நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு – கடிதங்கள்

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் கடிதம்

வணக்கம் அருண்மொழி,

உங்கள் ’நிலத்தினும் பெரிதே’ கட்டுரையை படித்தேன். நான் தொடங்கும் போது ஏழு, எட்டு பக்கமிருக்கும் என நினைத்தேன். என்னால் யோசிக்கவே முடியவில்லை. அறுபத்தி மூன்று பக்கம் எழுதியிருக்கிறீர்கள். அதனை தொடங்கிய பிறகு கீழே வைக்க முடியவில்லை. அப்படியே ஒரே இடத்திலிருந்து அதனைப் படித்து முடித்துவிட்டு தான் அடுத்த வேலை பார்த்தேன். நீங்கள் இதனையே பிடித்துக் கொள்ளுங்கள், அருமையாக இருந்தது, அற்புதமாக இருந்தது. இந்த எழுத்தை தான் நீங்கள் பிடித்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு நல்ல வடிவாக, நல்ல லாவகமாக வருகிறது.

நீங்கள் ஆரம்பித்த விதம், ஆற்றூர் ரவிவர்மாவிடம் போனது அதில் தொடங்கி அதிலிருந்து உங்கள் கல்லூரி வாழ்க்கைக்குள் செல்கிறது. 1990 ஜூன் அதிலிருந்து உங்கள் கல்யாணம் வரை சிறப்பாக சொல்லியிருந்தீர்கள். எழுத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் இடையிடையே நீங்கள் சொல்வது போலிஸ்காரர்கள் கடிதங்களை எடுத்து சென்றுவிட்டார்கள் எனச் சொன்னதும் உங்களது கடிதங்கள் அவங்க கையில கிடைக்க போகுது என நீங்கள் பதறும் இடம் நன்றாக வந்திருக்கிறது. அணில் பாய்ந்த போது இருவருக்குமான நெருக்கம், நீங்க வடநாடு போன போது என எல்லா இடங்களும் நன்றாக வந்திருக்கிறது.  இதே மாதிரி எழுதுங்கள்.

You have got it. இனி உங்களுக்கு ஒருவித பிரச்சனையும் இல்ல. You are a Senior Writer. உங்கள் எழுத்து அவ்வளவு முதிர்ச்சியாக இருந்தது. இதில் முக்கியமான விஷயமென்றால் சுவாரஸ்யம், எடுத்து படிக்கத் தொடங்கின உடனே கடைசி வரைக்கும் உங்கள் எழுத்துக் கொண்டு போறதுயிருக்கில்ல அது ரொம்ப முக்கியம். தொடர்ந்து செய்யுங்கள். பெரிய வாழ்த்துக்கள். அவரது பிறந்தநாள் பரிசாக இதை கொடுங்கள். பெரிய சந்தோஷமாக இருக்கு, நல்லது. இதே போல் எழுதுங்கள். வணக்கம்.

உங்கள் காதல் கதை உலகையே சுற்றிவருகிறது. சுனாமி அலையாக மற்ற எல்லாவற்றையும் அடித்துவிட்டது.

அ. முத்துலிங்கம்,

டொராண்டோ

***

பெருநியதி என்னிடம் மிகுந்த கருணையோடிருந்தது, கருணையோடிருக்கிறது, கருணையோடிருக்கும். ஆம், அது அவ்வாறேயிருக்கும். அது அவ்வாறே இருக்க வேண்டும், அருணா. இருக்கும்.

படித்து முடித்தவுடன் மனதில் ஒரு இனம் புரியாத அமைதி.

வெகு நாட்களுக்குப் பின் இப்படியொரு காதல் கதையை வாசிக்கிறேன்.

நன்றி.

இனி எல்லோரும் பனி உருகுவதில்லையை மறந்துவிட்டு, இந்தக் கதையை பற்றிக் கொள்வார்கள்.

எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன்,

கோவை

***

கட்டுரையைப் படித்தேன். சிறப்பாக உள்ளது. தொட்டதையெல்லாம் பொன்னாக்கும் மாயஜாலம் உங்கள் விரல்களுக்கு உண்டு போலும். அங்கதம் என்கிற நவரத்தினங்களை பதித்து கட்டுரையை மேலும் அழகூட்டியுள்ளீர்கள். வாழ்த்துகள்.

உங்கள் கட்டுரை தொடர் இரண்டு படித்தேன். போகிற போக்கைப் பார்த்தால் பனி உருகுவதில்லை நூலை விஞ்சி விடும் போல தெரிகிறது இந்தக் கட்டுரைத் தொடர். நன்றி. வாழ்த்துகள்.

அரிய படங்கள் கட்டுரைக்கு வலு சேர்க்கின்றன. உங்கள் இருவரையும் குற்றாலம் பட்டறையில் தான் முதலில் பார்த்தேன். அப்போது அஜி நான்கைந்து மாத கைக்குழந்தை. நீங்கள் இப்போது பகிரும் படங்கள் அதற்கு முந்தியவை.

ஒரு வரியைக் கூட உதறியெடுக்க முடியாது. அத்தனை துல்லியம். உங்கள் உரையாடலை போல அத்தனை வேகம். உங்களால் சிறந்த பயணக்கட்டுரையையும் எழுத முடியும். இன்று நீங்கள் ஆதர்ச தம்பதிகள் தான். நீங்கள் இனி எழுத்தை நிறுத்த முடியாது. அந்த நிர்பந்தத்தற்கு உள்ளாகி விட்டீர்கள். வாழ்த்துகள். ஜெயமோகனிடம் சஷ்டி பூர்த்தி வாழ்த்துகளைக் கூறுங்கள். அவர் பல்வேறு பணிகளில் இருப்பதால் அழைக்கவில்லை.

