அன்னை அமர்ந்திருந்த பீடம்

 மழையுடன் கார்த்திகை தொடங்கிவிட்டது. மாதங்களில் நான் மார்கழியாக இருக்கறேன் என்று கண்ணன் சொல்கிறான். 

எனக்கு கார்த்திகை மிகவும் பிடித்த மாதம். அடை மழையும் பின் வெயிலுமாக மாறி மாறி வானம் விளையாடும் மாதம்.

 இந்த மாதம் ஊர் முழுவதும் நடைபறும் பயிர்பொங்கலால் ஊரே மகிழ்ச்சியாக இருக்கும். சிறு வயதிலிருந்தே இந்த மாதம் மழையுடன் பயிர் பொங்கலுடன் மனதில் பதிந்துவிட்டது. 

இதை பற்றி நிறைய முறை எழுதியிருக்கிறேன். என் முதல் கதையே அந்தக் களம் சார்ந்தது தான். 



முதலில் ஊர் காவல் தெய்வமான மாரியம்மன் வழிபாடு. ஒவ்வொரு வீட்டிலும் தேவியை அழைப்பது. சூரியன் கொல்லிமலைக்குப்பின் மறைந்த பின் சாமி கும்பிடுவோம். பயிர் நடவு முடிந்து நடைபெறும் வழிபாடு. நன்றி சொல்லவும் நட்ட பயிரை காக்கவும் ஒரு சேர நிகழும் வழிபாடும் கொண்டாட்டமும். 

தானியத்தின் மீது அன்னையை அமரசெய்து வழிபடுவது இந்த வழிபாட்டின் அடிப்படை. காலையில் வழிபட்ட வேப்பம் குழைகளை வாசல் நிலையில் கட்டியப்பின் தேவி அமர்ந்திருந்த பீடத்தை பார்த்துக்கொண்டிருந்தேன்.



முனைவர் வேதாசலம் அவர்களின் நூல்களை மிக மெதுவாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். வரிக்கு வரி நிறைய தகவல்கள். இந்திய கலை வரலாற்றில் அறுவகை தெய்வ வழிபாடு என்ற புத்தகத்தில் சக்தி வழிபாடு பற்றி வாசித்ததை திரும்ப எடுத்துப்பார்த்தேன். இந்த நிலத்தின் மாரியம்மனை ..கொல்லிப்பாவையை பற்றி உள்ள பகுதிகளை மறுபடி வாசித்தேன்.

ஆழ் மனதை திறக்கும் திறவு கோல் வரலாறு என்று சொல்லலாம்.

அன்னை அமர்ந்திருக்கும் பீடம் நம் ஆழ்மனம் இல்லையா...

விடிந்தும் இதழ் விரிக்காது மழையில் உறங்கிக்கொண்டிருக்கும் பூத்தளத்தில் ..காக்கை தன் சிறகுகளில் இருந்து சிதறடிக்கும் மழை துளிகளில்...ஐயாற்றின் புது நீராய் இருப்பதும் ..பயிர் உயிராவதும்..கருவின் நீராவதும்...அவள். நீரெல்லாம் கங்கை. 



 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 23, 2025 18:18
No comments have been added yet.


கமலதேவி's Blog

கமலதேவி
கமலதேவி isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow கமலதேவி's blog with rss.