தமிழ்மொழியை கருவிகளுக்குக் கைமாற்றவேண்டிய யுகமிது – ம. இராசேந்திரன்

ம.இராசேந்திரனை கல்விப் புலத்திலும் மொழிப்புலத்திலும் அறியாதவர் வெகு குறைவு. அவர் எழுதிய, பதிப்பித்த நூல்கள் ஏராளம். பெருமைமிகு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணி செய்தவர். அவர் ஏற்று நடத்திய பொறுப்புக்கள் நிரையாக அணிவகுத்துள்ளன. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராக பொறுப்பு வகித்திருக்கிறார். சிறுகதைகள், ஆய்வுகள், கட்டுரைகள், கவிதைகள் என நவீன இலக்கியத்திலும் பலவாண்டுகளாக இயங்கி வருகிறார். தமிழின் சிற்றிதழ் மாண்பின் அடையாளங்களில் ஒன்றான கணையாழி இதழின் ஆசிரியராக இருந்து புதிய இலக்கிய சக்திகளுக்கு வாய்ப்பும் ஊக்கமும் அளிப்பவர். எப்போதும் ஒரு தெள்ளிய சிந்தனாவாதத்தையும், உரையாடலையும் நிகழ்த்த வல்லவர். மொழியியல் சார்ந்தும் மரபு இலக்கியங்கள் குறித்தும் ம.ரா அவர்களுடன் உரையாட வாய்ப்புக் கிடைத்தால் அதுவொரு நல்லூழ். சமீபத்தில் இவரது காலப்பிசாசுகள் என்ற சிறுகதை தொகுப்பு வெளியாகியுள்ளது. இந்திய சுதந்திரத்திற்கு முன்பாக தொடங்கப்பட்ட உன்னத அமைப்பான தமிழ் வளர்ச்சிக் கழகத்திற்கு இப்போது தலைவராக ஆகியிருக்கும் எழுத்தாளர் ம. இராசேந்திரன் அவர்களுடன் நிகழ்த்திய நேர்காணலே இது.

மிழ் வளர்ச்சிக்கழகத் தலைவராகி இருக்கிறீர்கள். தமிழ் வளர்ச்சியில்  எதற்கு முன்னுரிமை தரப் போகிறீர்கள்?

கடந்த காலம் போல மனிதர்களுக்குத் தமிழ் சொல்லித் தந்து தமிழ் வளர்க்கும் காலத்தைக் கடந்து நிற்கிறோம்.

தமிழ்த் தாத்தா உ.வே.சா. மற்றும் சி.வை.தா ஆகியோர் ஓலைச் சுவடியிலிருந்து அச்சுக்குத் தமிழை மாற்றிய காலத்தைக் கடந்து தமிழைக் கருவிகளுக்கு மாற்றும் காலம் இது. ஆம்  இது கருவிகளின் காலம்.  கணினிக்கு  இணையத்திற்கு, செயற்கை நுண்ணறிவுக்குத் தமிழ் சொல்லித்தந்து தமிழ் வளர்க்க வேண்டிய காலம்.

கன்னித்  தமிழ், கணினித் தமிழ் ஆகிக் கொண்டிருக்கிறது. மென்தமிழ், மின்தமிழ் ஆகிக் கொண்டிருக்கிறது. மின் தமிழாகத் தமிழை முழுவதுமாக மாற்றினால் வரும் தலைமுறைகளுக்குக் கருவிகளே  தமிழைக் கற்றுக் கொடுக்கும். ஆகவே இப்போது செயற்கை நுண்ணறிவுக்கும் தமிழைக் கொண்டு சேர்க்க வேண்டும்.

அதற்குத் தகவல்களாக இருக்கும் தமிழ் இலக்கியக் கருவூலங்களை, கல்வெட்டுகளை, நாட்டுப்புறக் கலை இலக்கியங்களை மின் ஆவணப்படுத்தி  அவற்றை எல்லாம் தரவுகளாக ஆக்க வேண்டும்.

