நடவுகால உரையாடல் – சக்குபாய்
எழுத்தாளர் அம்பைஆதிவாசிக் குடும்பங்களில் வீட்டிலுள்ள உணவுத் தானியங்கள் தீர்ந்து போய்விட்டால், தங்கள் சிறுமிகளை வேறு வீடுகளுக்குக் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் வேலைக்கு அனுப்புவார்கள்; இதற்குக் கூலியாகத் தானியம் கிடைக்கும். சக்குபாயும் சிறுவயதில் இந்த வேலைக்கு அனுப்பப்பட்டாள். சிறுமியான அவளால் குழந்தையைத் தூக்கக்கூட முடியாது; அவளால் முடிந்ததெல்லாம் தொட்டிலை ஆட்டுவதுதான். ஏன், எதற்கு என்று உணராமலேயே வாழ்க்கையின் பல அனுபவங்களினுள் தள்ளப்பட்டிருக்கிறாள் சக்குபாய். ஆனால் இவற்றிலிருந்து ஒரு போராளியாக சக்குபாய் மீண்டு வந்திருக்கிறார். `கஷ்டகரி சங்கட்டனா’வின் உறுப்பினர் என்ற நிலையில் இன்று அவரால் எதையும் தைரியமாகக் கேள்விக்குள்ளாக்கவும் எல்லாவிதமான சுரண்டல்களையும் எதிர்த்துப் போராடவும் முடிகிறது. தான் தாக்கப்படலாம் என்றோ, சூனியக்காரி என்ற பழி தன்மேல் விழும் என்றோ, சமூகத்திலிருந்து விலக்கிவைக்கப்படலாம் என்றோ சில நேரம் அவருக்கு அச்சம் தோன்றாமலில்லை. என்றாலும், தான் தனித்துப் போராடவில்லை என்று அவர் அறிந்திருப்பதால், போராட்டத்தை இன்னும் தொடர்கிறார். வரலாற்றின் ஒரு பகுதி சக்குபாயின் வாழ்க்கை. நாம் அனைவரும் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று.
முன்னுரை
ஆதிவாசி சமூகத்தவரான சக்குபாய் காவித் தஹானு தாலுகாவிலுள்ள பந்த்கரைச் சேர்ந்தவர். சிறு விவசாயிகளுக்காகவும் நிலமற்ற கூலித்தொழிலாளர்களுக்காகவும் போராடி வரும் கஷ்டகரி சங்கட்டனா (பாட்டாளிகள் சங்கம்) என்ற மக்களமைப்போடு கடந்த பத்தாண்டுகளாகப் பணியாற்றி வருபவர். அவரது கிராமத்தில் `சங்கட்டனா’ உருவாகுவதற்கு சக்குபாய்தான் ஊர் மக்களின் ஆதரவைப் பெற்றுத்தந்தார். கடினமான வாழ்க்கை அவருடையது. ஆனால் அந்த வாழ்க்கை அவரை மன உறுதியுள்ளவராக்கியிருக்கிறது. ஜூலையில் நடக்கவிருந்த வாய்மொழி வரலாற்றுப் பயிலரங்கில் பங்கேற்கும்படி அழைப்பதற்காக நாங்கள் பந்த்கர் சென்றபோது அவர் நடவு வேலையில் மும்முரமாக இருந்தார். முதலில் சிறிது தயங்கிய அவர் ஷிராஸ் பல்ஸாராவும் மீனா தோதடேயும் அவரோடு உரையாடப் போகிறார்கள் என்று சொன்ன பிறகு வருவதற்குச் சம்மதித்தார்.
ஷிராஸ் பல்ஸாரா பல வருடங்களாக கஷ்டகரி சங்கட்டனாவின் செயல்பாடுகளில் தீவிரமாகப் பங்கேற்று வருபவர். ஷிராஸ் மற்றும் கணவர் பிரதீப் இருவரின் பொறுப்பில் வளர்ந்தவர் மீனா தோதடே. பழங்குடியினர் வாழும் பகுதிகளில் கல்வி பெறுவது மிகக் கஷ்டமான விஷயம். ஜில்லா பரிஷத் பள்ளிகள் இருப்பதும் இல்லாமலிருப்பதும் ஒன்றுதான். மேலும் வேலைக்காக வருடத்தில் ஒன்பது மாதங்கள் வழக்கமாக வெளியிடங்களுக்குச் சென்றுவிடுவார்கள் மக்கள். இடையில் மூன்று மாதங்கள் பயிர் செய்வதற்காக ஊரில் வந்து இருப்பார்கள். பழங்குடியினர் நலத்துறையால் திறக்கப்பட்ட ஆஷ்ரம் பள்ளிகள் கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. மீனாவின் தந்தை காலுராம் தோதடே பால்கரில் சோசலிச இயக்கத்தைக் கூட்டியெழுப்பிய மூத்த தலைவர்களில் ஒருவர். அவரது இயக்கம் பூமி சேனா என்றழைக்கப்பட்டது. நிலத்தகராறுகள் மற்றும் விவசாயிகளின் கடன் பிரச்சினைகள் ஆகியவற்றை முன்னெடுத்துப் போராடி வந்தார் அவர். இயக்கத்தில் தன்னை முழுமையாகக் கரைத்துக் கொண்ட அவரால் குழந்தைகளின் படிப்பில் கவனம் காட்ட முடியவில்லை. மீனா ஒரு ஆஷ்ரம் பள்ளியில் கற்றார். அங்கேயே வளர்ந்து வந்த அவரைப் பின்னர் ஷிராஸ் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு கல்வி அளித்து வந்தார்.
