ற வேண்டிய தேவை உருவாகிறது. அதனை வகுப்பு மாணவர்கள் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். கேலி செய்கிறார்கள். இதன் காரணமாக வகுப்பில் மாணவர்களுடன் யுர்லாடி சண்டையிடுகிறாள்.

தனது படைப்பாற்றலை அவள் உணரவேயில்லை. வேலை தேடிச் சம்பாதித்துத் திருமணம் செய்து செட்டில் ஆகிவிட வேண்டும் என்பதே அவளது ஒரே குறிக்கோள். கவிதை என்பதைத் தனது மனதின் வெளிப்பாடாக மட்டுமே நினைக்கிறாள்.

கவிதை விழாவில் அவள் வாசித்த கவிதைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. பலரும் பாராட்டுகிறார்கள். இதன் மூலம் அவளுக்குக் கல்வி உதவித்தொகை கிடைக்கக் கூடும் என்ற நிலை ஏற்படுகிறது.

கவிதை விழாவின் இரவு விருந்தில் யுர்லாடி நிறைய குடித்து வாந்தியெடுத்து மயங்கி விடுகிறாள். அவளை ஆஸ்கர் தனது காரிலே வீட்டிற்குக் கொண்டு போய் விடுகிறார். மயங்கிய நிலையில் உள்ள அவளுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. மறுநாள் யுர்லாடியின் குடும்பம் அவளை ஆஸ்கர் கெடுத்துவிட்டதாகப் புகார் சொல்கிறார்கள். இதனால் அவரது வேலை பறிபோகிறது.

தனது சகோதரியை போதையில் வல்லுறவு செய்ததாக யுர்லாடியின் அண்ணன் ஆஸ்கரை தேடிவந்து உதைக்கிறான். தன் மீது எந்தத் தவறுமில்லை என ஆஸ்கர். அவர்களுக்குப் புரிய வைக்க முயற்சி எடுக்கிறார் .ஆனால் பெண்ணின் குடும்பம் அவரைக் குற்றவாளியாக நினைக்கிறது. காவல்துறையில் புகார் அளிக்கத் திட்டமிடுகிறது.

ஆஸ்கர் இதிலிருந்து எப்படி மீண்டார் என்பதே படத்தின் பிற்பகுதி. ஆஸ்கரின் மகள் டேனியலாவிற்கும் யுர்லாடிக்கும் இடையில் ஏற்படும் சந்திப்பு. மற்றும் அவளது நாட்குறிப்பை டேனியலா வாசிக்கும் காட்சிகள் மிக அழகாக உருவாக்கபட்டுள்ளன.

கவிதை விழாவின் இரவில் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்த முழு உண்மையையும் யுர்லாடி விளக்கி ஒரு கடிதம் எழுதியிருக்கிறாள். அதை டேனியலா வாசிக்கிறாள். அதன் பிறகு தான் தந்தையின் மனதை, அன்பைப் புரிந்து கொள்கிறாள். அவர் புதிய வாழ்க்கையைத் துவங்க வேண்டும் என விரும்புகிறாள்.

ஆஸ்கரின் சகோதரி யோலண்டா தனித்துவமான கதாபாத்திரம். அவர் தனது சகோதரனுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய முயற்சிக்கிறார். ஆனால் அவற்றைத் தன்னைச் சிறுமைப்படுத்துவதாக ஆஸ்கர் உணருகிறார். எதிர்க்கிறார் இது போலக் குறுகிய காலத்தில் பெரிய செல்வத்தை அடைவதற்கான வழிகாட்டுவதாக இருவர் தொடர்ந்து ஆஸ்கருடன் உரையாடுகிறார்கள். பணம் கேட்கிறார்கள்.

இளவயதில் கிடைத்த புகழ் ஆஸ்கருக்கு தொந்தரவாகவே இருக்கிறது. அவர் கவிதை எழுத மட்டும் விரும்பவில்லை. கவிஞனாகவே வாழ விரும்புகிறார். அதனைச் சமூகம் அனுமதிக்கவில்லை. அந்தக் கோபத்தில் குடிக்கிறார். தனது கருத்துகளை உரத்து வெளிப்படுத்துகிறார். அவரைப் புரிந்து கொண்ட ஒரே நபர் அவரது அன்னை மட்டுமே.

