நதியைக் குற்றஞ்சாட்டும் எந்தப் பேச்சும்
எனக்குப் பிடிப்பதில்லை
மூழ்கி அமிழ வரும் ஒருவரை
அது முழுதும் ஏற்றுக்கொள்கிறவரையில்
பிளந்து கடக்க வருபவரை அனுமதிக்கிறவரையில்
காண வருபவருக்குக் கொடுப்பதற்காக
சிறுமீன்களின் கண்ணாடிக்குடுவையை
அது பாதுகாத்து வைத்திருக்கிறது.
முத்துகளில்லை
பவழங்களில்லை
அதீத உறுமல்களோ
அலையதிர்வுகளோ இல்லை
இப்படி விச்ராந்தியாகத் தொடங்கினால்
இந்த நதி ஒரு யோகியாகவே
மாறிவிடப் போகிறதென்று நினைத்தேன்.
ஆனால்
கழிமுகத்தை அடைந்ததும்
என்ன நடக்கிறதென்றுதான்
எனக்குப் புரியவில்லை
கடலோடு கூட்டு சேர்ந்ததும்
அது தன் சொந்தப் பெயரிழக்கிறது
நீண்ட பயணத்தின் ஞானமனைத்தையும்
மடிமைக்குச் சமர்ப்பிக்கிறது
பாய்ச்சலை,
பாறை மேல் குதித்தேறிய பின்பு வரும்
வெடிச்சிரிப்பை அக்கணமே மறந்துவிடுகிறது.
இந்தப் பயணம்
என்றென்றைக்குமாய்த் தேங்கிக் கிடக்கத்தானா
என்றெண்ணும்போது
கணவன் வீடு போகும்
புதுப்பெண்ணின் நினைவு வருகிறது.
ஆனால்
நதியிடம் இந்த விஷயத்தைச் சொல்லிப் பாருங்கள்
அதற்குப் புரியப் போவதில்லை
ஏனென்று கேட்காதீர்கள்
அது அப்படித்தான்.
The post கடைசியில் – வீரான்குட்டி first appeared on சுஜா.
Published on June 08, 2022 18:04