காமிக்ஸ் நூலகம்

விருதுநகர் மாவட்டத்தின் ராஜபாளையத்தில் காமிக்ஸ் புத்தகங்களுக்கென்று சிறப்பு நூலகம் ஒன்று திறக்கப்பட்டிருக்கிறது.

விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் ஐஏஎஸ் முன்னெடுப்பில் உருவாக்கப்பட்ட இந்தக் காமிக்ஸ் நூலகத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ள சிறந்த காமிக்ஸ் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. டிஜிட்டல் காமிக் புத்தகங்களுடன் நான்கு தனிப்பட்ட கணினிகள் நிறுவப்பட்டுள்ளன.

இந்தியாவிலே காமிக்ஸ் புத்தகங்களுக்கென உருவாக்கபட்ட முதல் நூலகம் இதுவே.

1972ல் சிவகாசியில் சௌந்தபாண்டியன் அவர்கள் முத்துகாமிக்ஸ் நிறுவனத்தைத் துவங்கினார். அவர்களின் முதல் வெளியீடு இரும்புக்கை மாயாவி. அது பெற்ற வெற்றி தமிழ் காமிக்ஸ் புத்தகங்களுக்கான புதிய வாசலைத் திறந்துவிட்டது.

இந்த ஐம்பது வருஷங்களில் ஆயிரக்கணக்கான தமிழ் காமிக்ஸ் நூல்கள் வெளியாகியுள்ளன. இன்று வண்ணத்தில் தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுவருகின்றன.

உலகப் புகழ்பெற்ற காமிக்ஸ் நூல்களில் சில ஆசிய அளவில் தமிழில் மட்டுமே வெளியாகின்றன என்பது பாராட்டிற்குரியது.

சென்னை புத்தகத் திருவிழா உள்ளிட்ட பல்வேறு புத்தகத் திருவிழாவில் காமிக்ஸ் புத்தகங்களுக்கென விற்பனை அரங்குகள் அமைக்கபடுகின்றன. வயது வேறுபாடின்றிக் காமிக்ஸ் ரசிகர்கள் விருப்பமான காமிக்ஸ் புத்தகங்களை வாங்கிச் செல்கிறார்கள். கொண்டாடுகிறார்கள்.

காமிக்ஸ் புத்தகங்களுக்னெ தனியே ஒரு நூலகம் உருவாக்கபட வேண்டும் என்பது காமிக்ஸ் ரசிகர்களின் நீண்டநாள் கனவு.

அதனை நிறைவேற்றிக் காட்டிய மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் ஐஏஎஸ் அவர்களுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.

காமிக்ஸ் நூலகத்தினைக் கொண்டாடும் வகையில் பிப்ரவரி 15 மற்றும் 16 இரண்டு நாட்கள் சித்திரக்கதைகள் திருவிழா ராஜபாளையத்தில் நடைபெற்றது

இதில் பள்ளி மாணவர்களுக்குக் காமிக்ஸ் வரைவதற்குக் கற்றுத்தருதல். சித்திரக்கதை வாசிப்பு. முகமூடி தயாரிப்பது, டிஜிட்டில் காமிக்ஸ் பயிற்சி எனப் பல்வேறு பயிற்சிகள் தரப்பட்டன.

அத்துடன் தமிழ் சித்திரக்கதைகள் பற்றிய சிறப்புக் கருத்தரங்கு நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு நான் தமிழ் சித்திரக்கதைகள் பற்றி உரையாற்றினேன்.

எனது பள்ளி வயதில் காமிக்ஸ் புத்தகங்கள் படித்த அனுபவம். தினந்தந்தியில் வரும் கன்னித்தீவு சித்திரத்தொடர், வாண்டுமாமா, மற்றும் இன்று சர்வதேச அளவில் காமிக்ஸ் புத்தகங்கள் பெற்றுள்ள முக்கியத்துவம். ஜப்பானிய மாங்கா காமிக்ஸ். அமெரிக்காவின் டிசி மற்றும் மார்வெல் காமிக்ஸ் உலகம், அதன் சூப்பர் ஹீரோக்கள் உருவான விதம். கிராபிக் நாவல்களின் எதிர்காலம். டிஜிட்டல் காமிக்ஸ் பற்றிய அறிமுகம் என விரிவாக உரையாற்றினேன்..

இளம்தலைமுறையினர் காமிக்ஸ் புத்தகங்களை ஏன் வாசிக்க வேண்டும் என்பது குறித்து ஜெயசீலன் ஐஏஎஸ் சிறப்பான உரையை நிகழ்த்தினார்.

ஓவியரும் திரைப்பட இயக்குநருமான சிம்புதேவன் காமிக்ஸ் புத்தகங்களின் முக்கியத்துவம் மற்றும் தனது காமிக்ஸ் புத்தக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

சென்னை ஓவியக்கல்லூரி பேராசிரியர் வில்வம் காமிக்ஸ் புத்தகங்களின் தேவை மற்றும் அதன் எதிர்காலம் பற்றி உரையாற்றினார்.

இந்தக் கருத்தரங்களில் முத்துக் காமிக்ஸ், லயன் காமிக்ஸ் நிறுவனங்களை நடத்தி வரும் விஜயன் கலந்து கொண்டு சிறப்பான உரையை வழங்கினார்.

வகம் காமிக்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் கலீல் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

காமிக்ஸ் புத்தகங்களைப் பற்றி ஆய்வு செய்து வரும் உதவி பேராசிரியர் பிரபாவதி தனது ஆய்வு மற்றும் வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்

வே.சங்கர் ராமு நிகழ்வில் கோமாளி வேஷமிட்டு அழகான கதை ஒன்றைச் சொல்லி அரங்கை மகிழ்வித்தார்.

இந்த நிகழ்வில் விருதுநகர் துணை ஆட்சியர் அனிதா மற்றும் சிவகாசி சார் ஆட்சியர் என். பிரியா ரவிச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

அரங்கு நிறைந்த கூட்டம். காமிக்ஸ் புத்தகங்களைப் பற்றிக் கேட்கவும் பேசவும் மக்கள் எவ்வளவு விரும்புகிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு சாட்சியமாக இருந்தது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 17, 2025 00:54
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.