படம் நான்கு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு புத்தகம் போலவே படத்தையும் நாம் அணுகுகிறோம். ஜுவான் சர்மியென்டோவின் ஒளிப்பதிவு அபாரம். சூப்பர் 16mm ஃபிலிமில் படமாக்கியிருக்கிறார்கள். இருவருக்கும் இடையே வளர்ந்து வரும் நெருக்கத்தை ஒரு ஆவணப்படம் போல நிஜமாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

ஆஸ்கர் ரெஸ்ட்ரெபோவாக நடித்துள்ள உபைமர் ரியோஸ் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவர் நடிக்கிறார் என்ற உணர்வேயில்லை. குறிப்பாக அவரது உடல்மொழி மற்றும் பேசும் முறை நிஜமாகவுள்ளது. அவரது முகத்தில் நிரந்தரமான வருத்தம் படர்ந்திருக்கிறது.

படம் ஒரு முக்கியமான அரசியலைப் பேசுகிறது. நம் காலத்தில் கவிதை என்பதும் ஒரு வகை வணிகப்பொருளே. இலக்கியத்தை வளர்ப்பதாகச் சொல்லி நிதி திரட்டும் அமைப்புகள் இருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் விரும்புவதைக் கவிஞர்கள், எழுத்தாளர்கள் வழியாக வெளிப்படுத்த நினைக்கிறார்கள். கட்டாயப்படுத்துகிறார்கள். யுர்லாடியின் எந்தக் கவிதையை வாசித்தால் நிதி அளிப்பவர்களுக்குப் பிடிக்கும் என அமைப்பாளர் முடிவு செய்கிறார். அதனை வாசிக்கும்படி வற்புறுத்துகிறார். அதுவும் அடித்தட்டு வாழ்வில் இருந்து உருவாகும் கவிஞர்களைத் தங்களின் பகடை காய்களாக மட்டுமே பயன்படுத்திக் கொள்ள அதிகாரமும் அமைப்பும் விரும்புகிறது. அதனை ஆஸ்கர் எதிர்க்கிறார். கண்டிக்கிறார்.

கலைவட்டாரங்கள் யுர்லாடிவின் ஏழ்மை நிலை காரணமாகவே அவளைக் கொண்டாடுகின்றன. அது ஒருவகைச் சுரண்டல்.

José Asunción Silva

கவிஞர் José Asunción Silvaவை முதன்மைப்படுத்துவதன் மூலம் தனது ஆதர்சம் மற்றும் லட்சியம் எதுவென ஆஸ்கர் வெளிப்படையாகத் தெரிவிக்கிறார்.

தன் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு, தனது சகோதரர்களின் பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பில் இருக்கும் பதினைந்து வயது யுர்லாடிக்கு, ஆஸ்கரின் வழிகாட்டுதல் தந்தையின் அன்பைப் போலிருக்கிறது. அதை ஆஸ்கரும் உணருகிறார். ஆனால் பொய் குற்றச்சாட்டின் போது குடும்பச் சூழல் அவளை வீட்டின் குரலாக மாற்றிவிடுகிறது, முடிவில் அவள் நடந்த உண்மைகளை வெளிப்படுத்தி ஆஸ்கர் மீதான உண்மையான அன்பைக் காட்டுகிறாள்.

தந்தையை மன்னிக்கும் மகளின் கதை இருவேறு பார்வைகளில் வெளிப்படுகிறது. தந்தை, கவிஞன் என்பது ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் போல படத்தில் சித்தரிக்கபடுகிறது. நிறைவேறாத ஆசைகளுடன், கொந்தளிக்கும் கவித்துவ மனநிலையுடன் அலையும் ஆஸ்கரைப் போன்ற கவிஞர்கள் இந்தியாவில் ஏராளம். ஆனால் எவர் வாழ்க்கையும் இதுவரை இப்படி படமாக்கப்படவில்லை.

••  

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 14, 2026 00:23

April 12, 2026

திரைக்கு முன்னால்.

புதிய சிறுகதை. ஏப்ரல் 13. 2026

அந்தப் பெண்கள் இருவரும் கையில் கோன்ஐஸ்கிரீம் வைத்திருந்தார்கள்..