சக்குபாய் மீனாவுக்கும் ஷிராஸிற்கும் மிகவும் நெருங்கியவர். பல கல்லூரிகளைச் சேர்ந்த முக்கியமான இருபத்தைந்து மாணவியரும், மாணவரும் கலந்து கொண்ட ஸ்பாரோ பயிலரங்கு 1998 ஜுலை 26ல் நடந்தது. மீனா மற்றும் ஷிராஸ் இவர்களுடன் சக்குபாய் தயக்கமின்றி கலந்துரையாடினார். அவர் அதிகமாகப் பேசுபவரல்ல என்றாலும் தன் வாழ்க்கை, தொழில் பற்றி எந்தத் தடையுமின்றிப் பேசினார். அது ஒரு மழை நாள். அவரைப் பொறுத்த வரையில் நடவு செய்வதற்கு ஏற்ற நாள். இம்மாதிரியான சந்தர்ப்பத்தில் அவர் நடவு செய்ய விரும்புவாரா அல்லது உரையாடுவதற்கு விரும்புவாரா என்று அவரிடம் கேட்டபோது, நடவு செய்வதுதான் பேசுவதைவிட எளிய வேலை என்றார். அன்று மாலை அவர் மிகவும் சோர்வுற்றுக் காணப்பட்டாலும், நடவு செய்ய அருமையான நாள் ஒன்றை எங்களுக்கு மனமுவந்து ஒதுக்கித் தந்ததில் எந்த வருத்தமும் அவர் முகத்தில் தென்படவில்லை.
சக்குபாயின் விவரணை வடிவத்தில் இப்புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சேர்த்துள்ள நாட்டார் கதைகள் அஞ்சலி மான்டேரோ மற்றும் பி. ஜயசங்கர் இணைந்து இயக்கிய கஹாண்கார் – அஹாண்கார் என்ற குறும்படத்திலிருந்து எடுக்கப்பட்டவை.
அக்டோபர் 1998 சி. எஸ். லக்ஷ்மி
***
மஹாதேவனும் கங்காகௌரியும்
மொழிபெயர்ப்பு: அருண்மொழி நங்கை
தங்களைத் தாங்களே உருவாக்கிக் கொண்ட ஆதி தம்பதியினர் மஹாதேவரும் அவரது துணைவியான கங்கா கௌரியும். மஹாதேவன் என்றால் `கடவுள்களுக்கெல்லாம் கட வுள்’ என்று அர்த்தம். அவர்கள் இந்தப் பிரபஞ்சத்தையும் மற்றச் சிறிய கடவுள்களையும் படைத்து அவர்களுக்கு வெவ்வேறு ராச்சியங்களையும் கொடுத்தனர். எல்லாம் சுமுகமாகவே நடந்தது. ஆனால் அவர்களில் சிலர் மஹாதேவரின் அழைப்பை அலட்சியம் செய்து அவருடைய அவைக்குச் செல்லவில்லை. எனவே மஹாதேவர் மிகவும் கோபமடைந்து இந்தப் பிரபஞ்சத்தை நீரில் முழ்கச் செய்தார். சிலர் மட்டும் பிரளயத்தில் எஞ்சினர். புலி (வாக்)யின் குகைக்குள் அடைக்கலம் புகுந்தவர்கள் `வாகட்’ என்ற குடும்பப்பெயரால் அழைக்கப்பட்டனர். கத்தரிக்காய்(வாங்கி)யை பிடித்து மிதந்து கரையேறியவர்கள் `வாங்கட்’ என்று அழைக்கப்பட்டனர். `குராடஸ்’ எனப்படுபவர்கள் மிதக்கும் கோடரி (குராட்)யைப் பிடித்துக் கரையேறியவர்கள். தங்கிவிட்டவர்கள் (தாக்கா) `தாக்கரே’.
***
சக்குபாய்: நான் சுகதம்பா என்ற இடத்திலிருந்து வருகிறேன். அங்குதான் என் பெற்றோர் வசிக்கின்றனர். நாங்கள் எட்டு குழந்தைகள். நான் ரொம்பச் சின்னவளாக, ஐந்தோ ஆறோ அதற்கும் குறைவான வயதில் இருக்கும்போதே, என்னுடைய மூத்த சகோதரிகள் மூவருக்கும் திருமணமாகிவிட்டது.
என்னுடைய தாய் தந்தையர் ஏழை விவசாயிகள். அதனால் அவர்கள் என்னையும் என்னுடைய சகோதரனையும் பிற வீடுகளுக்கு பொராய் வேலை செய்ய அனுப்பி வைத்தனர். பொராய் என்றால் மற்றவர்களின் குழந்தையைக் கவனித்துக் கொள்ளும் நபர் என்று அர்த்தம். நான் தெஹேராவில் உள்ள என்னுடைய சகோதரியின் வீட்டில் குழந்தையைக் கவனித்துக்கொள்ள அனுப்பப்பட்டேன். நான் மிகச் சிறியவளாக இருந்ததால் அவள் குழந்தையைத் தூக்க முடியவில்லை. அதற்காக என் சகோதரியிடம் அடி வாங்கினேன். ஒருநாள் என் பெற்றோர் வீட்டுக்குக் கிளம்பிவிட்டேன். நாள் முழுவதும் நடந்தால்தான் எங்கள் வீட்டுக்குப் போக முடியும். ஆனாலும் நான் நடக்கத் தொடங்கினேன். பாதி நாள் நடந்து பாதி தூரம் வந்தபோது என்னுடைய அக்காளின் கணவன் என்னைப் பிடித்துவிட்டான்.
என் கையைப் பிடித்து திரும்பி வருமாறு வற்புறுத்தினான். நான் மறுத்தேன். என்னை அடித்துத் திரும்பக் கூட்டிச்சென்றான். பிறகு வெகுகாலம் கழித்து நான் என் பெற்றோரிடம் திரும்பினேன்.