நிர்மால்யா,

ஊட்டி

***

மிக உணர்ச்சிகரமாக அன்று நடந்ததை இன்று போல் ஆற்றொழுக்காய் சொல்ல முடிந்த கட்டுரை.இன்றும் அந்தச் சுடர் தொடர்ந்து மேலும் மேலும் பிரகாசித்து எரிவதை சொற்களின் மூலம் கடத்த முடிந்திருக்கிறது.

எழுத்தாளர் போகன்சங்கர்

***

ஜெயமோகனின் உடல்மொழியைத் துல்லியமாக அறிந்தவன், நான். (அருண்மொழிக்கு அடுத்துதான்) இந்த எழுத்தில் ஜெயமோகனை நான் பார்த்தேன். அருண்மொழியையும்.. நல்ல எழுத்தின் வெற்றி இதுதான்.. என்னைப் பொருத்தவரை மோகன் கலப்பில்லா அசடு.. எழுத்தாளர் ஜெயமோகனைச் சொல்லவில்லை.. அவர் வேறு ஆள்.. எனக்குத் தெரிந்த மோகனைச் சொல்கிறேன். ஆனால் அருண்மொழியைக் காதலித்த காலத்தில் மோகன் இத்தனை ஸ்மார்ட்டாக இருந்திருக்கிறார் என்பதை நம்பமுடியவில்லை. புன்னகையுடனேதான் படித்தேன். இன்னும் எழுதுங்கள்.. எழுதுவீர்கள்..

எழுத்தாளர் சுகா

***

காட்சிப் படுத்துதலில் ஒரு தேர்ந்த புனைவுக்கு ஈடாக நிற்கிறது. ஒரு மாபெரும் கலைஞனின் காதல் வாழ்க்கை அவ்வளவு அழகாக எழுதப்பட்டுள்ளது. வாசிக்க வாசிக்க அப்படியே இழுத்துக்கொண்டுபோய் கட்டுரைக்கு உள்ளே செருகிவிட்டது.

ஒரு நல்ல குறுநாவல் போல விறுவிறுப்பாக போகிறது. புனைவுக்கு மிக நெருக்கமான படைப்பு. இதனை வாசிக்கும்போது வீட்டம்மணியிடமிருந்து கொஞ்சம் இடையூறு உண்டானது. எனக்குக் கோபம் வந்தது. ஒரே மூச்சில் வாசிக்கக்கூடிய வசீகரம் நிறைந்த ஈர்ப்பான எழுத்து நடை.

ஜெயமோகனின் இளவயது துள்ளல் நேர்த்தியாகப் பதிவாகியிருக்கிறது. காதல் மனங்களின் அலைக்கழிப்பு கோர்வையாக வந்திருக்கிறது. உங்களின் அந்தப் பரபரப்பான இளவயதின் ஒரு துண்டு வாழ்க்கையை இலக்கியமாக்கியிருக்கிறீர்கள் திருமதி அருணா. சுவாரஸ்யம் எந்த இடத்திலும் குறையவில்லை. awesome.

எழுத்தாளர் கோ. புண்ணியவான்

***

மேடம்,

தந்தி கொடுக்கும் இடம் வந்தவுடனேயே இது ஒரு வாழ்வனுபவ கட்டுரை அல்ல என்றாகியது. சம்பவங்கள் அதன் போக்கில் எடுக்கும் ரூபங்கள் நமக்கு ஆச்சர்யம் அளிப்பவை, இவையே நம் வெற்று வாழ்க்கையை ருசிமிக்கதாக்குகிறது. தந்தி கொடுக்கும் யோசனை என்பது அக்கணம் தோன்றும் வரை நீங்களே எண்ணி இராதது. ஒரு பெரும் கலைஞன் இன்னும் கூடுதல் இன்னும் கூடுதல் என வாழ்வை முடுக்கி அந்த விசையை உங்களுக்கு அளிக்கிறான். ஒரு ஓட்ட வீராங்கனை கோட்டு முனையில் தயார் நிலையில் நிற்பது போல நின்று இருந்துள்ளீர்கள். ஜெயமோகன் எழுதிய முதல் காதல் கடிதம் ஒரு துப்பாக்கி இழுப்பு, வெடிச் சத்தம் கேட்டது தான் தாமதம் அடுத்து நிகழ்ந்தது மின்னல் வேக ஓட்டம். இன்றுவரை தொடர் கம்பை கைமாற்றி கைமாற்றி ஓடிக்கொண்டு இருக்கிறீர்கள்.