ஆர்கேஎஸ் தியேட்டரில் கோன் ஐஸ்கிரீம் மிகுந்த சுவையாக இருக்கும். வழக்கமாகச் சபாபதியும் அவனது மனைவி தனசங்கரியும் படம் ஆரம்பிக்கும் முன்பாகவே கோன் ஐஸ் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு தான் தியேட்டருக்குள் செல்வார்கள். அன்றைக்கு அவர்கள் டைட்டானிக் படத்தினைக் காணுவதற்காக வந்திருந்தார்கள்.

கோன்ஐஸை நோக்கித் தனது நாக்கை நீட்டிய ஆரஞ்சு வண்ண சுடிதார் அணிந்த பெண்ணிற்கு முப்பத்தைந்து வயதிருக்கக் கூடும். அருகில் நின்றவளின் வயது பதினைந்து இருக்கலாம். அவள் நீலநிற ஜீன்ஸ் பிளாக் டாப்ஸ் அணிந்திருந்தாள். ஆரஞ்சு சுடிதார் பெண்ணைக் காட்டி தனசங்கரி கேட்டாள்

“இவ யாருனு தெரியுதா “

“தெரியலை. யாரு தெரிஞ்சவங்களா“ எனக் கேட்டான் சபாபதி.

“இல்லை.. இவ தான் கோவில்ல வச்சு என் கழுத்துல கிடந்த ரெட்டவடம் செயினைத் திருடுனவ. “

“இந்தப் பொண்ணா “எனத் திகைப்புடன் கேட்டான் சபாபதி

“இவளே தான். அன்னைக்குச் சேலை கட்டியிருந்தா. இன்னைக்குச் சுடிதார் போட்டிருக்கா. கூட இருக்கிறது அவ மக மாதிரியிருக்குல்லே“

“ஆமா.. ரெண்டு பேர் மூக்கும் ஒண்ணு போல இருக்கு. “

“அவளும் திருடுவாளோ என்னமோ. “

“நமக்கு எப்படித் தெரியும்“

“அவ ஸ்டைலை பாத்தீங்களா.. கைல நகப்பாலீஸ். காதுல பெரிய ரிங். தலைமுடியை வேற சுருட்டி விட்டிருக்கா.. “

“அவ எப்படியும் இருந்துட்டு போறா.. நமக்கென்ன“

“அன்னைக்குப் போலீஸ் மட்டும் இல்லேன்னா. என் நகை அவ்வளவு தான் . வரிசையில் பின்னாடி நின்னுகிட்டு இருந்தவ. சட்டுனு கழுத்துல கிடக்கிறதை அறுத்துட்டு ஒடிட்டா“

“நீ உசாரா இருந்திருக்கணும்“

“உசாரா தான் இருந்தேன். ஆனா இவ முகத்தைப் பாத்து அப்பாவினு நினைச்சி ஏமாந்துட்டேன். இவ கெட்ட கேடுக்கு கோன் ஐஸ் என்ன வேண்டியிருக்கு. எப்படி நக்கி நக்கித் திங்குறா. பாருங்க. வெட்கம்கெட்டவ. “

“அவளை விடு.. நமக்கு ஐஸ் வாங்க வேண்டாமா“

“அந்த கருமத்தை இவளும் திங்குறா.. நாமளும் திங்கணுமா.. எனக்கு வேணாம். உங்களுக்கு வேணும்னா.. வாங்கிக் கோங்க. “

“எனக்கும் வேணாம்.. இன்டர்வெல்ல பாப்கார்ன் வாங்கிக்கிடுவோம்“ என்றான் சபாபதி

“அவ என்ன கவனிச்ச மாதிரியே தெரியலை. பாத்தாளா.. இல்லை பாக்காத மாதிரி நடிக்கிறாளா“

“பாத்துட்டு தான் தலையத் திருப்பிகிட்டா“

“திமிரு.. அவ நம்மளை பாத்து சிரிக்கிற மாதிரியிருக்குல்லே. “.