நான் திரும்பி வந்தபோது, மழைக்காலம் தொடங்கியிருந்தது. வீட்டிலிருந்த எல்லா தானியங்களையும் என் பெற்றோர் தீர்த்து விட்டிருந்தனர். ஆகவே திரும்பவும் நான் தீபாவளி வரைக்கும் குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் வேலைக்காக இன்னொரு வீட்டிற்கு அனுப்பப்பட்டேன். இதற்காக என் பெற்றோர் இரண்டு அல்லது ஒன்றரை மணங்கு அரிசியைப் பெற்றுக்கொண்டனர். அது அவர்களுக்குத் தீபாவளி வரைக்கும் போதுமானதாக இருந்தது. நான் வேலை பார்த்த வீட்டில் எனக்கு உணவும், தீபாவளிக்குத் துணியும் கிடைத்தன. நான் அப்போதும் ஒரு குழந்தையைத் தூக்க முடியாத அளவு சிறியவளாயிருந்தேன். ஆனால் என்னால் தொட் டிலை ஆட்ட முடிந்தது. அதைச் செய்தேன். தீபாவளி முடிந்ததும் நான் வீடு திரும்பினேன். பிறகு மாடு மேய்க்க அனுப்பப்பட்டேன்.
தலைச் சும்மாடு
வெகுகாலம் முன்பு ஒரு தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். கணவன் காலையில் வயலுக்குச் செல்வான். மனைவி, தானியங்களைக் குத்துவது, குழந்தைகளைக் குளிப்பாட்டிச் சோறூட்டுவது, சமைப்பது, தண்ணீர் எடுப்பது, துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளை செய்து முடிப்பாள். பிறகு கணவனுக்கு மதியச் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வயலுக்குச் சென்று வயல் வேலைகளில் அவனுடன் சேர்ந்துகொள்வாள்.
அவள் கணவன் அவள் எப்போதும் உணவைத் தாமதமாக எடுத்துக்கொண்டு வருகிறாள் என்று குறை கூறுவது வழக்கம். அவள் சலிப்படைந்து “ஒருநாள் என் வேலையைச் செய்; உன் வேலையை நான் செய்கிறேன்” என்றாள். அவனும் சம்மதித்தான். மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து அவள் மக்காச்சோளத்தை பொடித்து மாவாக்கி குழந்தைக்கு ஊட்டிவிட்டு அதையும் தூக்கிக்கொண்டு வயலுக்குச் சென்றாள். அவள் கணவன் மீதி வீட்டுவேலைகளை முடித்த போது மிகவும் தாமதமாகியிருந்தது. துரிதமாக அவன் ஒரு துணியை எடுத்துச் சும்மாடாக்கித் தலையில் வைத்தான். அதன்மீது பாத்திரங்களை அடுக்கிக்கொண்டு கிளம்பினான்.
வழியில் நிறைய மனிதர்களைச் சந்தித்தான். அவன் அவர்களைக் கடக்கும்போது அவர்கள் சிரிப்பை அடக்கிக் கொண்டு சென்றனர். ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்று அவனுக்கு ஒரே வியப்பு. கடைசியாக அவன் ஒரு கிழவியைச் சந்தித்தான். அவள் “மகனே, உன் தலையில் என்ன சுமந்துகொண்டு போகிறாய்?” என்று கேட்டாள். “மதிய உணவுக்கு பாக்ரி (ரொட்டி) கொண்டு போகிறேன்” என்றான் அவன். “அதற்கும் கீழே?” என்று கேட்டாள் அவள். “பருப்புக்கறி” என்றான் அவன். “அதற்கும் கீழே?” என்றாள் அவள். “என்னுடைய சும்மாடு”. “சரி, அதற்கும் கீழே?” என்றாள். தன்னையே கீழ்நோக்கி பார்த்தவனுக்கு ஒரே அதிர்ச்சி. முழு நிர்வாணமாக இருந்தான் அவன். வீட்டு வேலை அவசரத்தில் தன்னுடைய கோவணத் துணியை எடுத்துத் தலைமேல் சும்மாடாக வைத்திருக்கிறான். பிறகு அவன் வயலுக்குப் போய்ச் சேர்ந்தபோது அவன் மனைவி அவனைப் பார்த்துவிட்டு அமைதியாகத் தொடுவானத்தைச் சுட்டிக்காட்டினாள். அங்கே சூரியன் மறைந்து கொண்டிருந்தான்.
சக்குபாய்: பத்து வயதில் திருமணத்தைப் பற்றி எல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. தினமும் மாடுகளை மேய்த்துவந்தேன். ஒரு பெண்மணி பந்த்கரிலிருந்து கட்சிரோலிக்கு தினமும் சென்று தன் மகனுக்கு உணவு கொடுத்துவந்தாள். ஒருநாள் அவள் போகிற வழியில் என் வீட்டுக்கு வந்தாள். என்னைப் பார்த்தாள். பிறகு ஒருநாள் அவள் நான்கைந்து பேர்களுடன் வந்து என்னை அவள் மகனுக்கு மணப்பெண்ணாக நிச்சயித்துவிட்டுச் சென்றாள். என்னுடைய மாமாவும் மாமியும் இத்தனை சிறிய வயதில் எனக்குத் திருமணம் செய்ய வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால் என் தந்தை மிகுதியாகக் குடித்திருந்ததால் அதைக் கேட்கும் நிலையில் இல்லை. எனக்குத் திருமணம் நிச்சயம் ஆனதுகூட எனக்குத் தெரியாது. நான் திருமணம் புரியப்போகும் ஆளையும் நான் பார்த்திருக்கவில்லை.
