குலேர் நுண்ணோவியங்கள்

குலேர் நுண்ணோவியங்கள் தனித்த மரபைக் கொண்டிருக்கின்றன. குறிப்பாகக் கிருஷ்ணன் ராதையின் காதலைச் சித்தரிக்கும் இந்த வகை ஓவியங்கள் அடர் வண்ணத்தாலும் சித்திரம் வரையப்பட்ட முறையாலும் புதிய பாணியைக் கொண்டிருக்கின்றன.

குலேர் ராஜ்ஜியம் உருவானது விசித்திரமான கதை.

1405 இல் பஞ்சாப்பின் காங்க்ரா ஆட்சியாளராக இருந்த ராஜா ஹரிசந்த் வேட்டைக்குச் போது தனது குழுவிலிருந்து பிரிந்து போனார். வழிதெரியாமல் அலைந்த அவர் கால்தவறி ஒரு கிணற்றில் விழுந்துவிட்டார். வேட்டைக்குழுவினர் அவரைத் தேடிச்சலித்த போதும் கண்டுபிடிக்க முடியவில்லை. முடிவில் ராஜா இறந்துவிட்டதாகக் கருதி, ராஜாவின் தம்பி கரம்சந்த் அரியணை ஏறினார்.

ஆனால் கிணற்றில் விழுந்த ராஜா ஹரிசந்த் பசி தாகத்துடன் வாடியபடி 22 நாட்கள் கிணற்றிலேயே உயிர் பிழைத்திருந்தார். மாடு மேய்க்கும் ஒருவர் அவரைக் கண்டுபிடித்து மீட்டார்.

தம்பியிடமிருந்து தனது ராஜ்ஜியத்தைத் திரும்பப் பெறுவதற்கு விரும்பால் ஹரிசந் தனது புதிய ராஜ்யத்தின் இடமாகக் ‘குலேர்’ நகரத்தை கட்டியெழுப்பினார். குலேர் என்றால் மாடு மேய்ப்பவர்களின் இடம் என்றே பொருள். இன்றைக்கும் அந்தக் கிணறு நினைவுச்சின்னமாகப் பாதுகாக்கபட்டு வருகிறது. இன்று குலேர் கோட்டையும் நகரமும் இடிபாடுகளாக மட்டுமே மிஞ்சியிருக்கிறது. குலேர் நுண்ணோவிய மரபு துண்டிக்கபடவில்லை. இன்றைக்கும் அந்த மரபில் நுண்ணோவியம் வரையும் கலைஞர்கள் தொடர்கிறார்கள்.

ராஜா ஹரிசந்த் குலேரை கலைகளின் தாயகமாக மாற்றினார். இசை ஓவியம் கவிதை மூன்றிலும் சிறந்தவர்களை வரவழைத்துக் கௌரவித்துத் தனது அரச சபை கலைஞர்களாக நியமித்தார். அவர்களைக் கொண்டாடினார். அந்த வரிசையில் வந்த ஓவியர் பண்டிட் சியூ தலைசிறந்த நுண்ணோவியக் கலைஞர். இவரது பிள்ளைகள் தான் மனாகு மற்றும் நைன்சுக். இவர்கள் இருவரும் இந்தியாவின் புகழ்பெற்ற ஓவியர்களாக விளங்கியவர்கள்.

ராஜா பல்வந்த் சிங்கிற்கும் நைன்சுக்கும் நெருக்கமான நட்பு உருவாகியிருந்தது. பல்வந்த் இறந்த பின்பு அவரது அஸ்தியை கங்கையில் கரைக்கச் சென்ற போதும் நைன்சுக் உடன் சென்றிருக்கிறார் இதனைச் சித்தரிக்கும் ஓவியம் ஒன்று வரையப்பட்டிருக்கிறது

பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கோவர்தன் சந்த் ஆட்சிக் காலத்தில் குலேரில் ஓவியப் பள்ளி உருவாக்கப்பட்டது. அது புகழ்பெற்ற ஓவியர்களை உருவாக்கியது.

குலேரின் ஓவியங்களில் பச்சை வண்ணம் பிரதானமாக வெளிப்பபடுகிறது. அவர்கள் உருவங்களைச் சித்தரிக்கும் விதமும் மிகுந்த லயத்துடன் காணப்படுகிறது. இந்தப் பாணியில் ஹோலி பண்டிகைக் கொண்டாட்டங்களை மையமாகக் கொண்ட ஓவியங்கள் நிறைய வரையப்பட்டுள்ளன, மொகலாயக் கலையில் வெளிப்படாத ஆன்மீக உணர்வை தங்கள் ஓவியங்கள் வெளிப்படுத்துவதாகக் குலேர் ஓவியர்கள் தெரிவிக்கிறார்கள்

நைன்சுக்

நைன்சுக் ஓவியர் சியூவின் இளைய மகன். மிகச்சிறந்த நுண்ணோவியக் கலைஞர். அவரது படைப்புகளில் பெரும்பகுதி தொலைந்து போய்விட்டன. இன்று எஞ்சியிருப்பது சுமார் நூறு ஓவியங்கள் மட்டுமே அவற்றில் பல இந்திய மற்றும் மேற்கத்திய அருங்காட்சியகங்களில் உள்ளன. 2010 ஆம் ஆண்டு அமித் தத்தா நைன்சுக் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