“நிலத்தினும் பெரிதே..” எதிர்பாரா திருப்பங்கள் நிறைந்த திரைப்படம் போல இருந்தது. நான் சிறு வயதில் மெல்லிய மின்சாரம் உமிழும் வயரை நுனி நாவால் தொடுவேன், உப்புக் கரிக்கும். சிறு விதிர்ப்பு தரும் திகில் எனக்குப் பிடிக்கும். நீங்கள் உங்கள் தம்பியிடம் தர்மபுரி, ஜெயமோகன் என சில சொற்களை கசிய விடுதல் அவ்வாறு தான். காதலின் உச்சம் மரணத்தின் வெகு அருகே நிற்கும் அனுபவம். ஒரு அடி பிறன்றால் மரணம் என்கிற விளிம்பில் நின்று விளையாடும் போதை அது. பின்னர் ஒவ்வொரு நாளும் உங்கள் தம்பி உங்களை காட்டிக்கொடுக்கும் தருணத்தை பயந்தே நாளைத் தள்ள வேண்டும். ஒரு உயர் கட்டிடத்தின் விளிம்பில் ஒற்றைக் கால் நிற்பு. இந்த உச்ச கணங்களை வெகு சாதாரணமாக ஆனால் வெகு அழுத்தமாக விவரித்து இருந்தீர்கள். ஒரு மௌனமான கூர்வாள் போல குத்திட்டு நிற்கிறது அது.

கண்ணை மூடிக்கொண்டு தலை கீழ் பக்கத்தில் விரல் தொடுதல் தெய்வத்தின் பகடை வீச்சு, விழுந்தது முழு பனிரெண்டு. இது போன்ற ஒரு காதலின் துவக்கத்தை நேரில் பார்த்தால் கூட ஒரு நாடகம் என்பேன். இடியட் டில் மிஷ்கின் தன் காதலியை பார்ப்பதற்கு முன் அவள் ஓவியத்தைப் பார்ப்பது போல. காதல் தன் எண்ணிலா கரங்கள் அனைத்தையும் கோர்த்து உங்கள் இருவரையும் தழுவிக் கொண்டுவிட்டது.

உணர்ச்சி பூர்வமாக எழுந்த கட்டுரை வளர்ந்து வளர்ந்து திடீரென ஒரு எதார்த்த நடைக்கு சென்றது ஒரு நிபுணனின் ஓவியத் தீற்று. ராஜீவ்காந்தி கொல்லப்படுத்தல், திருட்டு தனமாக வெளியேறுதல், சேலம் தர்மபுரி, திருமணம் பின் சமாதானம் எல்லாமே துல்லிய விவரணையுடன் மிக மெது நடையில் செல்கிறது. இதைப் படிக்கும்போது நம் நிஜ வாழ்விலும் மாய எதார்த்தம், மீ எதார்த்தம், இயல்புவாதம் என புனைவின் அனைத்து உத்திகளும் இடம்பெற்று இருக்கிறது என முதல் முறை உணர்கிறேன். இவையெல்லாம் இதுபோன்ற வாழ்வோட்டத்தில் இருந்து தான் பிறந்து இருக்கிறது.

இது நாள் வரை தன் வாழ்வின் இந்தப் பகுதிகளை ஜெயமோகன் எழுதவில்லை
“சுனைவாய்ச் சிறுநீரை எய்தா.. பிணை மான்” என நின்றுவிட்டார். எழுதினாலும் இந்த வண்ண ராட்டினம் இதே விசையில் சுழன்று இருக்குமா என உறுதிபட கூற இயலாது.

இவ்வளவு ஆண்டுகள் சுனையில் அருந்தியது ஒருவர் மற்றொருவரை.

கிருஷ்ணன்,
ஈரோடு.

***

Just finished reading. தம்பி திரும்ப வந்தானா சொல்லலையே. Art of loving author and the other person – இந்த details உங்க intelligence ஐ பறை சாற்றுது. ப்ச் எல்லா கடிதமும் வாரிட்டு போயிட்டாங்க…. உயிர் பிடுங்கி போன மாதிரி படிக்கறதுக்கே வலிக்குது இன்னும் பல நூறாண்டுகள் நீங்க மகிழ்ந்திருக்க காரணங்கள் பல பெருகட்டும் அன்பு😍😘.

அந்த பஸ் ஸ்டாண்ட் மிஸ் ஆகி அவர் பரிதவிச்சது ரொம்ப பாவம் மழை வேற … பஸ்சும் சீக்கிரம் வரவே…. சரி எப்படியோ எல்லாம் சுபம். Chain போட்டுட்டு வராதே சொன்ன அவரும் அதக் கழட்டி வச்சா சந்தேகம் வரும்னு நீங்க போட்டுட்டு வந்ததும். அந்த நெடும்ம்ம் பயணம். அவர் உங்க அப்பாவுக்கு பொறுப்பா கடிதம் எழுதினார் பாருங்க ❤😍

பாத்திமா பாபு

***

Amma. Just finished reading.

Brilliant, powerful, moving. You have exceeded appa in this article.

Had tears in many places, had laughs. I saw myself in both of you.

I’m blessed to born of such love.😢😢

அஜிதன்

***

படிச்சாச்சு. பெரும் காதல் நாவலை படித்த உணர்வு

அற்புதம்

💐 💐 💐

செங்கதிர்.

