லாஸ்லோ க்ராஸ்னாஹோர்காய்
“மக்கள் ஒரு தடயமும் இல்லாமல் தொலைந்து போகிறார்கள், சில வேளைகளில் தங்கள் தடயங்களை மறைக்கிறார்கள், சிலர் மறைக்கப்பட்ட தடயங்களைக் காண்கிறார்கள். சில நேரங்களில், கிட்டத்தட்ட ஒரு தடயமும் இல்லாமல் மறைந்து, பின்னர் வேறு எங்காவது தோன்றி, புதிதாகக் காணாமல் போகிறார்கள். இந்த நாட்களில் அமைதிக்கும் இருளுக்கும் உள்ள உறவை எவ்வாறு விவரிப்பது? இப்போதெல்லாம் துயரமான இடங்கள் கூடப் பயங்கரமான சத்தத்தாலும், பயங்கரமான வெளிச்சத்தாலும் நிரம்பியுள்ளன“
– லாஸ்லோ க்ராஸ்னாஹோர்காய்

ஹங்கேரிய நாவலாசிரியர் லாஸ்லோ க்ராஸ்னாஹோர்காய் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசினைப் பெற்றிருக்கிறார். பேலா தாரின் திரைப்படங்களின் வழியாகவே அவரை அறிந்து கொண்டிருந்தேன்.
நேற்று நோபல்கமிட்டி அவருடன் ஒரு நடத்திய தொலைபேசி உரையாடலை வெளியிட்டுள்ளது. அதில் தனது நோயுற்ற நண்பரைக் காணுவதற்காக ஃபிராங்பெர்ட்டில் உள்ள அவரது வீட்டில் இருந்த லாஸ்லோவிற்கு நோபல் பரிசு கிடைத்துள்ள செய்தி தெரிவிக்கபடுகிறது.
தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த தடுமாறுகிறார். அப்போது அவர் சாமுவேல் பெக்கெட்டினை நினைவு கொள்கிறார். பெக்கெட்டின் கவிதைகளை ஆதர்சமாகக் கொண்டவர் லாஸ்லோ. இருவரது மொழிநடைக்கும் நெருக்கமான தொடர்புள்ளது. முற்றுப்புள்ளியில்லாத நீண்ட வாக்கியங்களை எழுதக்கூடியவர் லாஸ்லோ. முந்தைய நேர்காணல் ஒன்றில் தன்னை மிகவும் பாதித்த எழுத்தாளர்களாக ஷேக்ஸ்பியரையும் தஸ்தாயெவ்ஸ்கியினையும் குறிப்பிட்டுள்ளார்.
நோயுற்ற நிலையில் உள்ள நண்பரைக் காணச் சென்ற போது ஒரு மகிழ்ச்சியான செய்தி தெரிவிக்கபடுவது சிறுகதையின் கருவைப் போலவே உள்ளது. வீடு திரும்புதலை தனது படைப்புகளின் மையக்கருவாகக் கொண்ட லாஸ்லோ இந்த அறிவிப்பின் பின்பு வீடு திரும்புவதைப் பற்றியே பேசுகிறார்.

இந்தத் தருணத்தில் மொழிபெயர்ப்பாளர்களின் சிறப்பான பங்களிப்பை நினைவு கொள்கிறேன். அவர்கள் இல்லாவிட்டால் லாஸ்லோ போல மொழிபெயர்க்கச் சிரமமான படைப்பாளிகள் நோபல் பரிசைப் பெற முடியாது.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers
