அன்பிற்குரிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சார்,
வணக்கம்.
கீழ்க்காணும் எஸ். அறிவுமணியின் கவிதையை நீங்கள் வாசித்திருப்பதற்குகொஞ்சமும் வாய்ப்பில்லை. ஆனால் இந்த கவிதை எதைக் கோரி கையேந்தி நிற்கிறதோ அதை நிறைவேற்றியஇருவரில் நீங்கள் ஒருவர். மற்றொருவர் பெருந்தலைவர் காமராசர்.
இருவருக்கும் என்னவொரு பொருத்தமெனில் அவரும் இந்தகவிதையை வாசித்திருக்க வாய்ப்பில்லை. மேற்கொண்டு நான் இந்தக் கடிதத்தைத் தொடர்வதற்குமுன் தயவு செய்து இந்த கவிதையை ஒருமுறை வாசித்து விடுங்கள்.
”தாயே
தாலாட்டை நிறுத்து
பசிக்கிறபோது
எப்படி தூங்குவது?
தந்தையே
அறிவுரையை நிறுத்து
பசிக்கிறபோது
எப்படி கேட்பது?
ஆசானே
பாடத்தை நிறுத்து
பசிக்கிறபோது
எப்படி படிப்பது?
எல்லோரும்
எல்லாவற்றையும் நிறுத்துங்கள்
என் பசிக்கு
பதில் சொல்லுங்கள்”
பொழிப்புரை தேவைப்படாத எளிய வார்த்தைகள். ஆனால் அளவிடமுடியாத ஆழம். பசி பத்தையும் பறக்க வைக்கும் என்பதை அறிவோம்.
பசிக்கிற வயிறோடு படிப்பது சாத்தியப்படாது என்கிறஎதார்த்தத்தை பெருந்தலைவரும் நீங்களும் மிகச் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்.அந்த ஈரம்தான் என்னைப்போன்ற மாற்று இயக்கத்தினரையும் உங்களின்பால் இவ்வளவு இறுக்கமாகக்கட்டிப்போட்டிருக்கிறது.
அன்றைய பள்ளிக்கல்வித் துறையின் இயக்குநர் நெ.து.சுந்தரவடிவேலுஆய்விற்காக ஒரு பள்ளிக்கு செல்கிறார். அன்றைய கூட்டு வழிபாட்டின்போது நிறைய குழந்தைகள்மயங்கி விழுந்திருக்கிறார்கள். காலை உணவு இல்லாததால்தான் குழந்தைகள் மயங்கி விழுவதாகவும்,இது தினமும் நடக்கிற ஒன்றுதானென்றும் அவருக்குத் தெரிய வருகிறது.
இந்த செய்தியை நெ.து.சுந்தரவடிவேலு, அன்றைய முதல்வர் பெருந்தலைவர் காமராசருக்கு கடத்துகிறார். பெருந்தலைவர்பதைபதைத்துப் போகிறார். நிலா காட்டி சோறூட்டும் வழக்கம் இருக்கிற பூமியில் குழந்தைகளைபசி தின்று சாய்ப்பதா? என்று துடிக்கிறார்.
அதிகாரிகளோடு இருவரும் உரையாடுகிறார்கள். அப்போதிருந்தநிதிச்சுமையில் எதுவும் அரசால் செய்ய இயலாது என்ற எதார்த்தத்தை எடுத்து வைக்கிறார்கள்அதிகாரிகள்.
“தெருவிறங்கி பிச்சையெடுக்கிறேன். நிறைந்த வயிறோடுகுழந்தைகள் படிக்கட்டும்.”
இப்படித்தான் பெருந்தலைவர் சொன்னாராம் ஸ்டாலின் சார்.
இதன் விளைவாக பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் வருகிறது.காலை உணவு இல்லை என்பதால்தான் பிள்ளைகள் மயங்கி விழுந்தது. ஆனால் அவர்களுக்கு கிடைத்ததோமதிய உணவு.
எனவே காலையில் கூட்டுப் பிரார்த்தனைக் கூட்டங்களில்பிள்ளைகள் மயங்கி விழுவது தொடர்ந்துகொண்டேதான் இருந்தது. அதேநேரம் மதிய உணவுத் திட்டம்பேரதிகமாக பிள்ளைகளை பள்ளிக்கு ஈர்த்தது.
வேறொன்றுமில்லை, அன்றைய வறுமை அப்படித்தான் இருந்தது.பள்ளிக்குப் போனால் மதிய உணவேனும் கிடைக்கும் என்பதால் பிள்ளைகளின் வரத்து அதிகரித்தது.
இப்படியாக பள்ளிக்கு வந்தவர்களில் பலர் பெரிய மருத்துவர்களாகமாறினார்கள் என்பது வரலாறு.
இதற்கு காரணம் பள்ளியில் கிடைத்த கல்வியா? அல்லதுபள்ளியில் கிடைத்த உணவா? என்று பட்டிமன்றமே நடத்தலாம். ஆனால் இரண்டில் ஒன்றை ஒருபோதும்தீர்ப்பாகக் கூறமுடியாது. பள்ளியில் கிடைத்த கல்வியும், பசியாற்றிய மதிய உணவும்தான்இதற்கு காரணம்.
எண்பதுகளின் மத்தியில் வேலைக்கு வருகிறேன். பணிக்குவந்த முதல் நாளே கூட்டுப் பிரார்த்தனைக் கூட்டத்தில் பசியால் பிள்ளைகள் மயங்கி விழுவதைப்பார்க்க முடிகிறது. அடுத்த நாளும், அதற்கடுத்த நாளும், ஒவ்வொரு நாளும் குழந்தைகள் விழுந்துகொண்டேஇருப்பது தொடர்கிறது. இத்தனைக்கும் எங்கள் பள்ளி கொஞ்சம் பெரிய குழந்தைகள் படிக்கும்ஒரு மேல்நிலைப் பள்ளி. எனில், சின்ன குழந்தைகள் படிக்கும் தொடக்க பள்ளிகளின் நிலை?