***

மேற்பார்வைக்கு அருணா, வெகுளியாக, சிறுமியாக, எதையும் தீர யோசித்து முடிவெடுக்கும் நபராக இல்லாதவராக தோன்றினாலும் அவரது உள்ளுணர்வை நம்பி அதன் வழியில் செயல்பட்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. பெரும்பாலோனார்க்கு அந்த வயதில் உள்ளுணர்வைப் பற்றிய சிறு அறிதல் கூட இருக்காது.
அந்த உள்ளுணர்வு தவறாக இருக்க வாய்ப்பு குறைவு. ஏனெனில் காதல் வாசிப்பை, எழுத்தை அடிப்படையாக வைத்தே பெருந்தேனாக பொங்கியிருக்கிறது.
மிகப்பொருத்தமான நெல்லிக்கனியாக ஜெவும் அருகில் வந்தமர்ந்து, ஒரு பக்கம்,இளம் வயதிற்குரிய காதலுக்குரிய உணர்ச்சி தீவிரங்களுடன் இருந்தாலும் இன்னொரு பக்கம் மிகப்பொறுப்பாக திருமண வாழ்வினைப்பற்றிய மிகத்தெளிவுடனும் இருந்திருக்கிறார்.
இன்னொரு முறை அல்லது எத்தனை முறை சாக்கை உதறிக்கட்டினாலும் இவ்விரு நெல்லிக்கனிகளுமே எப்படியாவது அருகில் அமர்ந்துவிடுவார்கள் என்றே தோன்றுகிறது!

எழுத்தாளர் சிவா கிருஷ்ணமூர்த்தி

***

ஜெ-யின் வாசகர் ஒருவர் , மருத்துவர், உங்கள் காதல் சொட்டும் கட்டுரைகளை வாசித்துவிட்டு எனக்கு அனுப்பிய குறுஞ்செய்தி. //நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு – அருண்மொழிநங்கை படிக்க ஆரம்பித்து அலைபேசியை கீழே வைக்க இயலவில்லை. காதலே ஒரு வரம், அதிலும் ஆசிர்வதிக்கப்பட்ட காதல். ஆசான் அவதாரமான கதை. ஜெவின் வெற்றியின் ரகசியத்தை கண்டுகொண்டோம் இன்று 🙏//

* நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு – 1 * ஜெ -யின் எழுத்தின் மூலமே உங்களை நான் அறிவேன். எனக்குத் தெரிந்த அருண்மொழி அந்தச் சங்கப் பாடல்களில் தொடங்குவார். பனி உருகுவதில்லை மூலம் உங்களின் சிறு பிராயத்தையும் தெரிந்துகொண்டேன். இதைவிடச் சிறந்த காதல் கதை இனி இவ்வுலகில் இல்லை. காதல் என்றால் கத்தரிக்காய்தான் என பதின்மவயதிலேயே ஞானம் பெற்றவன் நான். அதை உடைத்த நான்கு ஐந்து ஜோடிகளில் நீங்கள் உண்டு.

வாழ்க பல்லாண்டு!

உங்கள் கட்டுரையை வாசித்துவிட்டு எங்கள் மகள் சுபாங்கி ( niece) எழுதியதை அனுப்புகிறேன்.

A too good one daddy ! And this is a must read for youngsters today . I get scared seeing many of my friends and classmates getting into toxic relationships and end up depressed and lost . If everyone of 2k generation could read this , we would know what love actually is ! Most of the people of my age I see around me get lost in colour , money which weren’t at all a point of serious consideration in this beautiful life story ! I could witness falling rising in love . More than that I could feel the magic of friendship !

உங்கள் இருவரின் உரையாடலில் வாய்விட்டுச் சிரித்தேன். தம்பி காணாமல் போனபோது, என் சகோதரிகள் என்னை எப்படிப் பார்த்துக்கொள்வார்கள் என்று தெரியும். ஆதலால், சகோதரியின் அன்பில் நெகிழ்ந்தேன். நான் தம்பியாக மாறிக்கொண்டேன் (வயதில் நான் உங்களுக்கு அண்ணன்தான்).

இப்படியே போன கதை சரித்திரக்கதையாவது உச்சம். நான் இந்தக் காதல் கதையை மட்டும் பிரசுரம் செய்யும் உரிமையை வாங்கிகொள்ளப்போகிறேன் 😄 அவ்வளவு அழகாக சொல்கிறீர்கள். காதலர்கள் கொஞ்சுவதல்லாமால், அரசியலும், குடும்ப விஷயமும் பேசுவார்கள் எனும் பொருளில் நான் காதல் கவிதைகள் எழுதிய காலம் உண்டு. நீங்கள் அதன் உதாரண புருஷர்கள். நான் என் சகோதரியின் காதலை நானாக கண்டுபிடித்து, இரு வீட்டாரிடமும் பேசி கல்யாணம் செய்து வைத்தேன். அப்பொழுது என் வயது 23. அக்காக்கள் தம்பிகளை ஏமாற்ற முடியாது. 😀 இதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வது என் பொறுப்பு. தயவு செய்து வேறு யாருக்கும் அந்த உரிமையை கொடுக்காதீர்கள்.

ஜெ-யின் காதலை, ஞானத்தை, கோபத்தை, சமுதாய அக்கறையை உங்கள் பார்வையில் வாசிக்க நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். எல்லோரையும் பற்றி அவர் எழுத, அவரை சரியாக கணித்து சொல்ல ஓர் ஆளுமை தேவை. இந்தக் கட்டுரை காதலாக மட்டுமல்லாமல், இன்னொரு ஆளுமையை உலகுக்கு எடுத்து வைக்கும் கட்டுரையாக சரித்திரமாகிறது.

இன்று முழுக்க தம்பியாக நீங்கள் அக்காவாக, நான் கிண்டல் செய்யப்போகிறேன். கவலையாகவும் உணர்கிறேன். என்னடா இந்தப் பையன் விடுதலைப் புலிகள் பற்றியெல்லாம் கட்டுரை எழுதுகிறார். நம் அக்காவை வைச்சுக் காப்பாத்துவாரா இப்படி. அந்தக் காலத்தில் இருந்து அப்படியே யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.

