மழையில்
ஒரு இலை விரித்து
அதன் கீழ்
நடந்துபோகின்றனர் இரண்டுபேர்
அவர்களில்
யாருக்குக் கூடுதல்
அன்பென்று
எப்படி அறிந்துகொள்ள முடியும்?
அதிகம் நனைந்தது
யாரென்று பார்த்தால் போதும்.
இரண்டுபேர்
ஆசையோடு
ஒரு அப்பத்தைப் பங்கிட்டுத் தின்கிறார்கள்.
அவர்களில்
யாருக்குக் கூடுதல்
நேசமென்று
எப்படி அறிந்துகொள்வது?
அப்பத்தின்
சிறு பாதிக்காக
விரைந்தோடும் விரல்கள்
யாருடையதென்று பார்த்தால் போதும்.
தங்களுக்குள்
காதலுக்காக
வாதிடுகின்றனர் இரண்டுபேர்
அதில்
அதீத அன்பு யாருக்கென்று
அறிந்துகொள்ள என்ன வழி?
அவர்களில்
தோற்பது யாரென்று தெரிந்துகொள்ளக்
காத்திருந்தால் போதும்.
The post பரீட்சை – வீரான்குட்டி first appeared on சுஜா.
Published on September 16, 2024 19:07