புத்தகப் பரிந்துரைகள் -1
சென்னைப் புத்தகக் காட்சியில் நிறைய புதிய நூல்கள் வெளியாகியுள்ளன. நான் முக்கியம் எனக் கருதும் சில நூல்களைப் பரிந்துரை செய்கிறேன்.
இஸ்ஸாவும் பூஸனும்
ஜப்பானின் புகழ்பெற்ற ஜென் கவிகளான இஸ்ஸா மற்றும் பூஸனின் தேர்ந்தெடுக்கபட்ட கவிதைகளை யுவன் சந்திரசேகர் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். நூல்வனம் வெளியிட்டுள்ளது. மிகச்சிறந்த புத்தகமாக்கம்.

அனாகத நாதம்.
இளந்தலைமுறையின் சிறந்த சிறுகதையாசிரியரான செந்தில் ஜெகன்நாதனின் சிறுகதைகளின் தொகுப்பு அனாகத நாதம். தனித்துவமிக்க மொழியழகும் கதைக்களமும் கொண்ட நேர்த்தியான கதைகள். சொற்றுணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது

இமயமலை
காந்தியரான காகா காலேல்கர் இந்திய முழுவதும் பயணம் செய்து தான் கண்ட நதிகளைப் பற்றி ஜீவன்லீலா என்றொரு சிறந்த நூலை எழுதியிருக்கிறார். அவரது இமயப்பயணத்தினை அடிப்படையாக கொண்ட நூல் இமயமலை. இதனை சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ளது. பாவண்ணன் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார்.

கருப்பு இருட்டல்ல
புகழ்பெற்ற மலையாளக் கவிஞரான கல்பற்றா நாராயணன் எழுதிய கவிதைகள் குறித்த கட்டுரைகளை அழகிய மணவாளன் மிக நேர்த்தியாக மொழியாக்கம் செய்துள்ளார். கவிதை குறித்த கல்பற்றாவின் பார்வைகளும் பரந்த வாசிப்பின் வழியே உருவான மதிப்பீடுகளும் முக்கியமானவை. கருப்பு இருட்டல்ல நூலை விஷ்ணுபுரம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது

காதல் உண்ணி.

புகழ்பெற்ற அமெரிக்க கவிஞரான சார்லஸ் சிமிக்கின் தேர்வு செய்யப்பட்ட கவிதைகள் கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன் மொழியாக்கம் செய்துள்ளார். நவீன கவிஞன், தன்னைச் சுற்றி உள்ள உலகத்தோடு உறவையும் இணைப்பையும் பரிவையும் நடுக்கங்களையும் விரிவாக்குகிறான். சின்னஞ்சிறு வஸ்துகளுக்கு உயிர்த்தன்மையை அளிக்கிறான். அவற்றுக்கு வெளிப்பாட்டு அழகை, துடிப்புகளை வழங்குகிறான் என்று ஷங்கர ராமசுப்ரமணியன் குறிப்பிடுவது சிமிக்கின் கவிதைகளுக்கான திறவுகோலாகும். இந்த நூலை எதிர்வெளியிடு பதிப்பித்துள்ளார்கள்.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 675 followers