அவன் என்னைவிட வயதில் ரொம்ப பெரியவன். எத்தனை வயது என்னைவிட அவன் அதிகம் என்றுகூட எனக்குத் தெரியாது. அவனுடைய தங்கைக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி இருந்தாள். அப்போதும் அவன் பள்ளி சென்று கொண்டிருந்தான். அவன் பள்ளிக் கல்வியை முடித்தபிறகு சிறிதுகாலம் மாடுமேய்க்கச் சென்றான். அதன்பிறகு ஒரு பள்ளி ஆசிரியன் ஆனான். அவன் இருபது அல்லது இருபத்தைந்து வயது என்னைவிட பெரியவனாக இருக்கலாம். ஊனமுற்றவனும் கூட. அவனுடைய ஒரு கையும் ஒரு காலும் சற்று குட்டையானவை. என்னை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தார்கள்.
இந்தத் திருமண வாழ்க்கையில் பல வேதனைகள். ஆனால் என்னுடைய மாமியார் தங்கமானவள். அவள் எனக்குத் தலைக்குத் தேய்த்துக் குளிப்பாட்டிவிடுவாள்; என்னுடைய புடவைகளைத் துவைத்துப்போடுவாள்; என்னை அலங்கரிப்பாள். “என் மகனைவிட்டு எங்கேயும் போய்விடாதே” என்று அடிக்கடி சொல்லுவாள். தினமும் அவள் என்னை ஆற்றுக்கு அழைத்துச் சென்று, குளிப்பாட்டிவிடுவாள். சாப்பிடும்போது என் பக்கத்தில் உட்கார்ந்து கொள்வாள். திருமணத்துக்கு வேறு ஓர் அர்த்தமும் இருந்தது. என் கணவனோடு `பேசுவது’. கணவன் என்னுடன் `பேச’ விரும்பும்போது என்னை ஓர் அறையில் போட்டு அடைப்பதும் நான் இணங்க மறுப்பதும் வழக்கமாக இருந்தது. அவன் என்னை அடிப்பான். காலையில் கதவு திறந்ததும் நான் பாய்ந்து வெளியேறுவேன். என்னைவிட மிகவும் வயதில் மூத்த அவன் வற்புறுத்திய அந்த நாட்களில் நான் வயதுக்குக்கூட வந்திருக்கவில்லை.
ஒருநாள் நான் காட்டுக்குப் போய் ஒளிந்து கொண்டேன். என்னுடைய கணவனின் மைத்துனனும், எனக்கு ஒருவிதத்தில் சொந்தக்காரனுமான மேகே, விளக்கை எடுத்துக்கொண்டு என்னைத் தேடி வந்தான். அவன் என்னைக் கண்டுபிடித்தபோது “ ஓடினால் துப்பாக்கியால் உன்னைச் சுட்டு விடுவேன். வீட்டுக்கு வந்து ஒழுங்காக இரு. இல்லாவிடில் கொன்று விடுவேன். உன் அப்பா அம்மாவிடம் எனக்குப் பயமில்லை” என்றான். என்னுடைய பெற்றோரிடமும் என்னால் திரும்பி போக முடியவில்லை. காரணம் அவர்கள் நான் இருக்க வேண்டியது கணவனுடைய வீட்டில்தான் என்றார்கள். நான் ஓடிப்போவதும் திரும்ப அழைத்துவரப்படுவதும் அடிக்கடி நடந்தது.
என்னுடைய மாமியார் இறந்ததும் நிலைமை இன்னும் மோசமாகியது. நான் பெரியவளான அதே வருடம், எனக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. குழந்தை மிகவும் பலவீனமாக இருந்ததால் இறந்துபோயிற்று. என்னுடைய மாமியார் இறந்த பிறகு என்னுடைய பவலானி (என் கணவனின் மூத்த சகோதரனின் மனைவி) என்னை நல்ல வேலை வாங்கிவிட்டு நிறையத் தண்ணீர் சேர்த்த ஆம்பில் (கேழ்வரகுக்கூழ்) கொடுப்பாள். அவர்கள் சப்பாத்தி சாப்பிடும்போது எனக்கு ஆம்பில்தான் கிடைக்கும். நான் அழுவேன். வேறு வழியில்லையாதலால் பொறுத்துக்கொள்வேன். எனக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன : ஒரு மகளும், இரண்டு மகன்களும்.