“எப்படியும் போகட்டும் நாம உள்ளே போவோம். “ என அரங்கின் உள்ளே தனசங்கரியை அழைத்துக் கொண்டு சென்றான்

“ஜெயில்ல இருந்து எப்போ வந்தளோ.. இங்கே எவ தாலியை அறுக்க வந்திருக்காளோ“

“அவ எதுவும் செய்து தொலையட்டும். நாம படத்தைப் பார்ப்போம்“

“அப்படி இருக்க முடியாதுங்க.. நம்ம கண்ணுமுன்னே நகையை இவ ஆட்டைய போடுறதை எப்படிப் பாத்துகிட்டு இருக்க முடியும். “

“அதுக்கு நாம என்ன செய்றது“

“தியேட்டர்க்குள்ளே போலீஸ் கிடையாதா“

“அதெல்லாம் கிடையாது“

“அப்போ தியேட்டர் மேனேஜர்கிட்ட போயி இந்த மாதிரி திருடி ஒருத்தி உள்ளே வந்திருக்கானு சொல்லிட்டு வர்றீங்களா“

“அது நம்மவேலையில்ல தனா. “.

“இப்படி எல்லோரும் நினைக்கிறது தான் இவளுக்கு இளக்காரமா போச்சு.. எத்தனை பேர் நகையைத் திருடியிருப்பா.. கொஞ்சமாவது மனசுல பயம் இருக்கா பாருங்களேன். “

“அதான் போலீஸ் பிடிச்சி உள்ளே போட்டுட்டாங்களே“

“இப்படி தப்புமேல தப்பு பண்ணிட்டு இவளும் சந்தோஷமாத் தானே இருக்கா. இவளுக்குப் புள்ள குட்டியிருக்கே“

“அதுக்கு என்ன செய்ய.. “

“அங்கே பாருங்க அம்மாவும் மகளும் ஆளுக்கு ஒரு பாப்கார்ன். அனுபவிக்கிறாளுக“

“உனக்கு வேணும்னா சொல்லு.. வாங்கிட்டு வர்றேன்“

“எனக்கு வேணாம்.. இவ எல்லாம் இங்க சினிமா பாக்கத் தான் வந்திருப்பானு நினைக்கிறீங்களா“

“சினிமா தியேட்டர்ல வேற என்ன செய்ய முடியும்“

“அப்படி தான் கோவில்ல நினைச்சேன். ஆனா என் கழுத்துல கிடந்ததை அறுத்துட்டாளே“

அம்மாவும் மகளும் அவர்களின் முன்வரிசையில் இருந்த இருக்கையில் அமர்ந்தார்கள்.

“சப்தமா பேசாதே. கேட்கப்போறாங்க“

“நல்லா கேட்கட்டும்“ என்றாள் தனசங்கரி.

அம்மாவும் மகளும் பாப்கார்ன் தின்றபடியே சப்தமாகச் சிரித்துப் பேசிக் கொண்டார்கள். ஆரஞ்சு சுடிதார் அணிந்த பெண்ணிற்கு அடுத்து ஒரு இளம்பெண்ணும் அவளது கணவனும் வந்து அமர்ந்தார்கள். அந்தப் பெண் கையில் நிறைய வளையல்கள் அணிந்திருந்தாள். ஃபேன்ஸி டஸ்ஸார் மல்டி கலர் புடவை, கூந்தலில் மல்லிகைப்பூ.

“ஏங்க. அவ பக்கத்துல யாரோ புதுசா கல்யாணம் ஆனவங்க உக்காந்திருக்காங்க. அந்தப் பொண்ணு கழுத்துல நிறைய நகை இருக்கு. அந்தப் பொண்ணை வேற சீட் மாறி உட்காரச் சொல்லுங்க “என்றாள் தனசங்கரி

“நாம எப்படிம்மா சொல்ல முடியும். “

“அதுக்காக இவ திருடினு தெரிஞ்சிகிட்டு நாம வாயை மூடிட்டு இருக்கணுமா… நீங்க சொல்லாட்டி.. நான் போயி அந்தப் பொண்ணுகிட்ட சொல்லிட்டு வரப்போறன்“

“எதுக்கு வம்பு. பேசாம படத்தைப் பாரு.. “

“என் மனசு கேட்கமாட்டேங்குது.. “ எனத் தனசங்கரி எழுந்த போது அந்த வரிசையில் வேறு ஒரு நடுத்தரவயது ஆள் நடந்து வந்து புதுப்பெண் அமர்ந்திருப்பது தனது இருக்கை என டிக்கெட்டைக் காட்டினார். அந்தப் பெண்ணும் பையனும் வேறு இருக்கைக்கு மாறினார்கள்.

