முரகாமியின் நிழல்

‘ ட்ரீமிங் முரகாமி’ ஆவணப்படம் ஜப்பானிய எழுத்தாளரான முரகாமியின் டேனிஷ் மொழிபெயர்ப்பாளர் மெட்டே ஹோமின் பணியை ஆவணப்படுத்தியுள்ளது.

முரகாமியின் வாசகராக அறிமுகமாகி அவரது எழுத்துகளை மட்டுமே மொழியாக்கம் செய்யும் மெட்டே ஹோம் தனது மொழியாக்கப் பணிக்காக ஜப்பானின் உயரிய விருதைப் பெற்றிருக்கிறார்.

இந்த ஆவணப்படம் ஹோம் எப்படி மொழியாக்கம் செய்கிறார். அதில் அவர் சந்திக்கும் சவால்கள் எவை என்பதைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறது. சுயமாக ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொண்ட மெட்டே ஹோம் சில ஆண்டுகள் ஜப்பானில் வசித்திருக்கிறார். ஜப்பானிய மொழியில் உள்ள படைப்பை டேனிஷிற்கு மாற்றும் போது சந்திக்கும் பண்பாட்டுப் பிரச்சனைகள் மற்றும் சொற்தேர்வு குறித்து இதில் விரிவாகப் பகிர்ந்து கொள்கிறார்.

முரகாமியின் நாவலில் வரும் வாக்கியங்கள் மற்றும் குறிப்பிட்ட சில சொற்களை மொழியாக்கம் செய்வதற்கு அவர் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள். விடாப்பிடியான ஈடுபாடு வியப்பளிக்கிறது.

சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் அவசரம் காட்டுவதில்லை. எழுத்தாளரின் சொந்த நிழலைப் போல மாறிவிடுகிறார்கள்.

யதார்த்தத்திற்கும் கற்பனைக்கும் இடையிலான மெல்லிய கோட்டினை மங்கச் செய்யும் முரகாமியின் எழுத்துகளை டேனிஷ் மொழியில் கொண்டுவருவதற்காக மெட்டே போராடுகிறார். பலரது உதவிகளை நாடுகிறார். எது சரியான சொல். எந்த வாக்கியம் சரியானது என முடிவு செய்ய முடியாமல் தவிக்கிறார்.

படத்தின் ஒரு காட்சியில் பதிப்பாளர் அவரிடம் முரகாமி நூலின் அட்டைபடத்தைக் காட்டி அபிப்ராயம் கேட்கிறார். அப்போது மெட்டே ஹோம் இதனை முரகாமி விரும்ப மாட்டார் என்றே பதில் தருகிறார். முரகாமியின் குரலாகவே தன்னைக் கருதுகிறார்.

படத்தின் ஒரு காட்சியில் ஒரு இளைஞர் தன்னை முரகாமி எப்படிப் பாதித்துள்ளார் என்பதை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகச் சொல்வது முக்கியமானது. ,

ஹருகி முரகாமியின் முதல் நாவலை மெட்டே ஹோம் மொழிபெயர்க்கத் தொடங்கும்போது, டோக்கியோவில் உள்ள ஒரு சுரங்க ரயில் நிலையத்தின் உள்ளே பெரியதொரு தவளை தோன்றுகிறது. வெறுப்பால் உலகை அழிக்கத் தயாராக இருக்கும் பிரம்மாண்டமான புழுவுக்கு எதிரான தனது போராட்டத்தில் மொழிபெயர்ப்பாளரை ஈடுபடுத்தும் உறுதியுடன் அந்தத் தவளை அவளைப் பின்தொடர்கிறது. புனைவும் நிஜமும் கலந்த இந்தக் காட்சிப்படுத்தல் பாராட்டிற்குரியது

முரகாமியைப் பற்றிய ஆவணப்படம் என்றாலும் இதில் ஹருகி முரகாமி தோன்றவில்லை. அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்வுகளில் மிக அரிதாகக் கலந்து கொள்கிறவர். ஆகவே படத்தில் அவரை நாங்கள் காட்டவில்லை என்கிறார் இயக்குநர் நிதேஷ்,

இன்று சர்வதேச அளவில் டேனிஷ் படைப்பாளிகள். குற்றப்புனைவுகளில் புகழ்பெற்றிருக்கிறார்கள். டேனிஷ் இலக்கிய மரபில் ஜப்பானியக் கதைகள் போல மாயங்களுக்கும் மிகுபுனைவிற்கும் இடமில்லை. வரலாற்றை மையமாகக் கொண்ட டேனிஷ் நாவல்கள் வேறுபட்டவை. அவற்றில் ஐரோப்பிய நாவல்களின் சாயல் இருக்காது.