விருவிருப்புக் குறையவே இல்லை. நான் பயந்ததுபோல் இல்லை. மாப்பிள்ளை நல்ல பையன்தான் போல. மூன்று பவுன் நகை, கரும்பச்சை கலரில் பட்டுப்புடவை, உங்களுக்காக வந்து காத்திருப்பது என கொஞ்சம் நம்பிக்கையை வரவைத்துவிட்டார். அவர் கட்டுரையை நீங்கள் வாசிக்கவில்லை என்று சீண்ட, அவர் முகம் வாட, அப்புறம் உண்மையை சொன்ன தருணங்கள்.😍💐

ஆஸ்டின் சௌந்தர்.

***

பெருநியதி இன்னுமின்னும் உங்கள்ட்ட கருணையோட இருக்கனும்… 🥰❤
கள்ளமற்ற உங்கள் உள்ளத்தின் பொருட்டு அந்த பெருநியதி உங்களுக்கு இனியும் கருணையோடு அமையும் அருணாம்மா… ❤🥺 லவ் யூ… 😚😚🤗🤗🤗

அந்த ஆதர்ச தம்பதிகளான தாத்தா பாட்டி போல… நீங்க இருப்பீங்க கடைசி வரை…சுத்தி போட்டுடுங்க இரெண்டு பேருக்கும்… ❤❤

உங்கள் கடிதத்தில் எனக்குப் பிடித்த இடங்களை இதனுடன் இணைக்கிறேன்.

//அதில் பற்றியெரியும் உணர்ச்சிகரத்துக்கு இடமில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் அது நேர் எதிர்நிலைக்கும் செல்லும். காதலிக்கும் ஆரம்ப நாட்களில் அது உணர்ச்சிகரமானதுதான். முதன்முதலாக இன்னொரு மனதை, ஆளுமையை நுணுகி அறிவதன் பரவசம். நாள் போகப் போக அது சமனப்படவேண்டும். சுயநலவாதிகளால் ஒருபோதும் காதலிக்க முடியாது. தன்னைப் பற்றியே சிந்திப்பவர்களுக்கும் அது வாய்க்காது. காதல் ஒருவித சமர்ப்பணமும் கூட. உன் அகந்தையை, அறிவை, தன்னிலையை ஒருவரிடமாவது கழற்றி வைக்க வேண்டும் என்கிறார் ஃப்ராம். ஒருவரிடம் காதல்கொள்ள நீ ஒட்டுமொத்த மனிதகுலத்தையே நேசிக்க வேண்டும். இரண்டும் வேறு, வேறல்ல.//

//காதலின் பித்துநிலை என்பது இதுதானா? எந்த தர்க்கங்களையும், ஒழுங்குகளையும் கைக்கொள்ள மறுக்கிறது அது. ஒப்பிட நான் கொஞ்சம் தரையில் நின்றிருக்கிறேன் எனத் தோன்றும். அவர் பிடிவாதத்தை உள்ளூர ரசித்தேன்.//

//உண்மையில் நான் ஜெயனின் பொருட்டு பெருநியதியுடன் எந்த ஆட்டத்தையும் ஆடத்துணியவில்லை. அதன் காலடியில் என்னை முழுவதும் அர்ப்பணித்து சரணடையவே விழைந்தேன். ஆற்றூர் சொன்னது போல் அந்த இரு நெல்லிக்காய்களும் அருகருகே அமைவது பெருநியதியின் பெருங்கருணையால் நிகழ்வதே. வாழ்வெனும் மாபெரும் புதிரான சதுரங்க ஆட்டத்தில் விழும் பகடைகளின் நிகழ்தகவுகள் நம் கணிப்பிற்கு அப்பாற்பட்டவை, எண்ண ஒண்ணாதவை, எண்ணில் அடங்காதவை. ஆனாலும் பெருநியதி என்னிடம் மிகுந்த கருணையோடிருந்தது, கருணையோடிருக்கிறது, கருணையோடிருக்கும். ஆம், அது அவ்வாறேயிருக்கும்.//

ரம்யா

***

வணக்கம் அக்கா,

இப்போதுதான் நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு – 1 வாசித்தேன். வாசிக்க வாசிக்க நேரில் நடப்பது போல் இருந்தது. கடைசி வரை மாறாத புன்னகையுடன் வாசிக்க முடிந்தது. இவ்வளவு காதல் அதுவும் முதல் சந்திப்பில் 😍.சங்கச்சித்திரங்கள் ல சார் நீங்க கொன்றை மரப்பூக்களை உயர எழும்பி புத்தகத்தை வைத்து தட்டி உதித்ததாக கூறியிருந்தார் அது என் மனதில் ஒரு ஓவியம் போல பதிந்து விட்டது. சந்தோசமா இருந்தது அக்கா. என்றும் இதே மாறாத காதலுடன் இருக்கணும்.ஆனால் சார் மாதிரி அறிவுஜீவி கிட்ட இவ்வளவு காதல் உணர்வுகளோ உரையாடல்களோ எதிர்பார்க்கல.அதுவும் “டி” போட்டு பேசும் அளவிற்கு. ஆனா நமக்கு பிடித்த ஆளுமை ,தோழன், குரு இப்படி அனைத்து விதத்திலும் ஆக்கிரமித்தவரின் இந்த காதல் உணர்வுகள் இந்த நாளை தித்திப்பாக்கியது.

