குற்றமற்ற மகன்

தி வின்ஸ்லோ பாய் திரைப்படம் 1910களில் நடைபெற்ற உண்மை சம்பவம் ஒன்றினை அடிப்படையாகக் கொண்டது. ஹாலிவுட்டின் புகழ்பெற்ற திரைக்கதை ஆசிரியரான டேவிட் மாமெட் இப்படத்தை இயக்கியுள்ளார். டெரன்ஸ் ராட்டிகனின் கிளாசிக் நாடகத்தின் 1999 ரீமேக்காகும்.

லண்டனின் தெற்கு கென்சிங்டனில் உள்ள வின்ஸ்லோ குடும்பத்தில் நடைபெறுகிறது. ஆர்தர் வின்ஸ்லோ ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி, மிகவும் வசதியானவர். கண்டிப்பானவர். அவரது, மூத்த மகன் ஆக்ஸ்போர்டில் படிக்கிறான் , இளைய மகன் ரோனி ராயல் கடற்படை அகாடமியில் பயிலுகிறான். மகள் கேதரின் பெண்கள் உரிமைக்காகப் போராடுகிறாள்.

ஐந்து ஷில்லிங் போஸ்டல் ஆர்டரைத் திருடியதாகக் கூறி ஆஸ்போர்ன் கடற்படைக் கல்லூரியில் இருந்து 14 வயதான ரோனி நீக்கம் செய்யப்படுகிறான். வீடு திரும்பிய மகனிடம் தந்தை ஆர்தர் வின்ஸ்லோ விசாரணை மேற்கொள்கிறார்.

தான் தவறு செய்யவில்லை, தன்னைத் தவறாகத் தண்டித்துள்ளார்கள் என்று ரோனி உறுதியாகச் சொல்கிறான். தனது மகனின் கல்வி மற்றும் தனக்குக் கிடைக்க வேண்டிய நீதிக்காக ஆர்தர் வின்ஸ்லோ போராடத் துவங்குகிறார்.

பணக்கார குடும்பத்திற்கு ஐந்து ஷில்லிங் பெரிய விஷயமில்லை. ஆனால் பொய் குற்றச்சாட்டு என்பது அழியாத கறை. அது வாழ்க்கை முழுவதும் சிறுவனைப் பின்தொடரும் ஆகவே உண்மையை நிலை நாட்ட வேண்டும் என ஆர்தர் நினைக்கிறார். ஆகவே முறையீடு செய்து கடிதம் அனுப்புகிறார்

கடற்படை கல்லூரியின் முடிவே இறுதியானது. அதை எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாது என்று பதில் அனுப்புகிறார்கள்.

கேதரின் மற்றும் குடும்ப நண்பர் மற்றும் வழக்கறிஞர் டெஸ்மண்ட் கேரி உதவியோடு நீதிமன்றம் செல்கிறார்கள்.. போஸ்டலை ஆர்டரை திருடியது ரோனி தான் என உறுதியான சாட்சிகள் இருப்பதாகச் சொல்லி மேல்முறையீட்டை தடுக்கிறார்கள். அவனைத் தபால் அலுவலகத்தில் நேரில் கண்ட சாட்சி இருக்கிறது. அவனிடம் பணமும் கைப்பற்றப்பட்டிருக்கிறது. ஆனால் அது தன்னுடைய பணம் என ரோனி உறுதியாகச் சொல்கிறான்.

இந்த நிலையில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சர் ராபர்ட் மோர்டன் இந்த வழக்கை எடுத்துக் கொள்ள முன்வருகிறார். அவரைச் சந்திக்க வின்ஸ்லோ குடும்பம் செல்லும் காட்சி மிகவும் அழகானது. குறிப்பாக அவர் ரோனியிடம் மேற்கொள்ளும் குறுக்கு விசாரணை. அதில் தந்தை அடையும் ஏமாற்றம். கேதரின் அடையும் எரிச்சல்.

ராபர்ட் மோர்டன் தனது சுய விளம்பரத்திற்காக இந்த வழக்கை பயன்படுத்திக் கொள்வார் எனக் கேதரின் நினைக்கிறாள். ஆகவே அவரைக் கடுமையாக விமர்சனம் செய்கிறாள்.