“நல்லவேளை சாமியே அந்தப் பொண்ணை இடத்தை மாற்றி உட்கார வச்சிட்டாரு “என்றாள் தனசங்கரி

ஆரஞ்சு சுடிதார் அணிந்த பெண் தனது பக்கத்து இருக்கையில் அமர்ந்த நபருக்கு பாப்கார்ன் பாக்கெட்டினை நீட்டி எடுத்துக் கொள்ளும்படி சொன்னாள்

“பாத்தீங்களா. இந்தக் கூத்தை.. அந்த ஆள் பர்ஸை மொள்ளையப் போடப்பாக்குறா“

“அவ எக்கேடும் கெட்டு தொலையட்டும் நாம அவளைப் பாக்குறதுக்கா வந்துருக்கோம்“ என்றான் சபாபதி

“இவ எல்லாம் எந்த வயசில திருடியாகியிருப்பா.. அவங்க அப்பா அம்மா என்ன வேலை செய்திருப்பாங்க“

“அவ கிட்ட தான் கேட்கணும்“

“இவ மகளுக்கு அம்மா திருடினு தெரியுமா.. அதைத் தெரிஞ்சிகிட்டு எப்படி ஜாலியா சினிமா பாக்க கூட வந்திருக்கா“

“திருடிங்கிறதுக்காக அம்மா இல்லேனு ஆகிடுமா“

“என்ன ஜென்மங்களோ.. அவளைப் பாருங்க பக்கத்துச் சீட்டுகாரனைத் தொட்டுத் தொட்டு பேசுறா., அந்த ஆளும் இளிக்கிறான். அவனும் இவ கேஸ் தான் போல“

“யாரையும் அப்படிச் சொல்லக்கூடாது தனா“

“உங்களுக்கு உலகம் தெரியாது. நான் நாலு இடத்துக்குப் போய் வர்றவ.. ஆளு முகரைப் பாத்தவுடன் கண்டுபிடிச்சிருவேன்“

“அதான் நகையைப் பறிகொடுத்தயாக்கும்“ என்றான் சபாபதி.

படம் துவங்குவதற்கான இசை ஒலிக்க ஆரம்பித்தது. திரையில் விளம்பரங்கள் ஒடத்துவங்கின. நகை விளம்பரம் ஒன்றைக் காட்டினார்கள். அம்மாவும் மகளும் அதைக் காட்டி ஏதோ பேசிக் கொண்டதை தனசங்கரி கவனித்தாள். படம் துவங்கியபோது மகளைத் தனியே விட்டு அம்மா வெளியே எழுந்து போனாள்

“அவ எதுக்கு வெளியே போறா“ எனக்கேட்டாள் தனசங்கரி

“எனக்கு எப்படிம்மா தெரியும்“

“நான் போயி பாத்துட்டு வரவா “எனக்கேட்டாள்

“பேசாம படத்தைப் பாரு“ என்றான் சபாபதி

வெளியே சென்றவள், இரண்டு குளிர்பானங்களை வாங்கிக் கொண்டு உள்ளே வந்திருந்தாள்

“கூல்ட்ரிங் வாங்கிட்டு வந்திருக்கா. “

“குடிச்சிட்டு போறா“.. எனக் கோபமாகச் சொன்னான் சபாபதி

படத்தில் வரும் காதல்காட்சிகளை அம்மாவும் மகளும் கைதட்டி ரசித்தார்கள். கப்பலின் அடித்தளத்தில் ரோஸ் உடன் ஜாக் நடனமாடும் போது ஆரஞ்சு சுடிதார் அணிந்த பெண் தனது பாப்கார்ன் பாக்கெட்டில் இருந்த சோளத்தைத் திரையை நோக்கி வீசிச் சப்தமிட்டாள். அவர்கள் படத்தை உற்சாகமாக ரசித்துக் கொண்டாடுவதைச் சபாபதி பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் தனசங்கரியின் கவனம் முழுவதும் அவள் எதையாவது திருடப் போகிறாளா என்பதிலே இருந்தது.