அழகான , பிரேமையான கட்டுரை. எப்படா நாளைக்கு 2ஆம் பகுதி வரும்னு இருக்கு.லவ் யூ அக்கா❤ வாசித்து முடித்தாயிற்று.எரிக் ஃ ப்ராம் ல இருந்து தம்பி ஓடிப்போனது ,கல்யாண முடிவு, ராஜிவ் கொலை வரை👌 எப்படிக்கா இவ்வளவு துல்லியமா சம்பவங்களை ஞாபகம் வைத்திருக்கிறீர்கள் எனக்கு ஆச்சரியமான ஆச்சர்யம். சாரும் நீங்களும் திருப்பத்தூர் வழியா போனது எனக்கு ஏதோ கிரீடம் வைத்தது மாதிரி இருந்தது. மறுபடியும் தொடரும் நாளை வரை காத்திருக்கணும் 😍

அக்கா நேற்றிலிருந்து உங்கள் கட்டுரைகள் எல்லாம் நினைத்து சிரித்துக்கொண்டே இருக்கிறேன்.எங்க வீட்ல அவர் ஏன் எந்நேரமும் ஏதோ நெனச்சு சிரிச்சிட்டே இருக்கன்னு கேட்டார்🤩 நீங்க அனுப்புறதுக்கு முன்னாடியே லிங்க் கெடச்சி வாசிக்க ஆரம்பித்து முடித்தாயிற்று(காத்துக்கிட்டுள்ள கிடந்தோம்)இன்னிக்கு பயங்கர நெகிழ்ச்சியாக இருந்தது.சிறு வயதில் ஊரில் யாராவது வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டால் எப்படி பிளான் செய்து எங்கு தாலி காட்டுவார்கள் தெரியாத ஊர்ல எப்படி இருப்பாங்கன்னு அவங்க அம்மா அப்பாவை விட நான் அதிகம் யோசிச்சு கலங்குவேன் .இன்னிக்கு அதை அப்படியே கற்பனையில் பார்த்தேன்.🤩

அக்கா //லலிதாங்கிக்காக மரமல்லி அடியில் காத்து நிற்கும் பித்துநிறைந்த திருவடியேதான்.] //இதுக்கு மேல பித்து நிலையை சொல்லிட முடியுமா. வாசிக்க வாசிக்க நிறைவா இருந்தது அக்கா.ஆனா பனி உருகுவதில்லை கட்டுரை வாசிச்சிட்டு இந்த கட்டுரை வாசிக்கும்போது எப்படி இந்த குடும்பத்தை விட்டு பிரியும்போது எவ்வளவு கலங்கியிருப்பீர்கள்ன்னு புரிந்து கொள்ள முடிந்தது. கடைசி பாரா மனதை விட்டு நீங்கவில்லை. சார் எவ்ளோ பிளான் பண்ணி கரெக்ட்டா முடிச்சிருக்கார் .மறக்க முடியாத வாழ்வனுபவங்கள் இப்போது எங்களுக்கும்.என்றும் இதே மனமொத்த தம்பதிகளாக இருக்க பிராத்தனைகள். love &hugs அக்கா😍

கவிதா,

சென்னை.

***

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு இரண்டு பாகங்களும் படித்தேன். கவிதை சிறுகதை குறுநாவல் வாழ்க்கை அனுபவ கட்டுரை என எல்லா வகைக்குள்ளும் பொருந்தும் எழுத்து.

முதல் பாகத்தில் நிரம்பி வழியும் காதலை தர்கங்களுக்கு அப்பாற்பட்ட உன்னத உணர்வை பூர்ணமாக உணர்ந்தேன். (நானும் மனைவியை சந்தித்து காதலை வெளிப்படுத்திய 15 தினங்களுக்குள் பெண் வீட்டாரை எதிர்த்து திருமணமே செய்து விட்டேன்). உங்கள் வீட்டினுடைய சூழல் ஆற்றூர் சுரா ஆசானின் அண்ணா, கல்லூரி சூழல் அக்காலத்திய தமிழகம் இந்தியா மனிதர்கள் பற்றி மிகக் குறைவான வார்த்தைகளில் ஆனால் முழுதுமாக காட்சிப் படுத்தும் வகையில் சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.

ஆசானை தொடர்ந்து வாசிக்கும் என்னைப் போன்றவர்களுக்கு இது மிகவும் அந்தரங்கமான ஒரு அனுபவம். உங்கள் இருவரைப் பற்றியும் எதுவுமே தெரியாத ஒருவர் இதை படித்தாலும் சிறந்த படைப்பை படித்த நிறைவையே உணர்வார்.

உங்கள் இயல்பான அதிவேகமாக பேசும் தன்மை எழுத்திலும் இருக்கிறது. கொஞ்சம் மூச்சு இழுத்து விட்டுக் கொண்டு தான் படிக்க முடியும் நடையின் வேகமும் துல்லியமும் அப்படி. ஏனெனில் உங்கள் காதலைப் போலவே இன்றும் ஆசானை அதே தீவிரத்துடன் நானும் காதலிக்கிறேன்.