தனது சகோதரர் மற்றும் தந்தையைப் போலல்லாமல், நைன்சுக் அன்றாட வாழ்க்கை காட்சிகளை நுண்ணோவியங்களாக வரைந்திருக்கிறார். மன்னர் பல்வந்த் சிங் தனது தாடியை சீராக்குவது, ஹூக்கா புகைத்தல், கடிதங்கள் எழுதுதல், படுக்கைக்குத் தயாராகுதல் போன்றவற்றை நைன்சுக் அழகாக வரைந்திருக்கிறார்.

ஓவியர் தனது கலையில் முழுமையான திறமையைப் பெற வேண்டுமென்றால் அவருக்கு நடனமும் இசையும் தெரிந்திருக்க வேண்டும் என்று சித்ர சூத்திரம் குறிப்பிடுகிறது. நைன்சுக் இவற்றைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார். நைன்சுக்கின் தூரிகை வரையப்படும் உருவங்களின் மனநிலை மற்றும் சூழலின் அமைதியை முழுமையாக வெளிப்படுத்துகிறது

ராஜா சிம்மாசனத்தில் இருப்பது போன்ற அலங்காரமான காட்சிகளை அவர் வரைவதில்லை. மாறாக யதார்த்தமான சூழலில் அவர் மன்னரின் செயல்களை வரைந்திருக்கிறார். அதிலும் உருவங்களைச் சிறியதாகவும் பின்புலத்தின் அமைதியை பிரதானமாகவும் வரைந்திருப்பது அவரது மேதமையின் அடையாளம்.

நைன்சுக் வரைந்த ராஜா துருப் தேவ் குதிரையை மதிப்பிடும் ஓவியத்தில் இரவில் மன்னர் குதிரையை மதிப்பிடுகிறார். குதிரையின் நிறம் மற்றும் உடலமைப்பு தெளிவாகப் புலப்படுவதற்காக அதன் பின்புறம் வெள்ளைதுணி ஒன்றை உயர்த்திப் பிடித்திருக்கிறார்கள். இதில் இரவு வரையப்பட்ட விதம் ஆச்சரியமளிக்கிறது. இரவின் கருமையில்லை. சிறிய தீற்றலில் மேகங்கள். பிறைநிலவு மட்டுமே சித்தரிக்கபடுகிறது. குதிரையின் கருமை நிறம். அதற்குப் பொருத்தமான பணியாளர்களின் உடையின் வண்ணம் வரையப்பட்டுள்ளது. மன்னர் கையில் பிரார்த்தனை மாலை வைத்திருக்கிறார். அவரது முகபாவத்தில் குதிரையைப் பற்றிய வியப்பு வெளிப்படவில்லை.

இந்திய நுண்ணோவியங்களில் குதிரை, யானை, காளை மூன்றும் மிகச்சிறப்பாக வரையப்பட்டுள்ளன. உலகில் வேறு எங்கும் இத்தனை விதமான, இவ்வளவு அழகாகக் குதிரைகள் வரையப்பட்டிருக்குமா எனத் தெரியவில்லை. மொகலாய ஓவியங்களிலிருந்து பஹாரி ஓவியங்களை வேறுபடுத்திக் காட்டுவது அதன் நுண்மையான சித்தரிப்பு. அதிலும் பச்சை வண்ணத்தை அவர்கள் பயன்படுத்தும் விதம். நைன்சுக் பச்சை மற்றும் வெள்ளையை அமைதியின் அடையாளத்தைப் போலவே சித்தரிக்கிறார். ராஜா குதிரையைக் காணும் ஓவியத்திலும் வெண்மை இரவின் சாந்தம் போலவே வெளிப்படுகிறது

பெரும்பான்மையான நுண்ணோவியர்கள் அரண்மனை சார்ந்து வாழ்ந்த காரணத்தால் மன்னரின் உருவப்படங்கள். மற்றும் வேட்டைக்காட்சிகளை வரைந்திருக்கிறார். ஆனால் குலேர் மரபில் அது போன்ற காட்சிகள் அதிகமாக வரையப்படவில்லை. மாறாகக் கீதகோவிந்தம். ராமாயணம் போன்ற பிரதிகளைத் தொடர் ஓவியங்களாக வரைந்திருக்கிறார்.

ராமாயணம்

இதிகாசங்கள் இந்தியா முழுவதும் பரவியதற்கு அவை ஓவியம் மற்றும் சிற்பங்களின் வழியாக முன்னெடுக்கபட்டது ஒரு முக்கியக் காரணம். சொற்கள் காட்சிகளாக விரியும் போது உருவாக்கும் அனுபவம் வேறுவிதமானது. குலேர் ராமாயண ஓவியங்களைக் காணுகிறவர்கள் இந்த வியப்பை உணர முடியும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 15, 2025 19:58
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.