சில நண்பர்கள் குழந்தைகளுக்கான “காலை உணவு” குறித்துகத்தத் தொடங்குகிறோம். நாங்கள் பேசி யாருக்குக் கேட்கும் ஸ்டாலின் சார்?
ஆனாலும் விடாது வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம்இதுகுறித்து பேசுகிறோம்.
அன்றைய பள்ளிக் கல்வித்துறையின் இணை இயக்குநர் கார்மேகம்சார் மாதிரி அதிகாரிகளிடம் இதைக் கொண்டு போகிறோம். அவர்களும் பேச ஆரம்பிக்கிறார்கள்.ஆனால் விடியவில்லை.
இந்த கோரிக்கை எப்படி, யார்வழியாக உங்களுக்கு வந்ததுஎன்று தெரியவில்லை. அரசு மற்றும் ஆதிதிராவிட தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுவருகிறது.
போதாது என்கிறோம். அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும்விரிவுபடுத்துகிறீர்கள்.
பள்ளியின் வருகைப்பதிவு எகிருகிறது. எனக்குத் தெரிந்தஒரு பள்ளியில் பள்ளிக்கே வராத பத்து குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்கு வர ஆரம்பிக்கிறார்கள்.
அதில் ஒரு குழந்தை “கலைத் திருவிழா”வில் மாவட்ட அளவில்ஜொலிக்கிறான். இதன் விளைவுகள் முழுவதும் வெளிவர இன்னும் பதினைந்து ஆண்டுகளாகும்.
உங்களது தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு இடத்தில் “என்சகோதரிகள் இன்னும் ஒரு அரைமணி நேரம் கூடுதலாக ஓய்வெடுக்கட்டும் என்பதற்காகவும்தான்இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தேன்” எ்ன்று கூறினீர்கள்.
இப்படியெல்லாம் சிந்திக்க எப்போதாவதுதான் உங்களைப்போலதலைவர்கள் கிடைப்பார்கள். இப்படி அபூர்வமாய் கிடைக்கும் தலைவர்களை நாங்கள் இதயமே இல்லாமல்தோற்கடிப்போம்.
ன்ன செய்வது, எங்களது நன்றி அப்படிப்பட்டது ஸ்டாலின்சார்.
உங்களது தோல்வி எனது இரண்டு எதிர்பார்ப்புகளில் மண்ணள்ளிப்போட்டிருக்கிறது ஸ்டாலின் சார்.
திங்கள் காலை ரவை உப்புமா கொடுத்தீர்கள். பிறகு அதைஅரிசி பொங்கலாக மாற்றினீர்கள்.
செவ்வாயன்று சேமியா கிச்சடி, புதனன்று அரிசி பொங்கல்,வியாழனன்று அரிசி உப்புமா, வெள்ளியன்று கோதுமை உப்புமா என்று கொடுத்தீர்கள்.
அரிசி உணவுகளை குழந்தைகள் கொட்டுகிறார்கள் என்று சொன்னார்கள்.
ஒரு குழு அமைத்து குழந்தைகளின் விருப்பமறிந்து அவர்களுக்குப்பிடித்த உணவைத் தரலாமே என்று 2025 செப்டம்பரில் எழுதினேன். அந்த மாதம் நடந்த எனது மகளதுதிருமணத்திற்கு வந்திருந்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சார் அந்தப் பதிவு குறித்து என்னோடுபேசினார்.
அக்டோபர் மாதம் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் இருபதுபள்ளிகளைத் தேர்ந்தெடுத்து குழுவினரை அனுப்புகிறீர்கள். அவர்கள் தினமும் காலை பள்ளிக்குவந்து குழந்தைகளின் உணவு விருப்பத்தைக் கேட்டறிந்து போனார்கள்.
பிள்ளைகள், பூரி, இட்லியெல்லாம் கேட்டிருக்கிறார்கள்.கிடைக்கும் என்று ஆசையாக இருந்தேன்.
ஏழை குழந்தைகளின் இட்லி கனவை உங்களது தோல்வி மறுதலித்திருக்கிறதுசார்.
இந்த ஜூன் முதல் இந்தத் திட்டம் நடுநிலைப் பள்ளிகள்வரைக்கும் விரிவு படுத்தப்படும் என்று கூறினீர்கள். என்ன ஆகுமென்று தெரியவில்லை.
எனக்கு வயது 63 ஆகிறது சார். எனக்கு விவரம் தெரிந்துஏழு முதல்வர்களைப் பார்த்திருக்கிறேன். பெருந்தலைவர், அண்ணா இவர்கள் ஆண்ட காலத்தில்நான் இருந்தேன் என்றாலும் விவரம் தெரியாது.
நான் பார்த்தவரை உங்களை மாதிரி ஒரு முதல்வரை நான்பார்த்ததில்லை ஸ்டாலின் சார். ”கலைஞர் +” நீங்கள்.
இன்னுமொரு முறையேனும் உங்களது ஆட்சியைப் பார்த்துவிட்டுப்போக வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது சார்.
மத சார்பின்மைக்கு ஆதரவான களத்தில், சமூகநீதிக்கானபோராட்ட களத்தில் எப்போதும் உங்களோடு இணைந்திருப்போம்.
மிக்க நன்றிங்க ஸ்டாலின் சார்.
அன்புடன்,
இரா.எட்வின்.