சில நாட்களுக்கு முன் என் போனை எடுத்து பார்த்துக் கொண்டிருந்த மனைவி சண்டைக்கு வந்தார் போனில் இருக்கும் படங்களில் மனைவி குழந்தைகளில் விட ஆசானின் படம் தான் அதிகமாக இருக்கிறது.இந்த நிகழ்வுகளை ஆசான் வெவ்வேறு இடங்களில் எழுதியுள்ளார் நேர்ப்பேச்சில் கூறியிருக்கிறார் முதல் சந்திப்பில் இருந்து திருமணம் வரை ஒரே தொகுப்பாக படிக்கக் கிடைத்தது அதுவும் ஆசானின் அறுபதாம் அகவை நிறைவு படிக்க வைத்தது உண்மையிலேயே என் மனதிற்குள் ஒரு தித்திப்பை ஏற்படுத்தியிருக்கிறது ஆம் நிரம்பி வழியும் பெருந்தேன் உறவுதான்
இது.

அந்த நியதி உங்கள் மீது எப்போதும் கருணையோடே இருக்கட்டும் 🙏

கதிர்,

கோவை

***

உங்க லவ் ஸ்டோரி ல தமிழ் இலக்கிய உலகம் மொத்தமும் கிறங்கி கிடக்கே அக்கா. பெரும்பாலான எழுத்தாளர்கள் கட்டுரையை வாசிச்சு ஏதோ ஒண்ணு சொல்லிருக்காங்க. எனக்கு பிடிச்சது இது…

அருண்மொழி எனும் தேவதை சுட்டுவிரல் கொண்டு ஜெயமோகன் எனும் பெயரை தொட…

அப்பெயர் உயிர் கொண்டு உரு கொண்டு வந்து அந்த தேவதையை கூட்டி சென்று விடுகிறது எனும் தேவதை கதை போன்ற வாழ்க்கை தருணம்😊

கடலூர் சீனு

***

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு …

ரொம்ப பிரமாதமாக இருந்தது…. வாத்தியார் சொல்லி சில நிகழ்ச்சிகள் கேட்டிருந்தாலும்… நீங்க ரொம்ப அற்புதமாக விவரித்து இருந்தீங்க… என்றும் வரலாற்றில் நிற்கும் … ரெண்டு நாளா உங்க கட்டுரைகள்தான் முகநூலில் ட்ரெண்டிங்…. ஜெ -60 .. உங்கள் இந்த கட்டுரைகளும் .. அஜியின் முதல் நாவலை வாத்தியாருக்கு அர்ப்பணித்ததுதும்தான் மிகப் பெரிய பரிசு அவருக்கு பெரும் சந்தோசத்தை அளித்திருக்கும்….. ஆயிரக்கணக்கில் இணைந்து சமூக வலைதளங்களையே ஸ்தம்பிக்கும் அளவுக்கு வாத்தியாரின் பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது… நீங்க அசால்டா தட்டி தூக்கி விட்டீர்களே..😀… ரொம்ப சந்தோஷமா இருக்கு..😍😍🙏

விஜயசூரியன்

***

முதல் காதல் கடிதம் கண்டவுடன் பிரவகித்தெழுந்த காதல் பரவசம் நடுக்கம் எல்லாம் படிக்கும்போதே மனத்தைத் தொட்டு சிலிர்க்கவைத்தது.

உரிமையில் எடுத்துக்கொண்ட சின்னச் சின்ன கோபங்களில் அத்துணை அழகு.

அவர் எழுத்துக்களை (காகிதத்தில் ) குத்தி வைத்திருந்தது.”கருங்குருவி என்று எழுதியிருந்தால் அப்படியே திரும்பிப் பார்க்காம போயிருப்பேன்…”என்றது அந்த நண்பியின் ( கலை) கோபத்தில் கூட அவ்வளவு அழகிருந்தது.

அவரின் காதல் கவிதையில் கூட அவருக்கிருந்த பழைய பாணி புதிய பாணி எனும் கறார் தன்மை ….” இது காதல் கவிதையா…அன்பே அழகே தானே…ஒரு சிறு பெண்ணிண் காதலை பரசமூட்டும் ….வெகு நாளாகிவிட்டது…இது போன்றொரு காதலைப் படித்து …..

கன்னியாகுமரி கவிதை முகாம் – ல் பார்த்த அந்த.மாபெரும் ஆளுமை இணையின் பிம்பம் மறைந்து கணங்களில் ஒரு இளம் காதலர்கள் கண்களில் நிறைகிறார்கள்…

தொடரட்டும் காதலும் பரவசமும்….❤❤

என்ன படித்தாலும் எதனை உள்வாங்கிக்கொண்டாலும் முணுமுணுப்பிடையே ஒருவித புன்னகை இதழில் மிதந்துகொண்டே இருக்கின்றது .படித்து முடித்த பிறகு காரணம் என்னவென்று யோசித்துப் பார்த்தால் காதலின் வேலைதான் அது.

காலத்தால் உடலைத்தான் பழசாக்க முடிகிறது.மனத்தை அல்ல.மனம் நிகழ்காலத்திலேயேதான் இருக்கின்றது.எப்போதும் புத்தம் புதிதாக அதில் மலர்ந்திருக்கின்ற காதலால்.அந்தப் புன்னகை இதன் காரணமாகவே குண்டுவெடிப்பைப் படிக்கும்போதுகூட நகர மறுக்கின்றது.