தனது நேர்மையைக் கேதரின் சந்தேகப்படுவதை ராபர்ட்டும் உணர்ந்து கொள்கிறார். அந்த வழக்கை மிகவும் உண்மையான முன்னெடுக்கிறார்.

வின்ஸ்லோ குடும்பம் இந்த வழக்கின் செலவுகள் காரணமாகப் பொருளாதாரப் பின்னடைவை சந்திக்கிறார்கள். இதனால் வேலையாட்களைப் பணிநீக்கம் செய்வதற்கும், சொத்துக்கள் விற்கப்படுவதற்குமான நிலை ஏற்படுகிறது.

அரசிற்கு எதிராக வழக்கை தொடுப்பது எளிதானதில்லை என வின்ஸ்லோ உணருகிறார். கேதரின் அன்றாடம் நீதிமன்றம் செல்கிறாள். விசாரணையை நேரடியாகக் காணுகிறாள். தோல்விக்கு மேல் தோல்வி என வழக்கு பின்னடைவை சந்திக்கிறது.

இந்த நிலையில் ஆர்தர் வின்ஸ்லோ தனது வீண்பிடிவாதம் மற்றும் கௌரவம் காரணமாகவே வழக்கைத் தொடுத்திருப்பதாக அவரது மனைவி கிரேஸ் சண்டையிடுகிறாள். அந்தக் காட்சியின் போது ரோனி தனது அறைக்கதவை திறந்து வெளியே எழுந்து வந்து தந்தையிடம் கேட்பதும் அவர் பதில் தரும் விதமும் நேர்த்தியானது. ரோனி வழக்கின் காரணமாகக் கேதரின் திருமணம் தடைபடும் சூழல் ஏற்படுகிறது. அவள் சரியான முடிவை எடுக்கிறாள்.

என்ன நடந்தாலும் வழக்கை நடத்த வேண்டும் எனத் தந்தை மகள் இருவரும் உறுதியாக இருக்கிறார்கள். தீர்ப்பு அறிவிக்கபடுகிறது. வழக்கின் முடிவு என்ன ஆனது என்பதே படத்தின் இறுதிக்காட்சி.

பிரிட்டிஷ் தொலைக்காட்சி நாடகமாகவும் மேடை நாடகமாகவும் நடத்தப்பட்ட கதை என்பதால் டேவிட் மாமெட் திரைக்கதையில் பெரிய மாற்றம் எதையும் செய்யவில்லை.

வழக்கறிஞர் டெஸ்மெண்ட் சிறப்பான கதாபாத்திரம். கேதரினைத் திருமணம் செய்து கொள்ள விரும்பும் தனது ஆசையை அவர் வெளிப்படுத்தும் விதம் அழகானது. ராபர்ட்டிற்கும் கேதரினிற்குமான உரையாடல்கள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக நீதிமன்ற இறுதி வாதம் முடிந்த பிறகு அவர்கள் வீட்டிற்கு வரும் போது கேதரின் பேசுவது நன்றாக எழுதப்பட்டிருக்கிறது.

மேடை நாடக பாணியில் படமும் உரையாடல்களின் வழியே நீள்கிறது. அந்தக் காலக் கட்ட உடைகள். மற்றும் வீடு, நீதிமன்றம், வாகனங்கள், எனத் தேர்ந்த கலை இயக்கம், ஹாதோர்ன், நார்தாம், ரெபேக்கா பிட்ஜியன்,மேத்யூ பிட்ஜியன், நீல் நார்த் என அனைவரின் சிறந்த நடிப்பு படத்தின் தனிச்சிறப்பு என்பேன். நீதிமன்றத்திற்குச் செல்லும் போதும் ஒப்பனை மற்றும் உடைகளில் கேதரின் மற்றும் கிரேஸ் கொள்ளும் கவனம். வீட்டுப்பணிப்பெண் எடுத்துக் கொள்ளும் உரிமை, என ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் சின்னச் சின்ன நுணுக்கங்களைச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 28, 2025 05:24
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.