முரகாமியை டேனிஷ் வாசகர்களுக்கு எதனால் பிடிக்கிறது என்பதற்கு, வாசகர்களின கற்பனைக்கு அதிக இடம் தருகிறார். நாவலை படித்து முடித்தபின்பும் அது முடியாத படைப்பாக எஞ்சுகிறது. முரகாமியின் வரிகளுக்குப் பல்வேறு அர்த்தங்களை வாசகர்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். அதுவே அவரது வெற்றிக்கான காரணம் என்கிறார் ஹோம்

முரகாமியின் போலந்து மற்றும் ஜெர்மன் மொழிபெயர்ப்பாளருடனான ஒரு கலந்துரையாடல் படத்தில் இடம்பெற்றுள்ளது, அவர்களில் ஒருவர், இது மொழிபெயர்ப்பதைப் பற்றியது மட்டுமல்ல, மாறாக ஒரு கலைஞரைத் தனித்துவமாக்கும் எழுத்தின் நுட்பங்களை இன்னொரு மொழியில் எப்படிச் சரியாகக் கொண்டுவருவது என்ற பொறுப்புணர்வு குறித்துப் பேசுகிறார். அது உண்மையே.

ஒரேயொரு எழுத்தாளரை மட்டுமே மொழிபெயர்ப்பு செய்யும் மொழிபெயர்ப்பாளர்கள் மிகவும் குறைவு. அந்த வகையில் மெட்டே ஹோம் முக்கியமானவர். அவர் முரகாமியை மொழியாக்கம் செய்வதுடன் அவரது படைப்புலகம் குறித்துப் பல்வேறு இடங்களில் சொற்பொழிவும் ஆற்றுகிறார்.

ஒரு படைப்பாளியை இன்னொரு மொழிக்குக் கொண்டு செல்லும் பணி மகத்தானது. மொழிபெயர்ப்பாளர்களே எழுத்தாளர்களுக்கான உலக அளவிலான அங்கீகாரத்தை உருவாக்குகிறார்கள். முரகாமியும் ஒரு மொழிபெயர்ப்பாளரே. அவர் பிட்ஜெரால்டின் நாவல்களையும் காஃப்காவையும் ஜப்பானிய மொழியில் மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார்.

படத்தின் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் முரகாமியைப் போலவே மெட்டேயும் பூனை வளர்க்கிறார். அவர் எழுதிக் கொண்டிருக்கும் மேஜையைச் சுற்றி பூனை நடமாடுகிறது. ஜப்பானில் பூனைகளைப் பற்றி எழுதாத எழுத்தாளர்களே இல்லை எனலாம்.

முரகாமியின் எழுத்தில் பயணம், ஜாஸ் இசை, நூலகம் மூன்றும் தொடர்ந்து இடம்பெறுகின்றன. அதை இந்த ஆவணப்படத்தில் வரும் மெட்டேயின் வழியாக அடையாளப்படுத்துகிறார்கள். இப்படத்தின் இயக்குநர் நிதேஷ் அஞ்சான் ஒரு இந்தியர். சிங்கப்பூரில் கல்வி பயின்றவர். அந்த நாட்களில் முரகாமியை விரும்பி படித்திருக்கிறார். அவரது தந்தை டென்மார்கில் வேலை செய்தவர். சினிமாவில் விருப்பம் கொண்ட நிதேஷ் முரகாமியின் எழுத்துகள் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக இந்த ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார்.

தனிமையான இரவுக்காட்சிகள். யாருமற்ற வீதிகள். கண்ணாடி ஜன்னல்வழியாக உலகைக் காண்பது. ரயில் நிலையக் காட்சிகள். டாக்சியில் செல்லும் பயணம் என முரகாமி படைப்புலகின் ஊடாக பயணம் செய்வது போன்றே இந்த ஆவணப்படம் உருவாக்கபட்டிருக்கிறது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 05, 2026 01:37
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.