ஜம், மரணதேவன்
முன்பு ஒரு காலத்தில் ஒரு பிராமணன் தன் மனைவி மகளுடன் வாழ்ந்து வந்தான். அவர்கள் வீட்டோடு இருக்கும் மாப்பிள்ளை (கர்_ஜவாய்) ஒருவன் வேண்டும் என்று விரும்பினர். தரகன் ஒருவனோடு ஓர் ஆதிவாசி மாப்பிள்ளையைப் பார்க்கக் கிளம்பினர். ஏனென்றால் ஆதிவாசிகள் கடின உழைப்புக்குப் பேர்போனவர்கள். இறுதியில் ஓர் ஏழை ஆதிவாசி விதவையின் மகனைக் கண்டுபிடித்து, கல்யாணமும் நடந்தது. அந்த ஆதிவாசி மணமகன் மாமனார், மாமியாரை ஒருபோதும் விட்டுப் போவதில்லை என்று சத்தியம் செய்தான். அதை சத்தியவாக்குபோல வைத்து கொண்டு அவன் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தான். விரைவிலேயே வயதான பிராமணனும் அவன் மனைவியும் தங்கள் மகளிடம் மருமகனின் சோம்பேறித்தனத்தைப் பற்றிக் குறைகூறத் தொடங்கினர். மகள் இதைக் கணவனிடம் தெரிவித்தாள். உடனே அவன் “உன் தந்தையை ஒரு கொல்லனிடம் போய் தச்சனுக்கு வேண்டிய கருவிகளையெல்லாம் வாங்கி வரச் சொல்” என்றான். எல்லா உபகரணங்களோடும் ஆதிவாசி காட்டுக்குள் சென்று ஓர் அழகான, நவீனமான அலமாரி ஒன்றைச் செய்தான். இதே நேரம் மரணத்துக்கு அதிபதியான ஜம்மின் அவையில் இன்னொரு கதை நடந்துகொண்டிருந்தது. கால், வேல் என்ற தன்னுடைய இரு தூதர்களிடமும் அந்த பிராமணனின் ஆயுட்காலம் முடிந்துவிட்டதாக ஜம் கூறினான். கால், வேல் என்ற இரண்டு தூதர்களும் பிராமணனை அவைக்கு அழைத்துவரச் சென்றனர். அப்போது பிராமணன் வீட்டில் இல்லை. மருமகன் அவர்களை எளிதில் மரணதேவனின் தூதர்களெனக் கண்டுகொண்டான். மருமகன் அவர்களிடம் “பிராமணன் காட்டிற்குள் ஒளிந்து கொண்டிருக்கிறான். நான் உங்களை அங்கே அழைத்துப் போகிறேன்” என்றான். தூதர்கள் அவனைப் பின்தொடர்ந்தனர். அங்கு சென்றதும் அவன் அந்த அலமாரியை அவர்களுக்குக் காட்டினான். அதனுள் பிராமணன் ஒளிந்திருப்பதாகக் கூறினான். அவனைப் பிடிப்பதற்கு அலமாரியின் உள்ளே அவர்கள் நுழைந்ததும் மருமகன் இரு தூதர்களையும் உள்ளே வைத்துப் பூட்டிவிட்டான்.
தூதர்களிடமிருந்து எந்தத் தகவலும் வராது போகவே, என்ன நடந்திருக்கும் என்று அறிய ஜம் தானே பூமிக்கு வர முடிவு செய்தான். ஒரு பார்சி மது வியாபாரியாக தன்னை வேடம் மாற்றிக்கொண்டு ஒரு மதுக்கடையை அந்த கிராமத்தில் திறந்தான். அவன் வாடிக்கை பெருகும் பொருட்டு அங்கு மதுவருந்த வருபவர்களுக்கு முதல் கோப்பை மது இலவசம் என்று அறிவித்தான். இது கடையை மிகவும் பிரபலப்படுத்தியதோடல்லாமல் நிறையக் குடிகாரர்களின் உளறல்களும், உரையாடல்களும் காதில் விழ வழி செய்தது. ஆதிவாசியும் அவனது மாமனாரும் அங்கே போய் இலவசமாகக் குடித்தனர். கொஞ்சம் குடித்து முடிந்ததும் அவர்கள் இருவரும் சண்டையிட ஆரம்பித்தனர். மருமகன் அலமாரி ரகசியத்தை உளறிவிட்டான். மது வியாபாரியாக இருந்த ஜம் எல்லாவற்றையும் உற்றுக் கேட்டான். இந்தக் கதையை நம்பாதவன்போல் நடித்தான் ஜம். இறுதியில் ஜம்மை மருமகன் காட்டிற்கு அழைத்துச் சென்றான்.
ஜம் அலமாரியைத் திறந்தான். காலும், வேலும் விடுதலை செய்யப்பட்டனர். “நாம் இந்த இளைஞனின் உயிரை எடுத்துக்கொண்டு போகலாம். இவன் பிராமணனைவிட புத்திசாலியாக இருக்கிறான்” என்று ஜம் சொன்னான். இப்படியாக மது வியாபாரியாக வந்த ஜம் ஆதிவாசியின் மரணத்துக்குக் காரணமானான்.
சக்குபாய்: என்னுடைய மகள் சவிதாவுக்கும் எங்கள் வழக்கப்படி பனிரெண்டு வயதில் திருமணம் நடந்தது. ஆனால் அவளது மாமனார் அவளை மோசமாக நடத்தினார். நான் என் மருமகனிடம் “வேண்டுமானால் உன் தந்தையுடன் தங்கியிரு. என் மகளை என்னுடன் தங்கவைத்து நான் கவனித்துக் கொள்வேன்” என்று சொன்னேன். என் மகளின் மாமனார் அடிக்கடி அவள் சீதனம் எதுவும் கொண்டுவரவில்லை என்று குறை கூறிக்கொண்டிருந்தார். என் மருமகன் எந்த வேலையும் செய்யவில்லை. அவனுக்கு விவசாயம் செய்யவும் தெரியவில்லை. அதனால்தான் `உன் தந்தையுடன் இரு’ என்று சொன்னேன். ஆனால் என் மருமகன் என்னுடன் வந்து தங்குவதற்கு விருப்பமிருப்பதாகத் தெரிவித்தான். எனவே என் மகளும் மருமகனும் என்னுடன் வந்து தங்கினர். விவசாயமே தெரியவில்லை அவனுக்கு. ஆனால் நான் படிப்படியாகச் சொல்லிக்கொடுத்தேன். இப்போது அவனுக்கு எப்படி அறுவடை செய்வது என்று தெரியும். என்னுடைய மகளுக்கு இரண்டு குழந்தைகள்.