பாதிப் படத்திலே படத்தை மறந்து தனக்கு நடந்த திருட்டைப் பற்றித் தனசங்கரி நினைக்கத் துவங்கினாள்.

••

திருமணமான புதிதில் சபாபதியும் தனசங்கரியும் வாரம் வெள்ளிக்கிழமை மாலை சினிமாவிற்குப் போவார்கள். அந்த ஊரில் நான்கே திரையரங்குகள் இருந்தன. ஆகவே பார்த்தபடத்தையே திரும்பவும் பார்க்க வேண்டியதாகியது. நாளடைவில் சினிமாவிற்குப் போகும் விருப்பம் வடிந்து போனது. அதுவும் திருமணமாகி ஒன்பது வருஷங்களாகக் குழந்தைகள் இல்லாமல் போனபிறகு தனசங்கரியின் கவனம் முழுவதும் கோவில் பக்கம் திரும்பிவிட்டது. அன்றாடம் ஏதாவது ஒரு கோவிலுக்குப் போய்வந்தாள். வேண்டுதல்கள் போட்டாள். பரிகாரங்கள் செய்து பார்த்தாள். கடவுள் இன்னமும் மனது வைக்கவில்லை என இரவில் படுக்கையில் கண்ணீர் கசியப் புலம்பினாள்.

சபாபதி குழந்தையில்லாததைப் பெரிய விஷயமாக நினைக்கவில்லை. தங்களுக்குக் கொடுத்துவைக்கவில்லை என்று சொல்லிக் கொண்டான். அந்தச் சமாதானத்தைத் தனசங்கரியால் ஏற்க முடியவில்லை. அவள் மிகவும் வருந்தினாள். தங்கள் வாழ்க்கை ஆறிப்போன காபியை போலாகிவிட்டதாக உணர்ந்தாள். எதையும் ஆசையாகச் செய்யவோ, சாப்பிடவோ கூட விருப்பம் வடிந்துவிட்டது. தீபாவளி. பொங்கல் போன்ற விசேச நாட்களில் உடனிருந்து சாப்பிட பிள்ளை இல்லையே என வருந்தினாள்.

சபாபதியோ அவளைச் சந்தோஷமாக வைத்துக்கொண்டால் போதும் என நினைத்தான். அதற்காக அவளுக்கு ஒரு ஸ்கூட்டி வாங்கிக் கொடுத்தான். அந்த ஸ்கூட்டி அவளுக்குப் புதிய வாசலைத் திறந்துவிட்டது. அலங்கார கற்கள். போலி முத்துகள். மணிகள் வாங்கி வந்து மலிவுவிலை நகைகள் செய்யத் துவங்கினாள். அவற்றை விற்பதற்காகச் சில கடைகளையும் பிடித்திருந்தாள். இதனால் தினமும் மதியம் பஜாருக்குப் போய் வரத் துவங்கினாள். தனக்குத் தேவையான அலங்காரப் பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பும் போது மறக்காமல் கோவிலுக்குப் போவதுண்டு

ஒரு செவ்வாய்கிழமை சிவன் கோவிலுக்குப் போயிருந்த போது ஏதோ யாகம் நடக்கிறது என நீண்ட வரிசையாக இருந்தது. தனசங்கரி வரிசையில் நின்று கொண்டாள். திடீரென யாரோ முதுகில் இடிப்பது போலிருந்தது. திரும்பிப் பார்த்தாள். முப்பது வயதிருக்கும். மெலிந்த தோற்றம் கொண்ட பெண். ஊதா நிற சேலை. பள்ளி மாணவிகள் அணிவது போன்ற பாசிமாலை அணிந்திருந்தாள். கையில் ரப்பர் வளையல்.. இடது கையில் ஒரு வயர்கூடை. அதில் தீபம் போடுவதற்கான எண்ணெய் வைத்துள்ள சிறிய தூக்குவாளி. தீப்பெட்டி.

“இடிக்காம நில்லுங்க“ என்றாள் தனசங்கரி

“தலை சுத்துச்சி. அதான்கா“.. என்றாள் அந்தப் பெண்.