தமிழ் வளர்ச்சிக்கழக முதன்மை நோக்கம் கலைக்களஞ்சியங்களை உருவாக்குவதாகத்தான் இருந்திருக்கிறது. கலைக்களஞ்சியங்கள் தேவைப்படும் தகவல்களின் கருவூலம். தகவல் தரும் கலைக்களஞ்சியங்கள் தரவுகளாக வேண்டும். மின் தரவுகளாக வேண்டும்.

அவ்வகையில் ஒரு இலக்கியத்தின் பெயரைக் குறிப்பிட்டுத் தேடினால் அந்த இலக்கியத்தின் ஆசிரியர், காலம், பாடுபொருள் அல்லது பேசுபொருள் சிறப்பு ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளும் வகையில் இக்கால இலக்கியம் வரைக்குமான இலக்கியக் கலைக்களஞ்சியம் மின் தரவுகளாகத் தயாரிக்கப்பட வேண்டும். அதைப் போலவே மாணவர்களுக்குப் பயன் தரும் வகையில் இலக்கணக் குறிப்புக் களஞ்சியம் வேண்டும். மருத்துவக் கலைக்களஞ்சியம், சித்த மருத்துவக் கலைக் களஞ்சியம் போலவே  தமிழ் வழியில் கற்க,  பொறியியல், கணினியியல் கலைக்களஞ்சியங்கள் வேண்டும்.

உணர்வையும், உரிமையையும் காப்பாற்ற மொழி முக்கியமாகிறது. மொழியுரிமை என்பதே மனிதவுரிமை என்பதில் தான் அடக்கமாகிறது. தமிழ் வளர்ச்சிக் கழகம் என்பதன் முதற்பணியே மொழியைப் பாதுகாப்பதுதான். அதன் பிறகுதான் மொழி வளர்க்கும் செயல்களில் இறங்க வேண்டும். இந்த யுகத்தில் மொழியை எங்கே வைத்துப் பாதுகாக்க வேண்டுமென நாம் யோசிக்க வேண்டும். இன்று உலகை ஆளும் செயற்கை நுண்ணறிவுக்குத் தமிழைக் கொண்டு செல்லுவதுதான் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணியாக இருக்கவேண்டுமென விரும்புகிறேன். இதுவே இன்றைய யுகத்தின் மொழிவளர்ச்சிக்குப் பாதுகாப்பாக அமையும். ஒரு பொருளுக்கு அர்த்தம் தேடுவதற்கு, அகராதியின் பக்கத்தைப் புரட்டாமல், சொல்லைக் கணினியில் அடித்தால் அனைத்தும் வரவேண்டும். சொல்லடைவுகள் இனி அச்சில் தேவையில்லை. மின் தமிழில் இருப்பதே யுகத்தேவை. இப்படியெல்லாம் தமிழைப் பயன்பாட்டு மொழியாக வளர்த்தெடுக்க வேண்டும்.

 

நீங்கள் சொல்வதை பொன்னம்பலத்திலிருந்து மின்னம்பலத்திற்குஎன்று வரையறை செய்கிறேன். ஆனால் இன்றுள்ள பதின்பருவ தலைமுறையிடம் மொழி பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. அவர்களிடம் தமிழை எவ்வாறு கொண்டு செல்ல முடியும்?

எல்லாக்காலத்திலும் மொழிக்கும்  தலைமுறை இடைவெளி இருந்தே வந்திருக்கிறது. ஆனால் மொழியைக் காலத்திற்குக்  கைமாற்ற வேண்டிய பொறுப்பு அந்தந்த காலத்  தலைமுறையிடம் தான் உள்ளது. கலை இலக்கியங்கள் காலம் தோறும் சம காலப்படுத்தப்பட்டு வர வேண்டும்.  சம காலத் தேவைகளின் தீர்வுகளைக் கடந்த கால அனுபவப் பாடங்கள் வழி கண்டையைக் காட்ட வேண்டும். இன்றைக்கு நவீன இலக்கியங்கள் பலவும் அப்படித்தான் கடந்த காலத் தொன்மங்களில் தொழிற்படுகின்றன.