நான் என்னுடைய மகன்களை அவர்களின் சிறப்பான எதிர்காலத்துக்காகப் படிக்கவைத்தேன். ஆனால் அவர்கள் நன்றாகப் படிக்கவில்லை. மூத்தமகன் பனிரெண்டாம் வகுப்பிலும் இளையவன் பத்தாம் வகுப்பிலும் தோற்றனர். அவர்கள் எந்த வேலையும் செய்யமாட்டார்கள். கெட்ட சகவாசம் வைத்துக்கொண்டு வீடியோ படங்களைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். நான் ஏதாவது சொன்னால் என்னைத் திட்டுவார்கள். அவர்களுக்கு விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது. என்னுடைய கணவரும் இப்போது வேலை செய்வதில்லை. வேலை செய்யாவிட்டால் அவர்களுக்குச் சோறு போட என்னால் முடியாது என்று அவர்களிடம் சொல்லக்கூட முடியாது. காரணம் நான் நாள் முழுவதும் வயல்வேலைக்குப் போயிருப்பேன். அவர்கள் தாங்கள் விரும்பியதைச் சமைத்து உண்பார்கள். இப்பொழுது என்னுடைய மூத்த மகனுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. என்னுடைய மகள் மட்டும்தான் எனக்கு வயலிலும் மற்ற வேலைகளிலும் உதவுகிறாள். ஏன் மக்கள் ஆண் குழந்தைகளை விரும்புகிறார்கள், பெண் குழந்தைகளைக் கொல்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. மகள்தான் என்றைக்கும் அம்மாவுக்கு உதவுவாள்.
எலி
ஒரு காலத்தில் ஒரு எலி இருந்தது. அதற்கு வாலில் ஒரு முள் குத்திவிட்டது. அது யாரை உதவிக்குக் கூப்பிடலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தது. விறகைத் தலைச்சுமையாகச் சுமந்துசெல்லும் ஒரு பெண்ணை அது பார்த்தது. “சகோதரியே, இந்த முள்ளை எடுத்துவிடு, தயவு செய்து எடுத்துவிடேன்” என்றது எலி.
அவள் அரிவாளால் அதன் வாலைச் சிறிது பிளந்து அந்த முள்ளை எடுக்க முயன்றாள். அந்த அரிவாள் கை தவறி விழுந்து வாலின் நுனியை அறுத்துவிட்டது. எலிக்குக் கோபம் வந்தது. “என்னுடைய வாலைத் திருப்பிக்கொடு அல்லது உன்னுடைய அரிவாளை எனக்குக் கொடு” என்றது. அந்த ஏழைப்பெண் தன் அரிவாளை இழந்தாள். எலி அரிவாளை எடுத்துக்கொண்டு போய்விட்டது. வாலில் முள்ளுடன் இருந்த எலி அரிவாள் உள்ள எலியாக மாறியது.
அரிவாளைச் சுமந்து கொண்டு வந்த எலி கூடை முடைபவர்கள் நிறைந்த ஒரு கிராமத்திற்கு வந்து சேர்ந்தது. அவர்கள் மூங்கிலைத் தங்கள் பற்களால் பிளந்துகொண்டிருந்தனர். “என்னுடைய அரிவாளை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வேலை எளிதாகப் போய்விடும்” என்றது எலி. இந்த உபகாரத்திற்கு அவர்கள் நன்றி சொன்னார்கள். விரைவிலேயே அரிவாள் உடைந்தது. உடனே எலி “என்னுடைய அரிவாளைத் திருப்பித் தாருங்கள் அல்லது உங்கள் கூடைகளைத் தாருங்கள்” என்று நிபந்தனை போட்டது. அவர்களுடைய கூடைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றது. வாலில் முள்ளுடன் இருந்த எலி சில கூடைகள் உள்ள எலியாக மாறியது.
எலியின் அடுத்த விஜயம் குயவர்கள் நிரம்பிய கிராமம். குயவர்கள் களிமண்ணைக் கைகளில் சுமந்து சென்று கொண்டிருந்தனர். “என்னுடைய கூடைகளை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வேலை எளிதாகப் போய்விடும்” என்றது. அவர்களும் நன்றி தெரிவித்தனர். அன்றைய தினம் அவர்கள் நிறைய பானைகள் செய்தனர். விரைவிலேயே கூடைகள் எல்லாம் நைந்துவிட்டன. உடனே எலி “என்னுடைய கூடைகளைத் திருப்பித் தாருங்கள் அல்லது பானைகளைத் தாருங்கள்” என்றது. இப்படியாக வாலில் முள்ளுடன் இருந்த எலி பானைகள் உள்ள எலியாக ஆகியது.
அடுத்தக் கிராமத்தில் மக்கள் காய்கறிகள் பயிரிட்டனர். செடிகளுக்கு அவர்கள் நீர் இறைக்கச் சிறிய பாத்திரங்களைப் பயன்படுத்தினர். நிறைய பானைகளுடைய இந்த எலி “என்னுடைய பானைகளை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வேலை எளிதாகப் போய்விடும்” என்றது. அவர்கள் உதவிக்கு நன்றி தெரிவித்தனர். பானைகள் உடைந்தன. “என்னுடைய பானைகளைத் திருப்பித் தாருங்கள் அல்லது உங்களுடைய காய்கறிகளைத் தாருங்கள்” என்றது எலி. இப்படியாக வாலில் முள்ளுடன் இருந்த எலி காய்கறிகள் உள்ள எலியாக மாறியது.
பிறகு எலி பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மாடு மேய்ப்பவர்களின் கிராமத்திற்கு வந்தது. அவர்களிடம் “என்னுடைய காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள். நல்ல விருந்து சாப்பிடுங்கள்” என்றது எலி. விருந்து முடிந்தவுடன் “என்னுடைய காய்கறிகளைத் திருப்பித் தாருங்கள் அல்லது உங்களுடைய மாட்டைத் தாருங்கள்” என்றது. வாலில் முள்ளுடன் இருந்த எலி ஒரு காளை மாட்டுக்குச் சொந்தக்காரனான எலியாக ஆனது.
