தேவனூர் நெடுங்கல்

தேவனூர்... 

விழுப்புரம் – திருக்கோவலூர் சாலையில், அரகண்டநல்லூருக்கு அடுத்து வடக்காக செல்ல வேண்டும். தேவனூரை அடைந்தாலும் கிராமத்தின் கிழக்கில் சுமார் 2 கி.மீ. பயணிக்க வேண்டும். 

விழுப்புரம் – காட்பாடி ரயில் பாதை குறுக்கிடும். அதையும் கடந்து, ஏரிக்கரையின் மீது பயணம்....

நீர் நிரம்பி, அழகாகக் காட்சியளிக்கிறது தேவனூர் ஏரி. இதன் முடிவில், வலது பக்கம் சற்றே திரும்பிப் பார்க்கிறோம்...

அட... விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ந்தோங்கி நிற்கும், தட்டையான ஒற்றைப் பாறை! நம் கண்களையும் கருத்தையும் கவர்கிறது! நம்மை மட்டுமல்ல; உலகின் பார்வையையும் கவர்ந்துள்ளது இந்த ஒற்றைப் பாறை!

இறந்தவர்களின் நினைவாக அல்லது அவர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் நடப்படும் குத்துக்கல் எனப்படும் நெடுங்கல்!

இதனைச் சுற்றிலும் கல் வட்டங்களும் இருக்கின்றன. இதன் வயது 5000 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்.

உலகிலுள்ள நெடுங்கல் வரிசையில் இடம்பிடித்துள்ளது, தேவனூர் நெடுங்கல்!

சுற்றிலும் புதர்கள் மண்டியுள்ளது. அவற்றை ஓரளவுக்கு அகற்றி அருகில் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தார் நண்பர், ஆசிரியர் சிலம்பரசன் அவர்கள்.

பிரம்மாண்டப் பாறையின் ஒரு பக்கம் உடைந்து போய் இருக்கிறது. மேலே, இரு விரிசல்கள்! ஆம்: எத்தனை மழை, புயல், வெய்யில் அனைத்தும் இத்தனை ஆண்டுகாலம் சந்தித்து இன்றும் நின்று இருக்கிறதே! 

நினைவுச் சின்னத்தின் மீது எழுப்பப்பட்ட மாபெரும் வரலாற்று நினைவுச் சின்னம் இது.

1878இல் வெளியிடப்பட்ட தென்னார்க்காடு மாவட்ட  கையேட்டில், தேவனூர் நெடுங்கல் இடம்பெற்றுள்ளது.

145 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இதுவரை இதைப் பாதுகாப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை?

உண்மையில் இது பாதுகாக்கப்பட வேண்டும்... பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்பட வேண்டும்..!

(இன்று 14.12.23 வியாழக்கிழமை உடன் வந்து உதவிய நண்பர், ஆசிரியர் திரு.சிலம்பரசன் அவர்களுக்கு மிக்க நன்றி!)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 14, 2023 06:51
No comments have been added yet.