ன்றுள்ள தமிழ்நாடு அரசு மாவட்டங்கள் தோறும் இலக்கியத் திருவிழாக்கள், புத்தகக் கண்காட்சிகளை நடத்தி வருகின்றது. ஆரோக்கியமான களச்செயல். அப்படித் தமிழ் வளர்ச்சிக் கழகத்திற்கு ஏதேனும் எதிர்காலத் திட்டங்கள் உள்ளனவா?

இந்த அமைப்புக்கு அலுவலகமோ, கிளையோ இல்லை. ஆதலால் இந்த அமைப்புக்குக் களப்பணி சாத்தியமில்லை. மாறாகக் களப்பணியில் ஈடுபட்டவர்கள் கொண்டுவரும் தகவல்களைத் தரவுகளாக ஆக்கும் முயற்சியில்  இந்த அமைப்பு ஈடுபடும்.

ப்படியெனில் நவீன படைப்பாளிகளை உங்கள் அமைப்பில் உள்வாங்கும் எண்ணம் உள்ளதா ?

தாராளமாக. புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் அறங்காவலர் குழுவில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் இணைக்கப்பட்டிருக்கிறார். நவீன சிந்தனைக்கும் இலக்கியத்திற்கும் ஊக்கமளிக்கும் கொள்கை முடிவுகளை எடுப்பதற்குப் பெரு விருப்பத்தோடு இருக்கிறோம்.

மிழ் , தமிழர் அரசியல் என்பதற்கு நீண்ட நெடிய போராட்ட வரலாறு உண்டு. அது இன்று வரைக்கும் எப்படி அவசியமாகிறது ?

இந்த யுகத்தின் பெரியதொரு கொடையாக நான் கருதுவது, எவராலும் இனியொரு மொழியை அழிக்கமுடியாது.  தகுதியான இலக்கியங்களைக் கொண்டிருந்தால் இணையத்தில் சாகா வரம் பெற்று இனி என்றும் வாழும். உதாரணமாக சமஸ்கிருதத்தில் உள்ள இலக்கியங்களால் மட்டுமே அது வாழ்கிறது. தமிழுக்கு உலகம் தழுவிய பாதுகாவலர்கள் உண்டு. சிந்தனையாளர்கள் பெருகி உள்ளனர். மொழி என்பதே ஒரு அரசியல் தான். அதனைக் கைவிட்டு எதனையும் செய்ய இயலாது.

மொ ழி என்பது பண்பாட்டோடு கூடியதுதான் என்பதில் உங்களுக்கும் உடன்பாடு உண்டு. இன்றைக்கு நாட்டுப்புறவியலின் கலை வெளிக்கு ஊக்கச்சத்து தேவைப்படுகிறது என்றே தோன்றுகிறது. இது குறித்து ஏதேனும் திட்டமிடல்கள் உள்ளனவா ?

தமிழர் விழாக்கள் சடங்குகள் குறித்து ஒரு கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டும்.  எல்லா விழாக்களையும் பதிவு செய்ய வேண்டும். நான் மீண்டும் மீண்டும் கூறுவது ஓலைச்சுவடியிலிருந்து அச்சுக்கும் அச்சிலிருந்து கணினிக்கும் தமிழ் வந்துவிட்டதையே. இந்தக் கலைக்களஞ்சியத்தைக் கூட அச்சாக்கம் செய்யாமல் கணினியில் பதிப்பிக்க வேண்டுமென்பதே விருப்பம். இந்த யுகத்தின் நவீன பார்வையோடுதான் தமிழ் வளர்ச்சிக் கழகம் செயற்படவிருக்கிறது.

சிற்றிதழ் மரபுடன் இன்றுவரை வெளியாகும் இதழாகக் கணையாழியைக் கூறலாம். ஆனால் சிற்றிதழ் பண்பைப் பேணும் வகையில் படைப்புச் சூழல் தமிழில் உள்ளதா?