எலி காளைமாட்டுடன் வரும் வழியில் ஆதிவாசி விவசாயி ஒருவனைப் பார்த்தது. அவனிடம் இளைத்த ஒரேயொரு காளை மட்டுமே இருந்தது. உழும்போது இன்னொரு நுகத்தில் மாட்ட காளையில்லாததால் தன் மனைவியை மற்ற முனையில் கட்டியிருந்தான். அதை பார்த்த எலி “இப்படியா உன்னுடைய நிலத்தை உழுகிறாய்? என்னுடைய காளையை எடுத்துக் கொள். உன்னுடைய வேலை எளிதாகும்” என்றது. விவசாயி எலிக்கு நன்றி சொன்னான். ஏற்கனவே பஞ்சத்தில் அடிபட்டிருந்த எலியின் காளை சீக்கிரமே இறந்துபோயிற்று. எலியும் வழக்கம்போலவே “என்னுடைய காளையைத் திருப்பித் தா அல்லது உன் மனைவியைத் தா” என்று சொல்லி அவனுடைய மனைவியைப் பெற்றது.
இ படியாக வாலில் முள்ளுடன், அரிவாளுடன், கூடைகளுடன், நிறைய பானைகளுடன், நிறைய காய்கறிகளுடன், பெரிய காளைமாட்டுடன் இருந்த எலி கடைசியில் ஆதிவாசியின் மனைவியை உரிமையாக்கிக்கொண்ட எலியாக மாறியது.
சக்குபாய்: `கஷ்டகரிசங்கட்டனா’ என்னுடைய சொந்த ஊரான சுகதம்பாவில் பழங்குடியினருக்காக சேவை செய்து வந்தது. என்னுடைய சகோதரனும் மற்ற உறவினர்களும் அதன் உறுப்பினர்களாக இருந்தார்கள். என்னையும் அதில் பங்கெடுக்கச் சொன்னார்கள். ஆனால் என் கணவன் அரசு ஊழியன், ஆசிரியன். நான் சங்கட்டனா நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தான் வேலையை இழக்க நேரிடும் என்று பயந்தான். அதனால் அவன் என்னைச் சேர அனுமதிக்கவில்லை.
பந்த்கரில் ஓர் ஆள் இருந்தான். அவன் வனத்துறைக்குச் சொந்தமான ஓரிடத்தில் வீடு கட்டியதால் அவர்கள் அவனுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர். அவன் என்னிடம் வந்து “நாம் சுகதம்பாவிற்குப் போய் சங்கட்டனா ஆட்களிடம் பேசிப் பார்க்கலாம்” என்று சொன்னான். அங்கிருந்த சங்கட்டனாவின் உறுப்பினர்கள் சங்கட்டனாவை அவரவர் சொந்தக் கிராமத்தில் உருவாக்குவதே சிறந்தது என்று சொன்னார்கள். நாங்களும் ஒத்துக்கொண்டோம். பிஜுர்பாடாவில் ஆறு நாட்கள் முகாம் ஒன்றிற்கு காலுராம்பாவும், பிரதீப்பாவும் ஏற்பாடு செய்தார்கள். இந்த முகாமில் என்ன நிகழ்ந்தது என்று சரியாக எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் சங்கட்டனா எங்கள் கிராமம் ஒன்றில் உருவானது. வனத்துறை ஊழியர்கள், காவல் நிலையம் ஆகிய இரண்டுக்கும் எதிராக நாங்கள் நடத்திய போராட்டங்கள் எனக்கு நன்றாக நினைவில் உள்ளன.
எங்களுடைய சாதியில் பெண்களுக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளன. சில ஆண்கள் இருதாரமுடையவர்கள். ஆண் உயிருடன் இருக்கும்வரை எல்லாம் சரியாக இருக்கும். அவன் இறந்த கணமே பெண்கள் ஒருவரோடொருவர் சண்டைபோட ஆரம்பித்துவிடுவார்கள். இந்த மாதிரியான திருமணங்களைத் தடுக்க நாங்கள் போராடினோம். இரண்டு ஆண்களை இரண்டாம் திருமணம் வேண்டாம் என்று கூறி இணங்க வைத்தோம். இன்னும் மூன்று ஆண்கள் எங்களை மீறி திருமணம் புரிந்துகொண்டார்கள். அவர்கள் என் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். எல்லா ஆண்களும் நாங்கள் சொல்வதைச் செவிமடுக்கவில்லை. “நீங்கள் ஒன்றும் எங்களுக்குச் சோறு போடவில்லை” என்பார்கள் சிலநேரம்.
பந்த்கரில் ஒருவன் இருந்தான். திருமணமாகி ஐந்து வருடம் கழிந்தவுடன் அவன் தன் மனைவி சவிதாவிடம் “உன்னால் ஒரு குழந்தையைப் பெற்றுத் தர முடியவில்லை. நான் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன்” என்று சொல்ல ஆரம்பித்தான். இருவருமே மருத்துவமனைக்குப் போய்ப் பார்க்கலாம் என்று சொல்லிப் பார்த்தாள் அவள். ஆனால் அவள் கணவன் அவளால் கருத்தரிக்க முடியாது என்றே சொல்லி வந்தான். உண்மையில் அவன் இன்னொரு பெண்ணைப் பார்த்து வைத்திருந்தான். ஒருநாள் அவன் போய் அந்த புதிய மணப்பெண்ணைத் தன்னோடு கூட்டி வந்தான். எங்களுடைய கொங்கணி சாதியில் ஒரு வழக்கமுண்டு. புதிதாகத் திருமணமாகி வரும் பெண் கணவன் வீடு புகும்போது முதல் மனைவி ஆரத்தி எடுத்து வரவேற்க வேண்டும்.