“காடு”நாவல் எந்தப்பக்கம் திரும்பினால் மீண்டும் எப்போது நீலியை நோக்கித் திரும்பும் என்கின்ற எதிர்பார்ப்பு வாசிக்கும்போது இருக்கும்.ஒரு மனம் “இது சில்லியாக இல்லையா?”என்று கேட்கும்.””அதனாலென்ன…”என்று
இன்னொரு மனம் அதற்கு வக்காலத்து வாங்கி ஆசுவாசிக்க வைக்கும்.

காதலிக்கும்போதும் காதலைப்படிக்கும்போதும் இப்படி எண்ணற்ற மனங்கள் உலவித்திரியும் உடலெங்கும்.இவ்வெழுத்தெங்கும் அப்படியொரு காதல்..!!

“சீனியாரிட்டி பிரகாரம் சூ.ரா வைப்ப் படித்தேன் என்று சீண்டிவிட்டு ரயில் ஏறியதும் உங்களைத்தான் படித்தேன்”
என்று சொன்னது கவிதை…கவிதை…

என்றைக்கோ நிகழ்ந்து முடிந்த ஒரு காதல் நினைவுகளைக் கிளர்த்தி இன்றைக்கு நடந்ததுபோல நெகிழ வைத்ததது.

காதல் நிறைந்த ஒரு சிறு பெண்ணின் நெடிய பேருந்துப் பயணமும் பேருந்து நிலையத்தை நனைத்து ஈரப்படுத்திய அந்தி மழையும் இருவேறு காதல் மனங்களின் அன்றைய நாளின் அவஸ்தையான காத்திருப்பும் தேடலும் மனத்தை அழுந்தப் பற்றிக்கொண்டன.

கொஞ்சநேரமே வந்தாலும் மனதை நிறைத்தார் அந்தத் “தம்பி”.

காதலில் வாழ்வையும்
வாழ்வில் காதலையும் …வாசித்து மகிழ்ந்தேன்

சுஜய் ரகு

***

ஆற்றூர் ரவிவர்மா சொன்னதுபோல ஒரு ‘நிகழ்தகவு ‘ ! ❤ லட்சத்தில் ஒருவருக்கு நடப்பது.,கிடைப்பது.நீங்கள் அதிர்ஷ்டக்காரர். தொண்ணூறுகளில் இலக்கிய விஜாரங்களுடன் ,சிற்றிதழ்களுக்கு சந்தா கட்டி, தனக்கான பிருத்வி ராஜன் ஜோல்னா பையுடன் வருவான் என கனா கண்டு கொண்டிருந்த பெண்களை நினைவுபடுத்துகிறது. முப்பது + வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வை வார்த்தை வார்த்தையாக எழுத முடிகிறதெனில் அந்த வார்த்தைகளில் பொதிந்துள்ள காதலில் ,பிரியத்தில் ஒருசொட்டு கூட குறையவில்லை என்று அர்த்தம் . உங்கள் எழுத்து அற்புதம்.தஞ்சையின் மகிமை. உங்களின் திருமணம் நடைபெற்றதை நானறிவேன்.ஜெயமோகனோடு பாலகோட்டில் பணிபுரிந்தவர் .தருமபுரி யில் என் தோழியின் உறவினர்.கணையாழியில் அவரின் கதை வந்த போது முகவரியை பார்த்து தெரிந்து கொண்டு அவ்வப்போது அவரிடம் விசாரிப்பேன்.அவரின் ‘ சவுக்கு’ கதை யில் தருமபுரி யின் நகராட்சி பூங்கா வரும்.அதை கடந்து போகும் போதெல்லாம் நினைத்துக்கொள்வேன்.உங்களோடு ஓரிரு முறை பஸ்ஸில பயணித்திருக்கிறேன்.நீங்கள் அப்போது நிறை சூலி. தருமபுரி-நல்லம்பள்ளி .உங்களோடு பேச கூச்சம் . உங்கள் எழுத்து என் மனசோடு பேசுகிறது.வாழ்த்துகள்.உங்கள் ஜெயனுக்கும் சற்றே தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள்.💐

சரஸ்வதி காயத்ரி

***

///////”காதல் எப்படிப்பட்ட ஒரு உணர்வு. மனிதனுக்கு இறைவன் கொடுத்த வரங்களில் முதன்மையானது . மனிதனுக்கு கடவுளால் அளிக்கப்பட்ட தேன். அதைப் பருகாதவர்கள் துரதிருஷ்டசாலிகள்///// Universal Truth. 👌

இரண்டு பாகமாக வந்ததை அனைத்தையும் படித்து முடித்தபின் தோன்றியது. இந்த பிரபஞ்ச பேரிருப்பான இறையின் அருள் உங்கள் இருவரின் காதலுக்கும் பூர்ணமாக இருந்திருக்கிறது. இருந்துகொண்டிருக்கிறது.

மிக ஆத்மார்த்தமான சரளமான நடையில் காதலின் அந்தரங்கங்களை அனாயசமாக சொல்லிசென்றிருக்கிறீர்கள். காதலை தம் வாழ்வில் உணர்ந்தவர்கள் நனவோடையில் நினைத்து அசை போடவைக்கும் எழுத்து. 👌🙏

விஜயராகவன்

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 30, 2022 11:31
No comments have been added yet.


அருண்மொழி நங்கை's Blog

அருண்மொழி நங்கை
அருண்மொழி நங்கை isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow அருண்மொழி நங்கை's blog with rss.