நல்ல கேள்வி. நாமார்க்கும் குடியல்லோம் என்கிற வார்த்தை தான் சிற்றிதழை நடத்துவோரின் எண்ணம். இன்றைக்கு வணிகச்சூழலுக்கு எல்லோரும் பழகியிருக்கிறோம். கணையாழி இதழில் படைப்புக்கள் வெளியான பலரும் முக்கிய படைப்பாளியாக இருக்கிறார்கள். எழுத வருவோருக்கு நாற்றாங்காலாக அது அமைந்திருக்கிறது. கணையாழி சிற்றிதழாக- மின்னிதழாகத் தொடர்கிறது.

நீ ங்கள் கடந்த காலத்தில் வகித்த உயரிய பொறுப்புகள் யாவும் அரசு சார்ந்தவைகளாக இருந்திருக்கின்றன. குறிப்பாகத் தமிழ் மொழி , சார்ந்த பொறுப்புகள்.  ஆனால் தமிழ் வளர்ச்சிக் கழகம் அரசு சாரா அமைப்பு. எப்படி உணருகிறீர்கள் ?

என்னுடைய பணிக்காலத்தைப் பின்னோக்கிப் பார்க்கும் போது தொடக்கம் முதல் தொடர்ந்து அரசு சாராத அமைப்புக்களின் தமிழ்ப் பணிகளிலும் மதிப்பூதியம் இல்லாமல் ஈடுபட்டே வந்திருக்கிறேன் என்பதை உணருகிறேன். கோடம்பாக்கத்தில் வீட்டின்  மாடியொன்றில் இயங்கிய காஞ்சி மணிமொழியார் தமிழ்க் கல்லூரியில்  தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு,  என்னுடைய செலவில் சென்று  தமிழ் கற்பித்திருக்கிறேன். பவளக்காரத் தெருவில் இயங்கிய திருவள்ளுவர் தமிழ் கல்லூரியிலும் தமிழ் கற்பித்திருக்கிறேன். தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தராக இருந்த காலத்திலும்  முனைவர் வ.ஐ.சுப்பிரமணியம் இயக்குநராக இருந்த திருவனந்தபுரம் திராவிட மொழியியல் நிறுவனப் பணிகளில் அவருக்குப் பின் ஈடுபட்டு வந்திருக்கிறேன்.  இப்படி என்னுடைய பணிக்காலம் முழுவதும் அரசு சாரா தமிழ்  அமைப்புக்களுடன் இணைந்து தமிழ்ப் பணியில் ஈடுபட்டே வந்திருக்கிறேன்.  தமிழ்ப்பணி என்பதில் அரசு, அரசு சாராத அமைப்பு என்று பார்ப்பதில்லை.

டுத்து  என்ன செய்யப் போகிறீர்கள் ?

அதுதான் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து யோசிக்கையில் சவாலாகத் தோன்றுகிறது. இந்த அமைப்பின் ஒன்பது அறங்காவலர்களில் எட்டுப்பேர் இப்போது இல்லை. மேனாள் ஒன்றிய அமைச்சர் திரு  ப. சிதம்பரம் அவர்கள் மட்டுமே அறங்காவலராக இருக்கிறார்.  ஆகவே அறங்காவலர் குழுவில் புதிய சக்திகளை அமைக்க வேண்டியுள்ளது. அதன்பின் ஆட்சிக்குழு, பொதுக்குழு, நிர்வாகிகள் , பணிகள், திட்டங்கள் என்று அனைத்தையும் சீர்படுத்த வேண்டியுள்ளது.

நன்றி – அமுதசுரபி 

நேர்கண்டவர் – அகரமுதல்வன்

 

 

 

 

The post தமிழ்மொழியை கருவிகளுக்குக் கைமாற்றவேண்டிய யுகமிது – ம. இராசேந்திரன் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 01, 2024 04:24
No comments have been added yet.


அகரமுதல்வன்'s Blog

அகரமுதல்வன்
அகரமுதல்வன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow அகரமுதல்வன்'s blog with rss.