தனசங்கரிக்கு அந்தப் பதில் போதுமானதாகயிருந்தது. என்ன வேண்டுதலுக்காக வந்திருக்கிறாளோ பாவம் என நினைத்தபடி வரிசையில் நின்றாள். வரிசை நகரவேயில்லை. வெக்கை அதிகமான நாள் என்பதால் வியர்த்து வழிந்தது. தாகமாகவும் இருந்தது. மறுபடியும் அந்தப் பெண் இடிப்பது போல இருக்கவே முறைத்தபடியே திரும்பினாள்

“உங்க ரூபாயா“ எனக் கிழே கிடந்த ஐந்து ரூபாயைக் காட்டினாள்

அது தன்னுடைய பணமில்லை என அறிந்தபோதும் தனது பர்ஸை திறந்து உள்ளே இருந்த பணத்தைச் சரி பார்த்தாள் தனசங்கரி.

பின்னாடி நின்றவள் அவளைத் தள்ளவே பர்ஸில் இருந்த சில்லறைகள் சிதறியோடின. அவள் குனிந்து அந்தச் சில்லறைகளைப் பொறுக்கிவிட்டு நிமிர்ந்த போது அவள் கழுத்தில் அணிந்திருந்த ரெட்டைவடம் சங்கிலியைக் காணவில்லை. யாரோ திருடியிருந்தார்கள். யாரோயில்லை. பின்னால் நின்றிருந்த பெண் என உணர்ந்து திருடி திருடி எனச் சப்தமிட்டபோது பின்னால் நின்றிருந்த பெண்ணைக் காணவில்லை.

கோவில் வாசலில் நின்றிருந்த காவலர்கள் விரைந்து வந்து விசாரித்தார்கள். தனசங்கரியால் பதில் சொல்லமுடியவில்லை. நாக்கு உறைந்துவிட்டதைப் போலிருந்தது. திருடிய பெண் தேங்காய் கடைய ஒட்டிய சந்திற்குள் போனதாகச் சொன்னார் ஒரு பெரியவர். காவலர்கள் வேகமாக அந்தப் பக்கம் போனார்கள். வரிசையில் தொடர்ந்து செல்ல முடியாமல் கால்நடுங்க ஒதுங்கி நின்று கொண்டாள் தனசங்கரி.

காவலர்கள் அந்தப் பெண்ணைப் பிடித்துக் கொண்டுவந்திருந்தார்கள். அவளது கையில் தனசங்கரியின் ரெட்டைவடம் செயின் இருந்தது

“இது உன் செயின் தானேம்மா“ என்று கேட்டார் காவலர்

ஆமாம் எனத் தலையாட்டினார்

“கிழே கிடந்துச்சி. எடுத்தேன்“ என்றாள் அந்தப் பெண்

“திருட்டுநாயி.. செவுளை பேத்துருவேன்“.. எனக் காவலர் அவளை மிரட்டினார்.

தனசங்கரியை ஸ்டேஷனுக்கு அழைத்தார் காவலர்.

“சார் என் செயினைக் குடுத்துருங்க.. நான் வீட்டுக்குப் போயிடுறேன்“ என்று கைகூப்பி வணங்கினாள் தனசங்கரி

“அப்படி விட முடியாதும்மா.. கையும் களவுமா பிடிச்சிருக்கோம். நீங்க ஸ்டேஷன் வந்து கம்ப்ளெயிண்ட் குடுத்துட்டு போங்க“

“என் வீட்டுக்காரருக்குத் தெரிஞ்சா திட்டுவார் சார்.. “

“செயினோட இவ ஒடிப்போயிருந்தா.. என்ன ஆகியிருக்கும்.. இவ மேல ஏகப்பட்ட கேஸ் இருக்கு.. நீங்க ஸ்டேஷனுக்கு வந்துருங்க.. தெப்பக்குளம் பக்கத்துல இருக்க ஸ்டேஷன்“ என்றபடி அந்தக் காவலர் பெண்ணை அழைத்துக் கொண்டு சென்றார்.