சவிதா உண்மையில் நிறையத் துன்பப்பட்டாள். நாங்கள் அவள் கணவனிடம் வீட்டிலும் நிலத்திலும் அவளுக்குப் பங்கு கேட்டோம். அவன் “உங்களுக்கு என்ன ஆயிற்று? இதில் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள்? என்னுடைய வாழ்க்கையில் குறுக்கிடாதீர்கள். நான் இரண்டு என்ன, பத்து பெண்களைக் கூடத் திருமணம் செய்து கொள்வேன்” என்றான். சவிதா அவனுடனேயே தங்கினாள். அவளுடைய வீட்டிலிருந்து எந்த ஆதரவும் இல்லை. ஒருமுறை அவன் அவளை அடித்தான். அவள் கீழே விழ மண்டை உடைந்து ரத்தம் பெருக ஆரம்பித்தது. ஆனாலும் அவள் அவனை விட்டுப் போக முடியவில்லை. என்னைப் போலவே அவளுக்கும் அவள் சகோதரனிடமிருந்து எந்த உதவியும் இல்லை. எனவே அவள் அவனுடைய அடிகளையெல்லாம் பொறுத்துக்கொண்டாள். அவள் கணவன் சங்கட்டனாவில் உறுப்பினராக இருந்தான். இறுதியில் அவன் இயக்கத்திலிருந்து ஒதுங்கிக்கொண்டான்.
நியாயவிலைக் கடை ஒன்றை வைத்திருந்தான் ஒருவன். வியாபாரத்தின் போது அவனுக்கு ஒரு பெண்ணிடம் தொடர்பு ஏற்பட்டது. அவள் கருவுற்றாள். பிறகு அவன் அவளை வீட்டுக்கு அழைத்து வந்தான். இதற்கு முன்னால் பலமுறை அவன் முதல் மனைவி சுனிதாவிடம் அவளால் கருத்தரிக்க இயலாது என்று கூறியிருக்கிறான். அவள் மருத்துவமனைக்குப் போக வேண்டும் என்று யோசனை கூறிய போதெல்லாம் அவன் அவளைக் கிராமத்தில் உள்ள நாட்டுவைத்தியனிடம் கூட்டிப் போவான். பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் அவள் வயிற்றில் சூடு போட்டான் அந்த வைத்தியன். கொப்பளம் கட்டிச் சீழ் பிடித்தால் அவள் உடம்பிலுள்ள கெடுதல் எல்லாம் வெளியேறிவிடும் என்றும் சொன்னான். அதை நாங்கள் சூட்டுத் தழும்பு (டாம்ப் ) என்போம். சுனிதாவுக்கு அதுபோல் பதினாறு தழும்புகள் வயிற்றின் மேல் பகுதியில் இருந்தன. சுனிதா அதைத் தாங்கிக்கொண்டாள். அவளுடைய தினசரி வேலைகளையும் அவள் இந்தப் புண்களுடனேயே கவனிக்க வேண்டியிருந்தது. இடுப்பில் சேலையைக் கூடக் கட்டமுடியாது அவளுக்கு. அதனால் மார்பில் பாவாடையைக் கட்டிக்கொண்டு வேலை செய்வாள். அவன் இன்னொரு பெண்ணைக் கூட்டி வந்தபோது அவள் தன் பெற்றோரிடம் போய்விட்டாள். ஆனால் அவன் அவளைத் திரும்ப அழைத்து வந்தான்.
சுனிதா திரும்பி வந்தபோது, நாங்கள் அவள் கணவனுக்கு எதிராக செக்ஷன் 498 அ _ வின் கீழ் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தோம். அவனுக்கெதிராகப் புகார் கொடுத்ததால் அவள் அவனுடன் தங்கக் கூடாது என்று ஊர்மக்கள் சொன்னார்கள். ஆனால் அவள் பெற்றோர் அவளைத் திரும்ப அழைக்க மறுத்துவிட்டதால் அவள் அவனுடனே தங்கவேண்டியிருந்தது.
சங்கட்டனாவின் மற்றப் போராட்டங்களில் நானும் பங்கெடுத்தேன். முக்கியப் போராட்டம் நிலம் குறித்துத்தான். வனப் பகுதியில் உள்ள நிலங்களை எங்களில் சிலர் விவசாயம் செய்துவந்தனர். ஆனால் அது எங்களுக்குச் சொந்தமில்லை என்று கூறப்பட்டது. நாங்கள் கையில் கல்லெடுத்துக்கொண்டு வன அதிகாரிகளை அடித்து விரட்டுவோம்.
ஷிராஸ் : இவ்வனப் பகுதி முன்பு தரிசுநிலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதிக உணவு உற்பத்தி இயக்கத்தின்போது அவர்கள் அந்நிலங்களில் விவசாயம் செய்து வந்தனர். பிறகு வனத்துறை அவர்களை அந்நிலங்களிலிருந்து கிளப்ப விரும்பியது. ஏற்கனவே அவர்கள் கணிசமான உழைப்பைச் செலுத்தி வரப்புகள் அமைத்து நிலங்களைப் பண்படுத்தியிருந்தனர். 1978 இல் மகாராஷ்டிர அரசு பிறப்பித்த உத்தரவின்படி 1972-1978 கால அளவில் இந்நிலங்களை விவசாயம் செய்தவர்களுக்கு நில உரிமைப் பட்டா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இது நடைபெறவில்லை. நில அளவை நடத்தப்படவோ ப
அருண்மொழி நங்கை's Blog
- அருண்மொழி நங்கை's profile
- 4 followers

