கந்தகப் புகை
வானத்தைக் கருக்கிய கொடுங்காலமொன்றில்
உன்னைப் பெயர்த்துக்கொண்டு நீயும் போனாய் தொலைதேசம்
பனிப்பாரம் தலையிழுத்துக் கிளை முறிக்க
வசந்தத்திலும் அந்நியத்தில் பூக்கவில்லை.
உன் நிலத்துப் பறவைகள் அழைத்தபோது
திரும்பி வந்தாயல்லவா மறுபடியும்
முறிந்த கிளைகளை எக்களித்து நீட்டி!
உன்னில் புள்ளினங்கள் எண்ணற்றுப் பூத்திருந்த காலத்தில்
உணர்ந்தாயில்லை
நீயொரு காசு மரமென்பதை
உலுக்கி உலுக்கி
உலுக்கி உலுக்கி
பச்சையமே முன்னைக் காலத்தொரு கனவாக
வெண்ணிற எச்சங்களோடு தனித்துவிட்டாய்
பாவப்பட்ட மரமே!
உனது வேருயிருள்ளும் வெந்நீர் ஊற்றி
விறகெனச் சரிக்கும் காலமோ இது…
இனி நீ எப்படித்தான் எங்கேதான் போவாய்
வேருமின்றி ஊருமின்றி?
Published on May 10, 2013 09:48