தனசங்கரி கோவிலுக்குள் போகவில்லை. பக்கத்துப் பூக்கடையில் இருந்த பெண் அவள் கேட்காமலே தனது வாட்டர்பாட்டிலை எடுத்துத் தனசங்கரியிடம் நீட்டி “குடி தாயி` என்றாள். அந்தத் தண்ணீர் அவளது நடுக்கத்தைக் குறைத்தது.

வீடு திரும்பி தனது கணவனிடம் நடந்தவற்றைச் சொல்லிப் புலம்பினாள். இருவருமாகச் சென்று காவல்நிலையத்தில் புகார் அளித்தார்கள். அவர்கள் சென்ற நேரம் ஸ்டேஷனில் அந்தப் பெண்ணைக் காணவில்லை. ஒருவேளை லாக்கப்பில் அடைத்து வைத்திருப்பார்களோ என்னவோ.

அந்த ரெட்டைவடம் செயினைத் திரும்பப் பெறுவதற்கு இரண்டு வருஷமாகியது. அத்தோடு கோவிலுக்குப் போகும் நேரத்தையும் மாற்றிக் கொண்டாள். கோவிலுக்குள் புதியவர்களுடன் பேசத் தயங்கினாள். அடிக்கடி தனது கழுத்தை தடவிப் பார்த்துக் கொண்டாள். அந்த நிகழ்ச்சி ஒரு வடுவைப் போலாகியது.

அத்தனை பேர் மத்தியில் கோவிலில் வைத்து தனது நகையைத் திருடியவள் இன்றைக்கு ஜாலியாகத் தனது கண்முன்னே சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறாளே எனத் தனசங்கரிக்கு ஆதங்கமாக இருந்தது.

இடைவேளையின் போது சபாபதி ஏதாவது வாங்கி வரவா எனத் தனசங்கரியிடம் கேட்டான்

“ஒரே தலைவலியா இருக்கு.. காபி வேணும்“ என்றாள்

காபி வாங்குவதற்காக அவன் வெளியே போன போது அம்மாவும் மகளும் மீண்டும் கோன் ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். தியேட்டர் கேண்டியனில் காபி இல்லை. டீ மட்டும் தானிருந்தது. அதை வாங்கிக் கொண்டு உள்ளே வந்த போது தனசங்கரி குனிந்து அழுது கொண்டிருந்தாள்.

என்ன நடந்தது எனப்புரியாமல் அருகில் போய் “தனா.. என்ன செய்யுது“ எனக்கேட்டான்

“இவ எல்லாம் சந்தோஷமா இருக்கா.. நமக்குத் தான் பிள்ளை இல்லை“ என விசும்பினாள்

என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் “வீட்டுக்கு போவமா“ எனக்கேட்டான்

“இவ முழுசா படம் பாப்பா.. நாம எதுக்குப் பாதிப் படத்துல போகணும். “

“அப்போ இந்த டீயை குடி. “

“அவ வெளியே கோன் ஐஸ் வாங்கியிருப்பாளே“ எனக்கேட்டாள் தனசங்கரி

“ஆமாம்“ எனத் தலையாட்டினான் சபாபதி

“எனக்கு தெரியும். டீ ஆறிப்போயிருக்கு.. எனக்கு வேணாம்“ எனக் கீழே வைத்துவிட்டாள். அதன்பிறகு படம் விடும் வரை தனசங்கரி பேசவேயில்லை. திரையைக் கவனித்தது போலிருந்தாலும் வேறு எதையோ நினைத்துக் கொண்டிருந்தாள். படம்விட்டு வெளியே வந்த போது அம்மாவும் மகளும் ஒரு ஆட்டோவில் ஏறி செல்வதைச் சபாபதி பார்த்துக் கொண்டிருந்தான். அவர்களின் உற்சாகம் குறையவேயில்லை.

ஆற்றாமையுடன் தனசங்கரி சொன்னாள்.

“ நாம தான் இப்படியிருக்கோம் “

எதுவும் சொல்லாமல் சபாபதி தலையை ஆட்டிக் கொண்டான்.

பின்பு வழக்கமாக நடக்கும் பாதையை விலக்கி வெளிச்சம் குறைவாக இருந்த வீதி வழியாக இருவரும் வீடு நோக்கி நடக்கத் துவங்கினார்கள்.

•••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 12, 2026 21:27

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.